இயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின்
ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாமெல்லாம்
சிறு வயதினில் தெனாலிராமனின் கதைகளைக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. சில வருடங்களுக்கு
முன்னால் வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படமும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் 1994 ஆண்டு வெளியீடு கண்ட இந்த நகைச்சுவை நாடக புத்தகத்தைப் படிக்கும்
வாய்ப்பு மீண்டும் எனக்குக்கிட்டியுள்ளது.
இடம், பாத்திரம், சூழல் என அனைத்து நாடக அம்சத்தையும்
கொண்டு இந்நூல் முறையே எழுதப்பட்டுள்ளது. கதைகள் நிகழ்வினை நம் கண் முன்னே கொண்டு வருவதில்
வெற்றிப்பெற்றுள்ளன. மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமயோசித்த புத்தி, நுண்ணறிவு, பேச்சுத்திறன்,
நகைச்சுவை இவையனைத்தும் ஒருங்கிணைத்து இந்நூலின் வழி நம்மிடம் சேர்ப்பதில் எழுத்தாளர்
வெற்றிப்பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். நாடகமும் சுவை குன்றாமல், சலிப்பினை ஏற்படுத்தாமல்
விறுவிறுப்பாக நடந்தேறுகிறது.
இருப்பினும், நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் பேச்சு
வழக்கு மொழி நாடகம் நடந்த சூழலைப் பிரதிபலிப்பதாக இல்லை. அரசரும் குடிமக்களின் வழக்கில்
பேசுவது சற்று நெருடலாக, நாடகத்திற்குப் பொருந்தாதவாறு இருக்கிறது. நாடகாசிரியர் நல்ல
தமிழிலேயே இதனை எழுதியிருக்கலாம். சில இடங்களில் தூயத்தமிழிலும் பல இடங்களில் பேச்சு
வழக்கிலும் மாறி மாறி கதாப்பாத்திரங்கள் பேசுவது படிப்பதற்கு நன்றாக இல்லை. இதை நாடக
வடிவில் அமைத்தாலும் பொருந்தாததாகவே இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
மற்றபடி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி
படிக்கக்கூடிய நூலாகவே இந்நூல் படைப்பட்டுள்ளது. நூலில் காணப்படும் ஓவியங்கள் கண்டிப்பாக
சிறுவர் மனதைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை. நீங்களும் படித்து மகிழுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக