செவ்வாய், 18 ஜூன், 2013

சாமசுந்தரா (கறுப்பழகன்)


அழகு... இது அனைவரும் அனைத்திலும் எதிர்ப்பார்ப்பது. கறுப்பென்றால் நெருப்பென்று கருதி விலகிப் போகும் இயல்புடைய மனிதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வுலகத்தில், கறு நிறத்தை மேனியாகக் கொண்டு அவதரித்த கிருஷ்ணன் உலகில் அனைவரது மனதையும் கவர்ந்தான். அவன் அழகன். சாதரண அழகன் அல்ல. கறுப்பு அழகன். அதன் காரணமாகவே அவனை சாமசுந்தரா என்று அழைத்தனர்.

இந்தப் பதிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியது அல்ல. மலேசியாவில் கடந்த 15 & 16 ஜூன் 2013 அன்று மலாயாப் பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற 'சாமசுந்தரா' என்ற நாட்டிய நாடகத்தினைப் பற்றியது. இயல், இசை, நாடகத்தினைப் போற்றிப் புகழும் தமிழுலகில் 'சாமசுந்தரா' என்ற இந்நாடகம் மற்றுமொரு மைல் கல் என்றால் அது மிகையில்லை.

மலேசிய மலைநாட்டில் மேடை நாடகங்கள் அதிக அளவில் நடைப்பெறுவதில்லை. இருந்த போதிலும் எஸ்.டி, பாலா போன்ற இயக்குனர்களின் பேரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில நாடகங்கள் அபூர்வமாக நடந்தேறுவது உண்டு. அதிலும் மேடை நாட்டிய நாடகங்கள் என்பது சமீப காலமாகவே இவ்விடம் வேறூன்ற தொடங்கியுள்ளது. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண்பதை விட இவ்வாறு நேரில் ஒரு மேடை நாடகத்தினை, அதிலும் நாட்டிய நாடகத்தினை காண்பது மெய்யாகவே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

சுமார் 60 நடனமணிகள் 'சாமசுந்தரா' என்ற மேடை நாட்டிய நாடகத்தில் பங்குப்பெற்றுள்ளனர். இதனை 11 நடன இயக்குனர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். பரதம், குச்சுப்புடி, கதக் போன்ற பாரம்பரிய நடனத்துடன் பாலிவூட் நவநாகரிக நடனத்தையும் இணைத்து புது பொலிவுடன் இந்நாட்டிய நாடகத்தினை தயார் செய்துளனர். கேசவா, கோபாலா, மதுசூதனா, கோவிந்தா, சியாமசுந்தரா என கிருஷ்ணனின்  பல்வேறு பரிவாரங்களையும் மிக அழகாக விளக்கி அபிநயம் பிடித்துள்ளனர்.

இதில், கிருஷ்ணரின் சிறு வயது விஷமங்களை எடுத்துக்கூறும் பாகத்தில், சிறு குழந்தைகள் மிக அழகாகத் தங்கள் குறுப்புத்தனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளின் குறும்பும் அபிநயமும் பார்ப்போர் இதழ்களில் புன்னகையை மலரச் செய்வதில் வெற்றிப்பெற்றன. நாட்டிய மணிகளில் உடை அலங்காரங்களும் மேடை அலங்கரிப்பும் நம்மை பிருந்தாவனத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன.

மொத்தம் 16 அத்தியாயங்களில் மிகச் சுருக்கமாக கிருஷ்ணாவின் ஒரு சில லீலைகளை நாட்டிய நாடகத்தின் வழி மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். சுகன்யா வேணுகோபால் அவர்கள் இந்நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் மிக அழகான சொல்லாடலுடன் விளக்கிக் கூறினார். ஸ்ரீ மதி கீதாசங்கரனின் அபரிதமான நாட்டியத்தினை விவரித்துச் சொல்வதற்கு எமக்கு வார்த்தை கிட்டவில்லை. அவரது சலங்கை ஒலி, கண்ணின் அசைவு, உடலின் நெலிவு, நடனத்தின் இலாவம் அனைத்தும் பார்ப்போரை மயக்கம்கொள்ளச் செய்வதாய் இருந்தன. இப்படியும் நடனமாட முடியுமா என்று வியக்கவும் வைத்தன.


தொடர்ந்து, இராதா, மீரா, திரெளபதை, யசோதா, சத்தியபாமா, கோபால கோபியர்கள் என அனைவருமே தங்கள் கதாப்பாத்திரங்களைச் சிறப்புரச் செய்திருந்தனர். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் வந்திறங்கினான் கிருஷ்ணன்! மங்கையர் மனம் கவரும் கள்வன், மாயக்கண்ணன் சாமசுந்தரா!!! அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்திறங்கியது போன்ற உணர்வு. கதைப் பேசும் கண்கள், நீண்ட நாசி, புன்னகைப் புரியும் வதனம், உருண்டு திரண்ட தோள்கள், மயக்கம் கொள்ள வைக்கும் உடலழகு,சுருள் சுருளான கேசம், மயிலிறகினால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம், மேனியெங்கும் கண்ணைக் கவரும் ஆபரணங்கள்; ஜொலிக்கும் பட்டாடை, தங்க நிறத்தில் புல்லாங்குழல்! வந்திறங்கினான் கண்ணன், காமக்கலைஞன் கிருஷ்ணன்!

தெய்வீக அம்சத்துடன் தோன்றிய கிருஷ்ணரைக் கண்டவுடன் பார்வையாளர்கள் அனைவருமே பரவசமடைந்தனர் என்று சொல்லலாம். இவ்வாறு மேடை நாட்டிய நாடகத்தினை காண வந்த அனைவரையும் கவர்ந்திழுத்த கிருஷ்ணனின் நிஜப் பெயர், கண்ணன் இராஜமாணிக்கம். இவர்தான் 'சாமசுந்தரா'வின் கதாநாயகன். முகம், உடல் முழுக்க நீல நிறக்க கலவையை மிக அழகாகப் பூசி, நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தார். பாவம், அந்த அலங்காரத்தைக் கலைக்கவே அவருக்கு எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ தெரியவில்லை.


நிகழ்வின் இறுதியில், அனைத்து நாட்டிய மணிகளும் மேடையிலும் பார்வையாளர் மத்தியிலும் ஒன்றாகத் தோன்றி ஆடி அரங்கையே பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தனர். மலேசியாவில் இப்படி ஒரு தரமான மேடை நாட்டிய நாடகம் உருவாகியிருப்பது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. இதனை அரும்பாடுபட்டு உருவாக்கிய தயாரிப்பாளரும் பிரபல நடன இயக்குனருமான ரவி சங்கர் அவர்களுக்கு பாராட்டுகள். கடந்த இரண்டு நாட்களாக கோலாலம்பூர், மாலாயா பல்கலைக்கழக அரங்கில் நடைப்பெற்ற இந்நாடகத்தினைக் கண்ட எவரும் இதனைப் பற்றி குறை கூற மாட்டார்கள். அப்படியொரு சிறந்த படைப்பினை அஸ்தானா ஆர்ட்ஸ் படைத்துள்ளது.

இதுபோன்ற மேடை நாட்டிய நாடகங்கள் நமது நாட்டில் இன்னும் அதிக அளவில் நடக்க வேண்டும். நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. கதாப்பாத்திரங்களாக கண் முன் நடித்துக்காட்டிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி.


1 கருத்து:

dinesh சொன்னது…

arputham!!!