ஞாயிறு, 8 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 4




...தொடர்ச்சி

பெண்ணே பெண்ணுக்கு எதிரியாதல்

“ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவாலில் ரமாவின் மாமியார் ரமா படித்தப் பெண்ணாக இருந்த போதிலும் அவளைச் சராசரி மருமகளாகவே பார்க்கின்றார். நமது இந்தியச் சமுதாயத்தில் பெண் என்பவள் காலை எழுந்தவுடன் கோலம் போட வேண்டும், பெருநாள் காலங்களில் பலகாரங்கள் செய்துக் கொடுக்க வேண்டும், மாமனார் மாமியாருக்குச் சமையல் செய்து போட வேண்டும் என்று பல எழுதப்படாத சட்டங்களைப் பெண்கள் மீது திணிக்கின்றனர். இதனையே துரைசாமியும் அவனது பெற்றோர்களும் ரமாவிடம் எதிர்ப்பார்க்கின்றனர். இன்றையக் காலகட்டத்தில் பெண்களும் ஆணுக்குச் சமமாக வேலை செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் பெண்களுக்கு இவ்வகையான எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய இயலாமல் போய்விடுகிறது. இதனைச் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்துக் குறைக்கூறக் கூடாது. ரமாவின் மாமியார் ரமா எது செய்தாலும் அதில் குற்றம் காண்கிறார். அவள் எடுத்துக் கொடுத்தத் துணிகளையும் கொடுத்தனுப்பிய பொருள்களையும் காயத்ரியின் முன்பாகவே தூக்கியெறிகிறார். ரமாவை மிகவும் இழிவாகவும் பேசிகின்றார். ஒரு பெண்ணே மற்றொருப் பெண்ணைப் புரிந்துக்கொள்ளாமல் இழிவு படுத்தும் நிலை இவ்விடம் காட்டப்படுகிறது. காயத்ரி கூட தன் மருமகளைப் புரிந்துக்கொள்ள முயலவில்லை. அதற்கு மாறாக அவளிடம் காணப்படும் குறைகளையே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இதன் மூலம் மரபு வழி வந்த சமூகம் இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பாக்கியம் கூட செக்குமேட்டில் உள்ள பெண்களை இழிவாகவே பார்க்கிறாள். தான் மேல் சாதிப்பெண் என்ற திமிர் அவளிடம் உள்ளதை பல இடங்களில் நம்மால் உணர முடிகின்றது. “சீன்னு நாறிப்போயி சீலப்பேணு குத்தறவ ளெல்லாம் வந்து எங்கிட்டப் பேசுறதா?” என்ற வரிகள் பாக்கியம் செக்குமேட்டுப் பெண்கள் மீது வைத்துள்ள பார்வைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி செக்குமேட்டில் உள்ள பெண்களே தங்களை ஒருவர்க்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்வதும் இழிவுப்படுத்துவதும் அப்பெண்கள் ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை என்பதனைக் காட்டுகிறது. ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணைப் புரிந்துக்கொண்டு அவளுக்கு அங்கீகாரம் கொடுக்க முன் வராத போது ஆண் வர்க்கத்திடம் அதனை எதிர்ப்பாப்பது வேடிக்கையல்லவா?

                                                                                                                                          தொடரும்...


கருத்துகள் இல்லை: