வியாழன், 28 ஏப்ரல், 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 2




தொடர்ச்சி...

ஆணாதிக்கம்

ஒரு பெண் பிறந்தவுடன் தந்தையின் அரவணைப்பிலும், வளரும்போது சகோதரனின் கண்காணிப்பிலும், திருமணமானவுடன் கணவனின் கட்டுப்பாட்டிலும், வயதானவுடன் ஆண் பிள்ளையின் ஆதரவிலும் வாழ்கிறாள். இவ்வாறாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முழுக்க முழுக்க ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. காவேரியின் ‘ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவலிலும் இந்த ஆணாதிக்கப் போக்கை நம்மால் காண முடிகின்றது. இந்நாவலில் திருமணமானப் பெண்கள் தங்கள் திறமைகளைத் தொடர முடியாமல் முடக்கி வைக்கப்படுவது காட்டப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு காயத்ரி நாட்டியத்திலும் ரமா எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு ரமாவுக்கு எழுவது ஒரு பொழுதுபோக்காகவும், காயத்ரிக்கு நாட்டியம் ஒரு உடற்பயிற்சியாகவும் தேய்ந்துவிட்டது. இருவருக்கும் தங்களின் கலைகளைத் தொடர நேரமும் வசதியும் இல்லாமல் போய்விட்டது.



பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் திறமைகளையும் கலைகளையும் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனை கணவர்களான ஆண்களும் கண்டுக்கொள்வதில்லை. மனைவியின் திறமை அல்லது ஆசைகளுக்குக் கணவன்மார்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களுக்கும் ஆண்களைப் போல் மனதில் ஆசைகளும் இயற்கையாகச் சில திறமைகளும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகின்றனர். பெண்களை எப்போதும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். உதாரணமாக, ரமா தன்னுடைய கணவன் துரைசாமி தன் எழுத்துத் திறமையை அங்கீகரிக்காததோடு தன்னைச் சந்தேகப்படுவதைக் கண்டு கவலைப் படுகிறாள். கணவன் மட்டுமல்லாது இந்தச் சமுதாயமே தன்னைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதையும் அவளால் உணர முடிகிறது. பெண் எழுத்தாளர்களின் விஷயத்தில் மட்டும் இலக்கிய படைப்புகளை அவர்களின் சொந்த வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுவதை எண்ணி நோகிறாள். இவ்விடம் எழுத்தாளர்களின் மத்தியில் கூட ஆண் பெண் பேதம் பார்க்கப்படுவதைக் காண முடிகிறது.



பெற்றோர்களே தன் பிள்ளைகள் மத்தியில் ஆண் பெண் பேதம் பார்த்து வளர்ப்பதையும் இந்நாவலில் காண்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் கொடுத்து சாகடிக்கும் பழக்கம் இருந்து வந்ததை நாம் நன்றாய் அறிவோம். இந்நாவலில் வரும் ரமாவின் அண்ணன் முட்டாள் உதவாக்கரையாக இருந்தபோதிலும் ரமாவின் பெற்றோர்கள் அவனை ரமாவை விடச் செல்லமாக வளர்த்தனர். அனைத்து விசயத்திலும் ரமா கெட்டிக்காரியாக இருந்தபோதிலும் அவளை அவளது பெற்றோர்களே மதிக்கவில்லை. ரமாவுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத துரைசாமியை அவளுக்குக் கட்டிவைத்து அவளை அத்தோடு கைக்கழுவி விடுகின்றனர். சொந்த பெற்றோர்களே ரமாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளை உதாசீனம் செய்கின்றனர்.



ஆறுமுகம் நாவலிலும் ஆணாதிக்கப் போக்குப் பரவலாகக் காட்டப்படுகிறது. ஜெரி ஆல்பட் தன்னிடம் வேலைப் பார்க்கும் தனபாக்கியத்திற்கு திருமணமாகி ஒரு மகனும் உண்டு என்பதை அறிந்திருந்தும் தனது காமப்பசிக்கு அவளை இரையாக்குகின்றான். தனது ஒரே மகனை நன்றாகப் படிக்க வைத்து இன்ஜினியராக்க வேண்டும் என்ற கனவு அவளை ஜெரி ஆல்பட்டின் ஆசைக்கு இணங்க வைத்தது. இதனால் தனபாக்கியம் தனது தந்தையை இழந்து மகனைப் பிரிய நேரிடுகிறது.



செக்குமேட்டில் வாழ்ந்து வரும் சின்னப் பொண்ணுவிற்கும் தருமமூர்த்திக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத போதிலும் பெண் என்ற ஒரே காரணத்தால் சின்னப் பொண்ணு அடிமைப்படுத்தப்படுகிறாள். தருமமூர்த்தி அவளைத் தகாத வார்த்தைகளால் திட்டுகிறான்; பணம் கேட்டு அடிக்கிறான். சின்னப் பொண்ணு, அபிதா போன்றோரிடம் தங்களது காமப்பசியைப் போக்கிக்கொள்ள வரும் ஆண்களும் அவர்களை ஒரு போகப்பொருளாக, உணர்ச்சியற்ற பிண்டமாகவே பார்க்கின்றனர். ஒரு சில ஆண்கள் அவர்களின் தேவைத் தீர்ந்த பின்பு இவர்களுக்குப் பணம் கொடுக்காமல் அடிக்கவும் செய்கின்றனர். இவ்விடம் ஆணாதிக்கப் போக்கு நன்கு வெளிப்படுகிறது.

...தொடரும்

கருத்துகள் இல்லை: