சனி, 1 பிப்ரவரி, 2020

எது காதல்? ‍-அத்தியாயம் 2

2
கோதைக்கு மனமே சரியில்லை. பள்ளி ஆண்டுகாலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு குமார் வேறு பள்ளிக்கு ஒன்றாம் படிவம் படிக்கச் சென்றுவிடுவான். பெரும் இழப்பு நேரப்போவது போல் அவள் மனம் கனத்திருந்தது. அடுத்தாண்டு மாற்றலாகிப் போகவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பிரியாவிடை விருந்து வைப்பது வழக்கம். கோதை, கோகிலா, வசந்தி, கார்த்திகா ஆகிய நால்வரும் நடனப்பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தனக்குப் பிடித்தமான மின்னல் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ லலலா' பாடலை கோதை தேர்வு செய்திருந்தாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். பாடலுக்குப் பொருத்தமான அபிநயங்களைக் கோதையே நிர்ணயித்து மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள். நடனத்தில் அவளுக்கிருக்கும் திறமை அப்பள்ளியில் யாவரும் அறிந்ததே. ஆகையால் பொறுப்பாசிரியர் கூட முழுப்பொறுப்பையும் கோதையிடமே கொடுத்துவிட்டார். பள்ளி முடிந்து சில வேளையில் கோதையும் அவளது தோழிகளும் வகுப்பறையில் நடனப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த விடயம் குமாரின் காதுக்கும் எட்டியது.

ஒருநாள் பள்ளி ஓய்வு வேளையின் போது குமார் அவளைக் கடந்துச் செல்ல நேர்ந்தது. அவன் பக்கத்தில் இருந்த சரண். "என்ன? எங்களுக்காக நடனமெல்லாம் ஏற்பாடு செய்கிறாயாமே?" என்று கேலி செய்தான். "உங்களுக்காக தனியாக இங்கே யாரும் மனக்கெடவில்லை. இது ஒட்டுமொத்த ஆறாம் ஆண்டுக்காகச் செய்கிறோமாக்கும்," என்று சிலுப்பிக்கொண்டுச் சென்றாள். தான் நடனம் புரியப்போவது குமாருக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயமாக அவன் பிரியாவிடைக்கு வருவான். அவனுக்காக எப்பொழுதையும் விட நடனத்தைச் சிறப்பாக ஆடவேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.

நாட்கள் ஓடின. பிரியாவிடைக்கொடுக்கும் நாளும் வந்துச் சேர்ந்தது. கோதையும் அவளது தோழிகளும் அழகாக உடுத்தி நடனத்திற்குத் தயாராகினர். கோதை தன் மனதைப் பாடல் வரிகளுக்குள் ஒன்றிணைத்து அருமையாக ஆடினாள். அவள் ஆடுவதை முன்வரிசையில் நின்று இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் குமார். 'என் கண்ணு ரொம்ப அழகா? என் இறக்கை ரொம்ப அழகா?' என்ற வரிகளின் போது கோது குமாரைப் பார்த்து அபிநயம் பிடித்தாள்.குமார் வெட்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. சரண் குமாரின் இடுப்பில் இடித்து ஏதோ அவன் காதுக்கருகில் முணுமுணுத்ததை நடனத்தின் போதும் கவனிக்க கோதை தவறவில்லை.

ஒருவழியாகப் பிரியாவிடை விருந்து முடிந்தது. அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு செல்ல தயாராகினர். கோதையும் கோகிலாவும் உடை மாற்றி பேருந்து நிற்குமிடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன்பாக மிதிவண்டியில் குமாரும் சரணும் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதுமே கோதைக்கு மனம் படபடத்தது. அவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள்? ஒருவேளை தனக்காகத்தான் நிற்கிறார்களா? இப்போது என்ன செய்வது. இங்கே எல்லார் முன்னிலையும் அவர்களோடு பேசுவது சரியாகப் படாதே. யாராவது இதைப் பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என பலவாறாக எண்ணத் தொடங்கினாள். அவளையறிமால் அவள் கால்கள் நடுங்கின.
"ஏய், அங்கே பார்! குமாரும் சரணும் உனக்காகத்தான் அங்கே நிற்கிறார்கள் போல் தெரிகிறது," என்றாள் கோகிலா.

"தெரியாத மாதிரி வா. நாம் அவர்களைக் கவனிக்காத மாதிரி வேறு பக்கத்தில் நின்றுக்கொள்வோம்," என்று கோகிலாவின் கைகளை இறுக்கமாகப் பற்றி, அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் வெகு வேகுமாய் நடந்தாள் கோதை. அவர்கள் கடந்துப்போகையில் சரண் அவர்களைப் பார்த்து, "ஹாய்" என்றான். அதற்கும் பதிலேதும் கூறாமல் சரேலென்று எதிர்திசையில் சென்று அமர்ந்துக்கொண்டனர் கோகிலாவும், கோதையும்.
அந்தப்பள்ளியின் பேருந்து நிற்குமிடம் மிக முக்கிய சாலையின் அருகில் இருக்கிறது. சாலையில் வருவோர் போவோர் எவர் வேண்டிலும் அங்குப் பேருந்திற்காகக் காத்திருக்கும் மாணவர்களைத் தூரத்திலிருந்தே காண முடியும். அந்தச் சிரிய பட்டிணத்தில் பெரும்பாலும் அனைவருமே ஒருவர் குடும்பத்தை மற்றவர் அறிந்து வைத்திருந்தனர். 'உம்பிள்ளையைப் பள்ளியில் பார்த்தேன், யாரோ இரண்டுப் பையன்களோட பேசிக்கிட்டிருந்தா,' என்று யாராவ‌து வீட்டில் சொன்னால் நிலமை என்னாகும்? அந்தத் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தின் அவ்வாறு பேசுவதே எவ்வளவுத் தவறாக எண்ணப்பட்டது? இதுதான் கோதையின் பதட்டத்திற்குக் காரணம். இதை குமாரும் தெரிந்துவைத்துதானே இருப்பான். சில நிமிடங்கள் அங்கேயே மிதிவண்டியோடு நின்றுக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். குமாரின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மறையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பதட்ட நிலையிலும் கோதையின் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

இன்னும் ஒரு வாரம்தான் எஞ்சியிருக்கிறது. பள்ளி ஆண்டுகாலம் முடிந்துவிடும். குமாரும் சரணும் தொலைவிலுள்ள இடைநிலைப்பள்ளிக்குச் சென்றுவிடுவர். இனி அவர்களை, குறிப்பாக குமாரை எப்போது
பார்ப்பது? தானும் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு அதே இடைநிலைப்பள்ளிக்குச் சென்றால் காணலாம். ஆனால், அதற்கு ஒரு வருடம் பொறுக்க வேண்டுமே. காலங்கள் உருண்டோடக் கூடாதா என ஏங்கினாள் கோதை. அவளுக்கு அவனைக் காண வேண்டும். ஒவ்வொரு நாளும் காண வேண்டும். ஆனால் அதனை யாரிடம் எப்படி விவரிப்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. இவையணைத்தும் அவள் மனதை பாரமாய் அமுக்கிக்கொண்டிருந்தது. சில சமயம் இவற்றை நினைக்கையில் அவளுக்கு அழுகை கூட வந்தது. யாரோ ஒருவன். அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை. அவனைப் பிரியப்போகிறோம் என்று நினைக்கையில் மனதுக்கு ஏன் இத்துணைச் சிரமமாய் இருக்கிறது? அவளுக்கு அவளையே புரிந்துக்கொள்ள இயலவில்லை.

"நீ அவனைக் காதலிக்கிறியா?" கோகிலா வாய் திறந்துக் கேட்டேவிட்டாள்.

"எனக்குத் தெரியல," என்ற பதிலை மட்டுமே கோதையால் தர முடிந்தது. 

அந்தக் கடைசி வாரத்தில் குமாரின் முகத்திலும் சோகத்தின் சாயல் படர ஆரம்பித்தது. அவளைக் கண்டபோதெல்லாம் அவன் புன்னகைக்கவே செய்தான். அந்தப் புன்னகையின் பின்னால் பெரும் சோகம் ஒளிந்திருப்பது போல் கோதையின் மனதிற்குப் பட்டது. ஒரேவேளை இந்தப் பிரிவை எண்ணி அவனும் அவளைப் போலவே மனம் கலங்குகின்றானோ? அந்தக் கடைசி வாரமும் வந்து முடிந்தது. அப்போதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அந்த ஆண்டு இறுதி விடுமுறையை காதல் பாடலிலும், சோகப் பாடலிலும் நிரப்பினாள் கோதை. அடுத்தாண்டு ஆறாம் ஆண்டிற்கான‌ தேர்வு நடைப்பெறும். அதில் நல்லமதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி மனதினுள் வந்துப் போனது. அதற்காக அவள் தன்னைத் தயார்படுத்தவும் செய்தாள். இடையிடையே தலைத்தூக்கிய குமாரின் நினைவுகளை வலிந்து அப்புறப்படுத்தினாள். 

விடுமுறை முடிந்துப் பள்ளித் தொடங்கியது. மீண்டும் தங்கள் நண்பர்களைக் காணும் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்குள்ளும் இருந்தது. கோதையும் குமாரின் நினைவுகளிலிருந்து விடுப்பட்டு ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றாள். அவளின் ஆறாம் ஆண்டு இனிதே தொடங்கியது. அவளும் வழமை போல் பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். இரண்டாவது வாரம் வழக்கம் போல் அவளும் கோகிலாவும் பள்ளிப்பேருந்திற்காகக் காத்துநின்ற வேளையில் இரண்டு மிதிவண்டிகள் அவ்விடம் வந்துச் சேர்ந்தன. இடைநிலைப்பள்ளிச் சீருடையிலிருந்த குமார் தயக்கத்துடனும் புன்னகையுடனும் கோதையின் அருகில் மிதிவண்டியை நிறுத்தினாள். அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் எப்படி இங்கு? இடைநிலைப்பள்ளி இருப்பதோ வெகு தொலைவில். குமாரின் வீடும் இங்கு இல்லை. இவன் எதற்கு எப்படி இங்கே அன்று குழம்பியவாறு அவனை நோக்கினாள். அவன் முகத்தைக் கண்ட மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல் உருகினாள் கோதை. கோகிலா அவளை மெதுவாக இடிக்க, அப்போதுதான் தான் பேருந்து நிற்குமிடத்தில் இருக்கிறோம் என்ற சுயநினைவிற்கு வந்தாள். ஏனோ, ஆயிரம் கண்கள் தன்னைப் பார்ப்து போல் அவளுக்கு மனம் குறுகுறுத்தது. 

தான் ஏதாவது வினையில் சிக்கிக்கொள்வதற்கு முன் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என எண்ணியவளாய், கோகிலாவின் கரத்தைப் பற்றக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தாள்.

"கோதை, நில்லு!" சொன்னது குமார். 

அவன் அவ்வாறு அழைத்தது அவளுக்கு என்னவோ செய்தது. அவன் அவளை அழைக்கிறான். அவள் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதோ உரிமைக்குரலுடன் அழைக்கிறான். இந்த அழைப்பை எப்படி மீறுவது? அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். அதில் ஏக்காம் குடிக்கொண்டிருந்தது.

"யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்," என்றாள் கோதை. 

அவளுக்கு வேறு என்ன சொல்வது அல்லது செய்வது என்றுத் தெரியவில்லை. இவன் முகத்தைக் காணத்தானே அவள் தவமாய் தவமிருந்தாள். இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்றுதானே காத்திருந்தாள். இந்த சிரிப்பைக் காண்பதற்காக எவ்வளவு ஏங்கினாள். ஆனால், அவளால் அங்கு நின்றுப் பேசத்தான் முடியவில்லை.

"கவலைப்படாதே, நான் சென்றுவிடுவேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் வந்தேன். உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்," என்றான் குமார். அதில் சோகம் படிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் அவளுக்காக, அவளைக் காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே. அப்படியானால், அவனுக்கும் தன் மீது அன்பிருக்கத்தானே செய்கிறது. நான் அவனை நினைத்திருந்தது போல் அவன் என்னை நினைத்திருக்கிறான் என்பதுதானே அர்த்தம்? அவள் மனம் இளகியது. அவளையறிமால் அவள் கண்களில் நீர் வழிந்தது.

"ஏய், ஏன் அழுகின்றாய்? அழாதே கோதை. நான் சென்றுவிடுகிறேன். உனக்குச் சிரமம் அளித்திருந்தால் என்னை மன்னித்துவிடு," என்றவாறு மிதிவண்டியை வந்த திசை நோக்கி மிதித்தான் குமார். அவள் அருகில் வந்த சரண், "எப்போதும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் இம்சை தாங்காமல் நான் தான் அழைத்து வந்தேன். பாவம், அவன் உன் நினைவாகவே இருக்கிறான். இனி நாங்கள் வரமாட்டோம்," என்றவாறு சென்றுவிட்டான்.

"ஏன் அழுகிறாய்?" என்று கோகிலா கேட்டாள்.

"தெரியவில்லை," என்றாள் கோதை. அவள் மனம் வலித்தது. ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா? ஐயோ, இது வீட்டில் தெரிந்தால் என்னவாகும்? அடுத்து சில தினங்கள் அவள் சோகமே உருவாய் இருந்தாள். அவள் தாய் என்னவென்று கேட்டும் வெறும் களைப்பு என்று மழுப்பினாள். தன்னைத் தேடி வந்த ஒருவனைப் புண்படுத்தி அனுப்பிவிட்டோமோ என்று மனம் நொந்தாள். இனி அவன் தன்னை நினைக்க மாட்டானா என்று வருந்தினாள். இவ்வளவு மனப்போராட்டதிற்கு நடுவிலும் அவள் படிப்பில் கவனம் சிதறவில்லை. மனம் திசை மாறும் போதெல்லாம் அவள் புது நூல்கள் வாசித்தாள். ஒருவாறாக அவ்வாண்டை எப்படியோ கடந்து தேர்வும் எழுதிச் சிறப்பு மதிப்பெண்களும் பெற்றுவிட்டாள்.

அடுத்தாண்டு அவளும் இடைநிலைப்பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். குமார் படிக்கும் அதே இடைநிலைப்பள்ளி. அவளை அவனுக்கு நினைவிருக்குமா? அல்லது மற்ற இடைநிலைப்பள்ளி மாணவர்கள் போல் இந்நேரம் அவனுக்கும் காதலி இருக்குமா? மீண்டும் குமாரைப் பற்றிய எண்ணம் அவளும் படையெடுத்தது.

கருத்துகள் இல்லை: