செவ்வாய், 29 மார்ச், 2016

நான் பன்முகம் கொண்டவள்!



அன்பொழுகும் ஒரு முகம்
ஆண்மையான‌ ஒரு முகம்
இம்சைத் தரும் ஒரு முகம்
ஈகை செய்யும் மறு முகம்...

உண்மையான ஒரு முகம்
ஊர்ச்சுத்தியாய் ஒரு முகம்
எளிமையான ஒரு முகம்
ஏற்கவியலா மறுமுகம்...

ஐயம் தரும் ஒரு முகம்
ஒழுக்கமில்லா ஒரு முகம்
ஓவியமாய் ஒரு முகம்
ஒளவியம் கொண்ட மறுமுகம்...

பன்முகங்கள் எனக்குண்டு
எந்த முகம் வேண்டுமென்று
தீர்மானம் நீயே செய்வாய்
கண்களில் அதையே காண்பாய்!

புதன், 23 மார்ச், 2016

முழுமையடையா வாழ்க்கை...





மண்ணில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விடவே துடிக்கின்றன. ஆனால், எல்லாருக்கும் அந்த அரிய வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை. பல காரணங்களாலும் கட்டமைப்புகளாலும் மனிதன் தான் வாழ விரும்பிய வாழ்க்கையைக் கற்பனையில் மட்டுமே வாழ்கிறான். 

ஒருவேளை கற்காலத்தில் குறுகிய கட்டுப்பாடுகளும் தேவைகளும் இருந்த வேளையில் அவன் முழுமையாக வாழ்க்கையை அனுபவித்திருப்பானா? தெரியவில்லை... இக்காலக்கட்டத்திலோ, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறையில் சமூகம் வகுத்த நீதிகளுக்கு அடிபணிந்து ஏதோவொரு வாக்கையையே பலரும் வாழ வேண்டியுள்ளது. மனித வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது. உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் வீடு என சில அடிப்படைத் தேவைகளைக் கூட பணம்தான் இன்று நிறைவேற்றுகிறது. இதனை முன்பே அறிந்துதான் அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனக் கூறிச்சென்றனரோ தெரியவில்லை. எண்ணிய கல்வியைப் பெற, விரும்பிய ஊர்களுக்குச் செல்ல, ஏன் பிறருக்கு உதவிப்புரியவும் கூட பணம் இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பணம் இருப்பவன் விரும்பிய வாழ்வையும், இல்லாதவன் எதற்கும் வக்கற்ற வாழ்வையும் வாழ வேண்டிய நிலை இன்று உருவாகிவிட்டது. 

அடுத்ததாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட எழுதிய சட்டங்களும் எழுதப்படாத விதிகளும் ஒருவன் தன் வாழ்வையை முழுதும் வாழ்ந்துவிட தடையாக இருக்கின்றன. பிறரால் உருவாக்கப்பட இவற்றுக்குள் சிக்குண்டு, ஆசைகளையும் விருப்பங்களையும் மனதிற்குள்ளேயே பூட்டி அதற்குக் கல்லறையும் கட்டி நடைப்பிணமாகவே பலரும் வாழ்கின்றனர். உதாரணமாக, மலேசிய நாட்டின் சட்டப்படி மலேசியக் குடிகள் இஸ்ரேல் நாட்டிற்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்கச் சுற்றி அனைத்து நாட்டையும் பார்த்துவிட வேண்டும் என ஒரு மலேசியன் கனவுக்கண்டிருப்பாயின், அவன் கனவு இவ்விடம் தகர்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனித்தனி சட்டங்களை இயற்றி மனிதனின் வாழ்வைத் தனது கைப்பிடியில் வைத்திருக்கின்றன. இவ்வளவு ஏன்? மனிதன் இயற்றிய சட்டமே இன்னொரு மனிதனின் உயிரைப் பறிக்கவும் வழிவகைச்செய்கிறது (தூக்குத்தண்டனை). 

அரசு ஒருபுறம் மனித வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் இந்தச் சமூகக்கோட்பாடுகளும், உற்றார் உறவினரின் நாற வாய்களும் சிதைத்துவிடுகின்றன. இவன் இப்படித்தான் வளர வேண்டும், இவர்களுடன் விளையாட வேண்டும், இந்தப் பள்ளியில்தான் சேரவேண்டும், இந்தப் பணிக்குத்தான் செல்ல வேண்டும், இத்தனை வயதிற்குள் திருமணம் முடிக்க வேண்டும், எந்தக் குழந்தைப் பெற வேண்டும் என இவர்களே பேசி முடிவெடுத்து, சதா சர்வக்காலமும் அதனைத் திருமந்திரம் போல் ஒருவன் காதில் ஓதி, அவனை இயந்திரம் போல் இயங்கவும் செய்துவிடுகின்றனர். ஒருவன் சுயமாகத் தனது எதிர்காலத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையையும் இழந்து ஏதோ ஒரு வாழ்க்கையை ஊர் உலகத்திற்காக வாழ்ந்துவிட்டு மறைகின்றான்.

சரி, பணமிருப்பவன் முழுமையாக வாழ்க்கையை வாழ்கிறானா? அதுவும் இல்லை. தன்னிடம் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பதிலும், அதனை அதிகரிப்புச் செய்வதிலுமே அவன் பாதி வாழ்க்கையை ஓட்டிவிடுகிறான். அதுமட்டுமன்றி மேற்கூறிய சட்டங்களும், சமுதாயக் கட்டுப்பாடுகளும் அவனைக் கட்டிவைக்கின்றன. இவ்வளவையும் எதிர்க்கொள்ளும் மனிதன் கடைசியில் என்னதான் ஆகிறான்? ஒன்று, நிலத்தில் புதைக்கப்படுகிறான் அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்படுகிறான். அவனது இருப்பை அதற்குமேல் அவனால் தக்கவைத்துக்கொள்ளமுடிவதில்லை. மூன்றாவது தலைமுறைக்குப் பிறகு அவனது பெயர் கூட எவருக்கும் நினைவிருப்பதில்லை.

எதற்காககோ பிறந்திருக்கிறோம்; எவ்வாறோ வாழ்கிறோம்; எப்படியும் இறந்து விடுவோம்; இந்தக் குறுகிய வாழ்க்கையை முழுவதுமாய் வாழாதா குற்ற உணர்ச்சியுடன்!