திங்கள், 30 மே, 2011

ஏனடா…???







சொல்லிய ஒவ்வொரு சொல்லும்

ஈட்டி முனைகளாக மாறி

இதயத்தைக் குத்திக் கிழித்து

இரணமாக்கிப் போனதே!



என்னடா தவறு செய்தேன்

எப்போது துரோகம் செய்தேன்

உண்மையாய் இருக்கும் போதே

சந்தேகம் கொள்கின்றாயே?



உன்னுடன் வாழவும் முடியாமல்

விட்டு விலகவும் முடியாமல்

இருதலைக்கொள்ளி எறும்பாய்

மதில் மேல் பூனையாய்

அலைபாயும் மனது!



தினம் தினம் சாகின்றேன்

உன் வார்த்தை அம்புகள்

என் உயிரின் ஒவ்வொரு அணுவையும்

வலிக்கொள்ளச் செய்யும்

இவ்வேதனையை எப்போது அறிவாய்?



நிம்மதியை இழந்துவிட்டேன்

பைத்தியம்தான் பிடிக்கவில்லை

எப்பொழுதோ இறந்துவிட்டேன்

உயிர் மட்டும் பிரியவில்லை!

வெள்ளி, 27 மே, 2011

காதல் வலி!




வார்த்தைகளால்


அணுஅணுவாய் கொல்வதை விட

ஒரேயடியாகக் கொன்றிருக்கலாம்

வலிகளாவது குறைந்திருக்கும்!



காதலிக்கிறேன் என்று கூறி

நீ என்னை வெறுத்துக்கொண்டிருக்கிறாய்

பாசமாய் இருப்பதாய் நினைத்து

நெருப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறாய்!



அறிந்துதான் செய்கிறாயா

அல்ல அறியாமல் செய்கிறாயா?

ஒன்றும் விளங்கவில்லை

மன வலிகள் குறையவில்லை!



காதல் என்பது தவறா

பாசம் வைத்தது பிழையா

உரிமைக் கொண்டது குற்றமா

பூமியில் பிறந்ததே பாவமா?



கண்ணீரைக் கொட்டித்தான்

காதலை வளர்க்க வேண்டுமா?

வலிகளைத் தாங்கித்தான்

ஒன்று சேர வேண்டுமா?



ஒவ்வொரு வார்த்தையும்

ஒரு துளி விஷம்

கொஞ்சம் கொஞ்சமாய்

உயிரைக் குடிக்கிறது!



நொந்துப் போன இதயத்தை

மேலும் மேலும் வதைக்காதே

உடைந்துப் போன மனதை

துகள்களாக்காதே!



அறியாமல் செய்த பிழைக்கு

ஆயிரம் தண்டனையா?

தெரியாமல் செய்த தவற்றுக்கு

தூக்குத் தண்டனையா?



நினைக்காத நாளில்லை

எண்ணாத பொழுதில்லை

நன்றாக ‘நடிக்கிறேன்’ என்று

சுலபமாய் கூறிவிட்டாய்!



கண்ட கனவுகள்

கலைந்து விட்டதா?

எல்லையில்லா கற்பனைகள்

மடிந்து விட்டதா?



உறுதியான காதலென்றேன்

உடைந்து விட்டதா?

அழிவில்லாத காதலென்றேன்

இறந்து விட்டதா?



கவிதையாகப் பேசினோமே

கசந்து விட்டதா?

சக்கரையாய் இனித்த காதல்

சலித்து விட்டதா?



ஏன் சொன்னாய் உயிரே

என்னை நம்பவில்லையா?

நான் உன்னை விரும்புவது

உண்மையில்லையா?







செவ்வாய், 24 மே, 2011

நான் செல்கிறேன்...







பிடிக்கவில்லை என்றாய்

வெறுத்துவிட்டது என்றாய்

பாசம் குறைந்தது என்றாய்

அனைத்தும் பொறுத்தேன்!



என்னைவிட இன்னொருத்தியை

ஆயிரம் மடங்கு பிடிக்கும் என்றாய்

உறவினை யாருக்கும் சொல்லாமல்

இரகசியம் காக்க வேண்டும் என்றாய்

உள்ளுக்குள் புழுங்கினேன்!



கதைக்கும் நேரம் சுருங்கியது

உறவின் நெருக்கம் குறைந்தது

நெஞ்சில் சோகம் குவிந்தது

வேதனை தினமும் மிகுந்தது!



எப்படி புரிய வைப்பேன்?

என் நிலையை எப்படி விளக்கிச் சொல்வேன்

“இன்னொருவன் காதல் என்றான்

‘ஓம்’ என்று சொல்லட்டா?”

உன்னிடமே நான் கேட்டேன்



எதற்காக கேட்டேனென்று

துளிகூட நினைக்காமல்

வாய்க்கு வந்தபடி வைய்துவிட்டு

விலகி நீ சென்றுவிட்டாய்!



அவனையே கட்டிக்கொள்

மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிடு

ஏமாற்றத்திற்கு நன்றி என்றாய்!



புரியாமல் கதைக்காதீர்

வெறுப்பேற்றவே சொன்னேன் நான்

தவறாக நினைக்க வேண்டாம்

நீயின்றி நானில்லை

எம்மை நீ வெறுக்க வேண்டாம்!



கையளவு இதயத்தில்

உம்மை அன்றி யாருமில்லை

உன் நினைவின்றி தூக்கமில்லை

உன் அன்பின்றி வாழ்க்கை இல்லை

அது ஏன் உனக்குப் புரியவில்லை?



மண்டியிட்டேன்

மன்றாடினேன்

மன்னிப்புக் கேட்டேன்…

தொந்தரவு செய்யாதே

நம்பிக்கை இழந்துவிட்டேன்

நீ எனக்கு வேண்டாம் என்றாய்!



தலை சுழன்றது

இரத்தமும் சதையும் கொண்ட இதயம்

துடியாய் துடித்து வலியால் மடிந்தது

நான் சொன்ன ஒரு வார்த்தை

என்னையே கொல்லும் ஆயுதமானது!



கதறியழுதேன் ஊமையாக

அழுது புரண்டேன் பைத்தியமாக

என் கதறல் உன் காதுகளுக்கு கேட்கவில்லை

என் கண்ணீர் உன் மனதினை கரைக்கவில்லை

உன்னைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை!



உறவென்று சொல்லவும்

உரிமையுடன் வாழவும்

உகந்த துணைவன்

நீயென்று எண்ணினேன்!



என் எண்ணங்கள் சிதைந்தன

கனவுகள் கலைந்தன

எதிர்காலம் கேள்விக்குறியானது

என் மணவாழ்க்கை மண்ணில் புதைந்தது!



மறக்க நினைத்து மரத்துப் போகிறேன்

உன்னை நினைக்க மறந்தால்

மரித்துப் போகிறேன்…



வாழ்க்கைத் துணையாய்

நீ வந்து சேர்ந்தாய்-இனி

என் தனிமையின் துணையாய்

யார் வந்துப் போவார்?



என் கவிதையைப் புலம்பல் என்பாய்

புலம்பித்தான் தீர்க்கின்றேன்

கேட்பதற்கு நீ இருந்தால்

நான் எதற்கு எழுதுகின்றேன்?



வேண்டாம் என்று சொன்ன உன்னை

தொந்தரவு செய்ய மாட்டேன்

என் உயிர் இருக்கும் காலம் மட்டும்

உன்னை நான் வெறுக்க மாட்டேன்!



நானாகச் செல்லவில்லை

உனக்காகச் செல்கிறேன்

நீ வெறுத்ததினால் செல்கிறேன்

நீ விரட்டியதால் செல்கிறேன்

உயிரற்ற என் இதயத்தை

உன்னிடம் விட்டுச் செல்கிறேன்!



சென்று கொண்டே இருக்கிறேன்

வெகு தூரம் செல்கிறேன்

தனியாகச் செல்கிறேன்

நடைப்பிணமாய் செல்கிறேன்

நான் செல்கிறேன் –உன்னை

விட்டுச் செல்கிறேன்…





சனி, 21 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 5



தொடர்ச்சி...

ஒட்டுமொத்த ஒப்பீடு

‘ஆத்துக்குப் போகணும்’ மற்றும் ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைச் சூழலையே அனுபவித்து வருகின்றனர். சிறிய மாற்றம் என்னவென்றால் ‘ஆத்துக்குப் போகணும்’ நாவல் மேல் சாதிப் பெண்களைப் பற்றியும், ‘ஆறுமுகம்’ நாவல் தலித் பெண்களைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ளன. இவ்விடம் காயத்ரி எவ்வாறு தன் மேலதிகாரியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு ‘அட்ஜஸ்’ பண்ண நேரிடுகிறதோ அதே போல் வசந்தாவும் தனபாக்கியமும் தங்கள் மேலதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரே மாதிரியான தொல்லைகளையே எதிர்நோக்க நேரிகிறது. பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர் என்பதை இவ்விரு நாவல்களும் ஒப்புக்கொள்கின்றன.



அதனைத் தவிர்த்து, பெண்கள் ஆண்களுக்குப் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் வாழ்க்கையையே இவ்விரு நாவல்களும் காட்டுகின்றன. காயத்ரி தன் விருப்பு வெறுப்புகளையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு கணவனுக்காக வாழ்கிறான். ரமாவும் கணவனின் ஆசைகளை நிறைவேற்றும் நிர்ப்பந்தத்தில் நிற்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் செக்குமேட்டுப் பெண்கள் ஆண்களின் காமப்பசியைப் போக்கி தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்கின்றனர். இவ்வாறாக இரு நாவல்களிலும் பெண்கள் அடக்குமுறையில் சிக்கித் தவிப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது. பெண்கள் சாதி அடிப்படையிலும் தீங்கிழைக்கப்படுகின்றனர். தலித்தாக பிறந்ததனால் தங்கள் தாயார் செய்த அதே தொழிலையே செய்யும் நிலைக்கு அபிதா தள்ளப்படுகிறாள். இவர்களுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்கள் கூட இவர்களின் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் இவர்களை உதாசீணப்படுத்துவது வேதனைக்குரிய உண்மை.



முடிவுரை

பொருளாதாரமே ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்பது இவ்விரு நாவல்களிலிருந்தும் அறியப்பட்ட மறுக்க முடியாத உண்மை. சமுதாயம் பெண் என்பவளின் மீது குடும்பத்தலைவி என்ற சுமையை ஏற்றி வைக்கின்றது. ஒரு குடும்பத் தலைவிக்கு இதுதான் அழகு, இதைத்தான் அவள் செய்ய வேண்டும் என்று இலக்கணமும் வகுத்துக் கொடுக்கிறது. தந்தை, அண்ணன், தம்பி, கணவன், மகன் என்ற அதிகார அமைப்பினாலும், ஆணின் சுயநலம் காரணமாகவும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இறுதியாக, பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இவ்வாறாக பெண் பல அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றாள் என்பதனையே ‘ஆத்துக்குப் போகணும்’, ‘ஆறுமுகம்’ ஆகிய இரு நாவல்களும் உணர்த்துகின்றன.


*** முற்றும் ***

ஞாயிறு, 8 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 4




...தொடர்ச்சி

பெண்ணே பெண்ணுக்கு எதிரியாதல்

“ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவாலில் ரமாவின் மாமியார் ரமா படித்தப் பெண்ணாக இருந்த போதிலும் அவளைச் சராசரி மருமகளாகவே பார்க்கின்றார். நமது இந்தியச் சமுதாயத்தில் பெண் என்பவள் காலை எழுந்தவுடன் கோலம் போட வேண்டும், பெருநாள் காலங்களில் பலகாரங்கள் செய்துக் கொடுக்க வேண்டும், மாமனார் மாமியாருக்குச் சமையல் செய்து போட வேண்டும் என்று பல எழுதப்படாத சட்டங்களைப் பெண்கள் மீது திணிக்கின்றனர். இதனையே துரைசாமியும் அவனது பெற்றோர்களும் ரமாவிடம் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றையக் காலகட்டத்தில் பெண்களும் ஆணுக்குச் சமமாக வேலை செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் பெண்களுக்கு இவ்வகையான எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய இயலாமல் போய்விடுகிறது. இதனைச் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்துக் குறைக்கூறக் கூடாது. ரமாவின் மாமியார் ரமா எது செய்தாலும் அதில் குற்றம் காண்கிறார். அவள் எடுத்துக் கொடுத்தத் துணிகளையும் கொடுத்தனுப்பிய பொருள்களையும் காயத்ரியின் முன்பாகவே தூக்கியெறிகிறார். ரமாவை மிகவும் இழிவாகவும் பேசிகின்றார். ஒரு பெண்ணே மற்றொருப் பெண்ணைப் புரிந்துக்கொள்ளாமல் இழிவு படுத்தும் நிலை இவ்விடம் காட்டப்படுகிறது. காயத்ரி கூட தன் மருமகளைப் புரிந்துக்கொள்ள முயலவில்லை. அதற்கு மாறாக அவளிடம் காணப்படும் குறைகளையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இதன் மூலம் மரபு வழி வந்த சமூகம் இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பாக்கியம் கூட செக்குமேட்டில் உள்ள பெண்களை இழிவாகவே பார்க்கிறாள். தான் மேல் சாதிப்பெண் என்ற திமிர் அவளிடம் உள்ளதை பல இடங்களில் நம்மால் உணர முடிகின்றது. “சீன்னு நாறிப்போயி சீலப்பேணு குத்தறவ ளெல்லாம் வந்து எங்கிட்டப் பேசுறதா?” என்ற வரிகள் பாக்கியம் செக்குமேட்டுப் பெண்கள் மீது வைத்துள்ள பார்வைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி செக்குமேட்டில் உள்ள பெண்களே தங்களை ஒருவர்க்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வதும் இழிவுப்படுத்துவதும் அப்பெண்கள் ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை என்பதனைக் காட்டுகிறது. ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணைப் புரிந்துக்கொண்டு அவளுக்கு அங்கீகாரம் கொடுக்க முன் வராத போது ஆண் வர்க்கத்திடம் அதனை எதிர்ப்பாப்பது வேடிக்கையல்லவா?

                                                                                                                                          தொடரும்...


செவ்வாய், 3 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 3



...தொடர்ச்சி

அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்ணை அடிமையாக்குதல்

‘ஆத்துக்குப் போகணும்’ நாவலில் வரும் காயத்ரி என்ற பாத்திரம் தனது மேலதிகாரியிடம் அடங்கி ஒத்துப் போகவேண்டிய சூழலைக் காண்பிக்கின்றது. பெண்கள் எங்குச் சென்றாலும் அவர்களுக்கு ஆண்களால் தொல்களே மிஞ்சுகின்றன. வேலைக்குச் செல்லும் இடத்தில் மேலதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வண்ணம் நடந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தொழிலில் முன்னேற முடியாது; பதவியுயர்வு கிடைக்காது; வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். காயத்ரியின் மேலதிகாரி சனிக்கிழமை அவளை வெளியே அழைக்கிறார். காயத்ரியின் மனம் இடம் தராவிட்டாலும் அதிகார ஆண் வர்கத்தைப் பகைக்க முடியாத காரணத்தால் சாக்குப் போக்குச் சொல்லி நழுவப் பார்க்கிறாள். தனக்கு இது பிடிக்கவில்லை என்று நேரடியாகச் சொல்ல முடியாத சூழலில் அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் ஜெரி ஆல்பட் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனபாக்கியத்தை அடைகிறான். வசந்தாவும் அட்டை கம்பெனி மெனேஜரிடம் எல்லா வகையிலும் குறிப்பாக உடல் பசியைத் தீர்ப்பது போன்ற காரியங்களுக்கும் ஒத்துப் போவதனால் மட்டுமே நூறு ரூபாய் சம்பள உயர்வு பெறுகிறாள். சமையல் தொழில் செய்யும் குப்புசாமி கூட தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறான். பெண்களைச் சிறிதும் மதிக்காமல் நாயைப் போல் நடத்துகிறான். அவனது ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டுக் கிடைக்கின்ற கூலிக்காக வாய் மூடி வேலை செய்கின்ற அவல நிலையையும் நாவலில் காண்கிறோம்.



அதுமட்டுமின்றி நர்ஸ் புஷ்பமேரியும் ஒரு டாக்டரால் ஏமாற்றப்படுகிறாள். தனக்கு மேலே வேலை செய்யும் டாக்டர் என்ற பயமும் அவளை டாக்டரின் காமப்பசிக்கு இணங்கிப் போகச் செய்திருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. மருத்துவமனைக்கு அரும் செக்குமேட்டுப் பெண்களை கிழட்டு டாக்டர்கள் கில்லுவதும், உரசுவதும், கண்ணடிப்பதும் அவர்களின் கேவலமான அதிகாரத்துவ புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினர் கூட செக்குமேட்டுப் பெண்கள் விபச்சாரிகள் என்பதால் மிருகத்திலும் கீழாக நடத்துகின்றனர். பெண் என்றும் பாராமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடித்துத் துன்புறுத்துவதை நாவலின் வழி காண முடிகின்றது. இதன் மூல அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.


...தொடரும்