சனி, 27 ஜூலை, 2013

புழலில் ஒரு நாள் (2)

 
 


முகாம் உள்ளே இருக்கும் பழக்கடை

முகாம் மக்கள் மட்டுமே ஒருங்கிணைந்து நடத்தும் அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் வெளி ஆட்களான எங்களைக் கண்டதும் அம்மக்கள் மகிழ்ச்சியடையவே செய்தனர். தங்களது மனநிலையை அவர்களே எங்களிடம் கொட்டினர். தங்களுக்கு நீதி வேண்டி போராடும் தமிழ்நாட்டு மாணவர்களை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.  சரியாக மாலை 5.30 மணிக்கு அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. காலையிலிருந்து அங்கே கூடியிருந்த சிறார்களும் அப்போதுதான் பழரசம் அருந்தி தங்கள் தொண்டையினை நனைத்துக் கொண்டனர். அங்கே குழுமியிருந்த மக்களைக் கண்ட போது சொல்ல இயலா சோகம் ஒன்று தொண்டையை அடைத்தது.
 
அறிவிப்பு பலகைகள்

உண்ணாவிரதம் முடிந்து அனைவரும் அவரவர் இல்லம் செல்லத் தொடங்கினர். ஒருசிலரே எங்களைத் தேடி வந்து எங்கள் விபரம் கேட்டனர். இதுதான் சமயம் என்று அவர்களின் வாழ்வியலை அறிந்துக்கொள்ள நானும் சில கேள்விகள் தொடுத்தேன். எனது கேள்விகளுக்கு பலரும் தயங்கியபடி பதில் கூற, ஒரு பெண்மணி மட்டும் மிக தைரியமாக தங்களது முகாம் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார். அவரை அக்கா என்று உரிமையோடு அழைத்து, முகாமை சுற்றிப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். மற்ற பெண்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து தயங்கி நின்றனர். அந்த அக்கா சற்று யோசித்தார். "சரி, வாங்கோ" என அழைத்தார். என்னுடன் வந்த மாணவர்களிடம் சற்று நேரத்தில் வந்து விடுவதாகக் கூறி அக்காவைப் பின் தொடர்ந்தேன்.
பாலர் பாடசாலை

அப்போதுதான் உண்ணாவிரதம் நடந்த பந்தலுக்கு அருகில் பழக்கடை ஒன்று இருப்பதைப் பார்த்தேன். முகாம் மக்கள் தங்களுக்கு வேண்டிய பழ வகைகளை அவ்விடமே வாங்கிக்கொள்வார்கள். முகாமிலிருந்து வெளியில் சென்றால் மற்ற பொருட்களை வாங்க இயலுமாம். பழக்கடையைத் தள்ளி சிறிது தூரம் சென்றவுடன் பாலர் பாடசாலை ஒன்று தென்பட்டது. முகாமில் வாழும் சிறுவர் சிறுமியர் இவ்விடமே தங்கள் பாலர் கல்வியைத் தொடங்கலாம் என்றும், மேற்கொண்டு படிப்பதற்கு வெளியில் செல்ல வேண்டும் என்றும் அக்கா கூறினார்.
ஒற்றையடி சந்து

முகாமின் ஒரு பகுதியில் இரு கரும்பலகைகள் இருந்தன. அவற்றில்தான் பொது நிகழ்வுகள், முக்கியமான செய்திகள் அனைத்தும் எழுதப்பெற்று முகாம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அக்கா தெரிவித்தார்.  அதில் ஒரு பலகையில் அன்றைய உண்ணாவிரத நிகழ்வு குறித்து தகவல் பகிரப்பட்டிருந்தது. மற்றொரு பலகையில், 'ரேஷன்' பொருட்கள் எப்போது வழங்கப்படும் என குறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுகிய சாலையில் பல ஒத்தை சந்துகள் பிரிந்துச் சென்றன. ஒவ்வொரு சந்துக்குள்ளும் தீப்பெட்டிகள் போல் பல சிறு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. "என்ன அக்கா, வீடுகள் இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?" எனக் கேட்டேன். முகாம் வாசலை ஒட்டி அமைந்திருப்பதனால் முகாமிலேயே சற்று வசதியான வீடுகளையே நான் பார்ப்பதாக அவர் சொன்னார். சற்று தள்ளி இருக்கும் முகாம் வீடுகள் இன்னும் சிறியதாக, நெருக்கமாக இருக்கும் எனவும் கூறினார். அவ்விடம் செல்ல முடியுமா எனக் கேட்டேன். நேரமாகிவிட்டதால் சந்தேகப்படுவார்கள் என தயங்கியப்படி சொன்னார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவும், "உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள். நீங்கள் சென்ற பிறகு கேள்வி மேல் கேள்வி கேட்டு எங்களை சித்ரவதை செய்து விடுவார்கள்," என்றார். அதற்கு எதுவும் கேட்க எனக்கு மனம் வரவில்லை.
சமையல் செய்யும் இடம்

அந்த அக்காவிற்கு மிகவும் பழக்கமான ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் முன்முறம் சற்று விசாலமாக இருந்தது. "பரவாயில்லையே, வீட்டிற்கு முன்புறம் இவ்வளவு இடம் இருக்கிறதே!" என்றேன். அதற்கு அந்த அக்கா சொன்ன பதில் எனது ஆச்சர்யக்குறியை அதிர்ச்சிக்குறியாக மாற்றியது. அவ்விடம்தான் அந்த வீட்டு ஆட்கள் சமையல் செய்ய வேண்டுமாம். வீட்டின் உள்ளே சமையல் செய்வதற்கான வசதியும் போதிய இடமும் இல்லையாம். அதற்குப் பக்கத்துக் குழாயில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது. எங்கேயிருந்தோ சில பலகைகளைக் கொண்டும், தெருவோர விளம்பர பதாகைகளைக் கொண்டும் மறைவிடம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதுதான் குளியல் அறையாம்!
குளிப்பதற்காக செய்யப்பட்ட மறைவிடம்

அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். எனக்கு மூச்சி முட்டியது. அந்த வீட்டின் வரவேற்பறை இரண்டு அங்குலம், பத்தடி நீளமாக இருக்கும். சரியாக கணக்குத் தெரியவில்லை. பாதி சுவர் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது. மீதி அட்டைப்பெட்டிகளைக் கொண்டுச் சுவராக எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மேல் ஓட்டை ஒடிசலுடன் தகரமும், எர்நேரத்திலும் கலண்டு விழும் தருவாயில் இருக்கும் ஒரு மின்விசிறியும் இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சில நொடிகளிலேயே எனக்கு வேர்த்துக்கொட்டத் தொடங்கியது. சில ஓவியச் சுவரொட்டிகளைக் கொண்டு தங்களால் இயன்ற மட்டும் அந்த வீட்டினை அலங்காரம் செய்து வைத்திருத்கனர். ஒரு அலைப்பேசியும் பழைய சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் சிறிய மேசை மீது வைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் வரவேற்பறை

அதனையொட்டி, இரண்டு சிறு அறைகள் இரண்டு அமைக்கப்பெற்றிருந்தன. ஒற்றைக் கட்டில், இரு நெகிழி நாற்காலிகள்,பழைய மேசையோடு, சிறு சிறு மூட்டைகள் (உடைமைகள்), மடிக்கணினி மற்றும் சில புத்தகங்கள்  இருந்தன. இந்த அறையில் சற்று தாரளமாகப் படுக்கலாம் போலும். அடுத்த அறையில் அலமாரிகளும் ஒரு சில மரப்பெட்டிகளும் இருந்தன. மூன்று பேர் ஒரே சமயத்தில் நுழைந்தால் இந்த அறை நிறைந்துவிடும் போல இருந்தது. இவ்வளவுதான் இவர்கள் உடைமை! இதுதான் இவர்கள் வாழ்க்கை! மறுபடியும் வரவேற்பறைக்கு வந்தேன். வீட்டுப் பெண்மணியும் என்னை அழைத்து வந்த அக்காவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.  வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்தேன்.

அந்த அம்மாவின் வீட்டுக்காரர் போரில் உயிரிழந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகள். அதில் இளையவள் இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறாள். பெரியவள் எங்கே என்று கேட்டேன். அந்த அம்மா, அக்காவின் முகத்தைப் பார்த்தார். அவர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன. "இவங்ககிட்ட சொல்லுங்க. வெளியில போய் சொன்னாதான் ஏதாவது தகவல் தெரியும்," என அக்கா தைரியம் கூறினார்.  பெரிய பிள்ளையை வெளிநாட்டிற்கு கள்ளத்தனமாக முகவருக்குப் (ஏஜெண்ட்) பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். அனுப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. முதலாவதாக இந்தோனேசியா கடல் எல்லையில் அவர்கள் சென்ற கப்பல் பிடிபட்டுவிட்டது என்ற செய்தி வந்ததாம். அதன் பின்னர் ஒரு தகவலும் வரவில்லையாம்.  யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும் ஒரு தகவலும் பிடிபடவில்லையாம். அந்தத் தாய் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் கதறியழ ஆரம்பித்தார். நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
தகர ஓடும், அபாய நிலையில் இருக்கும் மின்விசிறியும்

அந்தப் பெண்ணோடு முகாமிலிருந்து மொத்தம் 9 பேர் கள்ளத்தனமாகக் கப்பலில் சென்றுள்ளனர். அவர்களின் நிலையும் இன்று வரையில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்கள் எந்த நாட்டில் எல்லையிலாவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது கடல் அவர்களைக் காவு வாங்கி விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விடயம் ஒன்றுதான். சென்றவர்கள் ஒருவர் கூட செல்ல வேண்டிய இலக்கைச் சென்றடையவில்லை. பெற்ற பிள்ளை எங்கே இருக்கிறாள்? அவளுக்கு என்ன நேர்ந்தது? உயிரோடு இருக்கிறாளா இல்லையா? என்று அறியாமல் அந்தத் தாய் தவித்த தவிப்பு இன்னமும் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. அவருக்கு என்ன ஆறுதல் கூறுவதென்று எனக்கே தெரியவில்லை. முந்தைய காலமாக இருந்தால், ஏதாவது முயற்சி செய்ய வழியிருக்கும். அனைத்திலிருந்தும் விலகி, அனைத்துத் தொடர்புகளையும் அறுத்தெறிந்துவிட்டு வாழும் என்னால் இப்போது என்ன செய்ய இயலும்? மனம் வலித்தது. அந்தத் தாய்க்கு என் கண்ணீர் மட்டுமே சமாதானம் சொல்லியது. 
சற்று வசதியாக இருக்கும் முதல் அறை

அதற்கு மேலும் அவ்விடம் நிற்க மாட்டாமல் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.  என்னுடன் வந்த சட்டப்பல்கலைக்கழக மாணவர்களுடன் முகாம் இளைஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் சலிப்பு, ஆற்றாமை, கோபம் என பல்வகை உணர்வுகளும் கொப்பளித்ததால் விடயம் அறிய அவர்களை நோக்கிச் சென்றேன். "எங்கட தமிழர்கள் இங்க இருங்காங்கன்னு நம்பி வந்தோம். ஆனா, இங்க வந்த பிறகு அங்கச் சண்டையிலேயெ செத்திருக்கலாமோன்னு தோணுது, " என ஒரு பையன் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் கூறினான். அப்படி என்ன தான் நடந்தது என விசாரித்தேன். எனக்கே கோபம் வந்தது!`
மிகவும் குறுகலாக இருக்கும் இரண்டாம் அறை

சுதந்திரத்திற்காக போராடிய இவர்களுடைய சுதந்திரம் இவ்விடம் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டது. நான்கு பேர் ஒன்றாக அமர்ந்துப் பேச முடிவதில்லை. வெளியில் சென்று தாமதமாக வரமுடிவதில்லை.  இரவில் புழுக்கம் தாங்காமல் வீட்டுக்கு வெளியே உலாவ நினைத்தாலும் முடிவதில்லை. காவல் துறையினரின் அதிகப்படியான கெடுபிடி, கேவலமான வார்த்தைகள் என அனைத்தும் இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாக இருக்கிறதாம். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் என்று வரும் போது மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படியான பலப்பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்தனர்.

வானம் சற்று இருட்டத் தொடங்கியது. பெரியவர் ஒருவர் வந்து, அந்த இளைஞர்களைக் களைந்துப் போகுமாறு கேட்டுக்கொண்டார். "உங்ககிட்ட கதைச்சத கண்டிப்பா பொலீஸ் பார்த்திருக்கும். நீங்க போன பிறகு எங்களை விசாரிப்பானுங்க. இங்க இப்படித்தான்," என்று சலிப்புடன் கூறிய இளைஞன் ஒருவன் களைந்துச் சென்றான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் களைய ஆரம்பித்தனர்.  பலவிதமான எண்ணங்கள் ஆட்கொள்ள வேறு எதுவும் பேசாமல் நாங்களும் வீடு நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் புழல் சிறை. மீண்டும் சொல்கிறேன். புழல் சிறைக்கும் புழல் முகாமிற்கும் எனக்கு அதிக  வித்தியாசம் தெரியவில்லை.

***முற்றும்***

கருத்துகள் இல்லை: