புதன், 13 மே, 2009

எங்கே செல்லும்…? (21)


கையோடு கவிதாவைக் கூட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் கமலம். கவிதா அமைதியாகவே இருந்தாள். தேவியும் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். கமலம் மட்டும் கவிதாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிக்கொண்டே உணவு பரிமாறினாள்.

கவிதாவால் சாப்பிடக் கூட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இரண்டு வாய் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட முடியவில்லை என்று எழுந்துவிட்டாள். சிறிது நேரம் தேவியின் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தாள். பின்னர் அவர்கள் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு பாட்டி வீடு நோக்கி நடந்தாள்.

நீண்ட நேரம் தனது அறையில் அமைதியாக யோசித்தாள். அவளது கண்களிலிருந்து மட்டும் நீர் வற்றாமல் ஊற்றிக் கொண்டிருந்தது. எதை எதையோ யோசித்தாள். அவளது எதிர்க்காலத்தை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து முகம் கழுவி உடை மாற்றினாள். வரவேற்பறையில் அமர்ந்திருந்த பாட்டியிடம் சென்று “நான் வெளியே போயிட்டு வர்றேன்,” என்றுக் கூறி வெளியே சென்றாள். பாட்டி எதுவும் கூறவில்லை.

நீண்ட நேரம் கால் போன போக்கிலே நடந்தாள். நடந்து நடந்து பூங்காவிற்கு வந்துச் சேர்ந்தாள். அவள் இதயம் கனத்தது. தனிமையான இடத்தில் அமர்ந்து தான் கடந்து வந்த பாதையினை அசைப்போட்டாள். பிறந்தது, வளர்ந்தது, அனுபவித்தது, ஏங்கியது, அவமானப்பட்டது, துன்பப்பட்டது என அனைத்தையும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தாள்.

எழுந்துக் கடைத்தெருவுக்குச் சென்றாள். அவள் கண்களிலிருந்து நீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது. மிகவும் சிரமம்பட்டு அதனைக் கட்டுப்படுத்தினாள். ஒரு கடைக்குள் நுழைந்துக் குளிர்பாணம் வாங்கினாள். மற்றொரு கடைக்குள் நுழைந்து வேறு எதையோ வாங்கினாள். பின்னர் மீண்டும் ஆழ்ந்த யோசனையுடன் வீடு நொக்கி நடந்தாள்.

நடைப்பிணம் என்று சொல்வார்கள் அல்லவா? அது போலத்தான் நடந்துச் சென்றாள் கவிதா. நேரே அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள். அழுது அழுது அவளது கண்கள் வீங்கிவிட்டன. அப்பொழுது கூட கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.

மாலை கடந்து இரவானது. பாட்டி கதவைத் தட்டினார்; திறந்தாள். சாப்பிடச் சொன்னார்; வேண்டாம் என்றுக் கூறி குப்புறப் படுத்தாள். “எல்லாரும் சேர்ந்து என் உயிர எடுங்க!” என்று கடுப்போடு முனகிவிட்டு பாட்டியும் சென்றுவிட்டார்.
மறுநாள் காலைப் பொழுது பறந்துச் சென்றது. மதியமும் ஆகிவிட்டது. கவிதா அறையைவிட்டு வெளியே வரவில்லை. மங்களம் வீட்டிற்கு வந்தாள். பாட்டி கவிதாவைப் பற்றிக் கூறி முனகினாள்.

“நேத்துலேர்ந்து ஒழுங்கா சாப்பிடவே இல்லை. இங்கேயிருந்து போய் கமலம் வீட்ல சாப்பிட்டு வருது. மத்தவங்கப் பார்த்தா என்ன நினைப்பாங்க? எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல,” என்று குறைப்பட்டுக் கொண்டார் பாட்டி.

“உங்களுக்கு நல்லா வேணும். தெருவுல போற ஓணான வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு சொன்னா நாங்க என்ன பண்றது? சின்னதுலேயே எங்கேயாவது போய் விட்டிருக்கணும். மகன் பிள்ளை’னு உயிரை விட்டீங்க தானே, அதான் இப்ப அனுபவிக்கிறீங்க,” என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள் மங்களம்.

பாட்டி மணியைப் பார்த்தார். இரண்டாகிவிட்டது. பொறுமையிழந்தார்.
“ஏய் கவிதா! கவி்தா…!! கதவைத் திற!” என்று கத்தினார். கதவுத் திறந்தப்பாடில்லை. இதுதான் சாக்கென்று மங்களம் வாய்க்கு வந்தபடி கவிதாவைத் திட்ட ஆரம்பித்தாள்.

“எங்கம்மா இந்தக் கத்துக் கத்துறாங்க, செவிட்டுக் கழுதை மாதிரி படுத்துக்கிடக்கா. ஏய், கதவைத் திறடி!” என்று கதவைப் படபடவென்று தட்டினாள் மங்களம். அப்பொழுதும் கதவுத் திறந்தபாடில்லை. “இது சரிப்பட்டு வராது. அம்மா, இன்னொரு சாவி எங்க? போய் எடுத்துட்டு வாங்க. இத இப்படியே விட்டா சரியா வராது. இன்னைக்கு ஒரு முடிவுக் கட்டுறேன்!” என்று கொந்தளித்தாள் மங்களம்.

பாட்டி சாவியை எடுத்து வந்தார். கதவைத் திறந்தார்கள். மங்களம் பாய்ந்துச் சென்று குப்புறப் படுத்திருந்த கவிதாவின் பின் பக்கத்தில் ஓங்கி ஒரு உதைவிட்டாள். கவிதா அமைதியாகவே படுத்திருந்தாள். மங்களத்தின் வவய் கவிதாவை அர்ச்சித்துக்கொண்டிருந்தது. மீண்டும் ஓர் உதைவிட்டாள். கவிதா அப்பொழுதும் அசையவில்லை.

“மங்களம், இரு!” என்றுக்கூறி பாட்டி கவிதாவின் அருகில் வந்து அவளைத் தொட்டார். அவள் உடல் சில்லென்றிருந்தது. திருப்பிப் போட்டார். வாயில் நுரையுடன் பிணமாகிக் கிடந்தாள் கவிதா! அவள் மூச்சு நின்றுப் போய் பல மணி நேரமாகிவிட்டது.

“பாவி மக இப்படிப் பண்ணிட்டியே!” என்று பாட்டி போட்ட கூச்சல் கமலத்தின் வீடு வரையில் கேட்டது….

*** முற்றும் ***

5 கருத்துகள்:

அப்துல்மாலிக் சொன்னது…

சோகமான முடிவுரை

தற்கொலைத்தான் உன்னத முடிவு என்பதை ஊக்குவிப்பதுபோல் இருக்கு இந்த கதையின் முடிவும். பெண்களின் புரட்சிப்பேசும் உங்ககிட்டேர்ந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கவில்லை.... வருத்தப்பட்டேன்.


எனிவேய் கதையோட்டம் நல்லாயிருந்தது

புதியவன் சொன்னது…

நண்பர் அபுஅஃப்ஸர் சொன்னது போல் இப்படி ஒரு முடிவை உங்களிடமிருந்து நானும் எதிர் பார்க்கவில்லை எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது...அவசரமாக கதையை முடித்தது போல் இருக்கிறது...

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) சொன்னது…

இப்படி ஒரு முடிவை உங்களிடமிருந்து நானும் எதிர் பார்க்கவில்லை!!!

தமிழ் பெண்கள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர்!!

தற்கொலை என்றுமே முடிவு அல்ல!!

உயிர்....
விடுவதற்கல்ல, வாழ்வதற்கு!!

seems like you ended the story in hurry for some reason!!

unexpected ending!!

நான் சொன்னது…

முடிவை சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் சிந்தித்து சொல்லிஇருக்கலாம்
தற்கொலை ஒருநிமிடத்தில் எடுக்கும் தவறான முடிவு அது மட்டுமல்ல தோல்வியால் துவண்டு போகும் முடிவாகும் வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் கருத்துரைகளுக்குப் பதில் அளிக்கிறேன். நான் எழுதியது முழுக்க முழுக்கக் கற்பனை அல்ல நண்பர்களே...உண்மைச் சம்பவம். எமது கற்பனையை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதியிருந்தால் எம்மால் வேறு மாதிரியான முடிவினைக் கொடுக்க முடியும். இம்மாதிரியானச் சம்பவங்கள் இன்னும் உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. மனிதாபிமானம் குறைந்து சுயநலம் பெருகிக் கொண்டே வருகிறது. இந்நிலைத் தொடர்ந்தால் இந்த உலகம் எங்கே செல்லும்?