வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கினை இரத்து செய்!



எமது சகோதரர்களுக்குத் தூக்கு
அதைத் தடுக்க முடியாமல் நான்…
தமிழகத்தில் அவர்கள்
நானோ எங்கோ ஓர் மூலையில் …
என்னையும் இந்தியன் என்கிறார்களே
நான் இந்தியா வரத் தடை ஏன்?
போராட்டக் களத்தில் தோழர்கள்
அலுவலக வேலைகளில் நான்!

ச்சே என்ன வாழ்க்கையடா இது!
மயிர் போனால் முளைக்கும்
அவர்கள் உயிர் போனால் வருமா?
ஏழு நாட்கள் தானே உள்ளது?
என்ன செய்யலாம், ஏது செய்யலாம்
ஒன்றுமே தெரியவில்லையே?

அம்மா முதல்வரே,
கருணை காட்டுவாயா?
உயிர்ப்பிச்சை போடுவாயா?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்
நிரபராதிகளைத் தண்டிப்பது தகுமா?
கொலையாளி யாரென்றே தெரியாமல்
அப்பாவிகளைப் பலியாக்கலாமா?

அவர்களைக் கொல்லாதீர்கள்!
வாழ்வில் பாதிநாட்கள் முடிந்துவிட்டன
சிறைச்சாலை அவற்றைத் தின்றுவிட்டது
மீதி நாட்களாவது  வாழ விடுங்கள்!
சுதந்திரக் காற்றை அவர்களும் சுவாசிக்கட்டுமே?

நீதி தேவதையே,
நீதியற்ற தீர்ப்புகள் அரங்கேறும்
அப்பாவிகள் கொல்லப்படுவார்கள்
தமிழர்கள் கண்ணீர்விடுவார்கள்
இந்த அவலத்தைப் பார்க்கக்கூடாது - என்று
உன் கண்களைக் கட்டிக்கொண்டாயா?

செய்யாத கொலைக்குத் தூக்கு தண்டனையா?
போனது ஓர் உயிர்தானே
அதற்கு பலியானது இலட்சம் உயிர்கள்
அதுவும் போதாதா? இன்னும் வேண்டுமா?
இந்த மூன்று உயிர்களைப் பலிகொண்டுதான்
உன் நீதியை நிலைநாட்ட வேண்டுமா?

பிரதமர் உயிர் என்றால் பெரிதா
எம் தமிழன் உயிர் என்ன சிறிதா?
நினைத்தாலே பதறுது மனசே
தூக்கினை இரத்து செய் அரசே!

மனுக்கள் கொடுத்தோம்
கெஞ்சிப் பார்த்தோம் –நீதி
வேண்டி அலைந்துத் திரிந்தோம்
மேடைப் போட்டு கத்துகின்றோம்
உண்ணாவிரதம் ஆரம்பித்தோம்!

இரக்கமே இல்லாமல்
எதற்குமே அசையாமல்
தன்னிச்சையாய் நீ செயல்பட்டால்
சிறைச்சாலை புகுந்து –எம்
தமிழரை மீட்டெடுப்போம்!
அவர் உயிரைக் காத்திடுவோம்!

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

என்ன வித்தியாசம்?



இந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் யார்? பிரிட்டிஷ் காலகட்டத்தின் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களே இந்தியர்கள். இந்தியர் என்று சொல்லும் போது அவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அடக்கம். அதே போல், அன்றைய காலக்கட்டத்தில் சிலோன் (தற்போதைய ஸ்ரீ லங்கா) நாட்டிலிருந்து வந்தவர்களை சிலோனிஸ்ட் என்று அழைத்தனர்.

இவ்வாறாக இந்தியா, ஸ்ரீ லங்கா நாடுகளிலிருந்து வந்தவர்களை வெள்ளையர்களும், மலாய்க்காரர்களும் வித்தியாசம் தெரியாமல் பொதுவாக, இந்தியன் என்றே அழைத்து வந்தார்கள். சிலோனிலிருந்து வந்தவர்களில் சிலர் மட்டும் (இன்றுவரையில்) தங்களைச் சிலோனிஸ்ட் என்று அடையாளப்படுத்தி வருகின்றனர். வெள்ளையனும் மலாய்க்காரனும் தெரியாமல் செய்த பிழையை நாம் ஏன் தெரிந்தே செய்ய வேண்டும்?

நம் முன்னோர் இந்தியாவிலிருந்து வந்ததினால், அவர்களை பொதுவாக இந்தியன் என்று அழைத்ததன் கூற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். அதே வேளை, மலேசியாவில் பிறந்து, வளர்ந்து, மலாய் மொழியை தேசிய மொழியாகவும், தேன் தமிழ்மொழியைத் தாய் மொழியாகவும் கொண்ட எம்மை இந்தியன் என்று அடையாளப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

எம் தாயின் கருவில் தோன்றிய போது எம் தாயும் தந்தையும் பேசிய மொழி தமிழ்மொழி. எனவே, கருவாக இருக்கும்போதே நான் தமிழனாக உருப்பெற்றேன். எமது தாய் எம்மை மலேசிய மலைநாட்டில் பிறசவித்தாள். எனவே, நான் மலேசியனாகிறேன். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நான் மலேசியாவில் பிறந்ததால் மலேசியத் தமிழச்சியானேன். ஈழத்தில் பிறந்திருந்தால் ஈழத்தமிழச்சியாயிருப்பேன். இலண்டனில் பிறந்திருந்தால் இலண்டன் தமிழச்சியாகியிருப்பேன். இதுவே, இந்தியாவில் பிறந்திருந்தால் எம்மை இந்தியன்/ இந்திய தமிழச்சி என்று அழைப்பதில் நியாயமுள்ளது. தமிழனாக உருப்பெற்று மலேசியனாகப் பிறந்த எம்மை இந்தியன் என அடையாளப்படுத்துவது முறையா?

அவ்வாறு அடையாளப்படுத்துவதால்தான் இன்றும் சில பேர் நம்மை இந்தியாவிற்குத் திரும்பிப் போ என்று சொல்கிறார்கள். நாம் மலேசியத் தமிழ்/ மலேசியத் தெலுங்கு/ மலேசிய மலையாளம் என்று சொல்லி வந்திருந்தால், மற்றவர்களுக்கும் நமது தாய்மொழி என்னவென்று தெரிந்திருக்கும், நமக்கு இந்த நாட்டில் உரிமை கூடியிருக்கும். இப்போதாவது உண்மை உணர்ந்து நம்மை நாம் மலேசியத் தமிழன் என்று அடையாளப்படுத்துவோமா?

இந்திய நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வருபவர்களை இந்தியன் என்று அழைக்கிறோம். நம்மையும் இந்தியன் என்று அடையாளப்படுத்துகிறோம். அப்படி என்றால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் இந்தியாவிற்குச் செல்லும் போது, ஒருவரும் நம்மை இந்தியன் என்று அழைப்பதில்லையே? மலேசியத் தமிழா என்று தானே கேட்கின்றனர். அப்பொழுதும் நம்மில் பலரால் ஏன் இந்த உண்மையை உணரமுடிவதில்லை?



                                           -மலேசியத் தமிழச்சி