செவ்வாய், 3 ஜூலை, 2012

வலியும் அழுகையும்!


புதன், 6 ஜூன், 2012

எப்பொழுதும் உன் கற்பனைகள்...


வியாழன், 31 மே, 2012

எப்பொழுதும் உன் கற்பனைகள்…



அதிகாலை அலாரம் அலறியது
நீ எழுவதற்குள் எக்கி அதை அணைத்தேன்
என் கரங்களுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
உலகை மறந்து உறக்கம் கொண்டாய்
மெல்ல இதழ் பதித்து எழுப்பினேன்…

பனிக்காலை இதழ் பிரிக்கும் மலர் போல
மெல்ல இமை விரித்து எமை பார்த்தாய்
இதழோடு இதழ் பதித்து சுவை தந்தாய்
உடலோடு உடல் இணைத்து சுகம் தந்தாய்…

நீ குளித்து உடைமாற்றி தயாராக
நான் காப்பி கலந்து வைத்தேன் சுமாராக…
கட்டி அணைத்தபடி முத்தம் தந்தாய்
சுகத்தோடு எம்மிடத்தில் விடைப்பெற்றாய்!

நொடிக்கொரு குறுந்தகவல்
இதயத்தில் மென்மை வருடல்
மணிக்கொரு அழைப்பு
மனதினிலே தவிப்பு…

கடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்தன
முகநூலில் உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து ஏக்கம் தீர்த்தேன்
நீ எழுதிய கவி வார்த்தைகள்
படித்துக் குடித்துத் தாகம் தீர்த்தேன்!

வேலை முடிந்து வீடு நோக்கினேன்
போகும் வழியெல்லாம் உன்னுடன் பேசினேன்
மகிழுந்து நிறுத்துமிடத்தில் உமது வாகனம்!

இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
வண்ண வண்ணமாய் சிறகடித்தன
களைப்பு நீங்கி கண்கள் பிரகாசமாயின
கால்களுக்கு புதுத்தெம்பு கிடைத்தது
ஓட்டமும் நடையுமாக குடியிருப்பை அடைந்தேன்!

மின்தூக்கியின் சில நிமிட தாமதம்
அதற்குள் யுகங்கள் வீணாகியது போன்று கலக்கம்
வீட்டு வாசல் நெருங்கிவிட்டேன்…

அதோ என் உயிர்!
நானின்றி தனிமையில்
எனக்குமுன்னே வாசலில்
அளவில்லா பாசத்தில்
காத்திருக்கிறது நேசத்தில்!

ஓடிச்சென்று கட்டி அணைத்தேன்
ஏக்கம் அனைத்தும் சொல்லித் தீர்த்தேன்
வீட்டில் சென்று சமைத்து முடித்தேன்
அவன் பசித்தீர்க்க சோறு ஊட்டினேன்…

என் பாசம் கண்டாய்
கண் கலங்கி நின்றாய்
உன்னைப் போல் பெண்ணை
வாழ்வில் கண்டதில்லை என்றாய்!

மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்
உன் வார்த்தைகளில் கரைந்தேன்!

மாலை மங்கும் நேரம்
சிறு தூறல் போடும் வானம்
தென்றல் வீசும் காற்று
சுகம் அள்ளித் தெளிக்கும் காதல்!

கடற்கரைச் சென்றோம்
கரம்தனை பற்றினாய்
“என் கரத்தில் உன் கரம்
என்றுமே அடக்கம்
நீயின்றி ஒரு வாழ்க்கை
அது உண்மையில் நரகம்”
காதலில் கசிந்துருகி
கவிதை மழை பொழிந்தாய்…

உன் தோளினிலே தலைசாய்த்தேன்
மாரோடு அணைத்துக் கொண்டாய்
அலை ஓசை இரைச்சலிலும் -உன்
இதயத்தின் ஓசைக் கேட்டேன்!

நேரமாகி வீடு சென்றோம்
களைப்பினில் சோர்வுற்றாய்
கால் பிடித்து வலி தீர்த்தேன்
உன் கேசத்தை வருடிவிட்டேன்
அசதியில் நீ தூங்க
இரவெல்லாம் இரசித்திருந்தேன்!

மீண்டும் அலாரம் அடித்தது
அலறியடித்து அணைத்தேன்
கண் இமை பிரிக்காமலேயே
என் அணைப்பில் கிடந்த உன்னை
முத்தமிட்டு எழுப்பினேன்...

உதட்டில் குளிர்ச்சி
கண்விழித்துப் பார்த்தேன்
இரவெல்லாம் கண்ணீரை உள்வாங்கி
உன் சட்டை அணிவித்த என் தலையணை!
இதுதான் நீயா? அத்தனையும் கற்பனையா?

நாம் வாழ்ந்த நாட்கள்
பசுமையான நினைவுகள்
இனிப்பான வார்த்தைகள்
சுகமான பயணங்கள்
அத்தனையும் மறந்துவிட்டாய்?
எம்மை நீங்கிச் சென்றுவிட்டாய்…

நீர்த்துளிகள் தலையணை நனைத்தன
மெல்ல குனித்து முத்தமிட்டேன்
‘லவ் யூ அத்தான்’ என்றேன்
நீ அமைதியாய் சிரித்தாய்
மீண்டும் கட்டி அணைத்தாய்…

நிழல் போல உன் நினைவுகள்
என்றும் மாறா என் காதல்
இன்னொரு கற்பனை தொடங்கிவிட்டது
இனி எப்பொழுதும் உன் கற்பனைகள்!




செவ்வாய், 29 மே, 2012

வலியும் அழுகையும்…




எதற்காக இந்த வலி?
என்ன தவறு செய்தேன் நான்
எப்படி மறக்க முடிகிறது உன்னால்?
கட்டி அணைத்து முத்தம் பதித்த நாட்களை?
கையோடு கைகோர்த்து சுற்றி திரிந்த இடங்களை?

இவ்வளவுதான் காதலா?
மரணிக்கும் வரையில் மடியில் கிடப்பேன் என்றாயே
காதலுக்கும் மரணம் உண்டா?

உயிர்ப்பூக்கள் வேண்டாம் என்றேன்
ஏன் என்று வினவினாய்
பூக்களின் வாட்டம் மனதை வாட்டும் என்றேன்
பூப்போன்ற எம் மனதை வாட்ட
எப்படி மனம் வந்தது உனக்கு?

எனது பலவீனம் நானே அறிகிறேன்
நீதான், உன் காதல் தான் எனக்கு எல்லாமே
நீயே எம்மை விட்டுச் சென்ற பிறகு
நான் மட்டும் எப்படி வாழ்வது?

சிறகொடிந்த பறவையாய் நான்
பறக்கச் சொன்னால் எப்படி பறப்பது?
காலொடிந்த குதிரையாய் நான்
பந்தயத்தில் எப்படி வெல்வது?
உயிரற்ற பிணமாக நான்
வாழச் சொன்னால் எப்படி வாழ்வது?

என் மனம் உனக்குத் தெரியாதா
என் காதல் உனக்குப் புரியாதா
எனக்கே துரோகம் இழைத்தாயே
எம்மிடமே பொய்யுரைத்தாயே?
இதுதான் உண்மைக் காதலா?
வலிதான் காதலின் பெயரா?

ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாயே?
என்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டாயே

என்னைத் தொட்ட கரங்களால்
இன்னொருவளைத் தொடுவது நியாயமா?
என்னிடம் பேசிய மொழிகளை
வேறொருத்தி கேட்கலாமா?
எனக்குச் சொந்தமான உன்னை
இன்னொரு கரங்களில் தரலாமா?

இது உண்மைக்குக் கிடைத்த பரிசா?
என் அன்பிற்கான சன்மானமா?
என் இதயத்திற்குத் தகுந்த விஷமா?
என் உயிரைக் கொல்லும் வழியா?

ஏன் வந்தாய் அன்பே?
என்னை விட்டுச் செல்லவா?
காதல் என்ற பெயர் சொல்லி
காமம் தீர்க்கவா?

சந்தோஷம் தருவேன் என்றாய்
வாழ்வே தோஷமானது ஏனோ?
கண் போன்று காப்பேன் என்றாய்
என் பார்வையை பறித்துச் சென்றாய்!
உயிரின் உயிரே என்றாய்
என்னுயிரே என்னை விட்டுச் சென்றாய்!
நண்பர்கள் நடுவே சிரிக்கிறேன்
கண்களில் ஓரம் அமைதியாய் நீர்த்துளிகள்
யாரும் காணா வண்ணம் துடைக்கிறேன்
மீண்டும் வழிகிறது….சிரிக்க முடியவில்லை
கழிவறைக்கு ஓடுகிறேன்
சத்தமின்றி உரக்க அழுகிறேன்
இதயம் வலிக்க வலிக்க அழுகிறேன்
கண்ணீர் ஊற்றாய் வழிந்தோடுகிறது!

கண்கள் காயும் வரை அழுகிறேன்
உன்னோடு நானிருந்த நாட்கள்
உன் மடி மீது துயில் கொண்ட இரவுகள்
நீ தூங்கி நான் பார்த்த பொழுதுகள்
அனைத்தும் கண் முன்னே நிழலாடுகின்றன
காய்ந்த கண்கள் மீண்டும் பனிக்கின்றன…

உன்னுடன் வாழவும் முடியவில்லை
உன்னை பிரிந்து இருக்கவும் இயலவில்லை
என்னைக் காயப்படுத்தவோ, கொல்லவோ
ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே உனக்குத் தேவை
அது ஏற்கனவே உன்னிடம் நான் கொடுத்த அன்பு!

என் பலவீனம் அறிந்துக்கொண்டாய்
அதன் மூலம் எம்மை பழித்தீர்த்தாய்?
என்ன கொடுமை செய்தேன் உனக்கு?
ஏன் இந்த தண்டனை எனக்கு?

நீ சிரிக்கிறாய், நான் அழுகிறேன்
உனக்காக நான் ஏன் அழ வேண்டும்?
அழ மாட்டேன், என்னருமை அறியாத
என் காதலின் புனிதத்தை உணராத
அறிவில்லா உனக்காக நான் அழவில்லை!

எனக்காக நான் அழுகிறேன்
என் முட்டாள்தனத்தை நினைத்து அழுகிறேன்
உனக்காக வீணாக்கிய நாட்களை எண்ணி அழுகிறேன்
என் மனதின் சுமை தீர்க்க அழுகிறேன்
என் வலியின் வேதனை தாங்காமல் அழுகிறேன்!




வெள்ளி, 25 மே, 2012

என்னை நானே வதைக்கிறேன்!




கன்னத்தில் அறைகிறேன்
சுவற்றினிலே இடிக்கிறேன்
தலையினிலே அடிக்கிறேன்
தற்கொலைக்கு முயல்கிறேன்!

எனக்கு வாழ்க்கை சலிக்கவில்லை; வெறுத்துவிட்டது
நம்பிக்கை குறையவில்லை; இறந்துவிட்டது
உணர்ச்சி கூடவில்லை; மறத்துவிட்டது
ஆன்மாயில் உயிர்ச்சியில்லை; மடிந்துவிட்டது!

நான் பைத்தியமில்லை
இது தண்டனை…
எனக்கு நானே கொடுக்கும் தண்டனை
என் முட்டாள்தனத்திற்கு நான் கொடுக்கும் பரிசு!

நம்பி நம்பி ஏமாறும் முட்டாள் நான்
நம்பிக்கை இன்றி எப்படி வாழ்வது?
எனக்கு நானே தீர்மானம் செய்கிறேன்
தவறிழைத்து விட்டதால் தண்டனை விதிக்கிறேன்!

கசிந்துருகி காதல் செய்தேன்
இன்று கண்ணீரில் நனைகிறேன்
மழையிலும் வெயிலிலும் உலவுகிறேன்
என் தோல்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை
அதுவும் செத்துவிட்டதோ?

எக்கச்சக்கமான காயங்கள்
கணக்கு வழக்கு இல்லாத வடுக்கள்
வெந்த புண்ணில் பாயும் வேல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாக ஆன்மா!

அன்பைத் தேடி அலைந்த வேலையில்
கிடைத்தன கன்னத்தில் அறைகள்!
படும் கேவலமான வார்த்தைகள்
அனுதினமும் அர்ச்சனையாய் பூஜிக்கப்பட்டன…

நிறைகள் எல்லாம் குறையாகக் காணப்பட்டன
பிடித்தன எல்லாம் பிடிக்காததாய் மாறின
அதிக நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது
ஆழமான காதல் புதைக்குழியில் சமாதியானது!

கண்ணீருக்கு மதிப்பில்லை
காயத்திற்கு மருந்தில்லை
உறவுகள் அனைத்தும் இழந்தேன்
அவனுக்காக ஏங்கி உருகினேன்
இன்று வருவான், நாளை வருவான் என
என்னை நானே சமாதானப்படுத்தினேன்!

மணித்துளிகள் நாட்களாயின
நாட்கள் வாரங்களாயின
வாரங்கள் மாதங்களாயின…
கரம் பிடிப்பதாய் சொன்னவன்
நிர்க்கதியாய் தவிக்கவிட்டான்
என் வேதனையைக் காணாது
கண்களை மூடிக்கொண்டான்!

வலிகள் பெருகி மரணத்தை நெருங்கியது
நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது
ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது
பொறுத்து பொறுத்து பொறுமை இழந்தேன்
ஆனால், பொங்கி எழவில்லை!

நியாயம் கேட்டேன்
அநியாயமான பதில்கள் வந்தன
வாக்குறுதிகள் கரைந்துப் போய்விட்டன
பழைய காதல் மரித்துப் போய்விட்டது
மனிதர்கள் மாறிப் போய்விட்டனர்!

மிரண்டு விழித்து உலகைப் பார்த்தேன்
சுற்றிலும் சாத்தான்கள் தாண்டவமாடின
அதன் கோரப்பற்கள் என் உதிரத்தை ருசிப்பார்த்தன
நரம்பில்லா நாக்குகள் கண்ணீரை சுவைத்தன
உருகுலைந்து சின்னாபின்னமானேன்!

தவறு செய்துவிட்டேன்
பொய் என்று தெரிந்தும் மெய் என்ற நம்பினேன்
போலியை அடையாளம் கண்டும் நிஜத்தை விட்டு ஓடினேன்
வலி என்று தெரிந்தும் மென்மேலும் விரும்பினேன்
அதற்கான தண்டனை இன்று பெறுகிறேன்
என்னை நானே வதைக்கிறேன்!


வெள்ளி, 18 மே, 2012

மே 18


மே 18
இன்றைய தினம்
கூண்டோடு எம்மினம் அழிக்கப்பட்டது!
துரோகத்தால் வீரம் சாய்க்கப்பட்டது!

கருவில் இருந்த சிசு
வெளி உலகைக் காணாமல் சிதைந்து போனது
கன்னியர்கள் கற்பிழந்து கதறினார்கள்
காளையர்கள் நிர்வாணமாய் சுடப்பட்டனர்
ஆண்களும் பெண்களும் கொத்துக் குண்டுகளுக்கு பழியாயினர்!

மருந்துகள் தடைசெய்யப்பட்டன
நெகிழிப் பைகளில் இரத்தம் சேகரிக்கப்பட்டது
குடலும் இருதயமும் உடலுக்கு வெளியே துடித்தன
எங்கும் பிணங்கள் குவிந்துக் கிடந்தன
அதனையும் புணர்ந்தன சிங்கள் நாய்கள்!

அறிக்கைவிட்டு கூத்தாடினான் கலைஞன்
தூது விட்டு பழி தீர்த்தாள் சனியன்!
பலிக்காடாக எமது இனம்…
ஒன்றல்ல, இரண்டல்ல….
பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டது!

செய்தியாளர்கள் தடைசெய்யப்பட்டனர்
ஐநா’வினர் வெளியேற்றப்பட்டனர்
சாகப் போகிறோம் என்று தெரிந்தே
பல உயிர்கள் நொந்துச் செத்தன…

புலிகளைச் சிங்களம் தோற்கடித்ததா?
நம்பவில்லை… வதந்தி என்று வாதாடினேன்
பின்னர் அறிந்தேன் உலக நாடுகளின் நாடகத்தை!
இன்னுமா இவர்களை நம்புவது?
இன்னுமா இவர்களிடம் கையேந்துவது?
போராடி பெறுவதைப் பிச்சையாய் கேட்கலாமா?

எனக்கு நம்பிக்கை இல்லை
இந்த துரோகிகள் இணைந்து
தனி ஈழத்தை, தமிழீழத்தைப் பெற்றுத்தருவார்கள்?
எங்கே எமது புலிகள்?
இன்று எலிகளும் புலி வேசமிட்டு ஏய்க்கின்றன
யாரை நம்புவது?

எங்கே எமது தலைவன்?
அத்தனையும் பார்க்கிறாயா?
அனைத்தையும் குறித்துக்கொள் தலைவா
இவர்களுக்கு நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்
பெற்ற அத்தனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்!

இன்று நமக்கு துக்க தினம்!
இதுவே வெற்றி தினமாக,
தமிழீழ தேசிய தினமாக மாறும்!
சரியென்று ஒரு வார்த்தை சொல்
அனைத்தையும் உதறித் தள்ளி
நான் வருகிறேன் உன்னோடு!

என் உணர்ச்சிகள் இன்னும் மடியவில்லை
போராட்ட குணம் இன்னும் ஒடுங்கவில்லை
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை
அழுது புலம்ப நான் விரும்பவில்லை!

மே 18
பாடம் கற்பிப்போம் உலகிற்கு!
உண்மைப் போராளிகள் உயிரோடு இருந்தால்
இன மான உணர்வு மிச்சம் இருந்தால்
இறுதிவரை போராடுவோம்!
தமிழீழம் கிடைக்கும் வரை!

புதன், 14 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 11)




காலை மணி 10 அளவில் ‘ஏழாம் அறிவு’ படம் பார்க்கச் செல்லலாம் என பாக்கியா அக்கா அழைத்தார். குடும்பம், உனவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் படம் பார்க்கக் கும்பலாகப் புறப்பட்டுச் சென்றோம். படம் பார்த்து முடிந்த பிறகு, நான் மட்டும் தனியே ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து அருகே நடக்கும் பட்டினி போராட்டத்திற்குச் செல்வதாகக் கூறினேன். அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தார். “இப்படியே போராட்டம் போராட்டம் என்றிருந்தால் உடம்பை எப்படியம்மா கவனிக்கிறது? காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்லை,” என பெரிய சித்தி பரிவுடன் கூறினார்.

அவர்களுக்குப் பதிலாக சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் பேரறிவாளனின் தாய் பார்வதியம்மாள், பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர் செளர்தர்ராஜன், கீரா அண்ணா ஆகியோர் அவ்விடம் இருந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பிரமுகர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அடுத்ததாக உரையாற்ற வருமாறு எம் பெயரை அறிவித்துவிட்டனர். இந்தத் திடீர் அறிவிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “மனசுல பட்டத தைரியமா பேசு,” என கீரா அண்ணா தெம்பூட்டினார்.

நானும் சில நிமிடங்களுக்கு ஏதேதோ பேசினேன். கூட்டம் அமைதியாக என் பேச்சினை செவிமடுத்தது. இருந்த போதிலும், எமது குரலில் இருந்த நடுக்கத்தை என்னாலேயே உணர முடிந்தது. பேசி முடிந்து அமரும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, “இவ்வளவு அருமையாக பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் முன்னதாகவே உங்களைப் பேசச் சொல்லியிருப்போமே,” எனப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தேன். கீரா அண்ணா அப்போதே அண்ணிக்கு அழைத்து, “தங்கச்சி அருமையா பேசினா. நான் கூப்பிடும் போதெல்லாம் நீ நிகழ்ச்சிக்கு வரமாட்ற. நாங்க தான் மனைவி பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கூட்டி வர்றதில்லனு மைக்கிலேயே சொல்லிட்டா,” என்றார். அவர்களின் ஆதரவும் அன்பும் எம்மை நெகிழச் செய்தன.

எனக்கு அடுத்ததாக பேரறிவாளனின் தாயார் உரையாற்றினார். அவரின் பேச்சு வந்திருந்தோரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. “நான் செய்த தப்பு ஒரு நல்லவனைப் பெற்றது,” என அவர் கூறிய போது அவரின் கண்கள் குளமாயின. தள்ளாத வயதிலும் நீதி வேண்டி அந்தத் தாய் படும் அலைச்சலும், சிரமும் சொல்லில் அடங்கா. போராட்டம் முடிந்த பிறகு அண்ணா சில தோழர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். போராட்டத்திற்காக அவ்விடத்தினை இலவசமாக வழங்கிய செளந்தர்ராஜன் ஐயா எனது பெயரட்டையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இலவசமாக எனக்கு இரு புத்தகங்களையும் வழங்கினார். சற்று நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

பின்னர் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த சாவி மாட்டல்களையும் (கீ செயின்ஸ்), சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். புத்தகம் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தின் அமைந்திருக்கும் அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். திரைப்படத்துறையைச் சார்ந்த அண்ணாவின் தோழர்கள் சிலர் எங்களுடன் அலுவலகத்திற்கு வந்தனர். நாளை நான் மலேசியா திரும்ப இருப்பதால் இன்று தன் கையால் சமைக்கப்படும் உணவை கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என ஏகலைவன் அண்ணா அன்புக் கட்டளையிட்டார். அவரின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை.

கடைக்குச் சென்று கோழி இறைச்சி வாங்கி வந்து அவர் சமையலை ஆரம்பித்தார். அவர் சமைக்கட்டும் என நான் காத்திருந்தேன். அண்ணாவும் தோழர்களும் பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே மது அருந்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஆடல், பாடல்கள் அவ்விடம் அரங்கேறின. மிகவும் மகிழ்ச்சியான சூழலாக அது விளங்கியது. தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். ஒரு சமயம் கீரா அண்ணா மெய்மறந்து ஆட ஆரம்பித்தார். அவர்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டே நான் நாற்காலியிலேயே உறங்கிவிட்டேன்.

சமையல் முடிந்த பிறகு அருண்ஷோரி என்னை எழுப்பிவிட்டார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஏகலைவன் அண்ணாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அவரின் சமையலை விட அவர் எம்மீது காட்டிய அன்பு எமக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தோன்றியது. மிகவும் களைப்பாக இருந்ததால் உண்டவும் நான் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். இரவு 11 மணியளவில் வீட்டை அடைந்தேன். நேரமாகிவிட்டதால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.

காலை 7 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்து, சேலை உடுத்திக் கொண்டேன். தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணியுடன் பேசி விடைப்பெற்ற பிறகு, நான், கீரா அண்ணா, அருண்ஷோரி மூவரும் புத்தகம் வாங்க கடைக்குச் சென்றோம். நான் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கீரா அண்ணா பட்டியலிட்டு வைத்திருந்தார். நாங்கள் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே 10 கிலோவைத் தாண்டிவிட்டன. காலையிலேயே மலை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் வாங்கிய பிறகு நானும் அருண்ஷோரியும், ‘கோவை மாநாடு’ தொடர்பான பத்திரிக்கைச் சந்திப்பிற்குச் சென்றோம்.

அவ்விடம் கொளத்தூர் மணி ஐயாவும், பார்வதி அம்மாவும் வந்திருந்தனர். பார்வதி அம்மா எம்மை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினார். அவரின் எளிமை எம்மை வெகுவாகக் கவர்ந்தது. அவர் எனது மலேசியத் தொடர்பு எண்களைக் கேட்ட போது நான் நெகிழ்ந்துப் போனேன். நேரமாகிக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு, மருத்துவமனை அருகே ‘மரணதண்டனைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்’  நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம். தோழர் இரமணி அவ்விடம் இருந்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டேன். பெண்கள் பலரும் அவ்விடம் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தது பாராட்டக்கூடிய விடயமாக இருந்தது.

ஆடல், பாடல், பறை அடித்தல் போன்ற கூத்துகளும் அவ்விடம் அரங்கேறின. பனகல் மாளிகை அருகே கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலரையும் அவ்விடத்தில் காண நேர்ந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி விடைப்பெற்றுக் கொண்டேன். இறுதிவரை போராட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்தினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி ஐயாவும் அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். சென்ற முறை தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அதனை அவர் இன்னமும் நினைவு வைத்திருந்தார். அவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீட்டை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தேன். அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணா அண்ணா எம்மை அங்கு அழைத்துச் சென்றார். மதிய உணவு உண்டு முடித்து அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். கண்ணா அண்ணாவும் அம்மாவும் எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரை உடன் வந்தனர். நான் அம்மண்ணிலிருந்துக் கிளம்பப் போகிறேன் என்பதாலோ என்னவோ வானம் கதறியழுதுக் கொண்டிருந்தது.

அந்தக் கொட்டும் மழையிலும் தோழர் அருண்ஷோரி எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரையில் வந்திருந்தது எம்மை நெகிழச் செய்தது. சிறிது நாள் பழகிய போதிலும் இவர்கள் எம்மீது காட்டும் பாசத்திற்கும் அன்பிற்கும் விலையேது? சிறிது நேரம் கதைத்துவிட்டு, இறுதியாகக் கைக்குலுக்கிப் பிரிந்த போது நெஞ்சம் வலிக்கவே செய்தது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் கைப்பேசியில் அழைத்து நால் செல்வதைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன். பார்வதியம்மாவுக்கும் மறவாமல் தெரியப்படுத்தினேன்.

பயணத்திற்காகக் காத்திருந்த வேளையில் தூரத்தில் ஏதோ பழக்கப்பட்ட முகம் ஒன்று எம்மை நோக்கி புன்னகைத்தது. அவ்வுருவம் என்னருகே வரவும் யாரென்று கண்டுக்கொண்டேன். மலேசியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் இளந்தமிழ் ஐயா! மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம்! நான் வரும் போது ஒருவர் எம்மை அடையாளம் கண்டுக்கொண்டார், போகும் போது இன்னொருவரைப் பார்க்கிறேன்.

இளந்தமிழ் ஐயாவோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக நடத்தவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் பயணம் செய்ய இருக்கிறோம். சரியாக இந்திய நேரம் மாலை 5.50 மணிக்கு விமானம் சென்னையிலிருந்துப் புறப்பட்டது.  விமானத்தில் ஏறிய சில நொடிகளிலேயே அசதியில் கண்ணயர்ந்தேன். எனது இனிமையான பயண அனுபவங்கள் கனவுகளாக மாறி தமிழ்நாட்டினையே சுற்றிக்கொண்டிருந்தன. அடுத்த முறை மீண்டும் வருவேன்… தமிழ்நாட்டு கிராமங்களைக் காண….

***முற்றும்***