வெள்ளி, 23 டிசம்பர், 2011

காதல் துரோகி!




நடந்தது நிஜம்தானா
நான் கண்ட கனவா?
காதல் கொண்ட நாயகன்
காதல் செய்வதையே
பொழுதுபோக்காய் கொண்டான்
அவன் காதல் செய்யவில்லை
வெறும் காமம் கொண்டான்!

காதல் என்று சொல்லி
கன்னியர் வாழ்வை அழித்தான்
இருசித்துப் பார்த்தப் பிறகு
தூக்கி எறிந்தான்!

வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் –அவன்
வருகைக்காக…

போனவன் வரவே இல்லை
கலவரம் கொண்டேன்
கண்ணீர் வடித்தேன் –அவனோ
சல்லாபக் கட்டிலில்
வேறொருத்தியுடன்!

தொட்ட இடம்
எரிகிறதே –தீயாய்
என்னைச் சுடுகிறதே!
கொண்ட காதல் எமனாய் மாறி
கழுத்தை இறுக்கி நேரிக்கிறதே
அவன் தந்த முத்தம் முள்ளாய் மாறி
நெஞ்சைக் குத்தி வதைக்கிறதே!

அன்பு…
அதற்காகத்தானே ஏங்கினேன்
காதலன் என்று பாராமல்
கணவனைப் போல் நடத்தினேன்

காலம் மாறிவிட்டதா?
கலிகாலம் வந்துவிட்டதா?
காதல் எனும் தெய்வத்திற்கு
கேடு வந்துவிட்டதா? –இல்லை
காதல் என்பது காமமாய்
மாறி போய் விட்டதா?

காமம் கொண்ட மிருகமே
மனதைக் கொன்ற அரக்கனே
உன் தாயும் ஒரு பெண்தான்
பெண்ணை மதிக்க மறந்தாயோ
கண்ணை இழந்து நின்றாயோ?

மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!

பெறுவாய் ஒரு குழந்தை
அது பெண்ணாய் வந்து பிறக்கும்
உயிராய் நீ வளர்ப்பாய் –அவள்
வாழ்வை ஒருவன் அழிப்பான்!

காதல் துரோகியே –நீ
கண்ணிழந்து குருடாவாய்
இனிக்க வார்த்தை பேசிய நாவு
இழுத்துக்கொண்டுப் போகும்
தொட்ட உன் கரங்கள்
செயலிழந்து நிற்கும்!
எட்டிப் பார்ப்பதற்கு –உன்னை
ஈ கூட நெருங்காது!

நாசமாய் போகுமடா
உன் ஒழுங்கற்ற வாழ்வு
நீ செய்த வினைகள் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும்
துடிப்பாய், நீ அழுவாய்
தற்கொலை செய்ய முனைவாய்!

நிம்மதியை இழப்பாய்
பொருளெல்லாம் கரைப்பாய்
பிச்சை ஏற்றுத் திரிவாய்
தெரு நாயைப் போல்
மடிவாய்!

செவ்வாய், 13 டிசம்பர், 2011

எம் தவற்றில் உன் பங்கு?



உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?

விடுதலைக்காக வீதிவரை
தமிழகம் சென்று உழைத்தவள் நான்
களத்தின் நின்றதாய் பொய் சொல்லி
பிச்சைக் கேட்டுத் தின்பவன் நீ!

காமப் பசிக்கு காதலை இரையாக்கி
காசுப் பணத்திற்கு இயக்கத்தைக் கைக்காட்டி
புறம்போக்கு நாய்களின் கால்களை நக்கி
பிணம் தின்னும் நீயும் புலியா?

துரோகி நாய் உன்னை
ஏற்பதற்கோர் குழு இருக்க
வீரப் பெண் எம்மை
புறக்கணிக்க யார் உண்டு?

தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?

புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!

(வன்னிமைந்தன் என்ற நாதாரியின் கிறுக்கலுக்கு எமது பதில். உன்னைப் போல் புனைப்பெயரில் எழுத நான் கோழை அல்ல. தைரியம் இருப்பின் நேருக்கு நேர் மோது இனத் துரோகியே!)


வெள்ளி, 2 டிசம்பர், 2011

பினாங்கு, மலேசியாவில் மாவீரர் தினம்




கடந்த 27 நவம்பர் 2011 அன்று உலகில் பல இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. வழமை போல பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஐயா தலைமையில் பட்டர்வெர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கேணல் சங்கரின் மரணத்தைத் தழுவிய நாளையே மாவீரர் தினமாக தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அறிவித்திருந்தார். இருப்பினும், 27-ஆம் திகதி நிகழ்வினை நடத்த இடம் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி 28-ஆம் திகதி, திங்கட்கிழமை இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 2.00 மணிக்கு நிறைவுற்றது.

மக்கள் ஓசையின் நிருபரும், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவருமான தோழர் சே.குணாளன் நிகழ்வினை வழிநடத்திச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஈழப் பண் இசைக்கப்பட்டு முறையே நிகழ்ச்சித் தொடங்கியது. சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் பினாங்குத் துணை முதல்வர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகன், வழக்குரைஞர் மங்களேசுவரி, சமூக நல இயக்கத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், டத்தோ ஆர். அருணாசலம், கவியழகர் க. பெருமாள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் ஈழத்து ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அவர்கள் மாவீரர்களை நினைவுக் கூரும் வண்ணம் அகல் விளக்கினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரமுகர்கள் குத்துவிளக்கினை ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி போரில் உயிர் நீத்த மாவீரர்களை வணங்கினர்.

கவிச்சித்தர் பெ.கோ.மலையரசன் வாசித்த விடுதலைப் போராட்டம் குறித்தான கவிதை அனைவரது மனதினையும் கவர்ந்தது. இவர் ‘பாய் புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தின அறிக்கையை பேராசிரியரின் அரசியல் – ஊடக பிரிவு செயலாளர் திரு. சத்தீஸ் முனியாண்டி வாசித்தார். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகனின் திறப்புரையைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் தமக்கும் தலைவர் மேதகு பிரபாகரனுக்கும் இருந்த உறவை வந்திருந்தோரிடம் பகிர்ந்துக் கொண்டார். போரின் இறுதிக் கட்டத்தின் போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை தம்மால் எப்போதுமே மறக்க முடியாது என்று ஆக்ரோஷமாக முழங்கினார். தாம் பிரபாகரனைத் தம்பி என்று அழைத்த போதிலும், அவரையே தமது முதன்மை தலைவராக வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“பிரபாகரன், ஆயிரங்காலத்துப் பயிர். கடவுளுக்கு நிகரானவர். இப்படியொரு மனிதர் இந்த உலகிற்கு இனி எப்போது கிடைப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் பிரபாகரனுக்கு ஈடாகமாட்டார்கள்,” என அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவர் அவையில் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டார். “கலைஞர் தங்களுக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என அவரே தன் வாயால் என்னிடம் கூறினார். நம் நாட்டு ‘தலைவர்’ சாமிவேலுவைப் பற்றிக் கேட்டேன். அவர் கொடுத்ததை திருப்பிக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பிரபாகரன் சொன்னார்,” எனவும் அவர் தெரிவித்தார்.

போரில் இறுதிக்கட்டத்தின் போது, கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் தம்மைத் தொடர்புக் கொண்டு தலைவர் வீரமரணம் எய்துவிட்டார் என்று சொன்னதாகவும், அச்செய்தி உண்மையாக இருந்தால் விடுதலைப் புலிகளே அதனை அறிவிக்கட்டும் என தாம் அந்த இனத் துரோகியிடம் கூறியதாக பேராசிரியர் குறிப்பிட்டார். “தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராட வேண்டும். போராட்டங்கள் பலவகைப் படும். ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவனின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அன்றைய சூழலில் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது போராட்டத்தின் சூழல் மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல நாமும் நம்மை மாற்றிக்கொண்டு போராட வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டணி ‘புத்ரா ஜெயாவை’ (மத்திய அரசை) கைப்பற்றுமானால், ஈழத்திற்குத் தகுந்த அங்கீகாரத்தினை தாங்கள் வழங்குவோம் எனவும் பேராசிரியர் வாக்குறுதியளித்தார். “சீமான் தலைமையில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டில் கலந்துக்கொண்டு நான் ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். நான் மேடையில் பேசுவதற்கு முன்பு, பயண விசாவில் வந்திருப்பதால் மேடையில் எதுவும் பேசக்கூடாது என காவல் துறையினர் என்னை எச்சரித்தனர். இந்தியா, ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். அத்தனைப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த இராமசாமி பேசுவதால் என்ன வந்துவிடப் போகிறது? கைது செய்தால் செய்துக் கொள்ளுங்கள், நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டேன். சுமார் 2000 காவல் துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. அன்று நான் ஈழதிற்குக் குரல் கொடுத்ததால் தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இன்று வரையில் அந்த தடை இன்னும் அகற்றப்படவில்லை,” என தெரிவித்தார்.

மேலும், தாம் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக என்றுமே குரல் கொடுப்பேன் எனவும் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். அவரது உரையில் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் மகுடிக்குக் கண்டுண்ட பாம்பு போல் மயங்கிக் கிடந்தனர். பேராசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு, மலேசிய வலைப்பதிவு எழுத்தாளர் து. பவனேஸ்வரி, புலிகளின் ஊடகப் பிரிவினைச் சார்ந்த இசைப்பிரியாவைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார். உருக்கமான அக்கவிதை வந்திருந்தோர் ஒரு சிலரது கண்களில் நீரை வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சே.குணாளன் தொகுப்புரை வழங்கினார். மாவீரர் தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிப்பிற்குரிய திரு. வைகோ வெளியிட்ட ஈழம் தொடர்பான குறுந்தட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மாலை மணி 2.00-க்கு மாவீரர் தின கூட்டம் இனிதே நிறைவுற்றது. மலேசியாவில் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்துடன் சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது என இவ்விடம் அறியத் தருகிறோம். அதுமட்டுமின்றி தமிழீழத் தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளையின் பிறந்த தினமும் நாட்டில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. நம்புங்கள், தமிழீழம் வெகு தொலையில் இல்லை!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

வியாழன், 1 டிசம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 5)




பேருந்து நிறுத்தத்திலிருந்து மூவரும் நடந்தே அருகாமையில் அமைந்திருந்த கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் வீடு சென்ற வேளையில் அண்ணி வெளியே சென்றிருந்தார். அண்ணாவின் மச்சினன் மகேந்திரனும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அவரது இரண்டு குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை எம்முடன் வெகு சீக்கிரமே ஒட்டிக்கொண்டாள். பெயர் மதிவதனி! “எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே,” என நான் சொல்ல, “உன்னையெல்லாம் எப்படி போராளியாக்குவது? தலைவரின் மனைவி பெயரைக் கூட மறந்துவிட்டாயே?” என அண்ணா ஏமாற்றத்துடன் கூறினார்.

பையனின் பெயர் வைகறையாளன். ஏற்கனவே அவனைப் பற்றி அண்ணாவின் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்தில் அவனும் எம்முடன் சேர்ந்துக் கொண்டான். நான் அடிக்கடி அழைப்பேசியில் சண்டைப் போடும் வாசன் நேரிலும் விட்டு வைக்கவில்லை. எலியும் பூனையும் போல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவின் நண்பரான பாண்டியன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவரும் அவ்விடம் இருந்தார்.

மகேந்திரன் ஒரு சொம்பில் எனக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுக்க, நன்றி சொல்லி அதனைப் பெற்றுக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ வெளியே சென்றிருந்த அண்ணியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். என்னை விட 2 அல்லது 3 வயதுதான் மூத்தவராக இருக்க வேண்டும். கறுப்பென்றாலும் கஸ்தூரி என்று சொல்வார்களே அதற்கேற்றார் போல கலையான, அழகான முகம். அண்ணி வந்த சில நிமிடங்களிலேயே வேலை நிமித்தமாக வாசனும் அண்ணாவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டனர். பாண்டியன் மட்டும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார். வந்ததும் வராததுமாக அண்ணி அவசர அவசரமாக சமையல் வேலையில் இறங்கினார்.

அதற்கு முன்பாக தான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டி எனது கூந்தலில் வைத்துவிட்டார். இங்கே விழாக் காலங்களிலும், சிறப்பு தினங்களில் மட்டுமே பூ வைப்பது வழக்கம் என்பதால் அது சற்று வித்தியாசமாகப் பட்டது. இருந்தும் சேலையும், பூவும் தமிழர் கலாச்சாரம் என்பதால் எனக்குப் பிடித்திருந்தது. பழங்காலத்தில் தேங்காய் திருவப் பயன்படுத்தும் மணக்கட்டையுடன் கத்தி பொருந்திய ஒரு பலகையை அண்ணி எடுத்து வந்து வரவேற்பறையில் ஓரத்தில் போட்டார். அதனை நாங்கள் எங்கள் நாட்டில் ‘தேங்காய்த் திருவி’ என்று அழைப்போம். நான் சிறு வயதாக இருக்கும் போது எனது பாட்டி அதில்தான் வீட்டில் சொந்தமாகத் தேங்காய்த் திருவுவார். இப்போதெல்லாம் இதனைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாட்டி வீட்டில் இருந்த தேங்காய் திருவி கூட எங்கேயோ காணாமல் போய்விட்டது.

அண்ணி அதனை எடுத்துப் போட்டு, அதிலேயே பரக்பரக்கென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். சாதாரண கத்தியும், கட்டையும் கொடுத்தாலே நான் நின்று நிதானமாகத்தான் வெட்டுவேன். இவர் இப்படி தேங்காய்த் திருவியில் விறுவிறுவென நறுக்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் கொடுத்திருந்தால், ஒன்று எனது விரலை அறுத்துக் கொண்டிருப்பேன் இல்லையேல் அவை அனைத்தையும் நறுக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்திருப்பேன்.

குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டு அண்ணியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்விசிறி, தொலைக்காட்சி என அனைத்தும் நின்றுவிட்டது. நான் குழப்பத்துடன் அண்ணியைப் பார்த்தேன். “மின்வெட்டு” என்றார்; புரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என இதற்கு முன்பே தோழர்கள் சொல்லியிருந்தார்கள். இன்று அதனை நேரில் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. மதியம் 1 மணி இருக்கும். உச்சி வெயில் உச்சந்தலையைக் காய வைக்கும் நேரம். மின்விசிறி கூட இல்லாததால் வியர்வையிலேயே குளித்துவிட்டேன்.

இதே நிலை மலேசியாவில் ஏற்பட்டிருந்தால் ஆளும் கட்சிக்கு நேரக்கூடிய விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தேன். தமிழ்நாட்டு மக்கள் அதனை அதிகம் பெரிதுப்படுத்தவில்லை போலும் என எண்ணிக்கொண்டேன். 1 மணி நேரம் சென்ற பிறகுதான் மின்சாரம் மீண்டும் வருமாம். சரி, புழுக்கத்தில் புழங்க பழக்கப்படுத்திக் கொள்வோம் என அமைதியாய் இருந்தேன். பாண்டியனிடம் முட்டை வாங்கி வரும்படி கூறி, மகேந்திரனையும் உடன் அனுப்பினார் அண்ணி. மதிவதனி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள். வைகறையாளன் மட்டும் என்னுடனேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கீரா அண்ணாவும், வாசனும் வந்துச் சேர்ந்தனர். வந்த உடனேயே எனக்கும் வாசனுக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இம்முறை குழந்தைகளை விட்டு ஒருவரை ஒருவர் அடிக்க வைத்து திருப்தி பட்டுக்கொண்டோம். குழந்தைகளை யாரும் திருப்பி அடிக்க முடியாதல்லவா? முதலில் வாசன் பக்கம் இருந்த வைகறையாளன் பின்பு என் கட்சியில் சேர்ந்துவிட்டான். “டேய், இப்பவே பொண்ணுக்காக என்னை அடிக்கிறியே?” என்று வாசன் அந்தச் சிறுவனைக் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மதிவதனி மட்டும் சிறிது நேரம் என் பக்கமும், பின்பு வாசன் பக்கமும் கட்சி மாறிக் கொண்டிருந்தாள். அதற்குள் முட்டை வாங்கச் சென்றவர்களும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

கீரா அண்ணா எனக்காக அரைவேக்காடு முட்டை தன் கையால் போட்டுத் தந்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். கோழிக்கறி, இரசம், அரைவேக்காடு முட்டை என சமையல் பிரமாதமாய் இருந்தது. வாசன் அனைவருக்கும் தட்டில் சோறு போட்டு வைக்க, அண்ணன் முட்டை பொறிப்பதில் தீவிரமாக இருந்தார். அன்று மதியம் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஒன்றாக மதிய உணவு உட்கொண்டோம். கறி (குழம்பு) வேண்டுமென்று நான் சொல்ல, அண்ணி கோழி இறைச்சித் துண்டுகளை அள்ளி என தட்டில் வைத்தார். “இல்லை இல்லை, எனக்குக் கறி (குழம்பு) வேண்டும்,” என மீண்டும் சொல்ல, மறுபடியும் அவர் இறைச்சித் துண்டுகளை கரண்டியில் அல்ல, நான் குழம்பிப்போனேன். பின்னர்தான் “கறி இல்லை, குழம்பைத்தான் தங்கை கறி என்கிறாள்,” என கீரா அண்ணன் தெளிவுப்படுத்தினார்.

அப்போதுதான் எனது தவற்றையும் நான் உணர்ந்தேன். ஆம், கறி என்றால் இறைச்சியைத் தானே குறிக்கும்? குழம்பு என்பதுதானே சரியானச் சொல்? இத்தனைக் காலமும் நானும் என் நாட்டு மக்களும் இந்தச் சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகிறோமே என வெட்கமாகவும் இருந்தது. சரி, இனி திருத்திக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதிக் கொண்டேன். கீரா அண்ணன் அரைவேக்காடு முட்டையை நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என பார்க்க ஆவலாக இருந்தார். அதனை கீழே ஒழுகாமல் ஒரேயடியாக வாயில் போட்டு முழுங்க வேண்டும். எனக்கு அந்த அளவிற்குத் திறமை கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மதிவதனி அவளுடைய முட்டையைச் சாப்பிட்டுவிட்டு வேறு யாரிடம் முட்டை இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருந்தாள்.

சாப்பிடத் தெரியாமல் மற்றவரின் கேலிக்கு ஆளாவதை விட அதனைச் சாப்பிடாமல் இருந்துவிடலாம் எனத் தோன்றியது. எனவே, அண்ணன் பொறித்த முட்டையை மதிவதனியிடம் கொடுத்துவிட்டேன். ஆசையாய் பொறித்த முட்டையை நான் சாப்பிடவில்லை என அண்ணன் சற்று ஏமாற்றமடைந்தார். இன்னொரு நாள் நிச்சயம் சாப்பிடுகிறேன் எனச் சொல்லி தப்பித்துக் கொண்டேன். கோழிக் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டு எழும்பும் போது, “என்ன அதற்குள் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சம் சோறு போட்டு இரசம் ஊற்றிச் சாப்பிடு,” என அண்ணா சொல்லவும் எனக்குத் தலைச் சுற்றிவிட்டது. உண்மையிலேயே எனது வயிற்றில் இடமில்லை. போதும் என்று சொல்லியும் விடவில்லை. சரியென்று அவர்கள் திருப்திக்காக இன்னும் கொஞ்சம் சோறும், இரசமும் பிணைந்துச் சாப்பிட்டு முடித்தேன்.

நாங்கள் அனைவரும் உண்டு முடித்த வேளையில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. இவர்கள் எப்படித்தான் இந்தப் புழுக்கத்தையும் மின்வெட்டையும் சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் அருண்ஷோரி அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். இதற்கு முன் தொலைப்பேசியிலும், இணையத்திலும் பேசியிருந்தாலும் இன்றுதான் நாங்கள் நேரில் சந்திக்கிறோம். மிகவும் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் இருந்தார். ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ சவரம் செய்யாத முகம். தாறுமாறாக வளர்ந்திருந்த தாடி முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அந்த கறுப்பு முகத்தில் வெள்ளைக் கண்கள், இரவு வானில் மின்னும் நிலவு போல ஒளிவீசிக் கொண்டிருந்தன. அணிந்திருந்த கறுப்புச் சட்டை அவர் பெரியார் கொள்கையினைப் பின்பற்றுபவர் என்பதனைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.