செவ்வாய், 3 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 3



...தொடர்ச்சி

அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்ணை அடிமையாக்குதல்

‘ஆத்துக்குப் போகணும்’ நாவலில் வரும் காயத்ரி என்ற பாத்திரம் தனது மேலதிகாரியிடம் அடங்கி ஒத்துப் போகவேண்டிய சூழலைக் காண்பிக்கின்றது. பெண்கள் எங்குச் சென்றாலும் அவர்களுக்கு ஆண்களால் தொல்களே மிஞ்சுகின்றன. வேலைக்குச் செல்லும் இடத்தில் மேலதிகாரிகளிடம் அவர்கள் விரும்பும் வண்ணம் நடந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் தொழிலில் முன்னேற முடியாது; பதவியுயர்வு கிடைக்காது; வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். காயத்ரியின் மேலதிகாரி சனிக்கிழமை அவளை வெளியே அழைக்கிறார். காயத்ரியின் மனம் இடம் தராவிட்டாலும் அதிகார ஆண் வர்கத்தைப் பகைக்க முடியாத காரணத்தால் சாக்குப் போக்குச் சொல்லி நழுவப் பார்க்கிறாள். தனக்கு இது பிடிக்கவில்லை என்று நேரடியாகச் சொல்ல முடியாத சூழலில் அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்.



‘ஆறுமுகம்’ நாவலில் வரும் ஜெரி ஆல்பட் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனபாக்கியத்தை அடைகிறான். வசந்தாவும் அட்டை கம்பெனி மெனேஜரிடம் எல்லா வகையிலும் குறிப்பாக உடல் பசியைத் தீர்ப்பது போன்ற காரியங்களுக்கும் ஒத்துப் போவதனால் மட்டுமே நூறு ரூபாய் சம்பள உயர்வு பெறுகிறாள். சமையல் தொழில் செய்யும் குப்புசாமி கூட தன்னிடம் வேலைப் பார்க்கும் பெண்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறான். பெண்களைச் சிறிதும் மதிக்காமல் நாயைப் போல் நடத்துகிறான். அவனது ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் கேட்டுக்கொண்டுக் கிடைக்கின்ற கூலிக்காக வாய் மூடி வேலை செய்கின்ற அவல நிலையையும் நாவலில் காண்கிறோம்.



அதுமட்டுமின்றி நர்ஸ் புஷ்பமேரியும் ஒரு டாக்டரால் ஏமாற்றப்படுகிறாள். தனக்கு மேலே வேலை செய்யும் டாக்டர் என்ற பயமும் அவளை டாக்டரின் காமப்பசிக்கு இணங்கிப் போகச் செய்திருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. மருத்துவமனைக்கு அரும் செக்குமேட்டுப் பெண்களை கிழட்டு டாக்டர்கள் கில்லுவதும், உரசுவதும், கண்ணடிப்பதும் அவர்களின் கேவலமான அதிகாரத்துவ புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினர் கூட செக்குமேட்டுப் பெண்கள் விபச்சாரிகள் என்பதால் மிருகத்திலும் கீழாக நடத்துகின்றனர். பெண் என்றும் பாராமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடித்துத் துன்புறுத்துவதை நாவலின் வழி காண முடிகின்றது. இதன் மூல அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.


...தொடரும்

கருத்துகள் இல்லை: