வியாழன், 6 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 13)






மணி ஐயாவின் துணையாட்கள் எங்களை மகிழுந்தில் கோபி பாளையம் வரையில் சென்று விட்டனர். அந்தப் பயணத்தை நான் அணுவணுவாக இரசித்தேன். வழி நெடுகிலும் பச்சைப் பசுமையான வயல் வெளிகள், நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள், கரும்புக் காடுகள் என கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. கிராமத்துக் கதையம்சம் கொண்ட பெரும்பாலான திரைப்படங்கள் இங்குதான் படமெடுக்கப்படும் என வண்டி ஓட்டுனர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.  படப்பிடிப்பின் போது பயிர்களுக்குச் சேதம் விளைந்தால் என்ன செய்வார்கள் என அறிவழகன் கவலையோடு கேட்க, அதற்கு உரியத் தொகையினைப் படப்பிடிப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள் என ஓட்டுநர் பதில் கூறினார்.

இதுவரையில் நான் பயணித்த அனைத்து இடங்களையும் விட கோபி பாளையம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வயல் வெளிகள் சூழ்ந்த கிராமமாக இருந்தாலும் அவ்விடம் நேர்த்தியான தார் சாலைகள் போடப்பட்டிருந்தன. சாலையில் அதிகம் வண்டிகள் இல்லை. தலை வலியை உண்டாக்கும் வாகன ‘ஹான்’ சத்தங்கள் இல்லை. இரசாயனக் கரும்புகைகள் இல்லை. இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் சொர்க்க பூமியாக கோபி பாளையம் காட்சியளித்தது. பயணத்தின் போது அதிகம் பேசாமல் அந்த கிராமத்து அழகில் நான் கட்டுண்டுக் கிடந்தேன்.

மகிழுந்து கோபி பாளையம் பேருந்து நிலையத்தை அடைந்தது. அறிவழகன் யாருடனோ தொலைப்பேசியில் கதைத்துக்கொண்டிருக்க முதலில் என்னை பேருந்தில் ஏறி அமரச் சொன்னார். சத்யமங்கலம் செல்லும் பேருந்தைக் கண்டுபிடித்து நானும் அமர்ந்துக் கொண்டேன். இந்தப் பேருந்திலும் மூன்று இருக்கைகள் சேர்ந்தார் போல போடப்பட்டிருந்தன. நான் மட்டும் தனியே சன்னல் ஓரம் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டேன். அறிவழகனை இன்னும் காணவில்லை.

அந்தச் சமயம் சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் எனதருகில் வந்து அமர்ந்தான். அமர்ந்துவிட்ட பிறகு கேட்டான், “இங்கு யாராவது அமர்கிறார்களா?” என்று. “நண்பர் ஒருவர் சற்று நேரத்தில் வந்து விடுவார்,” என்றேன். “யார்? காதலரா?” என்றான். “இல்லை, நண்பர்,” என்றேன். “ஓ, சரி,” என அங்கேயே அமர்ந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து மலேசியாவிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வர, அவன் எனது உரையாடலை உற்று நோக்குவதை உணர்ந்துக் கொண்டேன்.

“நீங்கள் மலேசியரா?” என்றான். “ஓம்,” என்றேன். “எங்கே போகிறீர்,” எனக் கேட்டான். ஒன்றும் யோசிக்காது பட்டெனச் சொன்னேன், “சத்திய மங்கலம்,” என்று. “உறவினர் வீட்டிற்கா,” எனக் கேட்டான். “இல்லை, தெரிந்தவர் வீட்டிற்கு,” என நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறிவழகன் பேருந்தில் நுழைந்துவிட்டார். என்னருகில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே அவருக்கு முகம் மாறிவிட்டது.

அறிவழகன் நான் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வரவும், “என் நண்பர் வந்துவிட்டார்,” என பக்கத்தில் அமர்ந்திருந்தவனிடம் கூறினேன். அவன் அப்பவும் பிடித்த வைத்த பிள்ளையார் சிலை மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தது எனக்குச் சற்று எரிச்சலை உண்டாக்கியது. அறிவழகன் வந்து, “கொஞ்சம் விலகுங்கள்,” என்று சொன்ன பிறகே அவன் இடத்தைக் காலி செய்தான். அறிவழகன் என் அருகில் அமர அவன் அறிவழகனின் பக்கத்துச் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். அப்போதும் எட்டி எட்டி என்னிடம் பேச்சுக் கொடுக்க முற்பட அதை அறிவழகன் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

அந்த இளைஞன் எம்மிடம் பேசுவது அறிவழகனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்டேன். அதனால், அவனிடம் பேசுவதைத் தவிர்க்க முகத்தை சன்னல் பக்கம் திருப்பிக் கொண்டேன். ஒரு வழியாகச் சத்திய மங்கலம் வந்திறங்கினோம். காலையிலிருந்துச் சரியாகச் சாப்பிடவில்லை. அறிவழகனுக்கும் பசிக்க, பேருந்திலிருந்து இறங்கியவுடன் சாப்பாடு கடையைத் தேடினோம். சற்று தொலைவில் உணவகம் ஒன்று கண்ணில் பட இருவரும் அதனை நோக்கி நடந்துச் சென்றோம்.

மாலை நேரமானதால் உணவகத்தில் சோறு இல்லை. அறிவழகனின் முகத்தில் சற்று ஏமாற்றும் தெரிந்தது. அவர் தோசை வேண்ட, நான் இதற்கு முன் கேட்டிராத பெயர் கொண்ட உணவு ஒன்றை வேண்டினேன். அது என்னவென்று அறிவழகனுக்கும் தெரியவில்லை. ஏதோ, சுவையாக இருந்ததால் இருசித்துச் சாப்பிட்டேன். பின்னர், இருவரும் ஆட்டோ எடுத்து, அறிவழகனின் தோழி கோதை வீட்டை நோக்கி பயணமானோம். சத்ய மங்கலமும் அழகான கிராமம்தான். கோதையின் வீட்டின் பின்னால் நெல் வயல்களும் வாழைத் தோட்டமும் இருந்தன. வீட்டு நுழைவாயிலில் நுழையும் முன்னரே வீட்டுப் பின்னால் சென்று நெல் வயல்களைப் பார்வையிட்டேன். அந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதை விட அழகாய் இருந்தாள் அந்தப் பெண். நீண்ட வளர்ந்தக் கூந்தலை அழகாய் பின்னிவிட்டிருந்தாள். நெற்றியில் சிறிய கறுப்புப் பொட்டு. எளிமையான சுடிதார். முன்பக்கத்தை முழுமையாக மறைத்த துப்பட்டா. வட்ட வடிவமான முகம். அதில் எந்நேரமும் தவழும் சிறு புன்னகை. இனிமையான குரல். வாசல் வரை வந்து எங்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டு வாசலுக்கு முன் இருந்த வேப்பமரம் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியளித்தது.

அந்த வீட்டிற்குள் நுழையுமுன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றேன். ஒருவித பரவச நிலை உடலெங்கும் பரவ சில வினாடிகள் கண்ணசைக்காமல் அதனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எமது தேசியச் சின்னம்! அந்த வீட்டின் வாசற்கதவின் தமிழீழ தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது! எனது விரல்களால் அதனைத் தடவி உள்ளூர நெகிழ்ந்தேன். அந்த நொடியில், பெருமை, கர்வம், ஆனந்தம், நெகிழ்ச்சி என பலதரப்பட்ட உணர்வுகள் எம்மை ஆட்டிப் படைத்தன. எனது உணர்வுகள் தோழர் அறிவழகனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“கோதையின் அப்பாவும் ஈழ ஆதரவாளர். நீங்கள் கண்டிப்பாக அவரைச் சந்திக்க வேண்டும்,” என என்னிடம் சொல்லிவிட்டு, “கோதை, நீங்கள் அவரின் முதுகைப் பார்க்க வேண்டும்,” என அந்தப் பெண்ணிடம் வேண்டினார். அந்தப் பெண் குழப்பமாகத் தயங்கித் தயங்கி என்னருகில் வரவும், நான் சிரித்துக்கொண்டே விரித்து விட்டிருந்த எமது கூந்தலை விலக்கிக் காட்டினேன். இந்த முறை அந்தப் பெண் அதிர்ச்சியில் சிலையானாள்.

வாசலிலேயே நின்று சில விடயங்கள் பேச ஆரம்பிக்க, கோதை எமது கைகளில் இருந்த பைகளை உள்ளே எடுத்துச் சென்று வைத்தாள். மீண்டும் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து அந்திப் பொழுதின் அழகை இரசித்தவாறு கதைப் பேச ஆரம்பித்தோம். சின்னப் பெண்தான். ஆனால், அடக்கமும் மரியாதையும், யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதையும்  நன்றாய் அறிந்து வைத்திருந்தாள். நொடிக்கொரு தரம் தந்தைக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து விரைவில் வீட்டுக்கு வருமாறு நினைவூட்டிக் கொண்டிருந்தாள். பொறுப்புள்ள பெண்!


புதன், 5 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 12)





மேட்டூர் பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டோம் என ஐயா கொளத்தூர் மணி அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். அவரும் எங்களைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.  அறிவழகனுக்குப் பசித்திருக்க வேண்டும். இரண்டு வாழைப் பழங்கள் வாங்கி எனக்கொன்று கொடுத்து அவர் ஒன்று சாப்பிட ஆரம்பித்தார். நானும் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே பேருந்து நிலையத்தை நோட்டமிட்டேன். நல்ல வெயில். அந்த வெய்யிலிலும் மக்கள் நெரிசல் குறையவில்லை. சுற்றிலும் ஒட்டுக் கடைகளில் பழச்சாறுகள், முறுக்கு வகைகள், பழங்கள், தின்பண்டங்கள், இதழ்கள் போன்றவை விற்பனையாகிக் கொண்டிருந்தன.

அறிவழகனின் தொலைப்பேசி மீண்டும் அலறியது. கொளத்தூர் மணி ஐயா எங்களைப் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த பெரியார் பாசறையில் காத்திருக்கச் சொன்னார். நானும் தோழர் அறிவழகனும் பெரியார் பாசறையை நோக்கி நடந்தோம். ஒரு சிறியக் குறுக்குச் சந்தில் நுழைந்தவுடன் பெரியார் படிப்பகம் கண்களில் தென்பட்டது. அது சற்றுச் சிறிய அறை. உள்ளே சில புத்தகங்களும், நாளிதழ்களும் பொது மக்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. ஒரு நீண்ட மேசையும், அதன் இரு பக்கங்களியும் இரு நீண்ட நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. படிப்பகத்தின் உள்ளே இருந்த இரண்டு ஆண்கள் ஐயா வரும் வரையில் எங்களை அங்கே அமர்ந்திருக்கச் சொன்னனர்.

அந்த நீண்ட நாற்காலில் நான் ஒரு புறமும் அறிவழகன் எனக்கு எதிர்ப்புறமும் அமர்ந்துக் கொண்டோம். நீண்ட பயணக் களைப்பின் அறிகுறியாக அமர்ந்ததுடன் வழக்கம் போல “கிருஷ்ணா” எனக் கூறி ஆயாசப் பெருமூச்சு விட்டேன். அது அறிவழகனின் காதில் விழ திடுக்கிட்டவராய் மெல்லிய குரலில், “எங்கே அமர்ந்துக்கொண்டு யாரை அழைக்கிறீர்கள்,” என்றார். சுவற்றில் மாற்றி இருந்த பெரியார் படம் என் கண்ணில் பட பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துவிட்டு அமைதியானேன். சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி அவ்விடம் வந்துச் சேர்ந்தார். படிப்பகத்தின் பக்கத்தில் இருந்த அவரது அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர்.

வெள்ளை வேட்டிச் சட்டையுடன் பளிச்சென்று காட்சி தந்தார். வணக்கம் கூறிய எங்களை அன்போடு வரவேற்று தமது எதிரில் அமர வைத்தார். சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நான் அதிகம் பேசவில்லை. அறிவழகனுக்கும் கொளத்தூர் மணி ஐயாவுக்கும் நிகழ்ந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் கதைத்துக் கொண்டிருக்கும் போதே நெடுமாறன் ஐயாவின் புதல்வியும் அவரது தோழர்களும் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். நேற்றைய தினம்தான் அவர்கள் ‘மிளகாய் பொடி’ என்ற மேடை நாடகத்தை நடத்தியதாக மணி ஐயா தெரியப்படுத்தினார்.

நெடுமாறன் ஐயாவின் புதல்வி மிகவும் இயல்பாக இருந்தார். முகத்தில் எந்தவித பூச்சுக்களும் இல்லை. அணிகலன்கள் எதனையும் அணியவில்லை, காதணிகள் உட்பட. பட்டாசு போல படபடவென்று பேசினார். மணி ஐயாவிடம் அவர் பேசிய முறையே அவர்கள் இருவரும் தந்தை, மகள் போல உறவாடி வருவதை உணர்த்தியது. சில நிமிடங்களில் இன்னொரு வாகனத்தில் நாடகக் குழுவில் நடித்தவர்கள் வந்துச் சேர்ந்தனர். அந்தச் சின்ன அலுவலத்தில் அனைவரும் அமர்வதற்காக மேலும் சில நாற்காலிகள் போடப்பட்டன. இடப்பற்றாக்குறையால் சிலர் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நானும் அறிவழகனும் நாற்காலியிலிருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிக்க முற்பட்ட வேளையில் அனைவரும் எங்களை அப்படியே அமரச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அனைவருக்கும் தேநீர் வரவழைக்கப்பட்டது.

அந்த நாடக்குழுவில் பெரும்பாலும் திருநங்கைகள் இடம்பெற்றதைக் கண்டுக்கொண்டேன். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் மிகவுக் இயல்பாக நட்புடன் பேசிப் பழகினர். அதில் ஒரு பெண் மலேசியப் பெண்கள் போல் முட்டிவரை உள்ள காற்சட்டையும், உடலைப் பிடித்த மேற்சட்டையும் அணிந்திருந்தார். அவர்களுடன் அவ்விடம் அமர்ந்திருந்தது ஏதோ எமது நாட்டில் எமது தோழர்களுடன் இருப்பதைப் போல் எமக்கு உணர்த்திற்று. இரண்டு அந்நியர்கள் இருக்கிறார்கள் என அவர்கள் கவலைப்படவில்லை. ஒருவரை ஒருவர் கேலி செய்து, மிகவும் மகிழ்ச்சியாகக் கதைத்தனர்.

அந்தக் குழுவில் சின்னத்திரை துணை நடிகர் ஒருவர் வந்திருந்தார். அவரை அடையாளம் கண்டுக்கொண்ட கிராம மக்கள் சிலர் அலுவலகத்தின் உள்ளே எட்டி எட்டிப் பார்த்துகொண்டிருந்தனர். அதனைப் பார்த்த அந்த நபரின் ஏனைய நண்பர்கள், “டேய், உன் இரசிகர்கள் உன்னைத்தான் தேடுகிறார்கள். நீ வெளியே போய் அவர்களைப் பார். அப்போதுதான் நாங்கள் இங்கே நிம்மதியாகப் பேச முடியும்,” என அவரை விரட்டியடித்தனர். அவரும் உற்சாகத்துடன் தமது இரசிகர்களைக் காண எழுந்துச் சென்றார். அவரை வெளியே கண்டதுமே, அவரைச் சுற்றி மக்கள் கூட ஆரம்பித்தனர். 

உள்ளே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. அந்தச் சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களது கிண்டல் கேளிகளை நான் மிகவும் இரசித்தேன். நேற்றைய தினம் நடந்த நாடகத்தைப் பற்றியும் கதாப்பாத்திரங்கள் பற்றியும் பேசினர். மேடை நாடகத்தில் எமக்கு அனுபவம் இருந்ததால், அந்த நாடகத்தைப் பார்க்காத ஏக்கம் என்னுள் குடிகொண்டது. முன் கூட்டியே தெரிந்திருந்தால் நானும் பார்த்திருப்பேனே என்று சற்று கவலையடைந்தேன். அவர்கள் அங்கே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

அலுவலகத்தின் வெளியேயும் கூட்டத்திற்கு குறைவில்லை. பாவம் அந்தச் சின்னத்திரை நடிகர். கையெழுத்துப் போட்டு போட்டு களைத்துப் போனார். அவரைப் பார்க்க மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர். அவர் யார் என்று பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்திருந்தது. அப்போதுதான் ஊடகத்தின், தொலைக்காட்சியின் வலிமையை நான் அறிந்துக் கொண்டேன். ஒரு சின்னத்திரை துணை நடிகருக்கே இவ்வளவு ஆதரவு என்றால், நடிகர்களுக்குச் சொல்லவா வேண்டும்? இப்போது தெரிகிறது ஏன் பெரும்பான்மையான நடிகர்கள் அரசியலில் குதிக்கிறார்கள் என்று. எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

ஆனால், இந்த மக்களில் எத்தனைப் பேருக்கு ஈழத்தில் நடந்தப் படுகொலைகள் பற்றித் தெரியும்? அதனைத் தொடர்ந்து உலகெங்கும் நடத்தப்பட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் தெரியும்? ஒரு ஆட்டோக்காரர் சீமான் தமிழ்நாட்டுக்காரர் இல்லை என்று சொல்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் தமிழகத்தில் ஏன் இந்த நிலமை? ஒரு சாதாரண துணை நடிகரையே பிரபலமாக்கும் சக்தி தொலைக்காட்சிக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறதே. ஏன் அவர்களை அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்கக் கூடாது? இப்படி பலதரப்பட்ட எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக என் மூளையில் ஓடிக்கொண்டிருந்தன.

அவ்வேளையில் யாரோ இரு பெண்கள், அலுவலகத்தின் உள்ளே அமர்ந்திருந்த எம்மை உற்று நோக்கி, “இவங்களும் நாடகத்துல நடிக்கிறாங்களா?” என கேட்க எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “இவங்களும் நடிகைதான். மலேசிய நாடகத்துல நடிக்கிறாங்க,” என அந்த நாடக கோஷ்டியில் இருந்த இன்னொருவர் பதில் சொல்ல, “மலேசியா நாடகமா? அது எப்ப வருது?” என அந்தப் பெண்களில் ஒருவர் அப்பாவியாய் கேட்டார். அடப்பாவிகளா! மலேசியா என்பது ஒரு நாடு. அதனை நாடகத்தின் தலைப்பு என்று நினைத்துவிட்டார்கள் போலும். பாவம், அந்த கிராம மக்களைத்தான் எப்படிக் குறைச் சொல்வது? ஆட்சியாளர்கள் அல்லவா அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

“இவர்களெல்லாம் கிராமத்தான்கள். இவர்களுக்கு வெளியுலகம் தெரியாதம்மா. தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்த்து காலம் கழிப்பவர்கள்,” என மணி ஐயா சொன்னார். அவரது குரலில் சற்று ஏமாற்றமும் இயலாமையும் பிரதிபலித்தது. உள்ளே இருந்த நாடகக் குழுவினர் சிலர் துணை நடிகரைக் கிண்டல் செய்ய வெளியே செல்லவும், அந்த நாடகத்தின் இயக்குனர் அன்புச்செல்வன் என்னுடன் பேச்சுக் கொடுத்தார். மேடை, தொலைக்காட்சித் தொடர்களில் எனக்குச் சற்று அனுபவம் இருந்ததால் நானும் ஆர்வமுடன் சில விடயங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அறிவழகனோ உள்ளே இருந்த இடப்பற்றாகுறையை குறைக்க எப்போதோ வெளியே சென்றுவிட்டார்.

சற்று நேரம் உரையாடியப் பிறகு நாடகக் குழுவினர் எங்களிடம் விடைப்பெற்றுச் சென்றனர். பெருத்த மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது! நெருங்கிய உறவுகள் நீண்ட நாள் உடனிருந்து திடீரெனப் பிரிவதைப் போல் ஓர் உணர்வு. மணி ஐயாவிடம் மேலும் சில நிமிடங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். அதற்குள் அவரிடம் உதவி வேண்டி கிராம மக்கள் இருவர் வந்துவிட்டனர். ஒருத்தனுக்கு உதவி செய்தாலே அதை நாளிதழில் பிரசுரித்து சுய விளம்பரம் தேடும் இந்த கலியுகத்தில், இப்படி பலருக்கு உதவி புரிந்து விளம்பரமில்லாமல் எளிமையான வாழ்க்கை வாழும் மணி ஐயா என்னுள்ளத்தில் உயர்ந்து நின்றார். இவர்தான் உண்மையான கதாநாயகன்!



செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 11)






10 நாட்கள் பெங்களூர், கோலார் தங்க வயல், கோவா என கடந்துச் சென்றன. புனிதா அக்கா பெங்களூர் வந்த 5-வது நாளில் மீண்டும் சென்னைக்கே திரும்பிச் சென்றுவிட்டார். நானும் மீண்டும் தமிழ்நாடு செல்ல தயாரானேன். ஜூலை 18-ஆம் திகதியன்று அதிகாலை 4.30 மணிக்கே எழும்பிவிட்டேன். ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர் அறிவழகன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எம்மை அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்ததால், அவருக்குத் தொலைப்பேசி அழைப்பு விடுத்து எழுப்பிவிட்டேன்.

பெங்களூரில் இரவிலும் அதிகாலையிலும் குளிர் அதிகம். நடுங்கியபடியே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியை அடைத்தேன். அறையின் ஓரத்தின் சுருட்டிப் போட்டிருந்த துணிகளை எல்லாம் எடுத்து பெட்டியில் மடித்து வைத்தேன். நல்ல வேலை அந்த வீட்டில் சுடுநீர் வசதி இருந்தது. காலையிலேயே குளித்துத் தயாராகி எமது 25 கிலோ எடைக்கொண்ட பையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்த வீட்டில் இருந்த அனைவரிடமும் விடைப்பெற்ற நிலையில் எமது பையைக் கண்ட வாசன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது)  அண்ணா, அதனை அப்படியே வாங்கிக் கொண்டார்.

“இவ்வளவு பாரம் எதுக்கம்மா? அதிகம் அலைச்சல். இங்கே வைத்துவிட்டுப் போ. நீ மலேசியா போகும் போது நானே சென்னை வந்துத் தருகிறேன்,” என்றார். சரியென்று தேவைப்படும் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்தப் பெரிய பையை அவ்விடமே விட்டுவிட்டு வந்தேன். வாசன் அண்ணா மோட்டார் வண்டியில் தொடர்வண்டி நிலையத்திற்கு ஏற்றிச் சென்றார். அந்த அதிகாலைப் பொழுதில் குளிர் காற்றைக் கிழித்துக் கொண்டு மோட்டார் சென்றது. அது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. தொடர்வண்டி நிலையத்தில் புத்தூருக்குச் செல்ல அறிவழகனுக்கும் சேர்த்து சீட்டு வாங்கினேன்.

முன் கூட்டியே பதிவு செய்யாததால் நெருசலில் சிக்க வேண்டிவரும் என அறிவழகன் எனக்குப் பயமூட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திலேயே புத்தூர் செல்லும் வண்டி வந்தது. வாசன் அண்ணாவோ முன்பதிவு செய்த பெட்டிக்குள் ஏறச் சொல்லி எங்களை வற்புறுத்தினார். அந்தப் பெட்டிகள் காலியாக இருந்ததால் இருவருமே சற்றுத் தயக்கத்தோடு அந்தப் பெட்டுக்குள் ஏறி அமர்ந்தோம். அறிவழகன் எனக்கு நேர் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

அறிவழகன், பிரபலமான ஒரு இதழில் எழுத்தாளராகப் பணிபுரிபவர். எம்மை விட வயதில் சிறியவர். இருப்பினும், பல விடயங்களை அறிந்து வைத்திருந்தார். எதனையும் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வம். எதனையும் முகத்துக்கு நேரே சொல்லிவிடும் துணிவு. பிறர் மனதை புண்படுத்தாத சுபாவம். கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம், நிரம்பக் காதல் என ஒரு அழகானக் கதாப்பாத்திரம். சாயலில் சினிமா நடிகர் ஜீவா போல் இருப்பார். அவரது பேச்சும் அப்படித்தான் இருக்கும்.

எனது முதல் தொடர்வண்டிப் பயணம் அது. வண்டி புறப்பட்ட சில நிமிடங்களில் நானும் அறிவழகனும் பல விடயங்களைப் பற்றி கதைக்க ஆரம்பித்தோம். அனைத்தையும் இரசித்து காதலிக்கும்  தன்மை கொண்டவர் அறிவழகன் . அப்படிப்பட்டவர் தனது காதலியைப் பற்றி கூறிய போது ஏதோ கனவுலகில் மிதப்பது போல் இருந்தது. அவர் கண்கள் எங்கோ செல்ல, அணுவணுயாய் இரசித்து தமது காதல் கதையை எம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். பின்னர், தமது நெருங்கிய தோழி, கோதையைப் பற்றியும் சொன்னார். பெண்கள் மேல் அவருக்கு நல்ல மதிப்பு இருந்ததை அவரது பேச்சின் ஊடே அறிந்துக் கொண்டேன்.

எங்கே சென்றாலும் தன்னுடம் ஒரு சில பத்திரிக்கைகள் அல்லது புத்தகங்கள் உடன் வைத்திருந்தார். தன் தோழிக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த கவிதை புத்தகம் ஒன்றை எம்மிடம் நீட்டினார். நட்பைப் பற்றிய அழகான கவிதைகள். “தொடாமல் பேசுதல் காதலுக்கு அழகு, தொட்டுப் பேசுதல் நட்புக்கு அழகு” என்ற வரிகள் எம்மை வெகுவாகக் கவர்ந்தன. அந்த அழகிய தொடர்வண்டிப் பயணத்தில் எம்மை மறந்து நட்புக் கவிதைகளில் மூழ்கினேன். இப்படிப்பட்ட நண்பன் கிடைப்பதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பயணத்தின் போது ஒரு சிலர் வண்டியின் உள்ளே தேநீர், காப்பி, பலகாரங்கள் விற்றுக்கொண்டிருந்தனர். அந்தப் பெட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததனால் சுதந்திரமாகப் பேச முடிந்தது. அறிவழகன் மட்டும் சுற்றும் முற்றும் திரும்பிப்  பயணச் சீட்டுப் பரிசோதகர் வந்துவிடுவாரா என்று பார்த்துக்கொண்டிருந்தார். பயப்பட வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பயம் நீங்குவதாக இல்லை. ஒருவழியாக புத்தூர் வந்துச் சேர்ந்தோம். அங்கே ஒரு ஆட்டோ பிடித்துப் புத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. லேசாகப் பசித்தது. அவ்விடம் ஆளுக்கொரு குவளை பழச்சாறு வாங்கிக் குடித்தோம். பின்னர் அங்கிருந்து மேட்டூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டோம். ஏற்கனவே பல பயணிகள் பேருந்தில் இருந்ததால் எங்களுக்குச் சேர்ந்து அமர இடம் கிடைக்கவில்லை. மூவர் அமருர்ந்துச் செல்லும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கால்கள் நீட்டும் இடம் மிகவும் சிறியதாக இருந்தது. நான் ஒரு பெண்மணியின் அருகில் சென்று அமர, அறிவழகன் எனக்குப் பின்னே அமர்ந்துக் கொண்டார்.

அதனால் பயணத்தின் போது அதிகம் பேச முடியவில்லை. அவ்வப்போது தலையை மட்டும் திருப்பி லேசாக புன்னகைத்து வைத்தேன். நீண்ட தூரம் பயணம், வெயில், பசி என அனைத்தும் கலந்து எம்மை அறியாமலேயே உறங்கிவிட்டேன். பேருந்து திடீரென்று சற்று அதிகமாகக் குழுங்க சட்டென்று கண் விழித்தேன். அப்போதுதான் எம் அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் தோளில் என்னையும் அறியாது தலை சாய்த்துத் தூங்கியதை உணர்ந்தேன். உணர்ந்ததும் கண்களில் இருந்த தூக்கம் அனைத்து எங்கோ பறந்துச் சென்றுவிட்டது.

அந்தப் பெண் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, சொல்லவும் இல்லை. அப்போதுதான் அந்தப் பெண்ணை உற்று கவனித்தேன். லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை கட்டியிருந்தார். சுமார் 35 வயது இருக்கும். தலையில் கொஞ்சம் மல்லிகைச் சரம், வெய்யிலில் சற்று வாடியிருந்தது. திருமணமானவர் என்பதன் அடையாளச் சின்னமாகக் கழுத்தில் மஞ்சள் நிற கயிறு. நல்ல கலையான முகம். நான் அவரை உற்று நோக்குவதை அவர் கவனித்திருக்க வேண்டும். எம் பக்கம் முகத்தைத் திருப்பிச் சிரிக்க, நான் அசடு வழிந்தேன். என்னவோ, அவரிடம் பரிபூரணமாகத் தாய்மை குணம் குடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மீண்டும் அதே தோளில் சாய உள்ளம் துடித்தது. சிரமப்பட்டு அதனை அடக்கிக்கொண்டேன்.

ஏற்கனவே நெருக்கித்தான் அமர்ந்திருந்தோம். நான் வேண்டுமென்றே அந்தத் தாய்மையின் கதகதப்பை உணர இன்னும் நெருங்கி உரசி அமர்ந்தேன். அவர் அதனைக் கண்டுக்கொள்வதாக இல்லை. அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. என்ன பேசுவது? “மேட்டூர் செல்ல இன்னும் எவ்வளவு நேரமாகும்?” எனக் கேட்டேன். “இன்னும் 30 நிமிடங்களில் வந்துவிடும். அணையைச் சுற்றிக் கொண்டுச் செல்ல வேண்டும். அதனால்தான் நேரமாகிவிட்டது,” என்றார். என்ன அழகான குரல்.

மீண்டும் என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. எதனையும் யோசிக்கவும் தோன்றவில்லை. பேருந்து மேட்டூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. நானும் அறிவழகனும் இறங்கிக் கொண்டோம். தற்செயலாக அந்தப் பெண்ணின் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டதைச் சொன்னேன். ,”ஐயையோ, பிறகு என்னாச்சு?” என அலறினார். ஒன்றும் ஆகவில்லை எனச் சிரித்தேன்.


திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 10)




அக்காவின் உறவினர் வீட்டில் எங்களை விட்டுவிட்டு அருண் சென்றுவிட்டான். அக்கா அவரது உறவுப் பெண் ஒருவருடன்  கதைத்துக் கொண்டிருந்தார். அப்பெண் கதைத்துக்கொண்டே எங்கள் இருவரையும் முடி முதல் பாதம் வரை கண்களாலேயே அளவெடுத்ததை நான் கவனித்துவிட்டேன். என்னென்னவோ பேசினார்கள். நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சில மணித்துளிகள் அவ்விடம்  செலவழித்தப் பிறகு அருண் வந்து எங்களை ஏற்றிக் கொண்டான். மதியம் உணவு உண்ணவில்லை. காலையில் சாப்பிட்ட பொங்கல் இன்னமும் தொண்டையிலேயே நின்றது.

மூவரும் தி நகருக்குச் சென்றோம். அந்த வெய்யிலிலும் தி நகர் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் நாங்கள் மூவரும் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தோம். போகும் வழியில் ஒருவர் பஞ்சுமிட்டாய் விற்க, அதில் ஒன்றை வாங்கிக் கொண்டேன். வண்ண வண்ண ஆடைகள், சேலைகள், சுடிதார் போன்றவைகளை சாலையில் ஓரங்களிலேயே சிலர் கடை விரித்து விற்றுக்கொண்டிருந்தனர். நானும் அக்காவும் ஒரு சில கடைகளுக்கு ஏறி இறங்கினோம். நாங்கள் எங்கே சென்றாலும் அருண் எங்கள் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான். அது எனக்கு மிகுந்த அசெளகரியத்தை உண்டாக்கியது.

ஐந்து மாடிக் கொண்ட சரவணா ஸ்டோரில் நானும் அக்காவும் நுழைந்தோம். அங்கே ஒரே மாதிரியான சீருடை அணிந்து சிறு வயதுப் பெண்களும் இளைஞர்களும் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டவுடன் எனக்கு ‘அங்காடித் தெரு’ திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. பெரும்பான வேலையாட்களின் முகத்தில் கிராமத்துக் களை ஓடியது. அக்கா தமது உறவினர்களுக்கு உடை எடுத்துக் கொண்டிருந்தார். நானும் சில சேலைகள் வாங்கலாம் என்று காட்டன் சேலைகள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

இரட்டைப் பின்னலுடன் சுமார் 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணொருத்தி என்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த சீருடையிலிருந்து அவளும் அங்கே வேலை செய்யும் பெண் என்பதை அறிந்துக் கொண்டேன். அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவளும் சிரித்தாள். அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியதால் ஏதோ ஒரு வர்ணத்தைச் சொல்லி சேலை இருக்கிறதா என்றுக் கேட்டேன். அவள் என் அருகில் வந்து எனக்காகச் சேலைத் தேட ஆரம்பித்தாள்.

“எங்கேயிருந்து வருகிறீர் அக்கா,” என வினவினாள். மலேசியா என்று சொல்ல இன்னும் சில கேள்விகள் கேட்டாள். நானும் அவளை மேலும் தெரிந்துக்கொள்ளும் நோக்கில் சில கேள்விகள் தொடுத்தேன். தான் தூத்துக்குடியைச் சேர்ந்தவள் என்றும் இரண்டு வருட காலமாக அங்கே வேலை செய்வதாகவும் கூறினாள். தமது வீட்டாரைச் சந்தித்து ஒரு வருடம் ஆகப் போகிறதென்றும், அடுத்த வாரம் வீட்டிற்குச் செல்ல தமக்கு விடுப்புக் கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறினாள். அங்கேயே நின்று நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம். அவள் பேசிய தமிழ்மொழி சென்னைத் தமிழைவிட சற்று மாறுபட்டிருந்தது.

நாங்கள் இவ்விடம் கதைத்துக்கொண்டிருக்க அக்காவைத் தேடி அருண் வந்தான். அக்கா இன்னொரு பக்கம் இருக்கிறாள் என்றேன். தமக்கு அவசர வேலை ஒன்று இருப்பதாகவும், தாம் உடனே செல்ல வேண்டும் எனவும் கூறினான். உண்மையிலேயே அவனுக்கு அவசர வேலை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சரி, தொல்லை ஒழிந்தது என, “அவசரமாக இருந்தால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் பிறகு வருகிறோம்,” என்றேன். “சரி, நான் புனிதாவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறேன்,” என அவ்விடத்தை விட்டு அகல முற்பட்டான். அவன் மகிழுந்தில் எமது புத்தகங்கள் இருப்பது நினைவு வர, “காரில் என் புத்தகங்கள் இருக்கிறது. நான் வந்து எடுத்துக்கொள்கிறேன்,” எனச் சொன்னேன்.

“வேண்டாம். நான் பிறகு வந்து தருகிறேன்,” என்றான். இவன் முகத்தில் திரும்பவும் முழிக்க வேண்டுமா என மனதிற்குள் நொந்துக் கொண்டேன். அருண் அகன்ற சில நிமிடங்கள் கழித்து அக்கா எம்மைத் தேடிக் கொண்டு வந்தார். அருண் சென்றுவிட்டதை அவருக்குச் சொன்னேன். தம்மிடமும் வந்துச் சொன்னதாகச் சொன்னார். வாங்கியப் பொருட்களுக்குப் பணத்தைச் செலுத்தினோம். கடையைவிட்டு வெளியேறும் முன், முன்பு எம்மிடம் கதைத்த பெண்ணிடம் சொல்லி விடைப்பெற்றேன்.

கடையை விட்டு வெளியாக உடனேயே சாலையோரத்தில் இருந்த பலதரப்பட்ட வியாபாரிகள் எங்களை மொய்க்க ஆரம்பித்தனர். பொருட்கள் மிகவும் மலிவாகக் கிடைத்தன. இருந்தும் அந்தக் கூட்டத்தில் நடக்கவே மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு வழியாக கூட்ட நெரிசலிலிருந்து விடுபட்டு சாலையை வந்தடைந்தோம். மதியம் சாப்பிடாததால் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. சுற்றும் முற்றும் உணவகம் தேடி அலைந்த வேலையில், ஒரே ஒரு பிரியாணிக் கடை மட்டும் கண்ணில் தென்பட்டது.

அது மிகவும் சிறிய கடை. கடையின் உள்ளே ஒரே ஒரு சிறிய மேசையும் நான்கு நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஈக்கள் அங்குமிங்கும் மொய்த்துக் கொண்டிருந்தன. எங்களால் அதிகம் சாப்பிட முடியாது என்பதால் பகிர்ந்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என் கோழி பிரியாணி கேட்டோம். கை கழுவலாம் என்று குழாயைத் திறந்தேன். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் ரேவதி சொல்வது போல் வெறும் காற்றுத்தான் வந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு செம்பில் நீர் எடுத்து வந்துக் கொடுத்தார். கைகளைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தேன். பிரியாணி வந்தது.
பசியோடு பிரியாணியை எடுத்து வாயருகே கொண்டு சென்ற வேளையில் ஒருவித துர்நாற்றம் வீசியது. சரியாக வேகாத, பச்சை இரத்த வாடை!

அக்கா கோழி சாப்பிட மாட்டார். எனவே கோழி எனக்கு, முட்டை அவருக்கு என்று ஏற்கனவே பகிர்ந்தாயிற்று. ஏதாவதுச் சொன்னால் அக்காவும் சாப்பிட மாட்டாரே என்று எதுவும் சொல்லாமல் மிகவும் சிரமப்பட்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டேன். அந்தக் கடையில் இருந்த இரண்டு பேரும் எங்களை மிகவும் அன்போடு உபசரித்ததால் ஏதும் சொல்லி அவர்கள் மனதைப் புண்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்து, புன்சிரிப்புடன் அக்கடையை விட்டு வெளியேறினேன். ஆனால், நான் சாப்பிட்டக் கோழியோ வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருந்தது.

என் நண்பர் ஒருவரைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தி நகரிலிருந்து வளசரவாக்கம்  செல்ல ஆட்டோவிற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு ஆட்டோ எடுத்தோம். “அருண் நம் மீது மிகுந்த அக்கறை இருப்பது போல் காட்டிக்கொண்டான். எனக்குத் திருமணம் என்று சொன்னதும் நடுத்தெருவில் விட்டுச் சென்றுவிட்டான். இவனைப் போய் நம்பினேனே,” என அக்கா புலம்பிக் கொண்டே வந்தார். எனக்கோ அவன் மகிழுந்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எம் புத்தகங்கள் பற்றிய கவலை. அவனிடம் சொல்லி மறவாமல் எமது புத்தகங்களை வந்துக் கொடுக்கச் சொல்லும்படி அக்காவிடம் நினைவுறுத்தினேன்.

அக்கா ஏதோ சிந்தனையில் இருக்க, நான் ஆட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பேசிய சென்னைத் தமிழை மிகவும் இரசித்தேன். தமிழக அரசியல், வாழ்வியல், பொருளாதாரம் என பல விடயங்களைப் பற்றி பேசினேன். அவ்விடயங்களைப் பற்றிய தெளிவு அவரிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் பேச்சினைத் தொடர்ந்தேன். அவரும் உற்சாகமாகக் கதைத்தார்.

சீமானைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மொட்டையாகக் கேட்டேன். “சீமான் இலங்கையைச் சேர்ந்தவர். அவரது மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்,” என்றார். நான் சற்று அதிர்ந்தேன். “சீமான் தமிழ்நாட்டுக்காரர். ஈழ மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார். அவ்வளவே,” என்றேன். “அப்படிங்களா?” என அவர் அப்பாவியாக என்னைக் கேட்டார். “நமக்கு எங்கங்க இதெல்லாம் தெரியுது. காலம் பூரா உழைச்சு குடும்பத்தைப் பார்க்கவே சரியா இருக்கு. ஒரு தடவை என் நண்பர் சொன்னார். சீமான் ஈழத்துக்காரர், சின்ன வயதிலேயே இங்கே வந்துவிட்டார் என்று,” என தன் நிலமையைத் தெளிவுப்படுத்தினார்.

ஆட்டோக்கார அண்ணாவிடம் கதைத்துக்கொண்டே தங்கும் விடுதி வந்தாயிற்று. பிரகாசும் அருணும் எங்களுக்காக அவ்விடம் காத்திருப்பதாகக் கூறினார்கள். அக்காவும் மனம் மாறி என்னுடன் பெங்களூர் வருவதாகச் சொல்லியிருந்தார். விடுதி அறையை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து, உடை மாற்றி துணிப்பைகளைக் கட்டிக் கொண்டு கிளம்பினோம். அருணும் பிரகாசும் மோட்டார் வண்டியில் வந்திருந்தனர். எனவே எங்களுக்காக ஆட்டோ ஒன்றும் பிடித்திருந்தனர்.

ஆட்டோ ஏறுவதற்கு முன்பு காலையில் வாங்கிய புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல அருணிடம் கேட்டேன். “காரிலேயே வச்சிட்டேன். திரும்ப சென்னைக்கு வரும் போது வந்து தருகிறேன்,” என்றான். அவன் பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆசை ஆசையாக வாங்கிய புத்தகம். திரும்ப வந்து இவன் முகத்தைப் பார்க்க வேண்டுமா என்ற ஆதங்கம் ஒரு பக்கம். புனிதா அக்கா, தனது நண்பர் வித்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வீட்டில் தனது பைகளில் சிலவற்றை வைக்க வேண்டும் எனச் சொல்ல, ஆட்டோ வித்யா வீட்டை நோக்கி பயணமானது. அருணும் பிரகாசும் ஆட்டோ முன்னால் மோட்டார் வண்டியில் சென்றனர். வித்யா ஒரு இசையமைப்பாளர் என்று போகும் வழியில்தான் அக்கா எம்மிடம் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் அக்காவின் நண்பர் என்பதால் அருணைப் போன்று நடந்துக்கொள்வாரோ என்ற எண்ணமே முதலில் வந்து நின்றது.

வித்யா வீட்டில் அவரும் அவரது தம்பியும் இருந்தனர். வித்யா வீட்டிற்கு வந்ததுமே அருணும் பிரகாசும் தங்களுக்கு வேலை இருப்பதாகச் சொல்லி கலண்டுவிட்டனர். நாங்கள் சென்று அக்காவின் பைகளை வைத்துவிட்டு சிறிது நேரம் உரையாடினோம். வித்யா தாம் இசையமைத்த பாடல் ஒன்றை எங்களிடம் போட்டுக் காட்டினார். நன்றாகத்தான் இருந்தது. கோடம்பாக்கம் பேருந்து நிலைத்தில்தான் பெங்களூருக்குச் செல்லும் பேருந்து எடுக்க வேண்டும். அங்கே அக்காவின் வேறு சில நண்பர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

அனைவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு, பேருந்து நிலையத்தில் அருகிலிருந்த ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்டோம். அந்த இரவிலும் பேருந்து நிலையம் கலை கட்டி இருந்தது. ஏதோ சந்தையில் நுழைந்த ஒரு உணர்வே மேலோங்கி இருந்தது. சரியாக இரவு மணி 10.30-க்கு பெங்களூர் செல்லும் பேருந்து வந்தது. அது ‘ஸ்லீபிங் கோட்ச்’. அதாவது, பேருந்தின் உள்ளே இரு பக்கமும் சில படுக்கைகள் போடப்பட்டிருக்கும். பயணிகள் படுத்துக் கொண்டே நீண்ட தூரப் பயணம் செய்வதற்கு ஏதுவாக அது அமைக்கப்பட்டிருந்தது. அக்காவின் நண்பர்கள் அனைவரிடமும் விடைப்பெற்று விட்டு பேருந்தில் ஏறிக் கொண்டோம். பெங்களூரை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 9)




அதிகாலை எனக்கு முன்னதாகவே புனிதா அக்கா எழுந்துவிட்டார். அக்காவின் திட்டத்தின்படி இன்று வடபழனி முருகன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பின்னர் அக்காவின் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இன்றிரவு நான் மட்டும் தனியே பெங்களூர் செல்வதாக இருந்தது. இரவு முகம் கழுவாமல் உறங்கிவிட்டதால், மேலும் பல பருக்கள் தோன்றியிருந்தன. கடலை மாவை முகத்தில் அப்பிவிட்டு நேற்றைய சம்பவங்களைப் பற்றி அக்காவுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அருணுக்கு அக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதை அறிந்துக்கொண்டேன்.

இதுதான் நல்ல தருணம் என்று, “இனி அவன் நம்முடன் வரவேண்டாம். நாமே பார்த்துக் கொள்ளலாம். அவன் நமக்கு உதவி புரிவதாகத் தெரியவில்லை. நிலமையை இன்னும் மோசமடையச் செய்கிறான். நீங்கள் எங்காவது செல்ல வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்றேன். “அதுதான். எனக்கும் அவன் செய்கை பிடிக்கவில்லை. ஆனால், இன்று அவன் நம்மை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியிருக்கிறான். இன்று மட்டும் அவனுடன் சென்று வருவோம்,” என்றார்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை மிகவும் பெரிது. வாடகையும் அதிகம். குளிக்கவும், உறங்கவும் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அறைக்கு அதிகம் செலவழிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை. தவர, அருண் எங்களை அழைத்துச் சென்ற உணவகங்கள் அனைத்தும் நவீனமாகவும் அதிக விலை கொண்டதாகவும் இருந்தது. இங்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழ நான் வரவில்லையே. அப்படி வாழ்வதற்கு நான் ஒன்றும் பணக்காரி அல்லவே? ஒரு வேளை, மலேசியாவில் வசிப்பதால் எங்களைப் பணக்காரர்கள் என அருண் நினைத்துவிட்டான் போலும். எங்குச் சென்றாலும் அவனுக்கும் சேர்த்து நாங்கள்தான் செலவழித்தோம்.  சரி, அக்காவுக்காகப் பொறுத்துக் கொள்வோம் என இருவரும் ஆயத்தமானோம்.

நேற்று போலவே இன்றும் விடுதியின் பணியாள் தேநீர் வேண்டுமா எனக் கேட்க, நேற்று வந்த சிறிய குவளை நினைவிற்கு வந்தது. “அக்கா, எனக்கு இரண்டு குவளைக் கொண்டு வரச்சொல்லுங்கள். தேநீர் சுவையாக இருந்தது. ஆனால், போதவில்லை,” என்றேன். அக்கா தனக்கும் சேர்த்து மொத்தம் 4 குவளைத் தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

தேநீர் கொண்டு வந்த பணியாள் கொஞ்சம் தயங்கித் தயங்கி, “அம்மா, சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இந்த அறையில் இரண்டு பேர் மட்டுமே தங்க முடியும். நான்கு பேர் தங்குவதாக இருந்தால் அதிகம் வாடகைக் கொடுக்க வேண்டும்,” என்றார். “நாங்கள் இரண்டு பேர் தானே இருக்கிறோம்,” என்று அக்கா குழப்பத்தோடு சொல்ல, அவர் ஏன் அப்படிச் சொன்னார் என எனக்கு விளங்கியது.

“அண்ணா, நீங்கள் மிகவும் சிறிய குவளையில் தேநீர் கொடுக்கிறீர்கள். அது எங்களுக்குப் போதவில்லை. அதனால்தான் ஆளுக்கு இரண்டாக 4 குவளைக் கொண்டு வரச் சொன்னோம்,” என்றதும் அவர் அசடு வழியத் திரும்பிச் சென்றார். அருண் வந்துவிட்டதாக அக்காவின் கைப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்பினான். உடனே நாங்கள் கோவிலுக்குச் செல்ல தயாரானோம். அந்த விடுதியின் ஸ்திரி செய்யும் பெட்டி இல்லை. எனவே கொண்டு வந்த பெட்டியைத் துருவி, அதிகம் கசங்காத கறுப்பு வெள்ளைச் சுடிதார் ஒன்றைத் தேடிப் பிடித்து அணிந்துக் கொண்டேன்.

கோவிலுக்குச் செல்வதில் எனக்கு அதிகம் ஈடுபாடு கிடையாது. ஆனால், என்னுடன் வந்த அக்காவுக்கோ அதீத கடவுள் பக்தி. அதற்கென்று எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என முடிவுச் செய்துவிடாதீர்கள். நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை நான் எப்பொழுதும் மறுத்ததில்லை. அதே சமயம் கோவிலில் நடைப்பெறும் சில வழக்கங்கள் எமக்குப் பிடிப்பதில்லை. அங்குச் சென்றால் அர்ச்சனைச் செய்ய வேண்டும். அதற்கென பணம் செலுத்த வேண்டும். பூசாரிக்கு தட்சணைக் கொடுக்க வேண்டும் என்பன கோவிலில் எழுத்தப்படாதச் சட்டங்களாக இருக்கின்றன.

நான் சிலை வடிவில் இருக்கும் கடவுளை தரிசிக்க எவனோ ஒருவனுக்கு (பூசாரிக்கு) எதற்குப் பணம் கொடுக்க வேண்டும்? எதற்கு அர்ச்சனை சீட்டு வாங்க வேண்டும். எம்மைப் பொறுத்த வரை, கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார், பல வடிவங்களில், பல பெயர்களில் இருக்கிறார். கடவுள் நம்மிடம் எதையும் வேண்டுவது கிடையாது. அப்படியிருக்கையில் கடவுளின் பெயரால், பூசை, வேண்டுதல், யாகம், அபிஷேகம் என செய்யப்படும் மூடநம்பிக்கைகளை எப்படி ஆதரிக்க முடியும்?

இந்தக் கடவுளுக்கு இதுதான் உகந்த நாள், இவருக்கு இதைத்தான் படைக்க வேண்டும் என்பதிலும் எமக்கு உடன்பாடு இல்லை. கடவுள் அனைத்தும் கடந்தவர் என்றால், நாள்களிலும், கோல்களிலும், உணவுகளிலும் பாகுபாடு எதற்கு? இந்தக் கடவுளைப் பற்றி பேச ஆரம்பித்தால் கதை நீண்டுக் கொண்டே போகும். நமது கதைக்கு வருவோம்.

நான், அக்கா, அருண் ஆகிய மூவரும் ஒருவழியாக வடபழனி கோவிலுக்கு வந்துச் சேர்ந்தோம். மகிழுந்தை உரிய இடத்தில் விட்டுவிட்டு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். சில பிச்சைக்காரர்கள் எங்களைத் தொடர்ந்து வந்து நச்சரித்தனர். நான் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது நேரே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். பாவம் அக்கா அவர்களிடம் மாட்டிக்கொள்ள, அருண் அவரை மீட்டு வந்தான்.

கோவிலின் வழி நெடுகிலும் பூக்கடைகள். பூக்கடைகளுக்கு முன்னே பலரின் செறுப்புகள் கிடந்தன. அக்கா ரோஜா மாலை ஒன்று வாங்கினார். இரண்டு முழம் மல்லிகைச் சரம் வாங்கிக் கூந்தலில் சொருகிக் கொண்டாள். எனக்கும் மல்லிகைப் பூச்சூட ஆசைதான். சூடினால் தலை நிறைய சூட வேண்டும். சேலை அணிந்திருந்தால் அழகாக இருக்கும். சுடிதாருக்குப் பூ எதற்கு என ஒன்றும்  வேண்டாமல் அக்காவைப் பின்தொடர்தேன். அவர் பூ வாங்கிய கடையிலேயே எங்கள் செறுப்புகளை விட்டு வைத்தோம்.

கோவிலின் உள்ளே அர்ச்சனைச் சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அக்காவும் பணம் செலுத்தி அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கி இறைவனை தரிசிக்கப் போனார். கூடவே அருணும் போனான். நான் கோவிலில் உள்ள சிற்பங்களையும், பக்தர்களையும் இரசித்தவாறு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தேன். திடீரென, “யாருப்பா அங்க போட்டோ பிடிக்கிறது,” என ஒரு குரல் சத்தமாக எழுந்தது. அதனைத் தொடர்ந்து, “யாருப்பா அது? யாருப்பா அது?” என பல குரல்கள் எழும்பி ஒரு சிறு கலவரம் போல் உண்டாக, சத்தம் வந்த திசையை நோக்கினேன்.

அங்கே கையில் புகைப்படக் கருவியுடன் அருண் நின்றிருக்க பூசாரி ஒருவர் அவனைக் கண்டித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அக்கா. எனக்குள் உள்ளூர சிறு மகிழ்ச்சி. நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும்! அந்தக் கோவிலில் யாரும் எதையும் யாரையும் புகைப்படம் எடுக்கக் கூடாதாம். இது வடபழனியில் வாசம் செய்யும் அருணுக்கு எப்படித் தெரியாமல் போனது என்றுதான் எனக்கு விளங்கவில்லை. நல்ல வேளை, புகைப்படக் கருவி அவன் கையில் இருந்தது.

அக்கா இறைவனைத் தரிசனம் வைத்துவிட்டு அவ்விடம் இருந்த சிறு கடையினுள் சாமிக் கயிறு வாங்குவதற்குச் சென்றார். அவ்விடம் கறுப்பு, சிகப்பு, மஞ்சள் நிறத்திலான சாமிக் கயிறுகள், சின்னச் சின்னச் சிலைகள், தகடுகள், பூசைப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் இருந்தன. அதில் எதிலும் மனம் இலயிக்காது திரும்பிச் செல்ல முற்படுகையில், புத்தகக் குவியல் ஒன்று கண்ணில் தென்பட்டது.

எனக்குப் புத்தங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். தமிழ், மலாய், ஆங்கிலம் என எதுவாக இருந்தாலும் மனதைக் கவர்ந்திருந்தால் வாங்கி வந்து விடுவேன். இரும்பைக் காந்தம் கவர்வது போல புத்தங்கள் என்னைக் கவர்ந்தன. ஏற்கனவே நூல்நிலையத்தில் இரவல் வாங்கிப் படித்திருந்தாலும் அவ்விடம் மலேசியாவைக் காட்டிலும் விலை குறைவாக இருந்ததால் நாயன்மார்கள் வரலாறு, ஐம்பெருங்காப்பியக் கதைகள், இராமாயணம் என புத்தகங்களை அள்ளிக்கொண்டேன். சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெருமானமுள்ள புத்தகங்கள். எங்கள் நாட்டில் வாங்கினால் அதுவே ஐயாயிரம் ரூபாய் தேறும்.

நேற்று துணிக்கடையில் துணி எடுக்க 200 ரூபாய் செலவழிப்பதற்கே தயங்கியவள் இன்று 2000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குகிறாளே என அக்காவே மலைத்தார். கோவிலை விட்டு வெளியேறி, அருகே இருந்த சரவண பவன் உணவகத்தில் நுழைந்தோம். இதுவும் சைவமா என்ற ஒருவகையான நொந்த மனநிலை. என்ன சாப்பிடுவது என்றே தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே, “இங்கு பொங்கல் நன்றாக இருக்கும். பவனேஸ் இதைச் சாப்பிட்டுப் பார். அண்ணே, 2 செட் பொங்கல் எடுத்துட்டு வாங்க,” என அருண் ஆர்டர் செய்துவிட்டான்.

எனக்கு ஒரு பக்கம் கோபம் தலைக்கேறியது. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டியவள் நானல்லவா? மிகவும் சிரமப்பட்டு எம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். பொங்கல் வந்தது. முன்பின் அதனைச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததாலும், முழுக்கச் சைவமாக இருந்ததாலும், எம்மால் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. உணவை வீணாக்குவது எமக்குப் பிடிக்காது. “அருண், என்னால் சாப்பிட முடியவில்லை. நீங்களே சாப்பிடுங்கள்,” என்றேன்.

“நல்லாயிருக்கும் சாப்பிடு,” என்றான். “எனக்குப் பிடிக்கவில்லை,” என்றுச் சொல்லி பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். “உங்களை யார் அதிகப்பிரசங்கித் தனமாக ஆர்டர் செய்யச் சொன்னது. ஒழுங்காகச் சாப்பிட்டு முடியுங்கள்,” என அக்கா அருணைக் கடிந்துக் கொண்டார். அவனும் அதனைச் சிரமப்பட்டுச் சாப்பிட்ட மாதிரிதான் தெரிந்தது.

அடுத்ததாக அக்காவின் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எங்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறும் நாங்கள் சொந்தமாகப் பயணித்துக் கொள்கிறோம் என்று சொல்லியும் அருண் விடுவதாக இல்லை. தமக்கு வேலை இல்லை என்றும் தாமே உடன் வருவதாகவும் கூறினான். எனக்கு அவனிடம் பேசக் கூடப் பிடிக்கவில்லை. மகிழுந்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது புனிதா அக்கா தாம் விரைவில் ஒருவரைத் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறினார். அருணின் முகம் சற்று மாறியது. குரலிலும் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 8)




ஆட்டோ பல ‘ஹான்’ சத்தங்களுக்கிடையில் குண்டும் குழியுமான தார் சாலையில் குலுங்கிக் குலுங்கிச் சென்றுக் கொண்டிருந்தது. எனக்கென்னவோ குதிரை வண்டியில் போவது போன்று இருந்தது. அந்த ஆட்டோ பயணத்தை நான் மிகவும் இரசித்தேன். ஆட்கள் கூட்டமாக இருந்த ஒரு இடத்தில் ஆட்டோ சிறிது நேரம் நின்றது. ஆட்டோக்காரர், “ஸ்சேர் ஆட்டோ, ஸ்சேர் ஆட்டோ,” என்றுக் கூவ இரு பெண்கள் வந்து ஏறிக்கொண்டனர். நானும் அக்காவும் சற்றுத் தள்ளி அமர்ந்தோம். என் முகத்தில் உள்ள குழப்பத்தை அறிந்துக்கொண்ட அக்கா, “ஸ்சேர் ஆட்டோ என்றால் போகும் வழியில் யாரெல்லாம் ஏற வேண்டுமோ ஏறிக்கொள்வார்கள், சின்னப் பேருந்துப் போல. அனைவரும் ஒரே வண்டியில் செல்வதால் வாடகையும் குறைவு,” என தெளிவுப்படுத்தினார்.

ஆட்டோ போகும் வழியெல்லாம் ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்தது. ஆட்டோவின் உள்ளே நெருக்கமும் அதிகரித்தது. ஒரு சமயத்தில் ஆட்டோவின் பின்னருக்கையில் மட்டும் என்னையும் சேர்த்து 7 பேர் அமர்ந்திருந்தோம். அனைவரும் பெண்கள் என்பதால் எவ்வித தடையுமின்றி நெருங்கி உரசி அமர்ந்திருந்தோம். ஆட்டோ சென்றுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு நபர் ஓடிவந்து முன்னிருக்கையில் ஆட்டோக்காரர் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார். இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.  என்னருகில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் நொடிக்கொரு தரம் அழைப்பேசியில் யாரையோ அழைத்து தாம் கடந்து வரும் இடங்களின் பெயரையும், சுமார் எத்தனை மணித்துளிகளில் தாம் வந்து சேர்ந்துவிடுவார் எனவும் அனுமானித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஓவ்வொருவரும் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் 10 ரூபாய் வாடகைச் செலுத்திவிட்டு இறங்கிச் சென்றனர். ஆட்டோ முருகன் இட்லி கடையை நெருங்கவும் நாங்களும் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லி விடைப்பெற்றோம். நாங்கள் வந்திறங்கும் போது வானம் முற்றிலுமாய் கருத்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நட்சத்திரங்கள் தலைக்காட்டத் தொடங்கியிருந்தன. வழக்கம் போல நான் இரசித்துப் பார்க்கும் நிலவைத் தேடினேன்; காணவில்லை.

அன்று இரவு உணவிற்கு அருணும் எங்களுடன் இணைந்துக் கொள்வதாக புனிதா அக்காவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதனை அக்கா என்னிடம் கூறிவிட்டு என் முகத்தை நோக்கினார். நான் எவ்வித உணர்ச்சியையும் காட்டாது விடுதியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தேன். விடுதியை அடைந்ததும் நானும் அக்காவும் படுக்கையில் பாய்ந்தோம். எங்கள் செய்கையைப் பார்த்து நாங்களே சத்தமிட்டு சிரித்துவிட்டோம். மிகுந்த களைப்பாக இருந்ததால் சற்று நேரம் அப்படியே படுத்திருந்தோம்.

“என் நண்பன் முகமதுவை இன்று இரவு உணவுக்குச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். இந்த அருண் ஏன் திடீரென்று வருகிறான் என்று தெரியவில்லை,” என அக்காவே உரையாடலைத் துவக்கினார். அவருக்கும் அருணின் நடவடிக்கைகளில் அதிருப்தி இருப்பதாகத் தெரிந்தது. இன்னும் பேசாதிருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்துக் கொண்டு எனது மனநிலையையும் தெரியப்படுத்தினேன். “அக்கா, நான் தனியாகச் சென்று பழக்கப்பட்டவள். நீங்கள் என்னுடன் வருவதில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. ஆனால், அருண் அதிக உரிமைக் கொண்டாடுவது போல் இருக்கிறது. இது எனக்குப் பிடிக்கவில்லை. நாம் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்று அருணிடம் ஒப்புவிக்க எனக்குப் பிடிக்கவில்லை. பிரகாஷ் எவ்வளவோ கண்ணியமாக நடந்துக் கொள்கிறார். எனக்கு அருணைக் கண்டாலே பிடிக்கவில்லை. உங்கள் நண்பர் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்,” என்றேன்.

“எனக்கும் அவன் நடவடிக்கைகள் பிடிக்கவில்லைதான். அதிகம் உரிமைக் கொண்டாடுகிறான். நான் பார்த்துக்கொள்கிறேன். அவன் செய்கை ஏதாவது உனக்குப் பிடிக்கவில்லையெனில் அவனிடம் நேரடியாகச் சொல்லிவிடு. எனக்காக அமைதிக் காக்க வேண்டாம்,” என்றார். மனம் சற்று அமைதியானது. அதற்குள் யாரோ கதவைத் தட்டும் சத்தம். இருவரும் திடுக்கிட்டோம். அருணாக இருக்குமோ? நாங்கள் வருவதற்கு முன்பு அழைக்கச் சொல்லியிருந்தோமே? நான்தான் கதவருகில் சென்றேன்.

“யாரது?” என உரத்தக் குரலில் கேட்டேன். “நான்தான் அருண். புனிதா எங்கே? கதவைத் திற பவனேஸ்,” என்றான். எனக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது. என்ன மனிதன் இவன்? இரு பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்னறிவிப்பில்லாமல் வந்து உரிமையோடு கதவைத் திறக்கச் சொல்கிறான்??!! என்ன நினைத்திருக்கிறான் மனதில்? நாங்கள் மலேசியா வாழ் தமிழர்கள்தான். அனைவரிடமும் சகஜமாக அன்போடு பழகுவோம். அதற்காக ஒரு ஆண் மகனை எளிதில் அறைக்குள் விட்டுவிடுவோமென்று நினைத்தானோ? நான் கோபத்துடன் அக்காவைப் பார்த்தேன். கதவைத் திறக்க வேண்டாமென சைகைக் காட்டினார்.

“நாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கீழே வரவேற்பறையில் காத்திருங்கள். தயாராகியப் பிறகு கீழே வருகிறோம்,” என்றேன். “கொஞ்ச நேரம் கதவைத் திற. புனிதாவிடம் பேச வேண்டும்,” என்றான். “நாங்கள் இரு பெண்கள் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறோம். எப்படி கதவைத் திறப்பது. நீங்கள் காத்திருங்கள். நாங்கள் வருகிறோம்,” என்று சற்றுக் கோபமாகக் கூறினேன். “கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள்,” என்று சென்றுவிட்டான். அதற்குள் அக்காவின் கைப்பேசி அலறியது. அருண்தான்! அக்கா ஆத்திரத்தில் கத்திக்கொண்டிருந்தாள். அது அவருடைய தனிப்பட்ட விடயம் என்றபடியால், நான் குளியறைக்குச் சென்று முகம் கழுவினேன்.

அதிகம் வெய்யிலில் அலைந்ததால் ஏற்கனவே கறுப்பாக இருந்த முகம் இன்னும் கறுத்திருந்தது. ஆங்காங்கே பருக்கள் தோன்றியிருந்தன. கூந்தல் துடைப்பம் போல் காய்ந்துக் கிடந்தது. கூடவே கொண்டு வந்திருந்த கடலை மாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் அப்பினேன். அது காயும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் அக்காவை முதலில் குளிக்கச் சொன்னேன். பின்னர் நானும் குளித்துத் தயாரானேன். கீழே அருண் காத்திருந்தாலும் நாங்கள் அவசரம் காட்டவில்லை. காத்திருக்கட்டும் என்று நிதானமாகவே கிளம்பினோம்.

நான், அருண், அக்கா மூவரும் இரவு உணவுக்காக காரைக்குடி உணவகத்தை நோக்கிப் பயணமானோம். செல்லும் வழியில் அக்காவின் நண்பர் முகமதுவையும் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டோம். வேண்டுமென்றே அருணிடம் எதுவும் பேசாது முகமதுவிடம் மட்டும் பேசிக்கொண்டு வந்தேன். காரைக்குடியில் இரவு உணவை முடித்த பிறகு முகமதுவை உரிய இடத்தில் இறக்கிவிட்டோம். மேலும் எங்கே செல்லலாம் என அருண் வினவ எனக்கு நித்திரை வருகிறது என்னை விடுதியில் விட்டுவிடுங்கள் என்றேன். அக்கா தனக்கும் களைப்பாக இருப்பதாகக் கூறினாள்.

“நீங்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பான ஆட்கள் ஆயிற்றே. அவ்வளவு சீக்கிரம் உறங்க மாட்டீர்களே,” என்றான். “காலையிலிருந்து அலைந்ததால் களைப்பாக இருக்கிறது,” என்றார் அக்கா. நான் ஒன்றும் பேசாமல் கண்கள் மூடி உறங்குவது போல் பாவனைச் செய்தேன். அவனிடம் பேசுவதைத் தவிர்க்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படியே  கண்ணயர்ந்துப் போனேன். “பீச்சுக்கெல்லாம் வேணாம். நேரமாகிவிட்டது. பாவம் பவனேஸ். காரிலேயே தூங்குகிறாள்,” என்ற அக்காவின் குரல் சத்தமாக ஒலிக்கவும் திடுக்கிட்டு விழித்தேன். “வந்தாச்சுப் புனிதா. கொஞ்ச நேரம் இருந்துவிட்டுச் செல்வோம்,” என்று அவன் சொல்ல அக்கா, “எனக்குத் தூக்கம் வருது. நான் இறங்கமாட்டேன். எங்களை விடுதியில் விட்டுவிட்டு நீங்கள் எங்காவது போங்கள்,” என்று கடுப்போடுச் சொன்னார்.

“இவ்வளவு தூரம் வந்தாச்சு,” என அவன் மீண்டும் சொல்ல அக்கா ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது தெரிந்தது. நான் மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. ஒருவழியாக தங்கும் விடுதியின் முன் மகிழுந்து வந்து நின்றதது. நானும் கண் விழித்தேன். தங்கும் விடுதியின் வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது! அக்கா கத்த ஆரம்பித்தார்.

“என்ன விடுதி இது? நாங்கள் வருவதற்குள் எப்படி இதனைப் பூட்டலாம்? யாரையாவது அழைத்துத் திறக்கச் சொல்லுங்கள்!” என்று கடுமையானக் குரலில் கூறினார். சில ஆங்கில ‘நல்ல’ வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன. நான் பேசுவதற்குக் கூட சக்தியின்றி மிகவும் களைப்புற்றிருந்தேன். “நான் கதவில் ஏறி உள்ளே குதிக்கப் போகிறேன். எனக்கு நித்திரை வருகிறது,” எனக் கூற அருண் அலறிவிட்டான். “அப்படி ஏதும் செய்துவிடாதே. இன்னும் சிறிது நேரத்தில் திறந்துவிடுவார்கள். நான் கூப்பிடுகிறேன்,” எனக்கூறி கதவருகில் கூவிக்கொண்டிருந்தான்.

இரு வேளையாட்கள் வந்து கதவைத் திறந்தனர். மழை பொழிந்திருந்ததால் வாசல் முழுக்க வெள்ளமாக இருந்தது. கவனமாகத் தாண்டித் தாண்டிச் சென்ற போதும் எமது காலணிகள் முழுமையாக நனைந்துவிட்டன. அக்கா தாண்டிச் செல்ல முற்படும் போது வழுக்கி விழந்திருப்பார். நல்ல வேளை, சுதாரித்துக் கொண்டார். நான் மேலே அறைக்குச் செல்ல படிகள் ஏறிக்கொண்டிருக்கும் போது, அருண் அக்காவிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்ல அக்கா என்னவென்று கேட்டு அங்கேயே நின்றுவிட்டாள். அறையைத் திறந்து சாவியை அக்காவிடம் கொடுத்துவிட்டு, உடை கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்து இவ்வுலகை மறந்து துயில் கொண்டேன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 7)




பேருந்து வடபழனி நிறுத்தத்தை அடையவும், கண்டெக்டர் நாங்கள் இறங்க வேண்டியதை நினைவுப் படுத்தினார். சுற்றும் முற்றும் பார்த்தோம். புதிய சூழலாக இருந்தது. அது வடபழனி தானா எனக் கேட்டு மீண்டும் உறுதிச் செய்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினோம். புழுதியைக் கிளப்பியப்படி பேருந்து எங்களைத் தாண்டிச் சென்றது.

“தவறுதலாக இறங்கிவிட்டோமோ,” என அக்கா சந்தேகமாகக் கேட்டார். “இதுதான் வடபழனி. சற்று தூரம் நடந்துச் சென்றுப் பார்ப்போம்,” என்றேன். வெயில் இன்னும் குறையவில்லை. இருவரும் நடந்து நடந்து பெரிய சாலையை அடைந்தோம். கைத்தொலைப்பேசி மூலம் அருணைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இறங்கிய இடத்தையும் அங்கு இருக்கும் கடைகளின் பெயர்களையும் சொல்லி விடுதிக்குச் செல்வதற்காக வழி கேட்டோம். அப்போதுதான் அந்தப் புண்ணியவான் நாங்கள் தங்கியிருந்தது ‘வளசரவாக்கம்’ என்று தெரிவித்தார்.

“பின்பு என்ன #$%@-க்கு எங்களிடம் வடபழனி என்று சொன்னாய்,” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. நான் கேட்க நினைத்ததை நாகரிகமாக அக்காவே கேட்டுவிட்டார். “நான் வளசரவாக்கம் என்றால் உங்களுக்குத் தெரியாது என்றுதான் வடபழனி என்றேன். வடபழனி பக்கம்தான் இருக்கிறது,” என காரணம் சொன்னான். ஏனோ தெரியவில்லை, நான் சென்னைக்கு வந்ததிலிருந்து எனக்கு அருணின் மேல் சொல்லமுடியா வெறுப்புணர்ச்சி. அக்காவின் நண்பர் என்ற ஒரே காரணத்தால் பேசாமல் இருந்தேன்.

கதைத்து முடிந்து அக்கா தொலைப்பேசியை வைத்தார். வெயிலில் அலைந்ததால் இரண்டு பேரும் சற்று களைத்துப் போயிருந்தோம். “என்னவாம்?” எனக் கேட்டேன். “இங்கேயே ஏதாவது ஒரு கடையில் காத்திருக்கச் சொன்னான். பிரகாஷ் வந்ததும் நம்மை வந்து அழைத்துச் செல்கிறார்களாம்,” என்றார். சற்று யோசித்தேன். “அக்கா, அதெல்லாம் வேண்டாம். நான் இங்கு வந்ததே அனுபவம் பெறுவதற்குத்தான். எனக்குக் காரில் பயணம் செய்ய பிடிக்கவில்லை. நான் இன்னும் சிறிது தூரம் காலார நடக்கப் போகிறேன். இங்குள்ள கடைகளைப் பார்க்க வேண்டும், மக்களின் வாழ்வியலைப் பார்க்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் அவர்களுடன் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்,” என்றேன்.

ஏதோ ஒருவித நம்பிக்கை. மொழி தெரியாத ஊர்களுக்கே தனியாக சென்று வந்தாயிற்று. என் தாய்மொழிப் பேசும் உறவுகள் வாழும் ஊரில் தொலைந்துப் போய்விடுவேனா என்ன? “எனக்கும் காரில் பயணம் செய்யப் பிடிக்கவில்லை. நாம் இருவரும் நடந்துச் சென்று பிறகு ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்று விடுவோம். அருணிடம் நாம் தங்கியிருக்கும் தெருவின் பெயர் என்னவென்றுக் கேட்கிறேன்,” என்றார்.

“நல்ல யோசனை. ஆனால், அருணிடம் கேட்க வேண்டாம். நாம் யாருடைய துணையுமின்றி தனியாகத்தானே வந்தோம். அதே போல், நாமே சென்று விடுவோம்,” என்றேன். என் முகத்தில் இருந்த அதிருப்தியை அக்கா கவனித்திருக்க வேண்டும். “ஆனால், நமக்கு முகவரி தெரியாதே? என்ன சொல்லி ஆட்டோ எடுப்பது,” என்றார். பட்டென்றுச் சொன்னேன், “வளசரவாக்கம், முருகன் இட்லி கடை!”. இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்.

எங்கள் நடைப்பயணம் தொடர்ந்தது. சாலையோரம் அமைந்திருந்தக் கடைகளைப் பார்வையிட்டபடியே நடந்தோம். வாகனங்கள் ‘ஹான்’ சப்தத்தை எழுப்பியபடியும், புழுதியைக் கிளப்பியபடியும் சென்றுக் கொண்டிருந்தன. எங்கள் நாட்டில் ஒரு வாகனம் தேவையில்லாமல் ‘ஹான்’ சப்தம் எழுப்பினாலே மற்ற வாகனமோட்டிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.  இங்கே நொடிக்கொரு தரம் எல்லா வாகனங்களும் சத்தம் எழுப்பிய படியே சென்றுக் கொண்டிருந்தன. சாலையோரங்கள் பானிப்பூரி, சமோசா போன்றவை விற்பனையாகிக் கொண்டிந்தது. பேருந்து நிறுத்தம் ஒன்று தென்பட்டது. அதனைச் சட்டை செய்யாது நாங்கள் எங்கள் நடையைத் தொடர்ந்தோம்.

இனிப்புப் பலகாரக் கடை ஒன்று கண்ணில் தென்பட்டது. அதனுள்ளே ஒரு நீண்ட மேசையும், சில நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மிகச் சிறிய கடையாக இருந்தாலும் பலவகையான இனிப்பு வகைகள் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இனிப்பு வகையிலேயே எனக்குப் பிடித்த ‘குலாப் ஜாமூனை’ அங்குக் கண்டதும் என்னால் நாவை அடக்க முடியவில்லை.

“அக்கா, சிறிது களைப்பாக இருக்கிறது. கடையின் உள்ளே நாற்காலி இருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்துக் களைப்பாறிச் செல்வோம்,” என்றேன். அக்காவும் சரியென்றபடியால் இருவரும் கடையின் உள்ளே நுழைந்தோம். நானும் அக்காவும் ஆளுக்கொரு குலாப் ஜாமூன் வாங்கிக்கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்து இளைப்பாறினோம். எங்கள் நாட்டில் இனிப்புக் கடைகளில் யாரும் அமர்ந்து உண்ண மாட்டார்கள். பெரும்பான்மையான இனிப்புக் கடைகளில் நாற்காலிகளும் இருக்காது. இனிப்பு வகைகளைப் பொட்டலம் கட்டித்தான் வாங்கிச் செல்வார்கள். உணவகங்களில் இனிப்பு வகைகள் விற்பனைச் செய்யப்பட்டால் அங்கு அதனை வாங்கி உண்ணும் வழக்கம் உண்டு.

மாலை நேரமானதால் வேலை முடிந்துச் சிலர் கடைக்கு வந்து  இனிப்பு வகைகளைச் சுவைத்துவிட்டுச் சென்றனர். பெரும்பாலும் ஆண்களே கடைக்கு வந்துப் போயினர். நாங்கள் இரு பெண்கள் மட்டுமே அந்தக் கடையில் அமர்ந்திருந்ததை உணர்ந்தேன். அக்காவால் குலாப் ஜாமுனை சாப்பிட்டு முடிக்க இயலவில்லை. பெருந்தன்மையாக அதனையும் நானே உண்டு முடித்தேன். சில முறுக்கு வகைகளைப் பொட்டலம் கட்டிய பிறகு நாங்கள் அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

நடைப்பயணம் தொடர்ந்தது. பெரும்பான்மையான பெண்கள் சுடிதார், சேலை அணிந்திருந்தனர். பாவாடைத் தாவணி அணிந்தப் பெண்கள் கண்களின் அகப்படவில்லை. ஆண்கள் பெரும்பான்மையோர் முழுக்கைச் சட்டையும், முழுநீல காற்சட்டையும் அணிந்திருந்தனர். சற்று வயதானவர்கள் வேட்டி கட்டியிருந்தனர். சாலையின்  ஓரத்தில் பெண்ணொருத்தி மல்லிகைச் சரங்களை மலை போல் குவித்து வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள். அந்த மலர்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அத்தனையும் அள்ளி எடுத்து, நீண்ட பின்னலிட்டு, கூந்தலில் சூடிக்கொள்ளலாமா என்ற பேராசையும் எழுந்தது.

வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. அக்காவின் நடையின் வேகமும் குறைந்தது. “வேகம் குறைந்துவிட்டதே. களைத்து விட்டீர்களா அக்கா?” என வினவினேன். “எனக்கு உன்னைவிட பத்து வயது அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்,” என்றார். பாவம் அக்கா. இளவயதான எனக்கே சற்று களைப்பாகத் தான் இருந்தது. என்னைவிட பத்து வயது அதிகமுள்ள அக்கா சீக்கிரம் களைத்துவிட்டதில் ஆச்சர்யமில்லைதான். அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கிற்று.

இன்னும் சற்று தூரம் வரை நடந்துச் சென்றோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை அழைத்து நான் இருக்கும் இடத்தின் அடையாளங்களைக் கூறி அங்கிருந்து எனது தங்கும் விடுதிக்குச் செல்ல ஆட்டோ வாடகைக்கு எடுத்தால் எவ்வளவு ஆகும் என வினவினேன். சுமார் 40 ரூபாய் ஆகுமென்று சொன்னார். ஆட்டோக்கள் சில நின்றுக்கொண்டிருந்தன. ஒரு ஆட்டோவை நெருங்கி, “வளசரவாக்கம், முருகன் இட்லி கடைக்குச் செல்ல வேண்டும்,” என்றோம். அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “100 ரூபாய் ஆகும்,” என்றார். “விலை அதிகம். வேண்டாம்,” என்று சொல்லிவிட்டோம். பின்னாலிருந்த இன்னொரு ஆட்டோக்காரர், “எங்கம்மா போகணும்?” என கேட்டார். இடத்தின் பெயரைச் சொன்னோம். “தலைக்குப் பத்து ரூபாய்,” என்றார். மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஓமென்று ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.