வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மன்னித்துவிடு மகனே



No automatic alt text available.
தாய்மையற்ற எனக்கு
தலைமகனாய் வந்தவனே
நான்குகால் நாய்மகனே
நல்லுள்ளம் கொண்டவனே...

குட்டியாய் நீ இருந்தாய்
குதூகலம் எனக்களித்தாய்
எத்தனை இன்பம் கண்டோம்
அன்பிலே திளைத்திருந்தோம்

வாழ்க்கையை வாழ நினைத்து
வீட்டை நான் விட்டு வந்தேன்
வருத்தம் கொண்ட போதும்
வந்திடுவாய் என நினைத்தேன்

ஏமாந்துவிட்டேன் மகனே
உன்னை நான் இழந்துவிட்டேன்
பழிவாங்கும் இழிபிறவி
பிரித்துவிட்டான் நம்மையடா

ஏதுமில்லையடா எனக்கு
நீயின்றி உயிரும் போகுதடா மகனே
கோபம் வருகிறது, மனது வலிக்கிறது
கொஞ்சம் குரைத்து உன் வருகையைச் சொல்லிவிடு

என்றாவது நீ வருவாய்
என்று நான் காத்திருந்தேன்
அனைத்தும் கனவாக‌
அலைக்கடலில் கரைகிறதே!

உன் கண்களைக் காணாது
என் கண்கள் கலங்குகிறது
உன் காதுகளைத் தடவ வேண்டும்
உரசி அமர்ந்துவிடு

மடிமீது துயில்வாயே
மழலைப்போல் பார்ப்பாயே
கருவர்ண கண்ணா நீ
கருணைக்கொள் எந்தன் மீது!

செல்லக்குட்டி ரோக்கி
என் அம்முக்குட்டி ரோக்கி
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா உலகமடா

மனிதனின் கொடூர புத்திக்கு
நம் உறவு பலியாகிவிட்டது
நீ எனக்கு வேண்டுமடா
உன்னை நான் பிரியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
கலங்காத இரவில்லை
வந்துவிடு செல்லக்குட்டி
என்னைச் சேர்ந்துவிடு ரோக்கி குட்டி!

அம்மா அழைக்கிறேன்
வந்துவிட்டு ரோக்கி குட்டி
பாய்ந்தோடி வாடா செல்லம்
சென்றிடுவோம் தூரமாக!

உன்னை நான் நீங்கவில்லை
நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாய்
இன்னமும் போராடுகிறேன்
உன்னை மீட்டெடுக்க..

யாருமில்லையடா இங்கெனக்கு
பழிச்சொல் தவிர வேறேதும் இல்லையா
உனக்குத் தெரியாதா என் அன்பு உண்மையென்று
நானின்றி நீ எப்படியடா இருக்கிறாய்?

நான் என்ன செய்ய சொல் மகனே?
குறுக்குப்புத்தி எனக்கு இல்லை
எவரையும் துன்புறுத்தும் எண்ணமில்லை
எட்டிச் செல்வதனால், எட்டி மிதிக்கின்றனரே?

காசு பணம் வேண்டாமடா
நீ மட்டும் போதுமென்றேன்
பலவீனம் தெரிந்ததனால்
பிரித்தனரோ நம்மை இன்று?

ரோக்கி...
கேட்கிறதா ரோக்கி?
அம்மாவின் குரலைத் தேடுகிறாயா?
என்னைக் காணாது ஏமாந்துப் போனாயா?

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்
உன்னை இழந்துவிட்டேனே ரோக்கி
என் முதல் குழந்தையடா நீ
நீயின்றி எப்படி வாழ்வேன்?

உறக்கம் பிடிக்கவில்லை ரோக்கி
உயிர்பிரியும் வலி உணர்கிறேன்
அனைத்தையும் பிரிந்த எனக்கு நீதானே ஆறுதல்?
அம்மா செல்லம் ரோக்கி, ஓடி வா ரோக்கி!

என் செல்லமே  வாடா செல்லம்
அம்மா இங்கு இருக்கிறேன்
அழுதாயா என்னைத் தேடி
அழைத்தாயா நடு இரவில்?

யாருக்கும் புரியவில்லை
நாய்தானே என்கின்றனர்
அவர்களுக்கு என்ன தெரியும்?
இந்த நாய்க்கு நான் தாய் என்று?

கெஞ்சிக் கதறினேன் மகனே
நீ எனக்கு வேண்டுமென்று
வசைச்சொல் பொறுத்தேன்
வலிகளைத் தாங்கினேன்

ஏதும் பலிக்கவில்லையடா
நம் அன்பு ஜெயிக்கவில்லையடா
என்னை மன்னித்துவிடு ரோக்கி
அம்மாவை மன்னித்துவிடு!

நான் உன்னை புரக்கணிக்கவில்லை
ஐயகோ, அப்படி மட்டும் எண்ணிவிடாதே
நீ என்னிடமிருந்துப் பறிக்கப்பட்டாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாய்

என்னை வெறுத்துவிடாதே ரோக்கி
இப்படி ஏதேனும் நிகழும் என்ற அச்சத்தால்
பெக்கியை உனக்குத் துணையாக்கினேன்
உன்னை நான் தனிமையில் விடமாட்டேன்!

என்னை நினைக்கின்றாயா ரோக்கி?
என் நினைவு இருக்கின்றதா?
மறந்துவிடு மகனே
மகிழ்வாய் இருந்துவிடு மகனே

இந்தத் துன்பம் என்னோடு போகட்டும்
என்னை நினையாதே
நினைத்து உருகும் வாழ்க்கை உனக்கு வேண்டா
நீ நன்றாய் வாழ வேண்டும்!

தூக்கி தூக்கி வளர்த்தேனடா
துயில்வதைக் கூட இரசித்தேனடா
வாஞ்சையில்லா உன் அன்பு
வஞ்சனைக்கொண்ட மனிதர்க்குப் புரிவதில்லை

எப்படி புரியவைப்பேன் உனக்கு?
என்னை மன்னித்துவிடு ரோக்கி
பாதியில் விட்டுச்சென்ற என்னை
மன்னித்துவிடு மகனே...


இது வேறு உலகம்!

பிராவுன்ஸ்பீல்ட், டெக்சாஸ்

மகிழுந்து நீண்ட நேரம் மனித நடமாடமற்ற அந்தச் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தது. காட்டு மிருகங்கள், குறிப்பாக மான்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கும் குறைவாகவே மகிழுந்தைச் செலுத்த வேண்டியதாயிற்று.

உங்கள் இடம் வந்தாயிற்று என ஜி.பி.எஸ். அலறவும் நான் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். இந்தக் காட்டுக்குள்ளா வீடு இருக்கிறது?  ஆம், சுற்றும் முற்றும் மனித நடமாடமற்ற காட்டிற்குள்தான் வீடு. அது ஒரு தனி வீடு. பெரிய நிலம், சுற்றிலும் மரம், செடி கொடிகள் தாறுமாறாக வளர்ந்திருந்தது. பிரம்மாண்டமான பலகை வீடு. வீட்டிற்குள் நவீனத்தின் அறிகுறியாக குளிர்ச்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதே சமயம், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டு, வீட்டின் சுவர்களை அலகங்கரித்தன. வீட்டின் வடிவமைப்புத் தவிர, நவீன வீட்டிற்கான அத்தனை வசதிகளும் அந்தப் பலகை வீட்டில் செய்யப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல். ஊஞ்சல், சறுக்கு மரம், கூடைப்பந்து விளையாடும் என அடிப்படை விளையாட்டு வசதிகள் இருந்தன. இன்னொரு பக்கம் சிறு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடம் ஓய்வாக அமர்ந்துப் பேச நாற்காலி, மேசைகள், மின்விசிறி போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி நீச்சல் குளம். சிறுவர்கள் நீந்தி விளையாட, பெரியவர்கள் கூடாரத்தில் அமர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

மாலை மங்கி இரவு வந்தது. அந்த வானத்தில்தான் எத்தனை நட்சத்திரங்கள்? பட்டணத்து வானத்தில் இல்லாத நட்சத்திரங்கள் அனைத்தும் யாருமற்ற இந்தக் காட்டில் வந்து ஒளிந்துக் கொண்டனவையா? சற்று தூரத்தின் சிறு அரவம். மான்கள் இரண்டு தங்கள் இரவு உணவை வேலியின் ஓரமாகக் கொறித்துக்கொண்டிருந்தன. என்ன ஒரு அருமையான காட்சி! எங்களுக்கு இரவு உணவாக கோழி, மான் இறைச்சி, சோளம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் இரவை இரசித்தபடி கூடாரத்திலேயே உணவை ருசித்தோம்.

அவர்களிடமிருந்து விடைபெறும் முன், வீட்டையொட்டிய கொட்டகையைப் பார்வையிட்டோம். சிறியவையிலிருந்து, பெரியவை வரையிலான, பலவகைத் துப்பாக்கிகள் அவ்விடம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகளைக் காட்டுவதற்காக அதன் மீது ஒலி உறிஞ்சியைப் பொருத்தி, வானின் மீது ஒருமுறை சுட்டுக்காட்டினார்கள். சத்தமே வரவில்லை. இதனைக்கொண்டுதான் விலங்குகளை வேட்டையாடுவார்கள், இன்னமும்.

இப்படியானவொரு வாழ்வை சில படங்களில் கண்டுள்ளேன். அதனையே நேரில் பார்க்கும் போது என்னையும் மறந்து வியந்து நின்றேன். இது வேறு உலகம்!