செவ்வாய், 30 மே, 2017

நேசிக்க நேரிடும் (May Cause Love)

Image result for may cause love
பத்தொன்பது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை காசி அன்டர்வூட் அறிகிறாள். கையில் பணமில்லை, திருமணமாகவில்லை, மதுவுக்கு அடிமை, வீட்டைலிருந்து வெகு தூரம் வசிக்கும் வேளையில், கருவினைக் கலைக்க முடிவு செய்கிறாள். அவளின் முடிவு சரியா தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கருக்கலைப்பு அவளிடமிருந்த பெண்ணியச் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமை, எதையோ தொலைத்த உணர்வு, எல்லையில்லா குடிப்பழக்கம் என அவள் தனது மனதினை தேர்த்த முயல்கிறாள். தனது கருக்கலைப்பினைப் பற்றிப் பெற்றோர், நண்பர்கள், அயலார் என எல்லாரிடமும் உரையாடுகிறாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு எவ்வாறோ குடிப்பழக்கத்தை நிறுத்தி, தனது கனவு வேலையில் அமர்கிறாள். அப்போது அவளைக் கருவுறச் செய்த முன்னாள் காதலன் வேறு ஒருத்தியுடன் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தி அவளை என்னவோ செய்கிறது. அவள் உடைந்துப் போகிறாள். ஆழ்ந்த மன அழுத்தம் அவளை உட்கொள்கிறது. கருக்கலைப்புச் செய்த குற்ற உணர்விலிருந்து தான் என்றுமே விடுப்பட போவதில்லை என எண்ணுகிறாள்.

உணர்ச்சிகளை வெல்ல ஆன்மீகத்தைப் பயன்படுத்திய‌ பெண்களின் சரித்திரத்தைத் தேடிப் படித்த காசி, தானும் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கிறாள்.  புத்தம், ரோமன் கத்தோலிக், மனோதத்துவ நிபுணர் என இன்னும் பலரின் உதவியுடன் அவள் தனது தேடலைத் தொடர்கிறாள். கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு ஆறுதலாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறாள்.

காசியின் இந்த வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஒரு பெண் சந்தித்த ஏமாற்றங்களும் சவால்களும், அதனை எதிர்க்கொள்ள அவள் செய்த முயற்சிகளையும் இரசனையுடன் சொல்லும் நாவல். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் காசியின் வாழ்க்கைச் சிந்தனைகள் எம்மை வியப்புறச் செய்தன.

காசி...அவளுக்கு என் வயதோ அல்லது என்னைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். அவள் மேற்கொண்ட பயணங்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி இவற்றில் நூறில் ஒரு பங்குக் கூட நான் செய்ததில்லை. காசியின் விடிவை நோக்கிய இந்தப் பயணம் என்னுள் ஓர் எழுச்சியை உண்டாக்குகிறது. எனது வட்டத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது. இவ்வுலகை வேறு கண்ணோட்டத்தில் காண வைக்கிறது.






திங்கள், 22 மே, 2017

இதயம் இருக்கும் இடம் (Where The Heart Is)

Image result for where the heart is


நோவலி பதினேழு வயது நிறைமாத கர்ப்பிணி. தனது காதலன் வில்லி ஜாக்குடன் புதிய வாழ்வை ஆரம்பிக்க கனவுகளுடன் கலிபோர்னியா நோக்கி பழைய மகிழுந்தில் பயணம் மேற்கொள்கிறாள். வில்லி ஜாக்கின் கையைப் பிடித்து தனது வயிற்றின் மீது வைத்து, "கேட்கிறதா? இதுதான் இதயம் இருக்கும் இடம்," என்கிறாள். அவனோ எதுவும் கேட்கவில்லை என மிக அலட்சியமாகக் கூறி கையை இழுத்துக்கொள்கிறான். பயணத்தின் போது அவளது காலணி மகிழுந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்துத் தொலைந்துப் போனது. அவளிடம் இருந்த ஒரே காலணி அது மட்டுமே. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணாகிய அவளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. பயணத்தின் ஊடே 'வால்மாட்' எனும் பேரங்காடியைக் கண்ட நோவலி செருப்பு வாங்கவும், சிறுநீர் கழிக்கவும் அவ்விடம் வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

பேரங்காடியில் செருப்பு வாங்கிக்கொண்டிருந்தவளின் மூளையில் ஏதோ தோன்ற, ஓடி வந்து வெளியே பார்க்கிறாள். அங்கு வில்லி ஜாக் இல்லை. அவளது புகைப்படக் கருவி மட்டுமே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தது. அவளிடம் எதுவுமே இல்லை, வயிற்றில் சுமக்கும் குழந்தையும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைத் தவிர்த்து. அந்நேரத்தின் சிஸ்டர் ஹஸ்பண்ட் எனும் பெண்மணி, நோவலியை வேறொரு பெண் என நினைத்து உரையாடுகிறார். அந்த சிறு பட்டணத்திற்கு மீண்டும் திரும்பி வந்திருப்பதாக நினைத்து வரவேற்புப் பரிசுக் கூடை ஒன்றையும் நோவலியின் கையில் திணித்துவிட்டு நேரம் இருக்கையில் தன் வீட்டுற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

நோவலி பட்டணத்தைச் சுற்றி வரும் போது, பென்னி குட்லட் எனும் சிறுவன் அவளுக்கு 'பக் அய்' எனும் மரக்கன்றை வழங்கி, அது நல்ல சகுனத்தை வழங்கும் எனக் கூறுகிறான். அடுத்து என்ன செய்வது என்றறியாது தவித்த நோவலி பக் அய் செடியுடன் வால்மாட் பேரங்காடியில் வாழ ஆரம்பிக்கிறாள். ஒரு சமயம் தனது செடி வாடுவதைக் கண்ட அவள் அதனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள நூலகம் செல்கிறாள். அங்கே போர்னி அவளுக்கு உதவி புரிகிறான். சிஸ்டர் ஹஸ்பண்ட் வீட்டிற்குச் சென்று அந்தச் செடியை நட உரிமைப் பெற்று அங்கேயே செடியை நடுகிறாள்.

ஒருநாள் இரவு அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது. அவள் பேரங்காடியில் தங்கியிருப்பதை ஏற்கனவே போர்னி அறிந்துக்கொண்டான். நோவலி வலியில் துடித்த போது, கண்ணாடி கதவினை உடைத்து போர்னி அவளுக்கு பிரசவம் பார்க்கிறான். வால்மாட்டில் வசித்து, அங்கேயே குழந்தைப் பெற்ற நோவலியைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது. வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ் என அனைத்திலும் அவளைப் பற்றிய செய்திகள் வெளியாயின. அதனைக் கண்ட நோவலியின் தாய், பத்து வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நோவலியைப் பார்க்க வருகிறாள். மகளுக்கு உதவி செய்வதாகக் கூறி அவளிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார். சென்றவர் மீண்டும் வரவே இல்லை.

சிஸ்டர் ஹஸ்பண்ட் நடந்ததைக் கேள்வியுற்று, நோவலியையும் அவளது மகள் அமெரிகுஸ் நேசனையும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். நோவலிக்கு வால்மாட் பேரங்காடியில் வேலை தரப்பட்டது. கால ஓட்டத்தின் மோசசின் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொண்டு சிறந்த புகைப்படக் கலைஞர் விருதையும் பெறுகிறாள். போர்னி அவளுக்கு நிறைய நூலக புத்தகங்களையும் தந்து வாசிக்கிக் கற்றுக்கொடுத்து, அவளைப் புதிய மனிதனாக்குகிறான். அவளை வீதியில் விட்டுச்சென்ற வில்லி ஜாக், சிறைச் சென்று, பலவாறாகத் துன்புற்று, இறுதியில் தண்டவாளத்தில் தனது கால்களை இழக்கிறான்.  போர்னியும, நோவலியும் இறுதியில் ஒன்றாக இணைகின்றனர்.

இந்நாவலில் 'லெக்சி' போன்று இன்னும் சில முக்கியக் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் இருக்கின்றன. பதினேழு வயது பெண்ணின் முட்டாள் தனமும், போராட்டமும், அமெரிக்க வாழ்க்கை முறையும் இந்நாவலில் வெகுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் இதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.