சனி, 27 ஜூலை, 2013

புழலில் ஒரு நாள் (1)

 
 வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதத்தின் போது, தமிழீழ கொடியினை ஆடையாக தரித்து வந்த சிறுவர்கள்

மார்ச் 2013  தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் எழுச்சிப்பெற்று நடந்துக்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது; இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்; ஆசிய நாடுகள் சர்வதேசிய விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாது; இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; தனித்தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து லயோலா கல்லூரி மாணவர்கள் சிலர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.  லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரால் மூட்டப்பட்ட இத்தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத்தீ போல் பரவிய காலகட்டம். தமிழகத்தில் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இம்மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக வாழ் ஈழ அகதிகள் மார்ச் 22-ஆம் திகதி அன்று ஒன்று திரண்டு ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை வள்ளுவர் கோட்டத்தின் அருகே மேற்கொண்டனர். அதே நாளன்று 'புழல்' அகதிகள் முகாமிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.  முதல் நாள் இரவே கேணல் கிட்டுவின் மாமியார் அலைப்பேசியில் தொடர்புக்கொண்டு விபரம் கூறியிருந்தபடியால், அன்று காலையிலேயே வள்ளுவர் கோட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். வீட்டைவிட்டு புறப்படும் போதே, "இன்டைக்கும் உண்ணாவிரதமா?" என அம்மா கவலையுடன் கேட்டார். சிரித்துவிட்டு, "இரவுக்குள் வந்துவிடுவேன்" என சமாதானம் கூறினேன். கடந்த சில நாட்களாகவே மாணவர் போராட்டம், உண்ணாவிரதம் என அடிக்கடி வெளியில் சென்று விடுவதால் அந்தத் தாயின் உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. போகும் இடங்களில் கைது நடவடிக்கைகள் இருப்பதாலும் , என்னுடைய தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததாலும் அம்மா கொஞ்சம் பயப்படவும் செய்தார். எம்மை சுமந்து பெறா தாயாக இருந்த போதிலும், பெற்றப் பிள்ளைப் போல் எம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அந்த ஈழத்துத் தாயின் பாசம் எம்மை நெகிழ வைத்தது.
அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழ ஆதரவாள திரையுலக பிரபலங்கள்

வாடகை வண்டியில் வள்ளுவர் கோட்டம் சென்றடைந்தேன். மிகப்பெரிய கூடாரம் அமைத்து ஈழத்தமிழர்கள் பலர் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இயக்குனர் சேரன், தேனிசைத் தென்றல் செல்லப்பா, மைசூர் அலிகான், இயக்குனர் களஞ்சியம் ஆகியோருடன் இன்னும் சில திரையுலக பிரபலங்களும் அவ்விடம் கூடியிருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. பிற்பகல் வரை அவர்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தேன். உண்ணாவிரதப் பந்தலில் நெற்பயிரோடு கலந்திருக்கும் களை போல சில துரோகிகளும் கலந்திருக்கக் கண்டேன். "உங்களை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஒதுங்கியிருந்தீர்களே?" என ஒருவன் அவனாகவே வந்து கேட்டது எரிச்சலூட்டியது. நெஞ்சம் படபடத்தது. "அடப்பாவிகளா? இங்கேயும் கலந்துவிட்டீர்களா" என மனம் கதறியது. ஒரு புன்னகையோடு விலக முற்பட்டேன். வேண்டுமென்றே போராட்டங்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்ள காரணமாக இருந்த சம்பவங்களை அவனாகவே நினைவூட்டினான்.

அதற்கு மேலும் அவ்விடம் இருக்க மனம் விரும்பவில்லை.  அதற்குள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய  மாணவர்கள் அவ்விடம் வர, அவர்களோடு புழல் நோக்கிச் சென்றேன். தமிழ்நாட்டில் புழல் சிறை பிரபலமானது. அதனை அடுத்து புழல் அகதிகள் முகாம். இவ்விரண்டிற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில், ஈழத்து அகதிகளை இடம் பற்றாக்குறைக் காரணமாக புழல் சிறையின் உள்ளேதான் வைத்திருந்தார்களாம். பின்னர்தான் அதன் அருகாமையிலேயே அகதிகள் முகாம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் என பெரியவர் ஒருவர் கூறி அறியப்பெற்றேன்.
புழல் அகதிகள் முகாமில் நடைப்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர்கள்

மிகவும் குறுகலான செம்மண் சாலை. சிறைக்கதவுகள் போன்று பெரிய வாயிற்கதவுகள் அதனைத் தாண்டிய அடுத்த நொடியே புழல் அகதிகள் முகாமின் எல்லை ஆரம்பமாகிறது. காலையிலேயே உண்ணாவிரதம் தொடங்கிவிட்டதால், முகாமிலுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் உண்ணாவிரதப் பந்தலில் கூடியிருந்தனர். இவ்விடம் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளுமே கண்ணில் பட்டனர். மிக நீண்ட உண்ணாவிரதப் பந்தலின் கடைசியில் சில ஆண்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஈழத்தமிழர் ஒருவர் உணர்ச்சிப்பொங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை விவரிக்கும் வேளையில் தாங்க மாட்டாமல் அவரது கண்கள் பனித்துவிட்டன. நாம் அறிந்த, அறிந்திராத சில திடுக்கிடும் விடயங்களை அவர் அன்று அனைவர் மத்தியிலும் பகிர்ந்துக்கொண்டார்.

தமிழ்ப்பெண்களின் மார்பை அறுத்து, "தமிழச்சிகளின் மார்பு கறி இங்கே கிடைக்கும்" என்று எழுதிப்போட்ட சிங்கள வெறிநாய்களின் அராஜகத்தைச் சொன்னார். போர் காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம் என்று பொய்யுரைத்து, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்து வெடி வைத்துக் கொன்ற சிங்களவனின் வெறிச்செயலைச் சொன்னார். இன்னும் என்னென்னவோ சொன்னார். நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களைச் சொன்னார். என் பக்கத்தில் அமர்ந்திருந்த சட்டப் பல்கலைக்கழக மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. அந்தத் தெலுங்கு மாணவி தமிழர்களுக்காக வடிக்கும் கண்ணீர் எம்மையும் உருக்கியது.
 
***தொடரும்***

கருத்துகள் இல்லை: