வெள்ளி, 24 ஜூன், 2016

மரணம்


மரணம்...ஆம், அவ்வளவுதான் வாழ்க்கை. நாம் எவ்வளவுதான் இந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள போராடினாலும்,இறுதியில் அனைவருக்குமே மரணம்தான். எவ்வளவோ கற்றுக்கொண்ட மனிதனால் இன்று வரையில் காலனை வெல்லும் வழியினைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மரணமே இல்லாதவர்கள் போல் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். எத்தனைப் பெருமை, கர்வம், பொறாமை, வஞ்சகம், போட்டி?? இறுதியில் நடப்பதென்ன? காலன் வெல்லும்போது நாம் நமது இயலாமையை உணர்கிறோம். 

நமது உடல் மிகவும் மென்மையானது. அதனை ஒவ்வொருவரும் பெரும்பாடுபட்டுக் காக்க வேண்டியுள்ளது. சிறு கீறலும் கூட நம் உயிரை பறித்துவிடும். தீயில் எளிதில் கருகி வெந்துவிடுவோம். சாலை விபத்தில், கணத்தில் மரணம் நிகழலாம். நாம் சக்தியற்றவர்கள். நாம் தினமும் உயிர் வாழ உண்ணும் உணவு கூட சில சமயங்களில் நமக்கு எமனாய் வந்து நின்றுவிடுகிறது. இவ்வளவுதான் மனிதன். பிற உயிர்களைப் போல் வெறும் இரத்தமும், எலும்பும், சதையும் கொண்டவன். ஆனால், மரணம் கண் முன் தெரியும்வரை மனிதன் இதனை உணர மறுக்கிறான்.

எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தும், நமது வாழ்க்கையின் முடிவு மரணம்; அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற உண்மையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ சாகாவரம் பெற்றவர்கள் போல் கர்வத்துடன் பூமியில் அலைகிறோம். வாழ்க்கையை மேம்படுத்த, பணம் சம்பாதிக்க என்னென்னவோ செய்கிறோம். பெயரையும் புகழையும் தேடி ஓடுகிறோம். பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்தவரைக் கண்டு நகைக்கிறோம்; ஏளனம் செய்கிறோம். பிறர் மரணத்தைக் கண்டு பரிதாபம் கொள்கிறோம். நாமும் எதிர்க்காலப் பிணம் என்பதை உணர மறுக்கிறோம்.

மரணம், இதுதான் வாழ்க்கையின் முடிவு. பிறந்த ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவு. இதில் எள்ளளவும் மாற்றமில்லை. அது இப்போதும் நிகழலாம், எப்போதும் நிகழலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைத்தான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த இடைவெளி சிலருக்குக் குறுகியதாய் இருக்கலாம், பலருக்கும் நீண்டதாய் இருக்கலாம். எப்படி இருப்பிலும், இடைவெளி நீங்கியப்பின் நமக்கெல்லாம் காத்திருப்பது மரணம்! ஆம், எனக்கும் மரணமுண்டு, உனக்கும் மரணமுண்டு!