வியாழன், 7 ஜூலை, 2016

கடல் புறா -சாண்டில்யன் (பாகம் 3)


அஷையமுனையை விட்டு கடலில் பயணம் மேற்கொண்ட இளைய பல்லவன் மனதில் கடாரத்து இளவரசி காஞ்சனா தேவியும், மஞ்சளழகியும் மாறி மாறி வந்துப் போயினர். கடல் மோகினியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடல் புறாவை கலிங்கத்துப் போர்க் கப்பல்கள் தாக்க ஆரம்பித்தன. கடல் புறாவின் முதல் கடல்போர் வெற்றியில் முடிந்தது. அதிஷ்டவசமாக, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியும், அவளது தந்தை குணவர்மனும் கலிங்கத்து கப்பல்களில் இருந்ததினால், அவர்களையும் இளைய பல்லவன் காப்பாற்றினான்.

நக்காவரத்தில் இருக்கும் தமிழர்கள் துணையுடன் போரினால் சேதமடைந்த  தனது கப்பல்களைச் சரிசெய்ய நினைத்த இளைய பல்லவனுக்கு பெருத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. மாநக்காவரத்தில் இருந்த கங்கதேவனைச் சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துகிறான் கருணாகரப் பல்லவன். கங்கதேவன் காஞ்சனா தேவியை அடைய முயன்றதால், அவனைக் கொலையும் செய்கிறான். அடுத்ததாக, கடாரத்தைப் பலவர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அடுத்தக் கட்ட முயற்சியில் ஈடுபடுகிறான். கடாரத்தில் குணவர்மனையும் காஞ்சனா தேவியையும் விட்டுவிட்டு, கடல் நாடுகளில் காலை ஊன்றச் சென்றுவிடுகிறான். வெற்றிக்கொண்டு மீண்டும் கடாரம் வந்திறங்கிய இளைய பல்லவனை சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இளவரசர் அநபாயர் சிறைப்பிடிக்கிறார். 

இளைய பல்லவனின் சிறைப்பிடிப்பு ஒரு அரசியல் நாடகம் என்பதை அநபாயர் அவனுக்கு விளக்குகிறார். கருணாகரனைச் சிறிது காலம் அஷையமுனையில் தங்கியிருக்குமாறும், காஞ்சனா தேவியை உடன் அழைத்துச் செல்லுமாறும் உத்தரவுப் பிறப்பிக்கிறார். மஞ்சளழகியை நினைத்து இளைய பல்லவன் அதற்கு உடன்பட மறுக்கிறான். அனைத்தையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த அநபாயக் குலோத்துங்கன் அமீரின் உதவியுடன் தந்திரம் செய்து அவர்களை அஷையமுனைக்கு அனுப்புகிறான். இருப்பினும், கடல் பயணத்தின் பாதி வழியில், இளைய பல்லவன் கப்பலில் வழியை மாற்ற, அது மலையூர்க் கோட்டையை நோக்கிச் சென்றது. ஜம்பி நதி முகத்துவாரத்தில் பெரும் போரில் ஈடுப்பட்ட கடல்புறா இறுதியாக, ஸ்ரீவிஜயத்தின் கடற்படை தளபதி விஜயசந்திரனைச் சுற்றி வளைத்தது. 

மலையூரைத் தன் வசமாக்க நினைத்த இளைய பல்லவன், கோட்டையில் மஞ்சளழகியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான். ஜெயவர்மன் மஞ்சளழகியைத் தன் மகளாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீவிஜயத்தின் இளவரசி பட்டத்தினை அளித்ததையும், தாம் தற்போது மலையூர்க் கோட்டையின் தலைவர் என்பதையும் மஞ்சளழகி விளக்குகிறாள். இருப்பினும், இளைய பல்லவன் மீதுள்ள காதலினால், அவனுக்கு உதவ முற்படுகிறாள். 

இவ்வேளையில், இளைய பல்லவனைத் தேடி கோட்டைக்கு வந்த காஞ்சனா தேவிக்கும், மஞ்சளழகிக்கும் வாக்கு வாதமும், மனவருத்தமும் முற்றுகிறது. மஞ்சளழகி கோட்டையைப் பிடிப்பதற்கு உதவியதையும், தனக்காகச் செய்த பெரும் தியாகத்தையும் இளைய பல்லவன் காஞ்சனா தேவியிடம் விளக்கு இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறான். மலையூர்க் கோட்டையை தன் வசமாக்கிக்கொண்ட இளைய பல்லவன், மங்கையர் இருவரையும் கடல்புறாவில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவிஜ‌யத்தை நோக்கிப் பயணமானான். 

சுமார் மூன்று நாட்கள் நடந்த போரில், ஸ்ரீவிஜயம் வீழ்ந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சொர்ணத் தீவும், கடாரமும் சேர்ந்த பெரும்பகுதி குணவர்மனுக்கும், சைலேந்திரர்களின் ஜன்ம பூமியான சாவகத் தீவு ஜெயவர்மனுக்கும் பிரித்தாள கொடுக்கப்பட்டன. 

தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற இளையபல்லவனை வரவேற்ற வீரராஜேந்திர சோழர் வண்டைக் குறுநிலத்தை இளையபல்லவனுக்கு அளித்து கருணாகரத் தொண்டைமான் என பெயரும் வழங்குகிறார். அவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், மஞ்சளழகியையும், காஞ்சனாதேவியும் மணமுடித்து வாழ ஆசியும் வழங்குகிறார் வீரராஜேந்திர சோழர். 

இவ்வாறாக சுபமுடன் நாவல் முடிவுறுகிறது. மூன்று பெரும் பாகங்களாகப் படைக்கப்பட்டுள்ள இந்நாவலின் முதல் பாகத்தில் காஞ்சனா தேவியும், இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியும் கதைத்தலைவிகளாக வலம்வருகின்றனர். நாவலின் மூன்றாம் பாகத்தில் மட்டுமே மங்கையர் இருவரும் சந்திக்கின்றனர். ஆகவே, மூன்றாம் பாகத்தில் இளையபல்லபன் மற்றும் இரு மங்கையர் துணையுடன் பயணிக்கிறது கடல்புறா. 

நாவலில் இடம்பெரும் கடாரம் பற்றிய சில குறிப்புகள்:

*இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரசிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கையைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றிக் கொண்டதும் உலகமே வியந்தது. பக்.70

*தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம்... பக்.362

*'தொடு கடல் காவல் கடுமுரட்  கடாரமும்' என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவல் கொண்டான். பக்.363

* "கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
    திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக்'
    கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில்
    மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்..."  பக்.363

*மலாக்க ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஞ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். பக்.365

*கி.பி. 1062-வது வருடத்திற்குப் பிறகு குலோத்துங்கத் தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி.பி.1067-ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பக்.372

*நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான். பக்.373



ஞாயிறு, 3 ஜூலை, 2016

கடல் புறா- சாண்டில்யன் (பாகம் 2)



பாலூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட இளைய பல்லவனை அகூதா காப்பாற்றி கப்பலில் போர் பயிற்சி அளிக்கிறார். அகூதாவின் வழிக்காட்டலின் பேரில் மிக விரைவிலேயே இளையபல்லவன் பிரசித்திப்பெற்ற கடற்போர் வீரனாக அறியப்படுகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி அஷையமுனையில் தொடங்குகிறது. அஷையமுனைக் கோட்டைத் தலைவன் பலவர்மன், குணவர்மனின்  ஒன்றுவீட்டுச் சகோதரன் என்பதையும் , மிகவும் ஆபத்தானவன் என்பதையும் இளையபல்லவன் கண்டறிகிறான். அஷையமுனையில் தான் சிறிய கடற்படை அமைக்க விரும்புவதாக கோட்டைத் தலைவனின் உதவியை நாடுகிறான். அவ்விடம் கோட்டத் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சளழகியின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மஞ்சளழகியும் இளையபல்லவன் பால் ஈர்க்கப்படுகிறாள். இவற்றை தனது அரசியலில் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பலவர்மன் முனைகிறான். 

இதற்கிடையில் மஞ்சளழகியை மணமுடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனக்குக் கிடைத்த சலுகையைப் பயன்படுத்தி இளையபல்லவன் தனது மரக்கலத்தை மறுசீரமைக்கிறான். அதற்கு புறாவின் முகத்தை அமைத்து, கடாரத்தின் இளவரசியின் நினைவாக 'கடல் புறா' என பெயரிடுகிறான். இளையபல்லவனைக் கொலை செய்ய பலவர்மன் வெகுவாக முயன்று தோல்வியைத் தழுவுகிறான். மஞ்சளகி அகூதாவின் சகோதரிக்கும் ஜெயவர்மனுக்கும் பிறந்தவள் என்ற இரகசியம் வெளிவருகிறது.

இறுதியாக, தனது சாமர்த்தியத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலமாகத் திகழ்ந்த அஷையமுனையை இளையபல்லவன் கைப்பற்றி, மறுசீரமைக்கிறான். அதனை மஞ்சளழகிக்கு அளித்து அரசாளும் உரிமையை வழங்குகிறான். பின்னர், மிஞ்சியிருக்கும் தனது கடமையை நிறைவேற்ற மீண்டும் படற்பயணம் மேற்கொள்கிறான். இம்முறை கரையிருந்தபடியே கனத்த இதயத்துடன் அவனை வழியனுப்புவது மஞ்சளழகி.

...தொடரும்...








சனி, 2 ஜூலை, 2016

கடல்புறா -சாண்டில்யன் (பாகம் 1)




சரித்திர நாவல்களில் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு. அதிலும் கல்கி, சாண்டில்யன் ஆகிய இருவரின் தீவிர வாசகி. வெகுகாலமாகவே சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மலேசியாவின் 'கெடா' (கடாரம்) என்ற மாநிலம் குறித்து இந்நாவலில் சில குறிப்புகள் இருந்ததனால் இது எனது ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. நாவலை வாசித்து முடித்து பல மாதங்கள் ஆன போதிலும் இதனைப் பற்றி சிலவற்றை குறிப்பெழுத வேண்டும் என உள்மனம் நச்சரித்துக்கொண்டே இருந்தது. அதற்கான அரிய வேளை இப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது.

கடல்புறா நாவல் மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 1967-இல் எழுதப்பட்ட இந்நாவலில் பல சரித்திர நிகழ்வுகள் பதியப்பெற்றிருக்கின்றன. புனைக்கதையாக இருந்த போதிலும் பல வரலாற்று நூல்களின் துணைக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இளைய பல்லவனைக் (கருணாகர பல்லவன்) கதைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்தில் கதைத் தொடங்குகிறது. பாலூர்ப் பெருந்துறையில் வந்திரங்கிய உடனேயே சிக்கலில் மாட்டிய கருணாகரனுக்குச் சுங்க அதிகாரி தப்புவதற்கு உதவி செய்கிறான். உயிர் தப்பி ஒரு மாளிகையில் தஞ்சம் புகுந்த இளைய பல்லவன் அவ்விடம் கடாரத்தின் அரசகுமாரி காஞ்சனா தேவியைச் சந்திக்கின்றான். கலிங்க வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைய பல்லவனையும், கூலவாணிகன் சேந்தனையும், அநபாய குலோத்துங்கன் (சோழர் குல இளவல்) மற்றும் காஞ்சனாதேவி ஆகிய இருவரும் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர்.அநபாயரின் நண்பனான அரபு நாட்டைச் சேர்ந்த அமீர் அவர்களுக்கு உதவ முன்வருகிறான். அமீர் பிரசித்திப்பெற்ற கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் சிறந்த சீடன் என்பது குறிப்பிடத்தக்கது. அகூதா மற்றும் அமீரின் துணையுடன் அநபாயன், காஞ்சனாதேவியையும் அவளது தந்தை குணவர்மனையும் கப்பலில் ஏற்றி கலிங்கத்தை விட்டு வெளியேறுகிறான். இவர்களைத் தப்புவிக்கும் முயற்சியில் அமீரும், இளைய பல்லவனும் கரையிலேயே தங்கி விடுகின்றன. மாளிகையில் முதன் முதலாகச் சந்தித்த அன்றே தனது இதயத்தை இளைய பல்லவனிடம் பறி கொடுத்த காஞ்சனா தேவி கனத்த இயத்துடன் கப்பலில் பயணிக்கிறாள். இவ்வாறாக நாவலின் முதல் பாகம் சோகத்துடன் நிறைவடைகிறது.

கடாரத்தைப் பற்றி நாவலில் இடம்பெறும் சில தகவல்கள்:

*வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத்தீவுக்கும் இந்த பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். -பக்.44

*தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப்பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் ஆபரண வாயிலையும் கொண்டு வந்தும்  முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்துதான் கிளம்பியது. -பக்.45

*கோட்டைக் காவலரிடமிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்ப்பார்த்திருக்க முடியும்? -பக்.68

*தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா? -பக்.68

*ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது! -பக்.74

*கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது. -பக்.78

*கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. -பக்.90

*கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே? -பக்.90

*அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்தர்களின் மாபெரும் அரசான ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. -பக்.91

*பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான்,  கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. -பக்.92

*ஸ்ரீமார விஜயதுங்கவர்மனுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட இராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீ விஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டி பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத்தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீ விஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கினார் என் தந்தை. -பக்.95

*ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத்துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோதமும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறான்.  அவன் அச்சம் குலையுமுன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும் , என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். -பக்.96

*கடாரத்தின் மன்னர்-இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது- ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும்  கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். -பக்.367

...தொடரும்...