வியாழன், 30 ஜனவரி, 2020

வாழ்!

இவன் சரியில்லை அவன் சரியில்லை
இது சரியில்லை அது சரியில்லை
இப்படியே புறம் பேசு
இடுகாட்டில் போய் சேரு!

என்னதான் வேண்டும்
எதற்குத்தான் பிறந்தாய்
எப்படியோ வளர்ந்தாய்
எப்படியும் இறப்பாய்…

வாழும் காலத்திலே
வளத்தோடு வாழலாமே
வாயை மூடிக்கொண்டு
வீட்டை நாம் பார்க்கலாமே?

அடித்தவன் கதையெல்லாம்
அடிப்பினிலே போட்டுவிடு
அண்டிப்பிழைப்பதை நீ
அடியோடு விட்டுவிடு!

நேற்றிருந்தார் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை
நாழிகையைக் கடத்தாமல்
இந்நாளை வாழ்ந்துவிடு!

எது காதல்? -அத்தியாயம் 1

1
அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டுப் பயின்று வரும் கோதையும் கோகிலாவும் பள்ளி முடிந்து அன்றைக்கு வீட்டுக்குச் செல்லவில்லை. புதன்கிழமைதோறும் மதிய வேளையில் புறப்பாட நடவடிக்கைகள் இருப்பதால் அவர்கள் வீடு செல்லாமல் பள்ளியிலேயே தங்கிவிட்டனர்.பள்ளிக்குத் தொலைவில் வசித்துவரும் மாணவர்கள் மதிய வகுப்பின் போது இவ்வாறு பள்ளியிலேயே தங்கிவிடுவது வழக்கம். வீடு அருகில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குச் சென்று மதியம் மீண்டும் பள்ளி திரும்புவர். இது பெரும்பாலான பள்ளிகளில் வழமை.

அப்போது 'மின்னல்' என்ற தமிழ்ப்படம் வெளிவந்து வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருந்த வேளை. கோகிலாவும் கோதையும் மதிய வகுப்பு தொடங்குமுன் இருக்கும் நேரத்தைச் செலவிட அந்தச் சிறிய பள்ளியை சுற்றி சுற்றி நடந்துக்கொண்டே கதைப்பேசி வந்தனர். அப்போது, "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்ற பாடல்வரிகளை யாரோ ஆண் குரல் பாட, "விளையாட ஜோடி தேவை" என்று கோதை தொடர்ந்தாள். இயற்கையிலேயே சற்று குறும்புத்தனம் மிக்கவள்.

"ஏய்! யாரது எங்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவது" என்று குரலுக்குச் சொந்தக்காரர்களான குமாரும், சரணும் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். குமார், சரண் இருவரும் ஆறாம் ஆண்டுப் படிக்கும் பன்னிரெண்டு வயது மாணவர்கள். கோதையும் கோகிலாவும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் காலம்.

குமாரும் சரணும் வரும் காலடிச் சத்தம் கேட்கவே, கோகிலாவும் கோதையும் சிரித்துக்கொண்டே தலைத்தெறிக்க ஓடினர். அவர்கள் அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த குமாரும் சரணும், "ஏய்! ரெண்டு பேரும் நில்லுங்கள்" என்று கூவியவாறு துரத்திக்கொண்டு வந்தனர். தோழிகள் இருவரும் ஓர் அறையின் வளைவில் ஓடிச்சென்ற வேளையில் எங்கிருந்தோ வந்த பள்ளியாசிரியரைக் கண்ட குமாரும் சரணும் சட்டெனெ நின்றனர்.

"என்ன ஒரே ஓட்டம்?" என்று வினவினார் நாராயணன்.

"ஒன்னுமில்லை சார்... சும்மா விளையாடிக்கொண்டிருந்தோம்" என்று மழுப்பினான் சரண்.

"சரி, இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். சில நோட்டுப்புத்தகங்களைக் காரிலிருந்து எடுத்து வர வேண்டும்," என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார் நாராயணன் என்ற கணக்காசிரியர்.

அவர்கள் போவதை வகுப்பறையின் வளைவிலிருந்து மறைந்து நின்று கோதையும் கோகிலாவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் சிரிப்பு. கோதையின் மனம் என்றைக்கும் விட அப்போது அதிகம் படபடத்தது. ஏதோ ஒருவித கிளர்ச்சி, இனம் புரியாத இன்பம்.

"நல்லவேளை அவனுங்க நம்மள பிடிக்கல," என்றாள் கோகிலா.

அதற்கு பதிலொன்றும் கூறாமல் புன்னகையுடன் தலையசைத்தாள் கோதை.
ஒருவேளை பிடித்திருந்தால்? என்று எண்ணியபோது அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்தது.

குமார் பாடிய அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த சமீபத்திய பாடல், எனவே தான் அதைக் கேட்டதும் அவளும் தொடர்ந்துப் பாடினாள். அதே வேளை தனக்குப் பிடித்த பாடலை இன்னொருவனும் இரசித்துப் பாடுகின்றானே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுள் எதுவோ, என்னவோ செய்தது. அவன் பெயர் அவளுக்குத் தெரியும். அந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான‌வர்களை அவளுக்குத் தெரியும். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் அவளையறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.

"என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு?" என்று வினவினாள் கோகிலா.

"ஒன்னுமில்லை..."

"ஏய், மழுப்பாதே. அவர் பாடுவாராம்; இவங்க சேர்ந்துப் பாடுவாங்களாம். அவர் துரத்துவாராம்; இவங்க ஓடுவாங்களாம். யாருக்கிட்ட?" என்று கிண்டலடித்தாள் கோகிலா. கோதையில் இளமைப் பருவத்தின் மிக முக்கியப் புள்ளியிட்டது அன்று கோகிலாதான். கோதை சிரித்தாள். அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மதிய வகுப்பின் போது கோதையால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவளுக்குப் புதுமையாய் இருந்தது. குமாரையும் அவன் பாடிய பாடலையும் நினைத்த மாத்திரத்தில் அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. வீட்டிற்குச் சென்ற கோதை "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலைத் திரும்ப திரும்பக் கேட்டாள். ஒவ்வோர் வரியையும் இரசித்துக்கேட்டாள். ஒவ்வோர் முறையும் முதன் முறை கேட்பதைப் போலவே அந்தப் பாடல் அவளுக்கு சிலிர்ப்பூட்டியது.

இடையிடையே குமாரின் குரல் அவள் காதுக்கு மட்டும் ஒலித்து மறைந்தது.
அதன்பின் ஒவ்வொரு முறை அவள் குமாரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த பொழுது ஓரக்கண்ணால் நோட்டமிடுவாள். குமார் எப்போதும் நண்பர்கள் சூழ இருந்தான். சரண் அவனை நிழல்போல் தொடர்ந்தான். கோதையும் குமாரும் பல முறை ஒருவரையொருவர் பள்ளியில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த போதிலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில சமயம் நண்பர்கள் காணாத வேளையில் குமார் அவளைப் பார்த்துப் புன்னகைப்பான். அவளுக்கு அப்போது வெட்கம் பிடுங்கித்தின்னும். சட்டென்று பார்வையை வேறு திசைக்குத் திருப்பிவிடுவாள். சில சமயம் இவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள், அவன் முகத்தில் வெட்கம் படர சிரித்தவாறு , நண்பர்கள் கவனியா வண்ணம் முக‌த்தைத் திருப்பிக் கொள்வான். இப்படியே நாட்கள் கடந்தன. அவர்கள் இருவரின் வாய் பேசாவிடினும், கண்களாலேயே அவர்கள் ஆயிரம் கதைகள் பேசினர்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்ற கோதை ஒரு முறையாவது அவனைக் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கினாள். அவள் ஏக்கத்தைப் புரிந்துக்கொண்டவன் போல் குமார் அடிக்கடி அவளது வகுப்பறையைக் கடந்துப் போனான். அவன் வரும்போதும், போகும் போதும் ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். இதனைக் கோதையின் இணைப்பிரியா தோழி கோகிலாவும் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன? உன் ரோமியோ அடிக்கடி இந்தப் பக்கம் வரமாதிரி இருக்கு?" என்று கிண்டலடித்தாள்.

"யாரு?" என்று ஒன்றும் தெரியாதது போல் வினவிளாள் கோதை.

"நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஓரக்கண்ணுல பார்க்கிறதும் நீ சிரிக்கிறதும்.

"சிரிச்சா தப்பா?"

"சிரிச்சா தப்பில்ல. ஆனால், நீ சிரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கு. அங்க பார்வையும் வேற மாதிரி வருது."

கோதை பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது? அதற்குள் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைய அவர்கள் பேச்சு அத்தோடு நின்றது. இந்தப் பேச்சி அடியோடு நின்றது என்று சொல்வதற்கில்லை. கோதையும் குமாரும் சிரிப்பையும் பார்வையையும் பரிமாறிக்கொள்வதை அவர்களின் நண்பர்களும் நாளடைவில் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போதோ அல்லது ஒருவரை ஒருவர் கடந்துப் போகும் போது அவர்களுடைய‌ நண்பர்கள் தொண்டையைக் கணைத்து அர்த்தப் புன்னகை வீசுவர். அவர்களின் நட்பும் அன்பும் அந்த அளவிலேயே வளர்ந்தது எனலாம். அவர்கள் இருவருக்கும் அப்பருவத்தில் அதுவே தேவையாய் இருந்தது, ஆயிரம் அர்த்தம் தரக்கூடிய அந்தப் பார்வையும், உலகையே ஒரு கணம் மறக்கச்செய்யும் அந்தப் புன்னகையும் மட்டுமே.

அவர்கள் இருவரின் மனதிலும் வேறு எதுவும் இல்லை. அவளின் முகம் அவனுக்கும், அவனின் எண்ணம் மட்டுமே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது. பதினொன்று வயது சிறுமிக்கும், பன்னிரெண்டு வயது சிறுவனுக்கும் அந்த தொன்னூறுகளில் வேறு என்னதான் எண்ணத் தெரியும். அப்பழுக்கற்ற அவர்கள் இதயத்தில் தூய அன்பொன்று அழகாய் வேறூன்றத் தொடங்கியது.