வியாழன், 7 ஜூலை, 2016

கடல் புறா -சாண்டில்யன் (பாகம் 3)


அஷையமுனையை விட்டு கடலில் பயணம் மேற்கொண்ட இளைய பல்லவன் மனதில் கடாரத்து இளவரசி காஞ்சனா தேவியும், மஞ்சளழகியும் மாறி மாறி வந்துப் போயினர். கடல் மோகினியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடல் புறாவை கலிங்கத்துப் போர்க் கப்பல்கள் தாக்க ஆரம்பித்தன. கடல் புறாவின் முதல் கடல்போர் வெற்றியில் முடிந்தது. அதிஷ்டவசமாக, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியும், அவளது தந்தை குணவர்மனும் கலிங்கத்து கப்பல்களில் இருந்ததினால், அவர்களையும் இளைய பல்லவன் காப்பாற்றினான்.

நக்காவரத்தில் இருக்கும் தமிழர்கள் துணையுடன் போரினால் சேதமடைந்த  தனது கப்பல்களைச் சரிசெய்ய நினைத்த இளைய பல்லவனுக்கு பெருத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. மாநக்காவரத்தில் இருந்த கங்கதேவனைச் சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துகிறான் கருணாகரப் பல்லவன். கங்கதேவன் காஞ்சனா தேவியை அடைய முயன்றதால், அவனைக் கொலையும் செய்கிறான். அடுத்ததாக, கடாரத்தைப் பலவர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அடுத்தக் கட்ட முயற்சியில் ஈடுபடுகிறான். கடாரத்தில் குணவர்மனையும் காஞ்சனா தேவியையும் விட்டுவிட்டு, கடல் நாடுகளில் காலை ஊன்றச் சென்றுவிடுகிறான். வெற்றிக்கொண்டு மீண்டும் கடாரம் வந்திறங்கிய இளைய பல்லவனை சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இளவரசர் அநபாயர் சிறைப்பிடிக்கிறார். 

இளைய பல்லவனின் சிறைப்பிடிப்பு ஒரு அரசியல் நாடகம் என்பதை அநபாயர் அவனுக்கு விளக்குகிறார். கருணாகரனைச் சிறிது காலம் அஷையமுனையில் தங்கியிருக்குமாறும், காஞ்சனா தேவியை உடன் அழைத்துச் செல்லுமாறும் உத்தரவுப் பிறப்பிக்கிறார். மஞ்சளழகியை நினைத்து இளைய பல்லவன் அதற்கு உடன்பட மறுக்கிறான். அனைத்தையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த அநபாயக் குலோத்துங்கன் அமீரின் உதவியுடன் தந்திரம் செய்து அவர்களை அஷையமுனைக்கு அனுப்புகிறான். இருப்பினும், கடல் பயணத்தின் பாதி வழியில், இளைய பல்லவன் கப்பலில் வழியை மாற்ற, அது மலையூர்க் கோட்டையை நோக்கிச் சென்றது. ஜம்பி நதி முகத்துவாரத்தில் பெரும் போரில் ஈடுப்பட்ட கடல்புறா இறுதியாக, ஸ்ரீவிஜயத்தின் கடற்படை தளபதி விஜயசந்திரனைச் சுற்றி வளைத்தது. 

மலையூரைத் தன் வசமாக்க நினைத்த இளைய பல்லவன், கோட்டையில் மஞ்சளழகியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான். ஜெயவர்மன் மஞ்சளழகியைத் தன் மகளாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீவிஜயத்தின் இளவரசி பட்டத்தினை அளித்ததையும், தாம் தற்போது மலையூர்க் கோட்டையின் தலைவர் என்பதையும் மஞ்சளழகி விளக்குகிறாள். இருப்பினும், இளைய பல்லவன் மீதுள்ள காதலினால், அவனுக்கு உதவ முற்படுகிறாள். 

இவ்வேளையில், இளைய பல்லவனைத் தேடி கோட்டைக்கு வந்த காஞ்சனா தேவிக்கும், மஞ்சளழகிக்கும் வாக்கு வாதமும், மனவருத்தமும் முற்றுகிறது. மஞ்சளழகி கோட்டையைப் பிடிப்பதற்கு உதவியதையும், தனக்காகச் செய்த பெரும் தியாகத்தையும் இளைய பல்லவன் காஞ்சனா தேவியிடம் விளக்கு இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறான். மலையூர்க் கோட்டையை தன் வசமாக்கிக்கொண்ட இளைய பல்லவன், மங்கையர் இருவரையும் கடல்புறாவில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவிஜ‌யத்தை நோக்கிப் பயணமானான். 

சுமார் மூன்று நாட்கள் நடந்த போரில், ஸ்ரீவிஜயம் வீழ்ந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சொர்ணத் தீவும், கடாரமும் சேர்ந்த பெரும்பகுதி குணவர்மனுக்கும், சைலேந்திரர்களின் ஜன்ம பூமியான சாவகத் தீவு ஜெயவர்மனுக்கும் பிரித்தாள கொடுக்கப்பட்டன. 

தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற இளையபல்லவனை வரவேற்ற வீரராஜேந்திர சோழர் வண்டைக் குறுநிலத்தை இளையபல்லவனுக்கு அளித்து கருணாகரத் தொண்டைமான் என பெயரும் வழங்குகிறார். அவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், மஞ்சளழகியையும், காஞ்சனாதேவியும் மணமுடித்து வாழ ஆசியும் வழங்குகிறார் வீரராஜேந்திர சோழர். 

இவ்வாறாக சுபமுடன் நாவல் முடிவுறுகிறது. மூன்று பெரும் பாகங்களாகப் படைக்கப்பட்டுள்ள இந்நாவலின் முதல் பாகத்தில் காஞ்சனா தேவியும், இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியும் கதைத்தலைவிகளாக வலம்வருகின்றனர். நாவலின் மூன்றாம் பாகத்தில் மட்டுமே மங்கையர் இருவரும் சந்திக்கின்றனர். ஆகவே, மூன்றாம் பாகத்தில் இளையபல்லபன் மற்றும் இரு மங்கையர் துணையுடன் பயணிக்கிறது கடல்புறா. 

நாவலில் இடம்பெரும் கடாரம் பற்றிய சில குறிப்புகள்:

*இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரசிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கையைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றிக் கொண்டதும் உலகமே வியந்தது. பக்.70

*தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம்... பக்.362

*'தொடு கடல் காவல் கடுமுரட்  கடாரமும்' என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவல் கொண்டான். பக்.363

* "கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
    திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக்'
    கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில்
    மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்..."  பக்.363

*மலாக்க ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஞ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். பக்.365

*கி.பி. 1062-வது வருடத்திற்குப் பிறகு குலோத்துங்கத் தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி.பி.1067-ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பக்.372

*நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான். பக்.373



கருத்துகள் இல்லை: