செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 8)





கீரா அண்ணாவின் அலுவலகத்தில் இணைய இணைப்பு இருந்தது. எனவே, எனது மின்னஞ்சல் மற்றும் முகநூல் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டேன். அருண்ஷோரியுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

கவிதாவின் வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர். திருமண முன்னேற்பாடுகள் வெகுவாக நடந்துக்கொண்டிருந்தன. மிகவும் சோர்வாக இருந்ததால் குளித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். பெரிய சித்தி (கவிதாவின் சித்தி) தட்டு நிறைய புட்டும் குழம்பும் ஊற்றி எடுத்து வந்து கைகளில் திணித்தார். “வேண்டாம் சித்தி, பசியில்லை,” என்றேன். “நாள் முழுக்கச் சாப்பிடாமல் பட்டினி கிடந்துட்டு வெறும் வயித்தோட நித்திரைக்கொள்ள கூடாது. என்ன பழக்கமிது? கொஞ்சம் சாப்பிட்டு படும்மா,” என செல்லமாய் கடிந்துக் கொண்டார்.

அவரின் அன்புக் கட்டளையை எம்மால் மீற முடியவில்லை. இருந்த போதிலும் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் வயிறு முழுவதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. “முடியலைனா வச்சுடம்மா,” என பெரிய சித்தி எமது சங்கடத்தைப் புரிந்துக்கொண்டார். உணவை முடிக்காமல் பாதியிலேயே கொட்டுவது எமக்கு வருத்தத்தை அளித்தது. இருந்த போதிலும் எம்மால் அதனை உண்ணவும் முடியவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மீதமிருந்த உணவைக் குப்பையில் எறிந்துவிட்டு தட்டினைக் கழுவி வைத்தேன்.

கவிதா, பாக்கியா, மேனகா மற்றும் கவிதாவின் உறவுக்காரப் பெண்கள் இருவர் அறையில் பேசிக்கொண்டே திருமண வேலைகளில் இலயித்திருந்தனர். நானும் திருமண விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த அணிச்சல்களை (கேக்) அட்டைப் பெட்டிக்குள் போடத் தொடங்கினேன். “பிள்ளை ரொம்பெ களைச்சி போயிருக்கா… போயி நித்திரைக் கொள்ளம்மா,” என பாக்கியா அக்கா பரிவோடு கூறினார். 

அப்போதுதான் நாளை எனது தம்பிகள் சென்னை வரப்போவது எனக்கு நினைவு வந்தது. நாளை காலை 7.30-க்கு விமான நிலையம் சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என அக்காவிற்கு நினைவுப்படுத்திவிட்டு அப்படியே படுத்துறங்கிவிட்டேன். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் இந்தோனேசியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்த அத்தை கைப்பேசியின் மூலம் அழைத்துவிட்டார். தம்பிகள் வந்து சேர்ந்தவுடன் தமக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு நினைவுறுத்தினார்.

அதிக களைப்பாக இருந்ததால் எம்மால் சீக்கிரம் எழ முடியவில்லை. எமது மெத்தையும் தலையணையும் ‘என்னை விட்டு விலகாதே,’ என கதறியழுவது போல் இருந்ததால் பிரிய மனமில்லாமல் சற்று நேரம் கழித்துதான் எழும்பினேன். நான் எழும்பும் போது சின்னவன் அண்ணா வரவேற்பரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். “நேரமாகிடிச்சு…இப்ப வெளிக்கிட்டுப் போனாதான் நேரத்துல போய் சேர முடியும்,” என அவசரப்படுத்தினார்.

பாவம் தம்பி. இதற்கு முன்பு அவன் சென்னைக்கு வந்ததில்லையே. நேரத்திற்கு சென்று அவனை அழைத்து வர வேண்டும். தனியாக விடக் கூடாது என குளிக்காமலேயே, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வண்டியில் ஏறினேன். 7.30 மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தாயிற்று. விமானம் சற்று தாமதமாகத்தான் வந்திறங்கியது. விமான நிலையச் சடங்குகளை முடித்துக் கொண்டு தம்பிகள் தேவா மற்றும் தினேஷ் இருவரும் வெளியே வரும் போது காலை மணி 8.45 ஆகிவிட்டது.

தம்பிகளை அழைத்துக்கொண்டு நேரே தங்கும் விடுதிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கவிதா அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லியிருந்ததால் நேரே வீட்டிற்குச் சென்றோம். திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் கூட அவர்கள் விருந்தினர்களைக் கவனிக்கத் தவறவில்லை. தம்பிகள் இன்று சென்னையில் இருந்துவிட்டு நாளை பெங்களூர் புறப்படுவதாகத்தான் எண்ணியிருந்தார்கள். கவிதா தனது திருமணம் முடியும் வரையில் சென்னையில் இருக்குமாறு அவர்களை வற்புறுத்தியதால் அவர்களாலும் அவளது அன்பு வேண்டுதலை மீற முடியவில்லை.

சித்தி இடியாப்பம் பறிமாற தம்பிகள் இருவரும் உண்டு முடித்தனர். அதற்குள் நான் குளித்து ஆயத்தமானேன். “அக்கா பீஹூன் (நூடுல்ஸ் வகையைச் சார்ந்தது உணவு) நன்றாக இருந்தது. ஆனால் ஏன் அதில் குழம்பு ஊற்றிச் சாப்பிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை,” என தேவா சொன்னவுடன் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “டேய், அது பீஹூன் இல்லை. இடியாப்பம்!” என்றேன். “இடியாப்பம் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். இங்கு சாக்லெட் நிறத்தில் இருக்கிறதே,?” என அசடு வழியக் கேட்டான்.

அன்று தி-நகரில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. தம்பிகள் இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். மழை காலமாக வேறு இருந்தது. திருமண வீட்டில் அனைவரும் வேலையாக இருந்ததால் அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லை. பாக்கியா அக்காவிடம் சொல்லி வாடகை வண்டி ஒன்று பேசச் சொன்னேன். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே வண்டி வந்துச் சேர்ந்தது. வாடகை வண்டி ஓட்டுனரும் ஈழத்தமிழர்தான்.
காலை 11.30 அளவில் தி-நகருக்குச் சென்றோம். சின்னவன் அண்ணா சொன்ன தங்கும் விடுதியில் சென்று பைகளை வைத்து விட்டு சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்கத் தொடங்கினோம். 7 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான பேரங்காடி! அதனை முழுதாக சுற்றிப் பார்க்கவே ஒருநாள் போதாது போலும். சுற்றி சுற்று வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது. பேரங்காடிக்கு புன்புறம் இருந்த ‘தலப்பாக்கட்டு பிரியாணி’ கடைக்குள் நுழைந்தோம்.

அப்போதுதான் வண்டி ஓட்டுநர் இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது. அவரது கைப்பேசி எண்கள் இருந்ததால் அவரைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இருக்கும் உணவகத்திற்கு வரச் சொன்னோம். முதலில் மறுத்த அவர் எங்களின் வற்புறுத்தலின் பேரில் வந்துச் சேர்ந்தார். உண்டு முடித்த பின்னர், தம்பிகளை அங்கேயே விட்டுவிட்டு நான் கோயம்பேடு சென்றேன். கீரா அண்ணா இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபடுகிறார். அவரைச் சென்று காண வேண்டும். அண்ணாவின் முகம் வாடியிருந்தது. சிறிது நேரம் அவருடன் கதைத்துக் கொண்டிருக்கையில் தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார்.

அருண்ஷோரியிடம் தம்பிகள் தங்கியிருக்கும் இடத்தையும் அவர்களையும் பற்றிச் சொல்லிவிட்டு, நேரம் இருப்பின் அவர்களைச் சென்று காணுமாறு வேண்டிக்கொண்டேன். அவரும் செல்வதாக உறுதியளித்தார். அன்றைய தின போராட்டம் நிறைவுற்ற வேளையில் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்களையும் குறுந்தட்டுகளையும் வாங்கிக் கொண்டேன். தலைவர் பிரபாகரன் படம் போட்ட சாவி சங்கிலிகள் (கீ செயின்) சிலவற்றையும் மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக வாங்கிக் கொண்டேன்.

கனத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது. வாடகை வண்டி ஓட்டுநர் எமக்காகக் காத்திருந்ததால் அதிக நேரம் அங்கிருந்தவர்களுடன் எம்மால் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. கவிதாவிடம் இன்று சீக்கிரமே வந்து விடுவதாக உறுதியளித்திருந்தேன். இன்று மாலை பெண்ணுக்கு மருதாணியிடும் நிகழ்வு இருக்கிறது. நேரத்தில் சென்றாக வேண்டும். அடை மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வண்டிகள் எல்லாம் படகுகள் போல் நீரில் செல்ல வேண்டிய நிலையாயிற்று.

மாலை 6 மணிக்கெல்லாம் வீடு வந்துச் சேர்ந்துவிட்டேன். மணப்பெண் இன்னும் தயாராகவில்லை. அவளை அலங்கரிக்கும் பொறுப்பு எம்மிடம் வந்தது. இன்று நமது கைவண்ணத்தைக் காட்டிவிடலாம் என அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினேன். என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை. அலங்காரம் செய்து அவள் ஒரு தேவதை போல் காட்சியளித்தாள். திருமண கலை அவள் முகத்தில் பிரகாசித்தது.

நேரம் குறைவாக இருந்ததால் எம்மால் குளித்து அலங்காரம் செய்ய முடியவில்லை. பரவாயில்லை, இன்று மணப்பெண் நானில்லையே என அதனை நான் பொருட்படுத்தவும் இல்லை. மணப்பெண்ணின் வேண்டுதலுக்கு ஏற்ப பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்துக் கொண்டேன். மருதாணியிடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறு குழந்தைகளும், வயதுப் பெண்களும், திருமணமான மாதுகளும் தங்கள் கைகளில் மருதாணியிட்டு அழகு பார்த்தனர். பச்சை மருதாணியின் மணம் வீடெங்கிலும் பரவிக் கிடந்தது. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துச் சேர்ந்தனர்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 7)




அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். இன்று மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) மரணதண்டனையை எதிர்த்து நடந்துக்கொண்டிருக்கும் பட்டினி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஏற்கனவே இராஜ்குமார் அண்ணாவிடம் உறுதியளித்திருந்தேன். பட்டினி போராட்டம் என்பதை நினைவில் வைத்திருந்ததால் தானோ என்னவோ காலையிலேயே எனக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது.

நான் பசி தாங்க மாட்டேன் என்பதை தோழர் அருண்ஷோரி முன்னதாகவே அறிவார். “உண்மையிலேயே கலந்துக்கொள்ளப் போகிறீர்களா?” என இரண்டு மூன்று தடவை நேற்று இரவே கேட்டுவிட்டார். கொடுத்த வாக்கிலும், கொண்ட இலட்சியத்திலிருந்தும் பின் வாங்குவது கோழைத்தனமானது. பசி தானே? அடக்கிக்கொள்ளலாம் என உறுதியாக இருந்தேன். கவிதாவின் சித்தி, “கொஞ்சம் சாப்பிட்டு போகலாமே?” எனக் கெஞ்சலாகக் கேட்டார். “வேண்டாம் சித்தி. சாப்பிட்டால் அதற்குப் பெயர் பட்டிப்போராட்டம் அல்ல,” என தெளிவுப்படுத்திவிட்டு, பசியை அடக்கிக்கொண்டு இருந்தேன்.

அருண்ஷோரி இரு சக்கர வண்டியில் எம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். நேற்றிரவு பெய்திருந்த மழையால் சாலையெல்லாம் சேராக இருந்தது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காலையிலேயே சென்னையின் அவசர வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. காலை மணி 9.30 போல் பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். 80% பேர் கறுப்பு ஆடைகளையே அணிந்திருந்தனர்.

போராட்டம் நடக்கும் இடத்தின் வாசலில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் மரணதண்டனைக்கு எதிரான கண்காட்சி கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நான் வாசலில் நுழையும் போதே சிலர் வித்தியாசமாகப் பார்ப்பதாய் பட்டது. எல்லாம் மனப்பிராந்தி என அந்த நினைப்பை உதறித் தள்ளிவிட்டு அருண்ஷோரியுடன் கதைக்க முற்பட்டேன். கண்காட்சி கூடாரத்தைப் பார்வையிட்ட பிறகு நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். ஈழத்துப் பாடல்கள் சில அவ்விடம் ஒலிப்பரப்பப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு பட்டினிப் போராட்டம் தொடங்கியது. சில பாடல்கள், மேடைப் பேச்சுகள் என நேரம் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது. “என்னையும் பிடிச்சிட்டு வந்து பட்டினி கிடக்க வச்சுட்டீங்களே,” என அருண்ஷோரி பாவமாகக் கேட்டார். “பின்னால் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுத்தால் எங்கே சென்று குடித்துக்கொள்ளுங்கள்,” என பரிவுடன் கூறினார். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,” என அதனையும் தவிர்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். சுற்றிலும் ஆண்கள்... என்னைத் தவிர வேறு ஒரு பெண் கூட அவ்விடம் இல்லை. இம்மாதிரியான போராட்டங்களில் பெண்கள் ஏன் முன்வருவதில்லை என வருத்தமாக இருந்தது. எனது மன வருத்தத்தை அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தினேன்.

“பெண்கள் யாரும் வருவதில்லையா?” என அவர் நிகழ்வு ஏற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டார். “நேற்றைய முன்தினம்தான் பெண்கள் இயக்கம் ஒன்று பட்டினி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். நிறையப் பெண்கள் வந்திருந்தனர்,” என அவர் கூறியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என சிலர் என்னை விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருசிலரிடம் மட்டும் உண்மையை கூறி பலரிடம் மேலோட்டமாக அருண்ஷோரியே எம்மை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் வந்து அருண்ஷோரிடம், “இவரை செங்கொடி பாசறையைப் பிரதிநிதித்துப் பட்டினி போராட்டத்தில் கலந்துக் கொண்டவர் என அறிவிக்கலாமா?” என கேட்டார். அருண்ஷோரி எம்மிடம் அனுமதி கேட்டார். கூடவே அதற்கான விளக்கமும் அளித்தார். சரியென்று தலையாட்டினேன். அட, நாமும் ஒரு கட்சிக்குத் தலைவியாகிவிட்டோமே என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் மற்றொருவர் வந்து அருண்ஷோரியுடன் என்னவோ கதைத்துவிட்டுச் சென்றார். அருண் மெல்ல என் காதருகில், “உங்களிடம் நிதி கேட்கலாமா எனக் கேட்டார்கள்,” என்றார். நான் சிரித்துக்கொண்டே, “என்னால் அதிகமாக ஒன்றும் கொடுக்க முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்,” என்றேன். அவ்விடம் வைக்கப்பட்டிருந்த நிதி உண்டியலில் எம்மால் இயன்றதைப் போடுகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்த்துவிட்டார். “தெரிந்திருந்தால் பெரிய உண்டியலாக வைத்திருப்போமே?” என கிண்டலடித்துவிட்டுச் சென்றார்.

தோழர் ஒருவர் அருகில் வந்து, “நீங்கள் பவனேஸ்வரி துரைசிங்கள் தானே?” என எம் முழுப்பெயரை உச்சரித்ததும் நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். சென்னையில் யாருக்கு நம்மைத் தெரியும்? “ஓம், நீங்கள்?” என திரும்பக் கேட்டேன். “நான் தயாளன். உங்கள் முகநூல் நண்பர். பரணி ஜெ.சி எனது மாமா. அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே?” என விளக்கினார்.
“ஓம். அவரை நன்றாகத் தெரியும். உங்களைத்தான் தெரியவில்லை,” என தயக்கத்துடன் கூறினேன். “உண்மைதான். எல்லாருக்கும் உங்களைத் தெரியும். உங்களுக்கு எங்கள் அனைவரையும் தெரிய வேண்டும் என்பதில்லையே. உங்களை இங்குச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் முகநூலில் எழுதும் அனைத்தையும் நான் மறவாது படிப்பேன். தொடர்ந்து எழுதுங்கள்,” என அவர் உற்சாகமாக பேசினார்.

சிறிது நேரம் அவரிடம் கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது கீரா அண்ணா எம்மை பார்க்க அவ்விடம் வந்திருந்தார். அவரும் அவரது தோழர்கள் சிலருக்கு எம்மை அறிமுகம் செய்து வைத்தார். “தங்கை சாப்பிடாமல் களைத்துவிட்டாள்,” என பரிவுடன் கூறினார். பட்டினிப் போராட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டது. சிறிது நேரம் அங்கிருந்த சிலருடன் கதைத்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம். அவ்விடம் இருந்த தள்ளுவண்டி கடையில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. பொரித்த காளான்கள் தட்டொன்றை வாங்கி எம்மிடம் கொடுத்தார். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் அப்பொழுதும் எம்மால் சாப்பிட முடியவில்லை.

அதனை அருண்ஷோரியிடம் கொடுத்துவிட்டு எமது கைத்தொலைப்பேசிக்குப் பணம் போட அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றேன். 200 ரூபாய்க்குப் பணம் போடச் சொன்னேன். அதனைவிட குறைவான பணமே கைப்பேசியில் வந்து சேர்ந்தது. பணம் குறைகிறது என கடைக்காரரிடம் கூறினேன். “வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் குறைவாகத்தான் வரும்,” என்ற பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது. “இதையும் விட்டு வைக்கலையா? நல்ல நாடு!” என உரக்கக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். கடையிலிருந்தவர்கள் திரும்பி என்னைப் பார்த்தனர். நான் அதனை பொருட்படுத்தவில்லை. கீரா அண்ணாவிடமும் அருண்ஷோரியிடமும் நடந்ததைக் கூறினேன். “இங்கு இப்படித்தான்,” என்று சமாதானப்படுத்தினர்.

இரு சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். அருண்ஷோரியின் வண்டி மோசமாக தூசு படிந்துக் கிடந்தது. மலேசியாவில் ஒரு மாதம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் கூட இவ்வளவு தூசு படிந்திருக்காது. அவர் அதனைத் தட்டிச் சுத்தம் செய்யவும் நான் கீரா அண்ணாவின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அந்த மாலை வேளையில் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. ஆட்டோ, மிதிவண்டி, இரு சக்கர வண்டி என அனைத்தும் குறுக்கும் நெருக்குமாக ஓடிக் கொண்டிருந்தன. அவ்வேளையில் அந்தச் சாலையில் பயணிப்பதே ஆபத்தானதாகத் தோன்றியது.

மிகவும் நெருங்கியும் ஒழுங்கில்லாமலும் வந்த வாகனங்கள் மோதி விடுவது போல் பாவனைக் காட்டின. சேலை கட்டியிருந்ததால் இந்தியப் பெண்கள் போல் வண்டியில் ஒரு பக்கமாகவே நான் அமர்ந்திருந்தேன். அந்த வேளையில் ஆட்டோக்கள் இரண்டு எமது முட்டியை லேசாக உரசிச் சென்றன. இன்னும் வேகமாக வந்திருந்தால் என்னை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். எப்போது அலுவலகம் சென்று சேர்வோம் என்ற நிலைமையானது. மழை வேறு லேசாகத் தூற ஆரம்பித்தது.

ஒரு குறுக்குச் சந்தொன்றில் நுழைந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் கீரா அண்ணா என்னை இறங்கி சற்றுத் தூரம் தள்ளி நிற்கச் சென்றார். நான் அவருக்குக் காத்திருக்கும் வேளையில் அருண்ஷோரி வந்துவிட்டார். நான் உடனே அவரது வண்டியில் ஏறிக்கொண்டேன். “கீரா அண்ணாவுடன் வரும் போது இரண்டு ஆட்டோ எனது கால் முட்டியை உரசிச் சென்றுவிட்டன. நான் உங்களுடனேயே வருகிறேன்,” என்றவுடன் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “உரசிவிட்டுத் தானே சென்றார்கள்? இங்கு இது சகஜம்,” என்றார்.

சென்னைப் பயணம் (பாகம் 6)




அருண்ஷோரியும் கீரா அண்ணாவில் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டார். சிறு உரையாடலுக்குப் பிறகு அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். நான் வேண்டுமென்றே வாசனின் இரு சக்கர வண்டியில் ஏறிக்கொண்டேன். அலுவகத்தில் சிகா மற்றும் ஏகலைவன் ஆகிய இருவரையும் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார். சிறிது நேரம் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். இன்று சைதாப்பேட்டைச் செல்ல வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான சாலை ஆர்ப்பாட்டம் அங்குதான் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அருண்ஷோரி முன்னதாகவே அங்குச் சென்றுவிட்டார். வாசனும் கீரா அண்ணாவும் அலுவல் இருப்பதால் பின்னர் வந்துக் கலந்துக் கொள்வதாக வெளியே சென்று விட்டனர். எனவே சிகா அண்ணா எம்மை சைதாப்பேட்டை , பனகல் மாளிகை அருகே கொண்டு விட்டார். வண்டியில் போகும் போது பல விடயங்களைப் பற்றி இருவரும் கதைத்துக் கொண்டே சென்றோம். அவருக்கு இம்மாதிரியான போராட்டங்களின் ஆர்வம் குறைவு என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்துக் கொண்டேன். இருந்த போதிலும் அவர் எம்மைத் தடுக்கவில்லை.

பனகல் மாளிகை அருகில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. பெரும்பாலானவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் மிகச் சிலரே அவ்விடம் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியில் தோழர் ஒருவர் கூடங்குளம் அணு உலையை எதிர்து மிக ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் பாதுகாப்பிற்காக காவல் துறை வண்டி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. சில காவல் துறையினர் அவ்விடம் வருவோர் போவோர் மீது ஒரு கண் வைத்த வண்ணம் இருந்தனர். வழிப்போக்கர்கள் சிலர் நின்று பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பலர் கேட்டும் கேளாமல் எதையோ அவசரமாகத் தேடிச் செல்வது போல் சென்றுக் கொண்டிருந்தனர்.

நானும் கூட்டத்தோடு கூட்டமாக போராட்டத்தில் கலந்துக் கொண்டு எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினேன். தோழர் அருண்ஷோரி சிறிது நேரம் வந்து கதைத்துவிட்டுச் சென்றார். அவர்தான் அந்த கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் மிகவும் வேலையாக இருந்தார். வானம் கறுக்கத் தொடங்கியது. எம்மை அழைத்து வந்த சிகா அண்ணா, “எல்லாம் பார்த்தாகிவிட்டது. செல்லலாமா?” என்றார். அந்தக் கேள்வி எமக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

நாங்கள் அவ்விடம் வந்து 30 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் புறப்படுவதா? எவ்வளவு கடினப்பட்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருப்பார்கள்? இதில் இறுதி வரை கலந்துக் கொண்டு நமது பங்களிப்பையும் வழங்க வேண்டாமா? “உங்களுக்கு வேலை இருந்தால் நீங்கள் புறப்படுங்கள். நான் பிறகு ஆட்டோ ஏறி வந்துவிடுகிறேன்,” என்றேன். அவர் தயங்கினார். “புது இடத்தில் உங்களை எப்படி தனியே விட்டுச் செல்வது. வேண்டுமென்றால் இன்னும் ஒரு 10 நிமிடங்கள் இருந்துவிட்டுப் புறப்படுவோம்,” என்றார்.

“சரி. நான் தனியே வரவில்லை. அருண்ஷோரியுடன் வந்து விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள் அண்ணா,” என்றேன். அவர் இன்னமும் தயக்கத்தோடு நின்றார். அருண்ஷோரியிடம் நிலைமையை எடுத்துக் கூறவும், “நானே அழைத்து வந்து விட்டு விடுகிறேன்,” என அவர் உத்திரவாதம் வழங்கியப் பிறகுதான் சிகா அவ்விடத்தை விட்டு அகன்றார். கூட்டத்தில் எமது மற்றுமொரு தோழர் எழில்வாணனை தற்செயலாக அவ்விடத்தில் சந்திக்க நேர்ந்தது. இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

நான் வெகு நேரம் தனியாக நிற்பதைப் பார்த்து அருண்ஷோரி தோழர் இரமணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பல போராட்டங்களில் பங்கெடுத்த அனுபவம் இரமணியின் முகத்தில் பிரதிபலித்தது. கையில் சில துண்டறிக்கைப் பிரசுரங்கள் இருந்தன. மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) தூக்குதண்டனையை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் துண்டறிக்கைகளை அவர் வருவோர் போவோருக்கு விநியோகம் செய்துக் கொண்டிருந்தார். வெறுமனே நின்றுக் கொண்டிருக்க விரும்பாமல் அவருடன் சேர்ந்து நானும் அதனை விநியோகம் செய்ய ஆரம்பித்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் காயத்ரி, அம்பிகா எனும் இரமணியின் பெண் தோழர்கள் இருவர் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். சின்னப் பிள்ளைகள்தான். வயது 18-லிருந்து 22-க்குள்தான் இருக்க வேண்டும். அனுபவம் போதாததாலோ என்னவோ அவர்கள் அறிமுகம் இல்லாதோரிடம் துண்டறிக்கைகளைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினர். ஆனாலும் முடிந்த வரையில் அனைவரிடமும் கொடுக்க முயற்சித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த வயதான பெரியவர் ஒருவரிடம் நான் துண்டறிக்கையை நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டு எம்மை உற்று நோக்கினார். “இது எதற்கு?” எனக் கேட்டார். “மூவர் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்,” என்றேன். “அப்படினா, கொலை செய்தவன் எல்லாம் சுதந்திரமா நடமாடலாமா? அவங்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாதா?” என வாக்கு வாதத்திற்குத் தயாரானார். நானும் அவருக்கு பதிலளிக்க முனைகையில் தோழர் இரமணி குறுக்கிட்டார்.
“எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க,” என இரமணி சொல்லவும் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது. அங்கே நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நான் மற்றவர்களுக்குத் துண்டறிக்கைகளைக் கொடுக்க நகன்றுச் சென்றேன்.

அனைத்துத் துண்டறிக்கைகளையும் கொடுத்து முடித்த பிறகு நாங்கள் நால்வரும் தேநீர் கடைக்குச் செல்லலாம் என முடிவுச் செய்தோம். தோழர் அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தி விட்டு உரையாடிக்கொண்டே அருகாமையில் இருந்த தேநீர் கடையினுள் நுழைந்தோம். பாதாம் பால் ஒன்றை வேண்டிக்கொண்டு பல விடயங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அவர்களது போராட்ட வாழ்க்கை எமக்குப் பிடித்திருந்தது. 29-ஆம் திகதி அக்டோபர் மாதம் 2011 அன்று பெண்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மதியம் நான் மலேசியா திரும்ப வேண்டியிருப்பதால், முயன்றுப் பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.

பின்னர் தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். அலுவலகத்தின் அண்ணாவுடனும் வேறு சில தோழர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் நான் அமைதியாகவே அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. கீரா அண்ணா மதியம் அவர் செய்த அரைவேக்காடு முட்டையை நான் சாப்பிடவில்லை எனச் சொல்லி மீண்டும் சமைக்க ஆயத்தமானார். அலுவலகத்தில் சமைக்கும் வசதி இருந்ததால் எஞ்சி இருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் ஆரம்பமானது.

எனக்குப் பசியில்லை எனச் சொல்லியும் அண்ணா விடவில்லை. அவராகவே எமக்கு ஊட்டி விட்டுச் சாப்பிடச் செய்தார். அண்ணாவின் அன்பில் நான் நெகிழ்ந்துப் போனேன். மற்ற தோழர்கள் எங்களைக் கிண்டல் செய்தனர். அதற்குள் கண்ணா அண்ணா ஐந்தாறு முறை எமது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். நள்ளிரவு 12 மணி தாண்டித்தான் நான் வீடுச் சென்று சேர்ந்தேன். கண்ணன் அண்ணாவும் பாக்கியா அக்காவும் எனக்காகக் காத்திருந்தனர். குளித்துவிட்டு வந்து பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இலங்கையிலிருந்து கவிதாவின் தோழி மேனகாவும் அன்றுதான் சென்னை வந்திருந்தாள். அவளுடனும் சிறு அறிமுகம் செய்துக்கொண்டுப் படுக்கைக்குச் சென்றேன்.