வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கிளியோபாட்ரா & அண்டனி


சீசர் இறந்துவிட்டான்
சீற்றத்தில் துடித்தாள் கிளியோபாட்ரா
கண்ட நாள்முதல் காதலில் திளைத்தவள்
கண்ணீர் நதியினில் மூழ்கிச் சாகின்றாள்!

நண்பன் இறந்துவிட்டான்
நாடித் துடிக்கிறதே
திரோகம் இளைத்தவரை
தீர்த்திட முயல்கிறதே
வருகின்றான் அண்டனி
வஞ்சம் தீர்த்திட‌
சவத்தின் முன்னாலே
சபதம் ஏற்றிட...

தங்க ஆடையில்
தகதகக்கும் பீடத்தில்
தெய்வம் போல் மின்னிட‌
தாரகையும் காட்சி தர,
பிரமாண்டம் கண்திகைக்க‌
பித்து போல் அவன் நிற்க‌
பிடித்தது காதல் நோய்
பின்விளைவுதான் என்னவோ?

சீசரை மயக்கியவள்
சிரிப்புடனே நெருங்கினாள்
அசைவுகள் ஏதுமின்றி
அண்டனி சிலையானான்!

உணர்ச்சிகள் கலந்தன‌
உடல்களும் இணைந்தன‌
காலம்தான் பொறுக்குமா
காதல்தான் நிலைக்குமா?

சீசரின் உறவொன்று
சீறித்தான் வந்ததுவே
ஆண்டனி உயிர்க்கொய்ய‌
ஆவலாய் முயன்றதுவே!

வெடித்தது போர் ஒன்று
விலகினான் அண்டனியும்
மங்கைப் பின் அவன் ஓட
மானமும் பறந்ததுவே!

தோல்வி மனக்கசப்பைத் தர‌
தீயாய் அது நெஞ்சைச் சுட‌
துவண்ட மன்னன்
தூரம் சென்றான்
விழிகொண்ட மங்கையை
விலக்கி வைத்தான்!

காதல் தலைவன்
சீறி விலக‌
கிளியோபாட்ரா
சமாதி சென்றாள்!

அண்டனி தலை வேண்டும்
ஆணையிட்டான் சீசர் மகன்
தந்துவிடு கிளியோபாட்ரா
தப்பிவிடும் எகிப்தின் தலை!

கண்ணியவள் கலங்கி நின்றாள்
காலனை வேண்டி நின்றாள்
அரியணை தனக்கு வேண்டாம்
அன்பனே போதும் என்றாள்!

காலம் கடந்ததுவே
காலன் வந்ததுவே
களத்தில் தோல்வியுற்ற
கண்ணன் மனமுடைந்து
கத்தியை உறுவினான்
கணத்தில் செலுத்தினான்!

செர்வியஸ் அதிர்ச்சியுற்றான்
செய்வதறியாது திகைத்து நின்றான்!

கணங்கள் எனக்கில்லை
கிளியோவை காண வேண்டும்
காரணம் சொல்லாதே
கண்டிப்பாய் சேர்த்துவிடு
கரகரத்தான் அண்டனி!

கிளியோபாட்ரா சமாதியில்
காதல் கண்ணியின் மடியில்
கடைசி நேரத்து மூச்சை
காதல் முத்தத்தில் கலந்தான்!

சோகத்தைத் தாளாதவள்
சர்ப்பத்தின் துணை கொண்டு
சாவை வரவேற்றாள்
சரித்திரத்தில் இடம்பெற்றாள்!

அழிந்தது இரு உடல்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
வாழ்கிறது காதல்
வாழ்த்துவது சரித்திரம்!





ஹாரி போட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (Harry Potter and The Cursed Child)



ஹாக்வர்ட்ஸ் போர் முடிந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கதை நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹாரி போட்டர் ஜின்னியை மணம் புரிந்து ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் ஆகிய இரு குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். ஹெர்மியோனி - ரோன் தம்பதியினருக்கு ரோஸ் எனும் பெண் குழந்தை இருக்கிறது. டிராகோ மால்ஃபோய்'யின் மகனாக ஸ்கோர்பியஸ் வருகிறான்.

இக்கதையில் ஹாரியின் இளைய மகன் ஆல்பஸ் தந்தையின் பெயருக்கும் புகழுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணருகிறான். தந்தையின் திறமை தன்னிடம் இல்லை என எண்ணி மனதிற்குள்ளேயே குமுறுகிறான். அதன் விளைவாகத் தன் அடையாளமாகத் திகழும் ஹாரியை விட்டு விலக முயல்கிறான். டிராகோவின் மகன் ஸ்கோர்பியஸ் அல்பஸ்சின் உற்ற நண்பனாக வலம் வருகிறான்.

தனது மகன் சிட்ரிக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அமோஸ், நேரத்தின் ஊடாக பயணம் செய்து தனது மகனை மீட்டுத்தரும்படி ஹாரி போட்டரிடம் உதவி நாடுகிறான். அதனால் விளையும் பின்விளைவுகளை எண்ணி ஹாரி உதவ மறுக்கிறான். இதனை ஒட்டுக்கேட்ட அல்பஸ்  அமோசுக்கு உதவ முன்வருகிறான். டெல்பியின் துணையுடன் அல்பசும் ஸ்கோர்பியசும் நேரத்தின் ஊடாகப் பயணம் செய்யும் கருவியைக் கைப்பற்றுகின்றனர். சிட்ரிக்கைக் காப்பாற்றுவதற்காக இரு முறைப் பயணம் செய்து, அதன் பின்விளைவுகளைக் கண்டு அஞ்சி அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர். நேரத்தின் ஊடாகப் பயணம் செய்வது மிகப் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதனை அழிக்கவும் ஆயத்தமாகின்றனர்.

இதற்கிடையில் தனது மகன் ஆல்பசைச் சுற்றி கறுப்பு மாயைப் படர்வதைக் கேள்வியுற்ற ஹாரி, ஸ்கோர்பியசின் நட்புதான் அதற்குக் காரணம் என எண்ணி அவர்களைப் பிரிக்க முயல்கிறான். இவ்விடம் மிகவும் உணர்ச்சிகரமானச் சம்பங்கள் சில நிகழ்கின்றன. ஆல்பசும் ஸ்க்கோர்பியசும் நேரக் கருவியை அழிக்கும் தருவாயில் டெல்பி அவ்விடம் தோன்றி அதனைக் கைப்பற்றுகிறாள். வல்டெர்மோர்ட் மீண்டும் வரவேண்டும் எனவும் அதற்கான ஆயத்தங்களை அந்தக் கருவின் துணைக்கொண்டு தாம் செய்யப்போவதாகவும் கூறி, அவ்விருவரையும் கடத்தி செல்கிறாள். டெல்பியின் தீய எண்ணத்தை அறிந்த அவ்விருவரும் அவளுக்கு உதவ மறுக்கின்றனர். இதனால் கோபமுற்ற டெல்பி கடந்தக் காலத்திற்குப் பின்னோக்கி சென்று, கருவியை அவ்விடத்திலேயே அழித்து விடுகிறாள். இதனால் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்ப முடியாமல் சிறுவர்கள் இருவரும் தவிக்கின்றனர்.

இதனிடையே, சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுப்பட்ட பெரியவர்கள் டெல்பி வல்டெர்மோர்ட்டின் மகள் என்பதனைக் கண்டுப்பிடிக்கின்றனர். சிறுவர்களும் தாங்கள் இருக்கும் காலத்தையும், இடத்தையும் அறிவுப்பூர்வமாக ஹாரி போட்டருக்குத் தெரிவிக்கின்றனர். டிராகோ தன்னிடமிருந்த மற்றொரு நேரத்தின் ஊடே பயணம் செய்யும் கருவியை ஹாரியிடம் கொடுக்கிறான். அதனைப் பயன்படுத்தி சிறுவர்களை டெல்பியிடமிருந்து மீட்கின்றனர். கடந்த கால நிகழ்வுகள் எதனையும் சிதைக்காமல் மீண்டும் தற்காலத்திற்குத் திரும்பி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகு தந்தை - மகன் உறவில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் நிகழ்கின்றன‌.

இவையனைத்தையும் முழுமையாக சுவைக்க வேண்டுமானால் நீங்கள் முழு புத்தகத்தையும் வாசிக்க வேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரையில், கதை மிகவும் சுறுசுறுப்பாக நகர்கிறது; வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. கற்பனைக்கதை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். வாசித்து மகிழுங்கள்!