வெள்ளி, 27 மே, 2016

நிரந்தரமில்லை...


இதுவும் நிரந்தரமில்லை 
அதுவும் நிரந்தரமில்லை 
சுற்றும் உலகில்
எதுவும் நிரந்தரமில்லை!

நேற்று அழுதவன் 
இன்று சிரிக்கிறான்
இன்று சிரிப்பவன்
நாளை அழுகலாம்...

மாடியில் இருப்பவன் 
குடிசைக்கு வரலாம்
குடிசையில் இருப்பவன்
மாடி ஏறலாம்...

இன்றைய காதலி மனைவியாகலாம்
நேற்றைய நண்பன் பகைவ‌னாகலாம்
பெற்ற தாயும் மறைந்துப் போகலாம்
வாழ்க்கை என்பதே வெறுத்துப் போகலாம்

நேற்றைய பழக்கம் மாறி போகலாம்
புதியன அனைத்தும் வந்து சேரலாம்
நண்பர் கூட்டம் பெருகிப் போகலாம்
அடுத்த நாளே இறந்துப் போகலாம்!

இதுவும் இல்லை
அதுவும் இல்லை
வாழ்க்கையில் எதுவும்
நிரந்தரமில்லை!

ஹரி போட்டரும் மந்திரவாதியின் கல்லும் -ஜெ.கே.ரோவ்லிங் (Harry Potter and The Sorcerer's Stone)


பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஹரி சித்தியின் வீட்டில் பல கொடுமைக்களுக்கிடையில் வளர்கிறான். பதினோரு வயது வரையில் தனது பிறந்தநாளை ஒருநாள் கூட அவன் கொண்டாடியதில்லை. ஒருநாள் அவனுக்கு ஆந்தையின் மூலம் கடிதம் கொண்டு வரப்பட்டது. அவனது சித்தாப்பாவும் சித்தியும் அதனை அவனிடம் கொடுக்காது கிழித்துவிடுகின்றனர். சித்தியின் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு உறவோ நட்போ இல்லாத நிலையில் அவன் அந்தக் கடிதம் யாருடையதாக இருக்கும் என நினைத்து ஏங்குகிறான். அவனது ஏக்கத்தைப் போக்க, கடிதங்கள் கிழிக்கப்பட இன்னும் பல கடிதங்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. 

ஹரியின் 11-வது பிறந்தநாளன்று ஹாக்ரிட் எனப்படும் பெரிய மனிதன் ஒருவன் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, ஹாரி ஒரு மந்திரவாதி என்ற உண்மையைச் சொல்கிறான். மேலும், மந்திரவாதிகளான ஹரியின் பெற்றோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் விவரிக்கிறான். ஹரியை ஹோக்வர்ட் எனப்படும் மந்திரம் பயிலும் பள்ளியில் சேர்ப்பதற்கே தான் அவ்விடம் வந்ததாகக் கூறி அழைப்புக் கடிதத்தை கொடுத்து ஹரியை அழைத்துச் செல்கிறான். 

ஹரியின் படிப்புச் செலவிற்கு அவனது பெற்றோர் அதிகமான செல்வத்தை வங்கியில் வைத்திருந்தனர். ஹாக்ரிட்டின் உதவியின் மூலம், வங்கிலியிருந்து பணத்தை எடுத்துப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறான். பொருட்கள் வாங்கும் சந்தையில் ஏறத்தாள அனைவருக்குமே ஹரியை நன்குத் தெரிந்தது. அவனது நெற்றியில் இருந்த மின்னல் வெட்டு போன்ற தழும்பு அவன் மரணத்தை வென்ற 'ஹரி போட்டர்' என்பதை உலகிற்குப் பறைச்சாற்றியது.

மாயத் தொடர்வண்டியில் ஏறி மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஹரிக்கு, ரோன் மற்றும் ஹெர்மியோனியின் நட்பு கிட்டுகிறது. பள்ளியிலும் மூவருக்கும் ஒரே குழுவில் இடம் கிடைத்ததால் பிற்காலத்தில் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாயப்பள்ளியின் அழகையும் ஆடம்பரத்தையும் கண்டு ஹரி மயங்குகிறான். அவனிடம் மற்ற சிறுவர்களைவிட ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதை அனைவரும் உணர்கின்றனர். ஹோக்வர்ட்டின் பிரபலமான பறக்கும் பந்து விளையாட்டுப் போட்டிலும் ஹரி கலந்துக்கொண்டு தன் குழுவிற்கு வெற்றித் தேடி தருகிறான். பள்ளியின் தலைமையாசிரியர் அல்புஸ் டம்பெல்டோர் மற்றும் ஹாக்ரிட் இருவரும் ஹரியிடம் மிகுந்த அன்புக் காட்டுகின்றனர். இருந்த போதிலும், பேராசிரியர் சினேப் அவனை விரோதியைப் போல் நடத்துகிறார். 

ஒரு சமயம் வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாட முயற்சி நடந்திருப்பதான செய்தி நாளிதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முந்தினம்தான்  தலைமையாசிரியரிடம் ஒப்படைப்பதற்காக ஹாக்ரிட் வங்கியிருந்து அதனை எடுத்து வந்திருந்தான். அது என்னப் பொருளாக இருக்கும் என அலசி ஆராய்ந்துக் கடைசியாக அது, மரணமில்லாமல் வைத்திருக்கும் மந்திரக் கல் என்பதை ஹரி தெரிந்துக்கொண்டான். அந்தக் கல்லைப் பெருவதற்கு சினேப்  முயன்றுக்கொண்டிருக்கிறான் என்றெண்ணி எப்படியாவது அந்தக் கொடியவனைத் தடுக்க வேண்டி தனது நண்பர்கள் ரோன் மற்றும் ஹெர்மியோனியின் உதவியுடன் செயல்படுகிறான். 

பலத் தடைகளைத் தாண்டி, இறுதியாக மந்திரக்கல் இருக்கும் இடத்தை அடைந்த ஹரி, பேராசிரியர் கியூரல் என்பவரே அந்தக் கல்லைப் பெருவதற்கு முயற்சிகள் செய்துவந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறான். தன் பெற்றோரைக் கொன்ற வொல்டெமோர்ட் என்ற தீயச்சூனியக்காரனுக்கு கியூரல் உதவி வந்துள்ளதை அறிந்து அந்தக்கல்லை அவனிடமிருந்துக் காப்பாற்ற முயல்கிறான். மாயக்கண்ணாடியின் உதவியால் கல் ஹரியின் காற்சட்டைப்பைக்குள் வருகிறது. கியூரலால் ஹரியைத் தடுக்க முடியவில்லை. ஹரியிடமிருந்த  மாயச்சக்தி கியூரலைத் தடுத்தது. பள்ளி முதல்வர் டம்பெல்டோர் தக்க சமயத்தில் வந்து ஹரியைக் காப்பாற்றுகிறார். அந்தக் கல் மேலும் துன்பங்களை விளைவிக்காமல் இருப்பதற்கு அதனை அழிக்கவும் செய்கிறார். 

இவ்வாறாக, ஹரி போட்டரும் மந்திரக்கல்லும் என்ற இந்தப்பாகம் நிறைவடைகிறது. மாயஜாலங்கள் நிறைந்த இக்கதை வாசிக்க மென்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இக்கதைத் திரைப்படமாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களையும் அற்புதங்களையும் எம்மால் இவ்விடம் பதிய முடியவில்லை. வாய்ப்பிருப்பின், நீங்களே படித்து ஹரி போட்டரின் மாய உலகில் வலம் வாருங்கள். 

வியாழன், 19 மே, 2016

பாவப்பட்டப் பெண் -ஜாக்கி கோலின்ஸ் Poor Little Bitch Girl -Jackie Collins



டென்வர் ஜோன்ஸ், அனபெல்லா, கரோலின் ஆகிய மூவரும் பெவெர்லி ஹில்சில் ஒன்றாகப் படித்தவர்கள். 

அனபெல்லா
பிரபலமான சினிமா நடிகர்களின் ஒரே மகள். பால்ய வயதிலேயே அழகினைக் கூட்டுவதற்காகப் பல அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவள். அழகியாக இருந்த போதிலும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமையால் செல்வத்தை தன் விருப்பப்படி செலவழிக்கிறாள். நியூ யார்க்கில் ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனி அடையாளத்தைத் தேடுவதற்காகப் புறப்படுகிறாள். சென்ற இடத்தில் போதைப் பித்தனான பிராங்கியுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் விரைவான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தைக் கையிலெடுக்கின்றனர். மிகவும் பிரபலமான பணக்காரர்களுக்கு உயர்தர நடிகைகள், அழகிகளைத் தயார் செய்து கொடுப்பது இவர்களது இரகசியத் தொழிலாக இருந்தது. இதற்கிடையில் அனபெல்லாவின் அழகிய தாயார் சொந்த வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார். அதே சமயம், இவளது இரகசிய தொழில் பத்திரிக்கைகளில் ஆதாரத்தோடு அம்பலத்திற்கு வருகிறது. இறுதியாக, பிராங்கியை விட்டுப் பிரிகிறாள்.

கரோலின்
வாசிங்டனின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரேகரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிறாள். தனது காதலனைக் கலட்டிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினரைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். ஏற்கனவே திருமணமான கிரேகரி அதனது குடும்பத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதற்கெல்லாம் கரோலினின் கர்ப்பம்தான் காரணம் என எண்ணிய அவன் ஆட்களை வைத்து அவளைக் கடத்து கர்ப்பத்தை கலைக்க முயல்கிறான். பல இன்னல்களுக்குப் பிறகு எப்படியோ உயிர்த்தப்பிய கரோலினை டென்வர் காப்பாற்றுகிறாள். கிரேகரியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த கரோலின், அவனை விட்டு நீங்கி தனது சொந்த ஊருக்கே செல்கிறாள். 

டென்வர் ஜோன்ஸ்
சிறுவயதிலேயே நன்றாகப் படித்து சட்டதாரியாக உருவெடுக்கிறாள். அனெபெல்லாவின் தாயாரின் திடீர் கொலை அவளை ஊரெங்கும் அலைய வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே தனது நீண்டநாள் காதலனால் கைவிடப்பட்ட டென்வர் மனதை ஒருநிலைப் படுத்தி தனது வேலையிலேயே குறியாக இருக்கிறாள். அப்பொழுதுதான் பள்ளியில் தான் விரும்பிய பணக்காரப் பையனான போப்பியைச் சந்திக்கிறாள். பலப் பெண்களுடன் பழகி சலிப்புற்ற போப்பி அனெபெல்லாவின் இயற்கையான நற்குணத்தில் தனது மனதைப் பறிக்கொடுக்கிறான். இறுதியாக இருவம் காதல் வயப்படுகின்றனர்.


முடிவுரை
ஹாலிவுட்டில் இளையோர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களிடையே நிலவும் சீர்க்கேடுகளையும் இந்நாவலின் வழி அறிந்துக்கொள்ள முடிகிறது.