புதன், 14 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 11)




காலை மணி 10 அளவில் ‘ஏழாம் அறிவு’ படம் பார்க்கச் செல்லலாம் என பாக்கியா அக்கா அழைத்தார். குடும்பம், உனவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் படம் பார்க்கக் கும்பலாகப் புறப்பட்டுச் சென்றோம். படம் பார்த்து முடிந்த பிறகு, நான் மட்டும் தனியே ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து அருகே நடக்கும் பட்டினி போராட்டத்திற்குச் செல்வதாகக் கூறினேன். அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தார். “இப்படியே போராட்டம் போராட்டம் என்றிருந்தால் உடம்பை எப்படியம்மா கவனிக்கிறது? காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்லை,” என பெரிய சித்தி பரிவுடன் கூறினார்.

அவர்களுக்குப் பதிலாக சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் பேரறிவாளனின் தாய் பார்வதியம்மாள், பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர் செளர்தர்ராஜன், கீரா அண்ணா ஆகியோர் அவ்விடம் இருந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பிரமுகர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அடுத்ததாக உரையாற்ற வருமாறு எம் பெயரை அறிவித்துவிட்டனர். இந்தத் திடீர் அறிவிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “மனசுல பட்டத தைரியமா பேசு,” என கீரா அண்ணா தெம்பூட்டினார்.

நானும் சில நிமிடங்களுக்கு ஏதேதோ பேசினேன். கூட்டம் அமைதியாக என் பேச்சினை செவிமடுத்தது. இருந்த போதிலும், எமது குரலில் இருந்த நடுக்கத்தை என்னாலேயே உணர முடிந்தது. பேசி முடிந்து அமரும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, “இவ்வளவு அருமையாக பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் முன்னதாகவே உங்களைப் பேசச் சொல்லியிருப்போமே,” எனப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தேன். கீரா அண்ணா அப்போதே அண்ணிக்கு அழைத்து, “தங்கச்சி அருமையா பேசினா. நான் கூப்பிடும் போதெல்லாம் நீ நிகழ்ச்சிக்கு வரமாட்ற. நாங்க தான் மனைவி பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கூட்டி வர்றதில்லனு மைக்கிலேயே சொல்லிட்டா,” என்றார். அவர்களின் ஆதரவும் அன்பும் எம்மை நெகிழச் செய்தன.

எனக்கு அடுத்ததாக பேரறிவாளனின் தாயார் உரையாற்றினார். அவரின் பேச்சு வந்திருந்தோரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. “நான் செய்த தப்பு ஒரு நல்லவனைப் பெற்றது,” என அவர் கூறிய போது அவரின் கண்கள் குளமாயின. தள்ளாத வயதிலும் நீதி வேண்டி அந்தத் தாய் படும் அலைச்சலும், சிரமும் சொல்லில் அடங்கா. போராட்டம் முடிந்த பிறகு அண்ணா சில தோழர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். போராட்டத்திற்காக அவ்விடத்தினை இலவசமாக வழங்கிய செளந்தர்ராஜன் ஐயா எனது பெயரட்டையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இலவசமாக எனக்கு இரு புத்தகங்களையும் வழங்கினார். சற்று நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

பின்னர் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த சாவி மாட்டல்களையும் (கீ செயின்ஸ்), சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். புத்தகம் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தின் அமைந்திருக்கும் அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். திரைப்படத்துறையைச் சார்ந்த அண்ணாவின் தோழர்கள் சிலர் எங்களுடன் அலுவலகத்திற்கு வந்தனர். நாளை நான் மலேசியா திரும்ப இருப்பதால் இன்று தன் கையால் சமைக்கப்படும் உணவை கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என ஏகலைவன் அண்ணா அன்புக் கட்டளையிட்டார். அவரின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை.

கடைக்குச் சென்று கோழி இறைச்சி வாங்கி வந்து அவர் சமையலை ஆரம்பித்தார். அவர் சமைக்கட்டும் என நான் காத்திருந்தேன். அண்ணாவும் தோழர்களும் பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே மது அருந்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஆடல், பாடல்கள் அவ்விடம் அரங்கேறின. மிகவும் மகிழ்ச்சியான சூழலாக அது விளங்கியது. தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். ஒரு சமயம் கீரா அண்ணா மெய்மறந்து ஆட ஆரம்பித்தார். அவர்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டே நான் நாற்காலியிலேயே உறங்கிவிட்டேன்.

சமையல் முடிந்த பிறகு அருண்ஷோரி என்னை எழுப்பிவிட்டார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஏகலைவன் அண்ணாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அவரின் சமையலை விட அவர் எம்மீது காட்டிய அன்பு எமக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தோன்றியது. மிகவும் களைப்பாக இருந்ததால் உண்டவும் நான் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். இரவு 11 மணியளவில் வீட்டை அடைந்தேன். நேரமாகிவிட்டதால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.

காலை 7 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்து, சேலை உடுத்திக் கொண்டேன். தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணியுடன் பேசி விடைப்பெற்ற பிறகு, நான், கீரா அண்ணா, அருண்ஷோரி மூவரும் புத்தகம் வாங்க கடைக்குச் சென்றோம். நான் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கீரா அண்ணா பட்டியலிட்டு வைத்திருந்தார். நாங்கள் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே 10 கிலோவைத் தாண்டிவிட்டன. காலையிலேயே மலை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் வாங்கிய பிறகு நானும் அருண்ஷோரியும், ‘கோவை மாநாடு’ தொடர்பான பத்திரிக்கைச் சந்திப்பிற்குச் சென்றோம்.

அவ்விடம் கொளத்தூர் மணி ஐயாவும், பார்வதி அம்மாவும் வந்திருந்தனர். பார்வதி அம்மா எம்மை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினார். அவரின் எளிமை எம்மை வெகுவாகக் கவர்ந்தது. அவர் எனது மலேசியத் தொடர்பு எண்களைக் கேட்ட போது நான் நெகிழ்ந்துப் போனேன். நேரமாகிக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு, மருத்துவமனை அருகே ‘மரணதண்டனைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்’  நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம். தோழர் இரமணி அவ்விடம் இருந்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டேன். பெண்கள் பலரும் அவ்விடம் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தது பாராட்டக்கூடிய விடயமாக இருந்தது.

ஆடல், பாடல், பறை அடித்தல் போன்ற கூத்துகளும் அவ்விடம் அரங்கேறின. பனகல் மாளிகை அருகே கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலரையும் அவ்விடத்தில் காண நேர்ந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி விடைப்பெற்றுக் கொண்டேன். இறுதிவரை போராட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்தினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி ஐயாவும் அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். சென்ற முறை தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அதனை அவர் இன்னமும் நினைவு வைத்திருந்தார். அவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீட்டை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தேன். அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணா அண்ணா எம்மை அங்கு அழைத்துச் சென்றார். மதிய உணவு உண்டு முடித்து அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். கண்ணா அண்ணாவும் அம்மாவும் எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரை உடன் வந்தனர். நான் அம்மண்ணிலிருந்துக் கிளம்பப் போகிறேன் என்பதாலோ என்னவோ வானம் கதறியழுதுக் கொண்டிருந்தது.

அந்தக் கொட்டும் மழையிலும் தோழர் அருண்ஷோரி எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரையில் வந்திருந்தது எம்மை நெகிழச் செய்தது. சிறிது நாள் பழகிய போதிலும் இவர்கள் எம்மீது காட்டும் பாசத்திற்கும் அன்பிற்கும் விலையேது? சிறிது நேரம் கதைத்துவிட்டு, இறுதியாகக் கைக்குலுக்கிப் பிரிந்த போது நெஞ்சம் வலிக்கவே செய்தது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் கைப்பேசியில் அழைத்து நால் செல்வதைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன். பார்வதியம்மாவுக்கும் மறவாமல் தெரியப்படுத்தினேன்.

பயணத்திற்காகக் காத்திருந்த வேளையில் தூரத்தில் ஏதோ பழக்கப்பட்ட முகம் ஒன்று எம்மை நோக்கி புன்னகைத்தது. அவ்வுருவம் என்னருகே வரவும் யாரென்று கண்டுக்கொண்டேன். மலேசியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் இளந்தமிழ் ஐயா! மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம்! நான் வரும் போது ஒருவர் எம்மை அடையாளம் கண்டுக்கொண்டார், போகும் போது இன்னொருவரைப் பார்க்கிறேன்.

இளந்தமிழ் ஐயாவோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக நடத்தவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் பயணம் செய்ய இருக்கிறோம். சரியாக இந்திய நேரம் மாலை 5.50 மணிக்கு விமானம் சென்னையிலிருந்துப் புறப்பட்டது.  விமானத்தில் ஏறிய சில நொடிகளிலேயே அசதியில் கண்ணயர்ந்தேன். எனது இனிமையான பயண அனுபவங்கள் கனவுகளாக மாறி தமிழ்நாட்டினையே சுற்றிக்கொண்டிருந்தன. அடுத்த முறை மீண்டும் வருவேன்… தமிழ்நாட்டு கிராமங்களைக் காண….

***முற்றும்***

சென்னைப் பயணம் (பாகம் 10)




பாக்கியா அக்காவின் வீட்டிலிருந்து விருந்தினர் வீட்டிற்குச் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களை அழைத்துச் சென்றார். எங்களின் போதாத வேளை சாலை விருந்தினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வெள்ளமும் சேறும் நிரம்பி வழிந்தது. மகிழுந்தில் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்ற அச்சத்தினால் சின்னவன் அண்ணா அதனை சற்று தொலைவிலேயே நிறுத்தி வைத்துவிட்டார். சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நாங்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நள்ளிரவில் சேற்றிலும் வெள்ளத்திலும் நடந்துச் செல்வது புதிய அனுபவமாக இருந்தது.

இளைய தம்பி தினேஸ் என்னுடன் மெதுவாக நடந்து அதன் சுகத்தை அனுபவித்தான். சில்லென்ற சேற்றில் கால் புதைவதும் பின்னர் வெள்ள நீரில் கழுவப்படுவதும், பின் மீண்டும் புதைவதும் கழுவப்படுவதுமாக நடைப்பயணம் சுகப்பயணமானது. பாதணி அணியாமல் நடந்துச் சென்ற அவ்வேளையில் சில கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கவே செய்தன. நள்ளிரவு நேரமாததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. நாங்கள் நால்வர் மட்டுமே அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தோம். சின்னவன் அண்ணாவும், தேவாவும் முன்னே வேகமாக நடந்துச் செல்ல. நானும் தினேசும் பின்னே மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வெளிச்சமின்றி இருட்டாக இருக்க, நாய்கள் சில கூட்டாக குரைக்க ஆரம்பித்தன. ஏற்கனவே எனக்கு நாய்களைக் கண்டால் ஆகாது.

கால்கள் ஓட்டமெடுக்க தயாராகின. தம்பியைப் பிடித்திருந்த கை இன்னும் இருகியது. அவன் எனது செயல்பாட்டினை அறிந்திருக்கவோ/ ஊகித்திருக்கவோ வேண்டும். “அக்கா, தயவு செய்து ஓடிடாதீங்க. பிறகு நாய்கள் துரத்தினா அவ்வளவுதான். மெதுவா நடந்தே போவோம். அதுகள் ஒன்னும் செய்யாது,” என தைரியம் கூறினான்.. இருந்த போதும் அவனின் நடையின் வேகம் அதிகரித்தது. நானும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஒருவாறு வீட்டை அடைந்த பிறகுதான் பயம் அகன்று நிம்மதி பிறந்தது. வீட்டை அடைந்த பிறகு தம்பிகளுடன் அன்றைய அனுபவங்கள் பற்றி சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் அனைவரும் படுக்கைக்குச் சென்றோம்.

மறுநாள் காலையில் கவிதாவின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். தம்பிகள் இருவரும் எழும்பி தயாராக ஆரம்பித்தனர். காலை 6.00 மணியளவில் தோழர் அருண்ஷோரி கைப்பேசிக்கு அழைத்திருந்தார். அவரிடம் 10 முழம் மல்லிகைச் சரம் வாங்கிவரச் சொன்னோம். வாங்கி வந்த 10 முழத்தில் 5 முழம் சரத்தை மட்டுமே தலையில் சூட முடிந்தது. மலேசியாவில் 10 முழம் வாங்கினால் கூட தலை நிறைய சூட முடியாது. பூக்களின் இடைவெளி அதிகமாக விட்டு சரம் பின்னி வைத்திருப்பர். தமிழ்நாட்டிலோ மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் மல்லிகைச் சரம் பின்னியிருந்தனர். 5 முழமே போதுமானதாக இருந்தது.

நான் சேலை அணிய, தம்பிகள் இருவரும் வேட்டி ஜிப்பா அணிந்திருந்தனர். தெரு முழுக்க வெள்ளமாகவும் சேறாகவும் இருந்ததால் அருண்ஷோரி வீதி வரை தனது வண்டியில் ஏற்றிச் சென்றுவிட்டார். வீதியில் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். பின்னர் அனைவரும் திருமண வீட்டிற்குச் சென்றோம். மணப்பெண்ணின் அலங்காரம் இன்னும் முடியவில்லை. வீட்டுப் பெண்கள் சிலர் இன்னும் சேலை கூட அணியாமல் அவசர அவசரமாகத் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தாமதமாகிவிட்டதால் நானும் இயன்றவரையில் அவர்களுக்கு அலங்காரம் செய்ய உதவினேன்.

மற்ற யுவதிகளுடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பும், சுவைபாணமும் வழங்கினோம். நேரமாகிக்கொண்டே இருந்தது. காலையில் நடக்க வேண்டிய திருமணம். மதியம் 1 மணிக்குத்தான் மணமகளின் கழுத்தில் தாலி ஏறியது. திருமணத்திற்குப் பிறகு கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மனம் திறந்து சொல்கிறேன், அப்படி ஒரு கச்சேரி இவ்விடம் நடத்தப்பட்டிருக்குமானால், அடித்தே கொன்றிருப்பார்கள். அவ்வளவு கொடுமையாக இருந்தது. திருமணத்தில் எம்மாதிரியான பாடல்களைப் பாட வேண்டும் என்று தெரியாமல் கண்ட குப்பைகளையும் பாடிக்கொண்டிருந்தனர். அதிலும், ஈசன் திரையில் இடம்பெற்ற “வந்தானம்மா வந்தானம்” என்ற பாடல் அச்சூழலுக்குத் தேவையானதாக எமக்குத் தோன்றவில்லை.

இப்படியே கச்சேரி போய்க்கொண்டிருக்க எழுச்சிப்பாடல் ஒன்று வித்தியாசமான குரலில் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தேன். இயக்கப் பாடல்கள் படிக்கும் சாந்தனின் குரல்தான் அது. அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே வந்திருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தன. அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் கைத்தட்டல்கள் பலமாக ஒலித்தன. கச்சேரிக்குப் பிறகு இராஜேஸ் அண்ணா சாந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்ற போது இரு ஆடவர்கள் நெருங்கி வந்து, “எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேட்டனர். மலேசியா என்றேன். என் பதிலில் அவர்களுக்குத் திருப்தி இல்லை போலும், “பிறந்து வளர்ந்ததெல்லாம் எவ்விடம்?” என மீண்டும் கேட்டனர். “எல்லாமே மலேசியா தான்,” எனக் கூறிவிட்டு சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

வீட்டிற்குச் செல்ல காத்திருக்கும் போது, இன்னும் சிலர் என்னிடம் எனது முதுகில் உள்ள சின்னத்தைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டனர். புன் முறுவலுடன் மறுத்துவிட்டேன். தேவா இன்னும் ஏதேதோ வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு தம்பிகள் இருவரும் பெங்களூர் செல்ல வேண்டும். எனவே அவன் அருண்ஷோரியுடன் வெளியில் சென்றுவிட்டான். நானும் தினேசும் வீடு வந்து சேர மாலை மணி 6 ஆகிவிட்டது. மீண்டும் சேலையுடனும் வேட்டியுடனும் வெள்ளத்தையும் சேற்றையும் கடந்துச் செல்ல வேண்டிய நிலை. எங்கள் நிலையைப் பார்க்க எங்களுக்கே சிரிப்பாக இருந்தது. தம்பியின் பயண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே விருந்தினர் வீட்டை அடைந்தோம்.

தேவாவும் அருண்ஷோரியும் பிரியாணி வாங்கி வந்திருந்தனர். சாப்பிட்டுவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தோம். வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. கைப்பேசியில் உள்ள விளக்கின் வெளிச்சத்தினைக் கொண்டு ஒருவாறு வீட்டைச் சுத்தம் செய்தோம். மின்விசிறி கூட இல்லாமல் வியர்த்து வழிந்தது. பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு மீண்டும் சேற்றினையும் வெள்ளத்தினையும் கடக்க வேண்டிய நிலை. சின்னவன் அண்ணாவின் நண்பர் தம்பிகள் இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இறுதியாக வீட்டினைச் சுத்தப்படுத்தி, கதவுகளை தாழிட்ட பிறகு நானும் தோழர் அருண்ஷோரியும் கோயம்பேடு நோக்கி பயணமானோம்.

பேருந்து நிலையத்தில் தம்பிகளைத் தனியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. அவர்களிடம் கைப்பேசி வேறு இல்லை. பேருந்து ஓட்டுநரின் உதவியாளரிடம் பேசி அவரது கைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்டேன். தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிடுமாறு அவரை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். ஒருவாறு அவர்களை வழியனுப்பிவிட்டு வீடு வந்து சேர இரவு 11.30 மணியாகிவிட்டது. மிகவும் களைப்பாகவும், குளிராகவும் இருந்ததால் குளிக்கவில்லை. முகம் கழுவி, படுக்கைக்குச் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருக்கும் தோழர் இராஜேஸ் குமாரை அழைத்து தம்பிகள் ஏறிச் சென்ற பேருந்தின் விபரங்களைக் கொடுத்தேன்.

அதிக களைப்பாக இருந்த போதிலும் எம்மால் நிம்மதியாக நித்திரைக்கொள்ள முடியவில்லை. தம்பிகள் இருவரும் பாதுகாப்பாகப் போய் சேர்ந்தார்களோ இல்லையோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுனரின் உதவியாளருக்கு 3 முறை அழைத்துப் பேசிவிட்டேன். தம்பிகள் இருவரும் உறங்குவதாகச் சொன்னார். அவர்களை எழுப்ப வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு, உரிய இடத்தில் அவர்களை இறக்கிவிடுமாறு மீண்டும் ஒருமுறைக் கேட்டுக் கொண்டேன். அதீத அசதியால் அவ்வப்போது கோழித் தூக்கம் போட்டுக் கொண்டேன். அதிகாலை 5 மணியளவில் தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு விட்டதாக பேருந்து ஓட்டுனரின் உதவியாளர் தெரிவித்தார். தோழர் இராஜேஸ் குமாருக்கு விடயத்தைத் தெரியப்படுத்தினேன். தம்பிகள் அவருடன்தான் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

புதன், 7 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 9)





வழக்கமான கேலி கிண்டல்கள் நடந்தேறின. மாப்பிள்ளையைக் கண்டவுடன் மணப்பெண் வெட்கத்தில் நாணினாள். இரவு உணவு பரிமாறப்பட்டது. கரண் அண்ணா சித்தியை எனக்கு ஊட்டிவிடச் சொன்னார். எவ்வளவோ மறுத்தும் என்னை அவர்கள் விடவில்லை. மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சித்தி எனக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். நான் அமதியாக உண்டு முடித்து அவ்விடம் அமர்ந்திருந்தேன். அவர்கள் அன்பு எமது உள்ளத்தை வெகுவாக நெகிழ்த்தியது. மாப்பிள்ளை தனது நண்பர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவர கிளம்பிச் சென்றார். அவரது தாயார் மற்றும் இன்னும் சில உறவினர்கள் மணப்பெண்ணின் வீட்டிலேயே காத்திருந்தனர்.

நேரம் ஆக ஆக, மாப்பிள்ளையின் தாயாருக்குக் கால் வீங்கி வலி எடுத்தது. ஏற்கனவே ஒரு முறை கவிதா அவரது காலுக்குத் தைலம் தேய்த்து உருவி விடுவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளது கைகளில் மருதாணி. மாமியார் கால் வலியால் துடிக்க அவள் ஏதும் செய்ய இயலாமல் பரிதாபமாகப் பார்த்தாள். அப்போது கவிதாவின் அம்மா சிறிய புட்டி தைலத்துடன் மாப்பிள்ளையின் அம்மாவின் கால்களை உருவிவிட வந்தார். பெரியர்வர்களுக்கு ஏன் இந்த வேலை என நானே வலியச் சென்று, “நான் போட்டு விடுகிறேன்,” என தைலத்தை வாங்கிக் கொண்டேன்.

முன் பின் தெரியாத பெண் என்பதால் மாப்பிள்ளையின் அம்மா சற்று தயங்கினார். “உனக்கேனம்மா இந்த வீண் வேலை. பரவாயில்லை,” என தடுத்தார். “பரவாயில்லையம்மா… நான் தைலம் தேய்த்து விடுகிறேன். நீங்களும் அம்மா மாதிரி தானே?” என சொன்னவுடன் அவர் வேறு வழியின்றி கால்களை நீட்டினார்.
நானும் தைலம் தேய்த்து அவரது கால்களை உருவ ஆரம்பித்தேன். “உருவுவதற்கு எங்கேயாவது படிச்சியாம்மா?” என நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் வினவினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே “இல்லையம்மா,” என்றேன்.

“யாரு பெத்த பிள்ளையோ… முன்பின் தெரியாது. என் காலை பிடிச்சு உருவி விடுறே. நீ நல்லா இருப்பேம்மா,” என அந்தத் தாய் ஆசீர்வதித்தது மனதைக் குளிரச் செய்தது. நள்ளிரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு நித்திரை வர ஆரம்பித்தது. உறவினர்களும் மாப்பிள்ள வீட்டாரும் இன்னமும் மணப்பெண் வீட்டில் இருந்ததால் நான் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்த நீண்ட மெத்தை நாற்காலியில் சுருண்டுப் படுத்துக் கொண்டேன். சித்தி, மேனகா, கரண் அண்ணா ஆகியோர் மேலே வந்த பொழுது சில தடவை என்னை எழுப்ப முயற்சி செய்தனர். அசதியில் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தன.

பின்னிரவு மணி 2 அளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். படுக்கை அறைக்குச் சென்று வசதியாகப் படுத்துக் கொண்டேன். குளிக்காமல் படுத்ததால் அதன் பிறகு நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதிகாலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்துவிட்டு திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக சிறிய அட்டைப் பெட்டிகளை மடிக்க ஆரம்பித்தேன். இன்று தீபாவளி. ‘கெளரி காப்பு’ கட்டுவாதற்காக வீட்டுப் பெண்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். இவற்றில் எமக்கு நம்பிக்கை குறைவு என்பதனால் நான் வீட்டிலேயே இருந்து பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தம்பிகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் வாடகைக் காருக்கு அழைத்தேன். வேலையாக இருப்பதால் மதியம் 12 மணிக்கே வர முடியும் என்றார். தோழர் அருண்ஷோரியை அழைத்து தம்பிகள் இருவரையும் பாரிசுக்குப் பேருந்தில் அல்லது ஆட்டோவில் அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். அவர்களும் பாரிசுக்குச் சென்று மதியம் 12 மணிக்குள் தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டனர். வாடகைக் கார் வந்தப் பிறகு நானும் அவ்விடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தோம். அவ்விடத்தில் இறுதியாக வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தேடித்தேடி வாங்கிக் கொண்டோம்.

தேவாவின் வெள்ளைக் காலணியில் யாரோ வெத்தலைப் போட்டு சிவப்பு நிறத்தில் துப்பி வைத்திருந்தனர். அதனை அவனிடம் காட்டி கேட்ட போதுதான் அவன் அதனை கவனித்திருந்தான். “யார் செஞ்சா’னே தெரியல,” என புலம்ப ஆரம்பித்துவிட்டான். அதற்குப் பிறகு அவன் புலம்பிக் கொண்டே தான் வந்துக்கொண்டிருந்தான். எனக்கும் தினேசுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேவா புலம்பிக்கொண்டிருக்க நாங்கள் அவனது சேட்டைகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்க அதற்குள் செழியன் அண்ணா நான்கைந்து முறை எனது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். தீபாவளியன்று அவரது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்திருந்தேன். மதியம் 3 மணியளவில் செழியன் அண்ணாவின் வீட்டை அடைந்தோம். அங்கே அண்ணாவின் நண்பர் நிருவும் இருந்தார். நிரு காலையிலேயே வந்துவிட்டதாக அண்ணா தெரியப்படுத்தினார். அண்ணி எங்களுக்காக வகை வகையாகச் சமைத்து வைத்திருந்தார். சமையல் உண்மையிலேயே பிரமாதமாக இருந்தது. நான் மட்டுமின்றி எனது தம்பிகளும் அதனை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டனர். 

சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அவ்விடம் அண்ணாவின் தோழி ஒருத்தியும் அமர்ந்திருந்தாள். அவள் மலேசியத் தமிழ்ப்பெண். சென்னையில் பல் மருத்துவம் படித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். ஏனோ அவள் என்னிடம் தமிழில் பேசவில்லை. அவளுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்து நானும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தேன். போகும் வழியில் அவளது கல்லூரியில் இறக்கிவிடுமாறு செழியன் அண்ணா கேட்டுக்கொண்டார். அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு வளசரவாக்கம் சென்றோம். ஏனெனில், நாளை கவிதாவின் திருமணம் என்பதால் இன்று விருந்தினர் வீட்டில் தங்குமாறு பாக்கியா அக்காவும் கவிதாவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டனர்.

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இறக்கி வைத்த பிறகு கோடம்பாக்கத்திற்குச் சென்றோம். கீரா அண்ணாவிற்கு உடல் நலமில்லை என்பதாலும், தம்பிகளை அவர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களையும் அழைத்துக்கொண்டு அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். தம்பி விமான நிலையத்திலிருந்து வாங்கி வந்திருந்த ‘சிவாஸ்’ மதுபானத்தையும் மறவாமல் உடன் கொண்டுச் சென்றோம். அண்ணாவும் அவரது திரைப்படக் குழுவினர் சிலரும் அலுவலகத்தில்தான் இருந்தனர். வாடகைக் காருக்கான பணத்தை செலுத்தி அனுப்பி வைத்த பிறகு அலுவலகத்தில் அனைவரும் குழுமி உரையாடினோம்.

“அண்ணனுக்கு மருந்துக் கொண்டாந்திருக்கியா கண்ணு?” என அண்ணா சிரித்துக்கொண்டே மது பாட்டிலை வாங்கிக்கொண்டார். பின்னர் அனைவரும் மது அருந்தத் தொடங்கினர். பாடல் கச்சேரியும் அங்கே அரங்கேறியது. நான், அருண்ஷோரி மற்றும் தம்பிகள் இருவர் மட்டும் அவர்கள் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர் சில சூடான விவாதங்களும் நடந்தேறின. கீரா அண்ணா அரசியல், சாதியம் பற்றிப் பேசத் தொடங்கினார். எனது தம்பிகள் இருவரும் திருதிருவென முழித்தனர். போதையில் அவரது பேச்சு சமுதாய, போராட்ட விடயங்களைப் பற்றி ஆழமாகப் போக நான் குறுக்கிட்டு, “அண்ணா, தம்பிகளுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது. வேறு ஏதாவது பேசுங்கள்,” என அவர் காதருகில் கிசுகிசுத்தேன்.

“சொல்லிக்கொடும்மா! தெரியாதுன்னு விடக்கூடாது. எல்லாரும் போராடனும். உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? அவனுங்களுக்கும் சொல்லிக்கொடு,” என அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. “அண்ணா, தயவுசெய்து வேண்டாம்,” என மீண்டும் வலியுறுத்தினேன். அவர் என் முகத்தைப் பார்த்தார். “சரிம்மா” என ஏமாற்றத்தோடு கூறினார். நாங்கள் இன்னும் இரவு உணவு சாப்பிடவில்லை.

சரி அனைவரும் சாப்பிட போகலாம் என கிளப்பினோம். உணவகத்திற்குச் சென்ற பிறகு கீரா அண்ணா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார். வாசனும் செல்ல வேண்டும் என்றார். சரியென்று பொழிலன், அருண்ஷோரி, நான் மற்றும் தம்பிகள் மட்டும் இரவு உணவு உட்கொண்டோம். வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வேளையில் எங்களிடம் இரு மோட்டார் வண்டிகள் மட்டுமே இருந்தன. நாங்களோ 5 பேர். நான் அருண்ஷோரியின் மோட்டாரில் ஏறிக்கொள்ள, இரு தம்பிகளும் பொழிலன் வண்டியில் ஏறிக்கொண்டனர். என் தம்பிகளுக்கு இது புது அனுபவமாக இருந்தது. இடம் போதாமையாலும், சீரற்ற பாதைகளாலும், அந்தப் பயணம் அனுபவ பயணமாக அமைந்தது. அவர்களைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஒருவழியாக அனைவரும் வளசரவாக்கம் வந்துச் சேர்ந்தோம்.