வெள்ளி, 23 டிசம்பர், 2011

காதல் துரோகி!




நடந்தது நிஜம்தானா
நான் கண்ட கனவா?
காதல் கொண்ட நாயகன்
காதல் செய்வதையே
பொழுதுபோக்காய் கொண்டான்
அவன் காதல் செய்யவில்லை
வெறும் காமம் கொண்டான்!

காதல் என்று சொல்லி
கன்னியர் வாழ்வை அழித்தான்
இருசித்துப் பார்த்தப் பிறகு
தூக்கி எறிந்தான்!

வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் –அவன்
வருகைக்காக…

போனவன் வரவே இல்லை
கலவரம் கொண்டேன்
கண்ணீர் வடித்தேன் –அவனோ
சல்லாபக் கட்டிலில்
வேறொருத்தியுடன்!

தொட்ட இடம்
எரிகிறதே –தீயாய்
என்னைச் சுடுகிறதே!
கொண்ட காதல் எமனாய் மாறி
கழுத்தை இறுக்கி நேரிக்கிறதே
அவன் தந்த முத்தம் முள்ளாய் மாறி
நெஞ்சைக் குத்தி வதைக்கிறதே!

அன்பு…
அதற்காகத்தானே ஏங்கினேன்
காதலன் என்று பாராமல்
கணவனைப் போல் நடத்தினேன்

காலம் மாறிவிட்டதா?
கலிகாலம் வந்துவிட்டதா?
காதல் எனும் தெய்வத்திற்கு
கேடு வந்துவிட்டதா? –இல்லை
காதல் என்பது காமமாய்
மாறி போய் விட்டதா?

காமம் கொண்ட மிருகமே
மனதைக் கொன்ற அரக்கனே
உன் தாயும் ஒரு பெண்தான்
பெண்ணை மதிக்க மறந்தாயோ
கண்ணை இழந்து நின்றாயோ?

மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!

பெறுவாய் ஒரு குழந்தை
அது பெண்ணாய் வந்து பிறக்கும்
உயிராய் நீ வளர்ப்பாய் –அவள்
வாழ்வை ஒருவன் அழிப்பான்!

காதல் துரோகியே –நீ
கண்ணிழந்து குருடாவாய்
இனிக்க வார்த்தை பேசிய நாவு
இழுத்துக்கொண்டுப் போகும்
தொட்ட உன் கரங்கள்
செயலிழந்து நிற்கும்!
எட்டிப் பார்ப்பதற்கு –உன்னை
ஈ கூட நெருங்காது!

நாசமாய் போகுமடா
உன் ஒழுங்கற்ற வாழ்வு
நீ செய்த வினைகள் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும்
துடிப்பாய், நீ அழுவாய்
தற்கொலை செய்ய முனைவாய்!

நிம்மதியை இழப்பாய்
பொருளெல்லாம் கரைப்பாய்
பிச்சை ஏற்றுத் திரிவாய்
தெரு நாயைப் போல்
மடிவாய்!

செவ்வாய், 13 டிசம்பர், 2011

எம் தவற்றில் உன் பங்கு?



உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?

விடுதலைக்காக வீதிவரை
தமிழகம் சென்று உழைத்தவள் நான்
களத்தின் நின்றதாய் பொய் சொல்லி
பிச்சைக் கேட்டுத் தின்பவன் நீ!

காமப் பசிக்கு காதலை இரையாக்கி
காசுப் பணத்திற்கு இயக்கத்தைக் கைக்காட்டி
புறம்போக்கு நாய்களின் கால்களை நக்கி
பிணம் தின்னும் நீயும் புலியா?

துரோகி நாய் உன்னை
ஏற்பதற்கோர் குழு இருக்க
வீரப் பெண் எம்மை
புறக்கணிக்க யார் உண்டு?

தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?

புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!

(வன்னிமைந்தன் என்ற நாதாரியின் கிறுக்கலுக்கு எமது பதில். உன்னைப் போல் புனைப்பெயரில் எழுத நான் கோழை அல்ல. தைரியம் இருப்பின் நேருக்கு நேர் மோது இனத் துரோகியே!)


வெள்ளி, 2 டிசம்பர், 2011

பினாங்கு, மலேசியாவில் மாவீரர் தினம்




கடந்த 27 நவம்பர் 2011 அன்று உலகில் பல இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. வழமை போல பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஐயா தலைமையில் பட்டர்வெர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கேணல் சங்கரின் மரணத்தைத் தழுவிய நாளையே மாவீரர் தினமாக தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அறிவித்திருந்தார். இருப்பினும், 27-ஆம் திகதி நிகழ்வினை நடத்த இடம் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி 28-ஆம் திகதி, திங்கட்கிழமை இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 2.00 மணிக்கு நிறைவுற்றது.

மக்கள் ஓசையின் நிருபரும், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவருமான தோழர் சே.குணாளன் நிகழ்வினை வழிநடத்திச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஈழப் பண் இசைக்கப்பட்டு முறையே நிகழ்ச்சித் தொடங்கியது. சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் பினாங்குத் துணை முதல்வர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகன், வழக்குரைஞர் மங்களேசுவரி, சமூக நல இயக்கத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், டத்தோ ஆர். அருணாசலம், கவியழகர் க. பெருமாள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் ஈழத்து ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அவர்கள் மாவீரர்களை நினைவுக் கூரும் வண்ணம் அகல் விளக்கினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரமுகர்கள் குத்துவிளக்கினை ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி போரில் உயிர் நீத்த மாவீரர்களை வணங்கினர்.

கவிச்சித்தர் பெ.கோ.மலையரசன் வாசித்த விடுதலைப் போராட்டம் குறித்தான கவிதை அனைவரது மனதினையும் கவர்ந்தது. இவர் ‘பாய் புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தின அறிக்கையை பேராசிரியரின் அரசியல் – ஊடக பிரிவு செயலாளர் திரு. சத்தீஸ் முனியாண்டி வாசித்தார். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகனின் திறப்புரையைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் தமக்கும் தலைவர் மேதகு பிரபாகரனுக்கும் இருந்த உறவை வந்திருந்தோரிடம் பகிர்ந்துக் கொண்டார். போரின் இறுதிக் கட்டத்தின் போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை தம்மால் எப்போதுமே மறக்க முடியாது என்று ஆக்ரோஷமாக முழங்கினார். தாம் பிரபாகரனைத் தம்பி என்று அழைத்த போதிலும், அவரையே தமது முதன்மை தலைவராக வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“பிரபாகரன், ஆயிரங்காலத்துப் பயிர். கடவுளுக்கு நிகரானவர். இப்படியொரு மனிதர் இந்த உலகிற்கு இனி எப்போது கிடைப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் பிரபாகரனுக்கு ஈடாகமாட்டார்கள்,” என அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவர் அவையில் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டார். “கலைஞர் தங்களுக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என அவரே தன் வாயால் என்னிடம் கூறினார். நம் நாட்டு ‘தலைவர்’ சாமிவேலுவைப் பற்றிக் கேட்டேன். அவர் கொடுத்ததை திருப்பிக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பிரபாகரன் சொன்னார்,” எனவும் அவர் தெரிவித்தார்.

போரில் இறுதிக்கட்டத்தின் போது, கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் தம்மைத் தொடர்புக் கொண்டு தலைவர் வீரமரணம் எய்துவிட்டார் என்று சொன்னதாகவும், அச்செய்தி உண்மையாக இருந்தால் விடுதலைப் புலிகளே அதனை அறிவிக்கட்டும் என தாம் அந்த இனத் துரோகியிடம் கூறியதாக பேராசிரியர் குறிப்பிட்டார். “தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராட வேண்டும். போராட்டங்கள் பலவகைப் படும். ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவனின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அன்றைய சூழலில் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது போராட்டத்தின் சூழல் மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல நாமும் நம்மை மாற்றிக்கொண்டு போராட வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டணி ‘புத்ரா ஜெயாவை’ (மத்திய அரசை) கைப்பற்றுமானால், ஈழத்திற்குத் தகுந்த அங்கீகாரத்தினை தாங்கள் வழங்குவோம் எனவும் பேராசிரியர் வாக்குறுதியளித்தார். “சீமான் தலைமையில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டில் கலந்துக்கொண்டு நான் ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். நான் மேடையில் பேசுவதற்கு முன்பு, பயண விசாவில் வந்திருப்பதால் மேடையில் எதுவும் பேசக்கூடாது என காவல் துறையினர் என்னை எச்சரித்தனர். இந்தியா, ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். அத்தனைப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த இராமசாமி பேசுவதால் என்ன வந்துவிடப் போகிறது? கைது செய்தால் செய்துக் கொள்ளுங்கள், நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டேன். சுமார் 2000 காவல் துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. அன்று நான் ஈழதிற்குக் குரல் கொடுத்ததால் தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இன்று வரையில் அந்த தடை இன்னும் அகற்றப்படவில்லை,” என தெரிவித்தார்.

மேலும், தாம் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக என்றுமே குரல் கொடுப்பேன் எனவும் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். அவரது உரையில் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் மகுடிக்குக் கண்டுண்ட பாம்பு போல் மயங்கிக் கிடந்தனர். பேராசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு, மலேசிய வலைப்பதிவு எழுத்தாளர் து. பவனேஸ்வரி, புலிகளின் ஊடகப் பிரிவினைச் சார்ந்த இசைப்பிரியாவைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார். உருக்கமான அக்கவிதை வந்திருந்தோர் ஒரு சிலரது கண்களில் நீரை வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சே.குணாளன் தொகுப்புரை வழங்கினார். மாவீரர் தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிப்பிற்குரிய திரு. வைகோ வெளியிட்ட ஈழம் தொடர்பான குறுந்தட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மாலை மணி 2.00-க்கு மாவீரர் தின கூட்டம் இனிதே நிறைவுற்றது. மலேசியாவில் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்துடன் சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது என இவ்விடம் அறியத் தருகிறோம். அதுமட்டுமின்றி தமிழீழத் தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளையின் பிறந்த தினமும் நாட்டில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. நம்புங்கள், தமிழீழம் வெகு தொலையில் இல்லை!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

வியாழன், 1 டிசம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 5)




பேருந்து நிறுத்தத்திலிருந்து மூவரும் நடந்தே அருகாமையில் அமைந்திருந்த கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் வீடு சென்ற வேளையில் அண்ணி வெளியே சென்றிருந்தார். அண்ணாவின் மச்சினன் மகேந்திரனும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அவரது இரண்டு குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை எம்முடன் வெகு சீக்கிரமே ஒட்டிக்கொண்டாள். பெயர் மதிவதனி! “எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே,” என நான் சொல்ல, “உன்னையெல்லாம் எப்படி போராளியாக்குவது? தலைவரின் மனைவி பெயரைக் கூட மறந்துவிட்டாயே?” என அண்ணா ஏமாற்றத்துடன் கூறினார்.

பையனின் பெயர் வைகறையாளன். ஏற்கனவே அவனைப் பற்றி அண்ணாவின் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்தில் அவனும் எம்முடன் சேர்ந்துக் கொண்டான். நான் அடிக்கடி அழைப்பேசியில் சண்டைப் போடும் வாசன் நேரிலும் விட்டு வைக்கவில்லை. எலியும் பூனையும் போல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவின் நண்பரான பாண்டியன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவரும் அவ்விடம் இருந்தார்.

மகேந்திரன் ஒரு சொம்பில் எனக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுக்க, நன்றி சொல்லி அதனைப் பெற்றுக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ வெளியே சென்றிருந்த அண்ணியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். என்னை விட 2 அல்லது 3 வயதுதான் மூத்தவராக இருக்க வேண்டும். கறுப்பென்றாலும் கஸ்தூரி என்று சொல்வார்களே அதற்கேற்றார் போல கலையான, அழகான முகம். அண்ணி வந்த சில நிமிடங்களிலேயே வேலை நிமித்தமாக வாசனும் அண்ணாவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டனர். பாண்டியன் மட்டும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார். வந்ததும் வராததுமாக அண்ணி அவசர அவசரமாக சமையல் வேலையில் இறங்கினார்.

அதற்கு முன்பாக தான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டி எனது கூந்தலில் வைத்துவிட்டார். இங்கே விழாக் காலங்களிலும், சிறப்பு தினங்களில் மட்டுமே பூ வைப்பது வழக்கம் என்பதால் அது சற்று வித்தியாசமாகப் பட்டது. இருந்தும் சேலையும், பூவும் தமிழர் கலாச்சாரம் என்பதால் எனக்குப் பிடித்திருந்தது. பழங்காலத்தில் தேங்காய் திருவப் பயன்படுத்தும் மணக்கட்டையுடன் கத்தி பொருந்திய ஒரு பலகையை அண்ணி எடுத்து வந்து வரவேற்பறையில் ஓரத்தில் போட்டார். அதனை நாங்கள் எங்கள் நாட்டில் ‘தேங்காய்த் திருவி’ என்று அழைப்போம். நான் சிறு வயதாக இருக்கும் போது எனது பாட்டி அதில்தான் வீட்டில் சொந்தமாகத் தேங்காய்த் திருவுவார். இப்போதெல்லாம் இதனைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாட்டி வீட்டில் இருந்த தேங்காய் திருவி கூட எங்கேயோ காணாமல் போய்விட்டது.

அண்ணி அதனை எடுத்துப் போட்டு, அதிலேயே பரக்பரக்கென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். சாதாரண கத்தியும், கட்டையும் கொடுத்தாலே நான் நின்று நிதானமாகத்தான் வெட்டுவேன். இவர் இப்படி தேங்காய்த் திருவியில் விறுவிறுவென நறுக்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் கொடுத்திருந்தால், ஒன்று எனது விரலை அறுத்துக் கொண்டிருப்பேன் இல்லையேல் அவை அனைத்தையும் நறுக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்திருப்பேன்.

குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டு அண்ணியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்விசிறி, தொலைக்காட்சி என அனைத்தும் நின்றுவிட்டது. நான் குழப்பத்துடன் அண்ணியைப் பார்த்தேன். “மின்வெட்டு” என்றார்; புரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என இதற்கு முன்பே தோழர்கள் சொல்லியிருந்தார்கள். இன்று அதனை நேரில் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. மதியம் 1 மணி இருக்கும். உச்சி வெயில் உச்சந்தலையைக் காய வைக்கும் நேரம். மின்விசிறி கூட இல்லாததால் வியர்வையிலேயே குளித்துவிட்டேன்.

இதே நிலை மலேசியாவில் ஏற்பட்டிருந்தால் ஆளும் கட்சிக்கு நேரக்கூடிய விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தேன். தமிழ்நாட்டு மக்கள் அதனை அதிகம் பெரிதுப்படுத்தவில்லை போலும் என எண்ணிக்கொண்டேன். 1 மணி நேரம் சென்ற பிறகுதான் மின்சாரம் மீண்டும் வருமாம். சரி, புழுக்கத்தில் புழங்க பழக்கப்படுத்திக் கொள்வோம் என அமைதியாய் இருந்தேன். பாண்டியனிடம் முட்டை வாங்கி வரும்படி கூறி, மகேந்திரனையும் உடன் அனுப்பினார் அண்ணி. மதிவதனி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள். வைகறையாளன் மட்டும் என்னுடனேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கீரா அண்ணாவும், வாசனும் வந்துச் சேர்ந்தனர். வந்த உடனேயே எனக்கும் வாசனுக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இம்முறை குழந்தைகளை விட்டு ஒருவரை ஒருவர் அடிக்க வைத்து திருப்தி பட்டுக்கொண்டோம். குழந்தைகளை யாரும் திருப்பி அடிக்க முடியாதல்லவா? முதலில் வாசன் பக்கம் இருந்த வைகறையாளன் பின்பு என் கட்சியில் சேர்ந்துவிட்டான். “டேய், இப்பவே பொண்ணுக்காக என்னை அடிக்கிறியே?” என்று வாசன் அந்தச் சிறுவனைக் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மதிவதனி மட்டும் சிறிது நேரம் என் பக்கமும், பின்பு வாசன் பக்கமும் கட்சி மாறிக் கொண்டிருந்தாள். அதற்குள் முட்டை வாங்கச் சென்றவர்களும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

கீரா அண்ணா எனக்காக அரைவேக்காடு முட்டை தன் கையால் போட்டுத் தந்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். கோழிக்கறி, இரசம், அரைவேக்காடு முட்டை என சமையல் பிரமாதமாய் இருந்தது. வாசன் அனைவருக்கும் தட்டில் சோறு போட்டு வைக்க, அண்ணன் முட்டை பொறிப்பதில் தீவிரமாக இருந்தார். அன்று மதியம் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஒன்றாக மதிய உணவு உட்கொண்டோம். கறி (குழம்பு) வேண்டுமென்று நான் சொல்ல, அண்ணி கோழி இறைச்சித் துண்டுகளை அள்ளி என தட்டில் வைத்தார். “இல்லை இல்லை, எனக்குக் கறி (குழம்பு) வேண்டும்,” என மீண்டும் சொல்ல, மறுபடியும் அவர் இறைச்சித் துண்டுகளை கரண்டியில் அல்ல, நான் குழம்பிப்போனேன். பின்னர்தான் “கறி இல்லை, குழம்பைத்தான் தங்கை கறி என்கிறாள்,” என கீரா அண்ணன் தெளிவுப்படுத்தினார்.

அப்போதுதான் எனது தவற்றையும் நான் உணர்ந்தேன். ஆம், கறி என்றால் இறைச்சியைத் தானே குறிக்கும்? குழம்பு என்பதுதானே சரியானச் சொல்? இத்தனைக் காலமும் நானும் என் நாட்டு மக்களும் இந்தச் சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகிறோமே என வெட்கமாகவும் இருந்தது. சரி, இனி திருத்திக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதிக் கொண்டேன். கீரா அண்ணன் அரைவேக்காடு முட்டையை நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என பார்க்க ஆவலாக இருந்தார். அதனை கீழே ஒழுகாமல் ஒரேயடியாக வாயில் போட்டு முழுங்க வேண்டும். எனக்கு அந்த அளவிற்குத் திறமை கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மதிவதனி அவளுடைய முட்டையைச் சாப்பிட்டுவிட்டு வேறு யாரிடம் முட்டை இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருந்தாள்.

சாப்பிடத் தெரியாமல் மற்றவரின் கேலிக்கு ஆளாவதை விட அதனைச் சாப்பிடாமல் இருந்துவிடலாம் எனத் தோன்றியது. எனவே, அண்ணன் பொறித்த முட்டையை மதிவதனியிடம் கொடுத்துவிட்டேன். ஆசையாய் பொறித்த முட்டையை நான் சாப்பிடவில்லை என அண்ணன் சற்று ஏமாற்றமடைந்தார். இன்னொரு நாள் நிச்சயம் சாப்பிடுகிறேன் எனச் சொல்லி தப்பித்துக் கொண்டேன். கோழிக் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டு எழும்பும் போது, “என்ன அதற்குள் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சம் சோறு போட்டு இரசம் ஊற்றிச் சாப்பிடு,” என அண்ணா சொல்லவும் எனக்குத் தலைச் சுற்றிவிட்டது. உண்மையிலேயே எனது வயிற்றில் இடமில்லை. போதும் என்று சொல்லியும் விடவில்லை. சரியென்று அவர்கள் திருப்திக்காக இன்னும் கொஞ்சம் சோறும், இரசமும் பிணைந்துச் சாப்பிட்டு முடித்தேன்.

நாங்கள் அனைவரும் உண்டு முடித்த வேளையில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. இவர்கள் எப்படித்தான் இந்தப் புழுக்கத்தையும் மின்வெட்டையும் சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் அருண்ஷோரி அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். இதற்கு முன் தொலைப்பேசியிலும், இணையத்திலும் பேசியிருந்தாலும் இன்றுதான் நாங்கள் நேரில் சந்திக்கிறோம். மிகவும் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் இருந்தார். ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ சவரம் செய்யாத முகம். தாறுமாறாக வளர்ந்திருந்த தாடி முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அந்த கறுப்பு முகத்தில் வெள்ளைக் கண்கள், இரவு வானில் மின்னும் நிலவு போல ஒளிவீசிக் கொண்டிருந்தன. அணிந்திருந்த கறுப்புச் சட்டை அவர் பெரியார் கொள்கையினைப் பின்பற்றுபவர் என்பதனைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.

புதன், 30 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 4)




சுமார் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் அவளுடன் நான் கதைத்திருந்தேன். “சரியம்மா, வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்து எமக்காகக் காத்திருப்பார்கள். நான் விடைப்பெறுகிறேன்,” என்றேன். “ஒரு நிமிடம் அக்கா,” எனச் சொல்லி தனது தோள்பையில் கையை விட்டு எதையோ துளாவினாள். பின்னர், சாக்லெட் ஒன்றை எடுத்து என் கைகளுக்குள் திணித்தாள். நன்றி சொல்லி புன்முறுவல் செய்தேன். அவளுக்குக் கொடுப்பதற்கு எனது கைப்பையில் எதுவுமில்லை. அனைத்துப் பொருட்களும் எனது பெரிய பைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. கண்ணா அண்ணாவும், பாக்கியா அக்காவும் வந்திருக்கிறார்களா என அறிந்துக்கொள்ள நான் வரவேற்பாளர்கள் காத்திருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன். சுமதியும் என்னுடனேயே வந்தாள். அவளது தம்பி தள்ளு வண்டியை எம்மிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்களது அன்பை எம்மால் புறக்கணிக்க முடியவில்லை.

நான் அவர்கள் இருவரிடமும் கதைத்துக் கொண்டே நடந்துக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ எம்மைப் பிடித்து இழுக்கவும், திரும்பிப் பார்த்தேன். சித்தி நின்றுக்கொண்டிருந்தார். பக்கத்தில் கண்ணா அண்ணா. பார்த்த வேகத்தில் சித்தியையும் கட்டி அணைத்தேன். சித்தியுடைய குழந்தைகள் இருவரும் உடன் வந்திருந்தனர். பாக்கியா அக்காவின் அம்மாவும் இம்முறை வந்திருந்தார். என் ஒருத்தியை அழைத்துச் செல்ல இத்தனைப் பேர் வந்திருக்கிறார்களே என இனம் புரியாத மகிழ்ச்சிப் படர்ந்தது. அதே வேளை, திருமண காலத்தில் வேலைகளை விட்டுவிட்டு எம்மை அழைத்துச் செல்வதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்களே என வருத்தமாகவும் இருந்தது. அவர்களுக்கு சுமதியையும் அவளது தம்பியையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். பின்னர் அவர்கள் இருவரும் விடைப்பெற்றுச் சென்றனர்.

கண்ணா அண்ணா எனது பொருட்களை எல்லாம் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிறக்கப் போதும் குழந்தைக்காக நான் வாங்கி வந்திருந்த மெத்தையை எல்லாரும் பார்த்துவிட்டனர். “பவா யாருக்காக மெத்தையெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்?” என சித்தி கேட்க. “அக்கா குழந்தைக்கு,” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். கண்ணன் அண்ணா முகத்தில் வெட்கம் படர்ந்தது. “அக்காவுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று தெரியுமா? நீல நிற மெத்தை வாங்கி வந்திருக்கிறாயே,” என அம்மா கேட்டார். “அதெல்லாம் தெரியாது. நீல நிறம்தான் அழகா இருந்தது,” என்றேன்.

மழை லேசான தூறல் விட ஆரம்பித்தது. அனைவரும் மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். பாக்கியா அக்காவும், கவிதாவும் திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றிருப்பதாக அம்மா கூறினார். போகும் வழியும் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சமைப்பதற்காகக் கோழியும், முட்டைகளும் வாங்கிக் கொண்டனர். கோழி விற்கும் அந்தக் கடையில் ‘சிக்கன், மட்டன் இங்கே கிடைக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. கோழி, ஆடு என்று தமிழில் எழுதாமல் ஏன் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என சற்று வருத்தமாக இருந்தது. தமிழகத்தில் தமிழின் நிலையை நினைத்து நொந்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். சாலையின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாகனங்களும், புகையும், சத்தங்களும் நான் சென்னையில் இருப்பதை அறிவுறுத்துக் கொண்டிருந்தன.

கண்ணா அண்ணாவிடம் எனக்குப் புதிய தொலைப்பேசி எண்கள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சரியென்றார். வீட்டை அடைந்தவுடன் சித்தியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாக்கியா அக்காவும் கவிதாவும் இல்லாததால் சற்று வெறுமையாகத் தோன்றியது. சித்தியிடமும் அம்மாவிடமும் அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் என நொடிக்கொரு தரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்த கவிதாவையும் தாவி அணைத்துக் கொண்டேன். அவள் முகத்தில் திருமண கலை குடிக்கொண்டிருந்தது. “அவர் வந்திருக்கிறார். வெளியே நிற்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். வந்துப் பாருங்கள் அக்கா,” என வெட்கத்தோடு கூறினாள்.

நானும் வெளியே சென்று மாப்பிள்ளையைப் பார்த்து சில நிமிடங்கள் கதைத்துவிட்டு உள்ளே வந்து விட்டேன். அதிகம் கதைக்கவில்லை. என்ன பேசுவதென்று எனக்கே தெரியவில்லை. பயணத்தைப் பற்றியும் திருமண ஏற்பாடுகள் குறித்து மட்டும் மேலோட்டமாக கேட்டு வைத்தேன். மாப்பிள்ளையின் சொந்தக்காரர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவேண்டும் என்று மாப்பிள்ளையுடன் கவிதாவும் சென்றுவிட்டாள். பாக்கியா அக்காவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது. இருப்பினும், கடைகளில் அலைந்துத் திரிந்ததால் சற்று களைத்திருந்தாள். சற்று பெரிதாகத் தெரிந்த அவரது வயிற்றை கை வைத்து மென்மையாகத் தடவிப் பார்த்தேன். அவர் என் கையினை பிடித்து வயிற்றில் அழுத்தி வைத்தார். எமக்கு உடல் சிலிர்த்தது. அக்காவின் மேல் எமக்கிருந்த பாசம் மேலும் அதிகரித்தது. இந்தச் சின்ன உடல் இன்னொரு உயிரை எப்படிச் சுமக்கப்போகிறது என்ற கவலையும் உடன் வந்துச் சேர்ந்தது.

நான் பிறக்கப் போகும் குழந்தைக்காக வாங்கி வந்திருந்த மெத்தையை எடுத்து அக்காவிடம் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்துப் போனார். “நான் அத்தானிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என்ட பிள்ளைக்கு பவா என்ன வாங்கி வரா’னு பார்க்கணும்’னு. நாங்க கேட்காமலேயே வாங்கி வந்துட்டா,” என்று பூரித்தார். அந்த சமயத்தில் திறந்திருந்த எனது பையிலிருந்து எட்டிப்பார்த்த ‘சிவாஸ்’-சை அம்மா பார்த்துவிட்டார். “இது யாருக்கு?” என அவர் கேட்க, நான் பட்டென்று, “கண்ணன் அண்ணாவுக்கு,” என்று உடைத்துவிட்டேன். அம்மாவின் முகம் நொடிப் பொழுதில் மாறிப்போனது. ஆஹா, தப்பு பண்ணிவிட்டோமே என நினைக்கத் தோன்றியது. உடனே பாக்கியா அக்கா, “அத்தானுடை நண்பர்களுக்காக இருக்கலாம். பாலா அண்ணா கேட்டுக்கொண்டே இருந்தார்,” எனக் கூற, “அப்படியும் இருக்கலாம்,” என நானும் சமாளித்தேன்.

நேரமாகிக் கொண்டிருந்தால் நீராட எழுந்துச் சென்றேன். நான் குளித்துவிட்டு வரும் போது மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். களைப்பாக இருந்ததால் அப்படியே மெத்தையில் படுத்துவிட்டேன். அறைக்குள் பாக்கியா அக்கா வந்து வரவேற்பறைக்கு என்னை இழுத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அங்கேயிருந்த படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டேன். அனைவரும் சாப்பிட ஆரம்பித்த வேளையில் சித்தி எனக்கும் உணவுத்தட்டைக் கொண்டு வந்தார். அதனைப் பார்த்த கண்ணன் அண்ணா, “புலிக்குட்டிக்குத் தீட்டி (ஊட்டி) விடுங்கோ சித்தி,” என அனைவர் முன்னிலையும் கூற எனக்கு வெட்கமாகிப் போனது.

நான் வேண்டாம் என்று மறுத்தும் அண்ணா மற்றும் சித்தியின் வற்புறுத்துதலால் இறுதியில் இணங்க வேண்டியதாயிற்று. உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் எனக்குத் தீட்டி விடுவதை நான் பெரிதும் விரும்பினேன். ஏதோ சொல்ல முடியாத பாசப்பிணைப்பில் கட்டுண்டுக் கிடந்தேன். அந்த வேலை பாக்கியா அக்கா ஒரு குவளை முழுக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணன் அண்ணா அடிக்கடி நான் சாப்பிடுகிறேனா என்று பார்த்து, “நல்லா தீட்டுங்கோ,” என சித்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பாச மழையில் நான் நனைந்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ வந்த எம்மீதே இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என மனம் நெகிழ்ந்துப் போனேன். பின்னர் கவிதாவிற்கும், சித்தியின் பிள்ளைகளுக்கும் நான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும், இனிப்பு வகைகளையும் வழங்கினேன். நான் வீட்டுப் பெண்களுடன் கதைத்திருந்த வேளையில் கண்ணன் அண்ணா வெளியே சென்று கைப்பேசி எண்கள் வாங்கிக் கொண்டு வந்தார். மலேசிய நேரம் பின்னிரவு 2.30 மணியாகிவிட்டது. தொலைப்பேசி எண்கள் கிடைத்ததும் தோழர் அருண்ஷோரிக்குக் குறுந்தகவல் அனுப்பி எமது வருகையைத் தெரியப்படுத்திவிட்டு அப்படியே உறங்கிவிட்டேன்.

அதிகாலை 6 மணிக்கே அங்கே விடிந்துவிட்டது எமக்கு விழிப்பு வந்துவிட்டது. குளித்து, உடைமாற்றி வீட்டின் வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். இம்முறையில் காலை உணவை சித்தி எமக்கு ஊட்டி விட்டார். அம்மா பாக்கியா அக்காவுக்கு உணவு ஊட்டிவிட்டார். உண்டு முடித்த பிறகு, நானும் பாக்கியா அக்காவும், சித்தியின் குழந்தை திவ்யாவிற்கு காலை உணவை மாறி மாறி ஊட்டிவிட்டோம். அவர்களின் குடும்பச் சூழல் எம்மை மிகவும் கவர்ந்திருந்தது.

அன்று கீரா அண்ணா தமது வீட்டில் மதிய உணவை உட்கொள்ளுமாறு எம்மை அழைத்திருந்தார். எனவே, காலை உணவை முடித்துக்கொண்டு விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்குச் செல்ல தயாரானேன். சென்ற முறை தமிழகம் சென்ற போது அவரது மனைவி குழந்தைகளைச் சந்திக்க இயலவில்லை. எனவே இம்முறை முன்னெச்சரிக்கையாக அவரது குழந்தைகளுக்கு இனிப்புக்களும் அண்ணாவுக்கும் அவரது தோழர்களுக்கும் மேற்சட்டையும் வாங்கிச் சென்றிருந்தேன். கண்ணன் அண்ணா விருகம்பாக்கத்தில் இருந்த இளங்கோ நகர் பேருந்து நிறுத்தம் வரையில் எம்மை மகிழுந்தில் கொண்டுச் சென்றுவிட்டார். அவ்விடம் கீரா அண்ணாவும், அவரது கதாநாயகன் (பச்சை என்கிற காத்து) வாசனும் எமக்காகக் காத்திருந்தனர்.

வியாழன், 24 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 3)




விமானம் ஆகாயத்தில் பறந்துக்கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணிகள் பயண விபர அட்டை ஒன்றை அனைவரிடமும் கொடுத்துப் பூர்த்திச் செய்யச் சொன்னார். எனது கைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்கும் பழக்கம் இருப்பதால், அட்டையைப் பெற்றவுடன் நானும் அதனைப் பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டேன். எமது பக்கத்தில் அமர்ந்திருந்த மாதுவும் ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். அடிக்கடி அவர் நான் என்ன எழுதுகிறேன் என்று கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவரது அட்டையைப் பார்த்தேன். அவர் பல விபரங்களைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறுவதைப் புரிந்துக் கொண்டேன்.

நான் பார்ப்பதை அவர் பார்த்ததும் புன்னகைப் புரிந்தார். நானும் சிரித்தேன். எனது அட்டையை அவரிடம் கொடுத்து இப்படி எழுத வேண்டும் என ஆங்கிலத்தில் கூறினேன். அவர் ஆங்கிலத்தில் பேச சற்றுத் தடுமாறினார். “தமிழ் தெரியுமா” எனக் கேட்டேன். தமக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் புரியும் என்றும் கூறினார். சரியென்று அவர் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன். நன்றி சொல்லிவிட்டு எம்மைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்தார். வழக்கமாக வழிப்பயணிகள் கேட்கும் கேள்விகள்தான். நானும் பதிலளித்தேன். உறக்கமின்மையாலும், களைப்பாலும் இமைகள் கனக்க ஆரம்பித்தன. கையோடு கொண்டு வந்திருந்த போர்வையை முழுக்கப் போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டேன்.

நான் கண் விழிக்கையில் விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழக நேரம் சரியாக மாலை மணி 5.25-க்கு விமானம் சென்னையை அடைந்தது. வெளிநாட்டுப் பயணிகள் வேறு ஒரு வரிசையில் நிற்க வேண்டும் என்பதனால், கடப்பிதழ் பரிசோதிக்கும் முன்னரே இராஜ்குமாருக்கு நன்றி கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். வரிசை சற்று நீளமாக இருந்தது. இதற்கு முன்னர் சென்னை வந்த அனுபவம் இருந்ததால் சூழல் எதுவும் புதுமையாக இல்லை. எனது மலேசிய கைப்பேசி அட்டையைக் கலட்டிவிட்டு முன்பு தமிழகத்தில் நான் உபயோகித்த ‘யுனிநோர்’ கைப்பேசி அட்டையைப் அழைப்பேசியில் பொருத்தினேன். எண் பதியப்படவில்லை என்ற செய்தி வந்தது. இனி அந்த எண்களை நான் மீண்டும் பயன்படுத்த முடியாது. வெளியில் உள்ளவர்களை எவ்வாறு தொடர்புக் கொள்வது? சரி, ஏதாவது வழி இல்லாமலா போய்விடும் என மனதைத் தேற்றிக்கொண்டேன்.

கடப்பிதழ் சரிப்பார்க்கப்பட்டு, பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்குச் சென்றேன். இந்த முறை 3 பைகள் அல்லவா கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? ஏற்கனவே நடந்தது போல, நான் பைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுச் செல்லவும், சுங்கத்துறை அதிகாரி இருவர் எம்மை நெருங்கி வந்து, “உங்கள் பைகளை நுண்கூறு மேவுதல் (ஸ்கேன்) செய்ய வேண்டும்,” என்று ஆங்கிலத்தில் சொன்னனர். “எனக்கு முன் கூட்டியே தெரியும். எனது பைகளை நுண்கூறு மேவுதல் செய்வதுதான் உங்களுக்கு வழக்கமான ஒன்றாயிற்றே. மற்ற பயணிகளை விட்டுவிட்டு எதற்கு எனது பைகளை மட்டும் திரும்பத் திரும்ப நுண்கூறு மேவுதல் செய்ய வேண்டும்? இனி இந்த விமான நிலையத்திற்கே நான் வரப்போவதில்லை,” என கூச்சலிட்டவாறு வெறுப்புடன் நுண்கூறு மேவுதல் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

நான் சத்தமிடவும் சாதரண உடையணிந்த மற்றும் இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்விடம் விரைந்து வந்தனர். “என்ன ஆனது? ஏதாவது பிரச்சனையா?” என ஒரு அதிகாரி கனிவுடன் கேட்டார். இருந்த கடுப்பில், “சென்னை விமான நிலையத்திற்கு நான் இரண்டாவது முறையாக வருகிறேன். முன்பு வந்த போதும் மற்ற பயணிகளை விட்டுவிட்டு எனது பைகளை மட்டும் சோதனை செய்தார்கள். இப்பொழுதும் அப்படியே செய்கிறார்கள். என்னைப் பார்க்க உங்களுக்கெல்லாம் எப்படித் தெரிகிறது? இவர்கள் எம்மை நடத்தும் விதம் வெறுப்படையச் செய்கிறது,” என படபடவெனக் கொட்டிவிட்டேன். அந்த அதிகாரி பவ்யமாக “எந்த நாட்டிலிருந்து வருகிறீர்? என்ன விடயமாக வந்தீர்? எங்குத் தங்கப் போகிறீர்? எத்தனை நாட்கள் இருப்பீர்? என்ன தொழில் செய்கிறீர்? இதற்கு முன்பு இங்கு வந்து என்ன செய்தீர்?” என உரையாடுவது போல் கேள்விகள் தொடுத்தார். அது உரையாடல் போன்று தோற்றமளிக்கும் விசாரணை என்று தெரியாமல் இருக்க நான் அடிமுட்டாள் அல்லவே?

நானும் அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் முறையே பொய்யான பதில்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். அது ஒரு உரையாடல் என்பதற்கு அடையாளமாக நானும் சில கேள்விகள் கேட்டு வைத்தேன். பிறகுதான் அவர்கள் இருவரும் சுங்கத்துறைப் புலனாய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. நான் பையைத் தூங்கி நுண்கூறு மேவும் இயந்திரத்தில் வைக்கப் போனேன். “ஏதாவது உதவி வேண்டுமா?” என அவர்கள் இருவரும் கேட்டனர். “தேவையில்லை. என்னால் முடியும். நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகின்றீர்கள். இதற்கு முன்பு இவ்விடம் இருந்தவர்கள் பயணிகள் வெறுப்படையும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்கொண்டனர்,” என எமது முந்தைய அனுபவங்களை விவரித்தேன். அவர்கள் அதற்காக வருத்தம் தெரிவித்தனர்.

அவர்கள் எம்மிடம் கனிவுடன் நடந்துக் கொண்டதால் எமது கோபம் அப்போது தணிந்திருந்தது. விடைப்பெறுமுன் அவர்களது பெயர்களைக் கேட்டேன்; சொன்னார்கள். “நீங்கள் தமிழ், நீங்கள் தெலுங்கா?” என இருவரையும் பார்த்துக் கேட்டேன். அவர்கள் சற்று திகைத்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டனர். “உங்கள் பெயர்களே உங்கள் இனத்தை அடையாளப்படுத்திவிட்டன,” என்று சொல்லி, தெலுங்குக்காரர் பக்கம் திரும்பி, “உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என கேட்டேன். அவர் தெரியும் என்று சொல்லவே, “முன்பே சொல்லியிருந்தால் தமிழிலேயே பேசியிருக்கலாமே?” என்று தமிழில் சொன்னேன். இவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசியிருந்தபடியால் சற்று நேரம் தமிழில் அவர்களுடன் கதைத்துவிட்டு விடைப்பெற்றேன்.

நான் விமான நிலையத்திலிருந்து வெளியாகும் போது யாரோ ஒரு பெண் தூரத்தில் இருந்து கையசைப்பது தெரிந்தது. நடந்துக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தேன்; யாருமில்லை. அப்படியானால் அந்தப் பெண் என்னை நோக்கித்தான் கையசைக்கிறாள் என்பதனை ஒருவாறு யூகித்துக்கொண்டேன். யாராக இருக்கும் என எண்ணியவாறு நானும் கையசைத்தேன். அப்பெண்ணை நெருங்க நெருங்க அவள் யாரென்பதை அறிந்துவிட்டேன். இந்தச் சந்திப்பினை நான் எதிர்ப்பார்க்கவில்லை. சுமதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) எனக்கு முகநூலில் அறிமுகமான பெண். இந்தப் பெண் எம்மீது கொண்டிருக்கும் அன்பு அபூர்வமானது. ‘அக்கா, அக்கா’ என்று சதா நேரமும் எனது முகநூலில் செய்தி அனுப்பிக்கொண்டிருப்பாள். தனக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் எனவும், என்னைப் போல் தானும் ஆளாக வேண்டும் எனவும் பிதற்றுவாள். ஒரு முறை எனக்காக ‘இரசிகர் பக்கம்’ வேறு முகநூலில் திறந்திருந்தாள். அதெல்லாம் வேண்டாம் என நானே எடுக்கச் சொன்னப் பிறகு தான் அவற்றை நீக்கினாள்.

நான் சென்னைக்கு வருவதாக அவளுக்குச் சொல்லியிருந்தேன். விமானம் வந்திறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சுமதி அவளது வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்திருந்தாள். நேரம் அதிகம் இல்லாததாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் எம்மால் இம்முறை வர இயலாது என்று சொல்லியிருந்தேன். “ஒரு 5 நிமிடமாவது உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறது அக்கா. நானே விமான நிலையம் வந்துப் பார்க்கிறேன். 5 நிமிடம் கூட போதும்,” என அவள் சொன்ன போது அது எனக்குச் சற்றுப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. “சரி, பார்க்கலாம்,” என சொல்லி வைத்தேன். ஆனால், நிஜமாகவே அந்தப் பெண் இவ்வளவு தூரம் எம்மைப் பார்க்க வருவாள் என நான் நினைக்கவில்லை.

நான் விமான நிலைய நுழைவாயிலை விட்டு வெளியே வரவும் சுமதி முகத்தில் பரவசம் பொங்க என்னருகே சிறுப்பிள்ளை போல் குதூகலத்துடன் ஓடி வந்தாள். “அக்கா…” என்றாள். மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு , “சுமதி?” என கேட்டேன். தலையாட்டினாள்; அவள் கண்கள் கலங்கின. நான் நிலைத் தடுமாறிப் போனேன். “என்னம்மா?” என அப்படியே அவளை வாரி அணைத்தேன். அவளது தடையையும் மீறி கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?” என பதற்றத்துடன் கேட்டேன். “ஒன்றுமில்லை அக்கா. உங்களைப் பார்த்த சந்தோஷம்,” என அவள் கூறிய போது நான் நெகிழ்ந்துப் போனேன். “இதிலென்ன இருக்கிறது? நான் சாதாரணப் பெண். இதற்காக எதற்கு அழுகிறாய்? அழாதே,” என அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன்.

“மன்னிச்சிருங்க அக்கா… நான் அழலை. அது பாட்டுக்கு வருது. எனக்கு ரொம்பெ சந்தோஷமா இருக்கு,” என்றவள், எதையோ மறந்துவிட்டவள் போல் அவ்விடம் சிறிது தள்ளி நின்றுக்கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், இங்க வா,” என அழைத்து, “அக்கா, இது என் தம்பி,” என அறிமுகம் செய்து வைத்தாள். “யாருடன் வந்திருக்கிறீர்கள்,” எனக் கேட்க, “நாங்கள் இருவர் மட்டும்தான்,” என பதில் சொன்னாள். அவள் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது. ஆனால், கண்களின் ஓரத்தில் இன்னமும் நீர் அரும்பியிருந்தது.

செவ்வாய், 22 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 2)




“நீங்கள் எப்போதும் இப்படித்தானா?” நான் சாப்பிட்டு முடிந்தவுடன் அவன் திடீரென்று இப்படிக் கேட்டான். அவன் எதைக் கேட்கிறான் என்று அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் அவன் கேட்ட தொனியும் அவனது முகபாவனையும் பார்க்க எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டுச் சிரித்து, “என்ன கேட்கிறீர்,” என்றேன். “நீங்கள் அதிகம் பேசுவதில்லை. எப்போதுமே இப்படித்தானா இல்லை நான் அதிகம் பேசிக் கரைச்சல் கொடுக்கிறேனா? எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடுங்கள். முகநூலில் எதையும் எழுதி வைக்காதீர்கள்,” என கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

அவனுக்கு நான் பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தேன். இதற்கு முன்னும் இப்படிச் சிலர் முகநூலில் தங்களைப் பற்றி எழுத வேண்டாம் எனச் சொன்னது நினைவு வந்தது. அவனுக்கு எந்தவொரு வாக்குறுதியும் நான் வழங்கவில்லை. அந்தப் பேச்சிலிருந்து விடுப்பட விரும்பி, “நேரமாகிறது, உள்ளே செல்வோமா?” என எழுந்தேன். அவனும் உடன் எழும்பி வந்தான்.

குடிநுழைவு மற்றும் சுங்கத்துறையினரின் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து வரும் போது கண்ணன்  அண்ணா ‘சரக்கு’ (மது பாட்டில்) வாங்கிவரச் சொல்லியிருந்தார். “நான் மதுபாட்டில் வாங்க வரிவிலக்குக் கடைக்குச் செல்கிறேன். நீங்கள் ஏதாவது வாங்க வேண்டுமா?” எனக் இராஜ்குமாரைக் கேட்டேன். “நானும் வருகிறேன்,” என உடன் வந்தான். உள்ளே விதம் விதமான பாட்டில்களிலும் வர்ணங்களிலும் பல வகையான மதுபான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பாட்டிலாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் என் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான்.

“இதில் இருக்கிற முக்கால் வாசி மதுபானங்களை நான் குடித்திருக்கிறேன்,” என தனது சொந்தப் புராணத்தைப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் அவனை அதிகம் சட்டைச் செய்யாது, பாட்டில்களை நோட்டம் விடுவதிலேயே குறியாய் இருந்தேன். சட்டென்று, “உங்களுக்கு எந்த மதுபானம் பிடிக்கும்?” எனக்கேட்டான். “நான் குடிப்பதில்லை,” ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு, ஒரு மது பாட்டிலை கையில் ஏந்தினேன். “உண்மையாகவா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,” என்று என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

இவனும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்து அதன் உள்ளடகத்தை எடைப் போடுபவன்தான் என்பதனை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் அணிந்திருந்த உடையும், எனது தோற்றமும் அவனை அவ்வாறு எண்ணச் செய்திருக்கலாம். ஒரு வேலை நான் சேலைக் கட்டி வந்திருந்தால் அவன் பார்வை வேறு விதமாக இருக்குமோ என்றுக்கூட எண்ணத் தோன்றியது.

“யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் குடிப்பதில்லை. அதற்காக குடித்ததே இல்லை எனக் கூறவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அதன் சுவை எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள குடித்துப்பார்த்திருக்கிறேன். ஒரு முறை குடித்த பானத்தை நான் மீண்டும் சுவைப்பதில்லை. அதன் சுவை எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு இவைகளை நான் தொடுவதில்லை,” என்றேன்.

“எப்போதாவது கூட குடிக்க மாட்டீர்களா?” என்றான். “மாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினேன். அவன் அதனை நம்புவதாகத் தெரியவில்லை. அவன் நம்பவேண்டும் என நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. அவன் கேட்டக் கேள்விக்கான பதிலை நான் தந்துவிட்டேன். அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனைப் பொறுத்ததல்லவா?

கடை முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘சிவாஸ்’ என்ற முத்திரையைக் கொண்ட மதுபானத்தை வாங்கினேன். பின்னர் இருவரும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம். அவன் மேலும் ஏதோ பேசினான். அதில் எதிலும் என் மனம் இலயிக்கவில்லை. அவனுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்துச் சென்னைக்குச் சென்றதும் கண்டிப்பாகத் தொடர்புக்கொள்ளச் சொன்னான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.

திடீரென புதிய எண்களிலிருந்து எனது கைப்பேசிக்குக் குறுந்தகவல் வந்தது. அதற்கு பதில் எழுதாமல் வைத்துவிட்டேன். சற்று நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே எண்களிலிருந்து இன்னொரு குறுந்தகவல் வந்தது. அதையும் படித்துவிட்டு அப்படியே வைத்தேன். இப்பொழுது அதே எண்களிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. புதிய எண், புதிய ஆணின் குரல். யாராக இருக்கும்? கேட்டேன். “நீங்கள் கடைசியாக யாருடைய பெயரை உச்சரித்தீர்கள்?” எனக் கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “தெரியவில்லை, சொல்லுங்கள்,” என்றேன். “சென்னைக்கு எத்தனை மணிக்குச் செல்கிறீர்? சுங்கத்துறை பரிசோதனை எல்லாம் முடித்தாகிற்றா?” என மிகவும் நெருக்கமானவர் போல் பேச ஆரம்பித்தார். எப்படி எமது பயணம் இந்த அந்நிய நபருக்குத் தெரிந்தது என்ற குழப்பத்துடன், குரல் தடிக்க, “நீங்கள் யாரென்று சொல்லுங்கள். இல்லையேல் எம்மை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டாம்,” எனக் கூறவும் அவர் சற்று இறங்கி வந்தார்.

“நான்தான் சூர்யா,” என்றார். “எந்த சூர்யா,” எனப் பட்டெனக் கேட்டேன். “சற்று நேரத்திற்கு முன்னர் எனக்கு நன்றி கூடச் சொன்னீர்கள். அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் பயணப் பைகளை வைக்கும் இடத்தில்,” என அவர் சொல்லும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது. “ஓ, சூர்யா. சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி என்னுடைய எண்கள் கிடைத்தது,” என சற்று வியப்புடன் கேட்டேன். “ரொம்பெ சுலபம். நான் ஏர் ஆசியாவில் வேலை செய்கிறேன். சற்று முன்னர்தான் உங்கள் பயண விபரங்களைச் சரிபார்க்க உங்கள் கடப்பிதழைக் கொடுத்தீர்கள். அதிலிருந்து எங்கள் கணினியில் உங்கள் விபரங்களைப் பெறுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை,” என சிரித்துக்கொண்டே கூறினார்.

“ஓ, அப்படியா. இப்படித்தான் மற்ற பயணிகளின் விபரங்களைப் பெற்று அழைத்துப் பேசுவீர்களோ?” என நான் விளையாட்டாகக் கேட்க அவர் அரண்டுவிட்டார். “ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க. சத்தியமா நான் இங்க வேலை செய்த நாளிலிருந்து இன்றைக்குத்தான் முதல் முதலா ஒரு பயணியோட எண்களை எடுத்து அழைக்கிறேன். அதுவும், நீங்க அழகான தமிழில் என் பெயரைச் சொல்லி நன்றி சொன்னீங்க இல்ல, அது ரொம்பெ புதுசா இருந்திச்சு. ஏதோ, உங்கக்கிட்ட பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் கூப்பிட்டேன். நீங்க எதுவும் தவறா எடுத்துக்காதீங்க,” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டார்.

எனக்கு அது தவறாகத் தோன்றவில்லை. சிறிது நேரம் உரையாடினோம். “தனியா போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க. என்னைத் தனியே போகச் சொல்லி கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன். இருந்தாலும் உங்களுக்கு ரொம்பெதான் தைரியம்,” என்றார். “நான் தனியே போகிறேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே,” என்றேன். “உங்கள் பயண விபரத்தில்தான் எல்லாமே இருக்கிறதே,” என மீண்டும் சிரித்துக்கொண்டுக் கூறினார். நல்ல ஆள்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பழைய நண்பர்கள் போல் சிறிது நேரம் கதைத்துவிட்டு அழைப்பேசியை வைத்தேன்.

இராஜ்குமார் எங்கேயோ சென்று இரண்டு குவளைகளில் காப்பியோடு வந்தான். அதில் ஒன்றை என்னிடம் நீட்ட, “ஐயோ, நான் காப்பி குடிக்க மாட்டேனே,” என்றேன். அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை, கொடுங்கள். எப்போதாவது குடிப்பேன். அதிகம் குடிப்பதில்லை,” என வாங்கிக்கொண்டேன். அதனை ஒரு மூலையில் வைத்துவிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு எனது பயணத்தைக் கைப்பேசியின் மூலம்  அறிவித்துக் கொண்டிருந்தேன். பயணத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை விமானப் பயணச் சீட்டைச் சரிப்பார்த்துக் கொண்டேன். “உங்கள் இருக்கை எண் என்ன?” எனக் கேட்டான். பதில் சொன்னேன்.

தம்முடைய இருக்கை இரண்டு வரிசைகள் தள்ளி பின்புறம் இருக்கிறது என்றான். அப்படியா என தலையாட்டிக் கொண்டேன். “பிறகு பக்கத்தில் அமர்பவர்களிடம் சொல்லி இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். அப்போதுதான் பேசிக்கொண்டே செல்ல வசதியாய் இருக்கும்,” என்றான். “அதெல்லாம் தேவையில்லை. நான் விமானத்தில் ஏறியவுடனேயே உறங்கிவிடுவேன். எனக்கு அவ்வளவு களைப்பாக இருக்கிறது,” என சாக்குப் போக்குக் கூறிவிட்டு மீண்டும் கைப்பேசியில் ஐக்கியமானேன்.

விமானம் வந்துவிட்டது. அனைவரும் வரிசைப்பிடித்து விமானத்தில் ஏறினோம். எனக்குச் சன்னல் ஓர இருக்கை. எனது பக்கத்தில் ஆண் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக நடுத்தர வயது மாது ஒருவர் வந்தமர்ந்தார். இரு பெண்களுக்கு நடுவில் அமர்வது அந்த ஆணுக்குக் கூச்சத்தையோ அல்லது அசெளகர்யத்தையோ உண்டு பண்னியிருக்க வேண்டும். அந்த மாதுவை எனதருகில் அமரச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்துக்கொண்டார். எனக்கும் கொஞ்சம் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் விமானம் ஆகாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்தது. இந்த முறை பயணம் எப்படி அமையப் போகிறது என்ற கற்பனை வானில் நானும் சிறகடிக்க ஆரம்பித்தேன்.