திங்கள், 15 டிசம்பர், 2008

திசை மாறிய படகு (பாகம் 2)


தொடர்ச்சி....
கணவன் மகனையே உன்னிப்பாக கவனிப்பதைக் கண்ட வாசுவின் தாயார் கணவனிடன் சென்று, “ஏங்க அவனை அப்படிப் பார்த்துக்கிட்டே இருக்கீங்க?” என்று வினவினாள்.

“இல்ல. சின்னப் பையனாக இருந்தான். அப்பா அப்பான்னும் என்னையே சுத்தி சுத்தி வருவான். இப்ப எப்படி மலை மாதிரி வளர்ந்துட்டான் பார்த்தியா? நானும் எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு அலைந்துக் கொண்டிருக்கேன். அவனோடு ஒருநாள் கூட முழுசா இருந்ததில்ல. பையன் ரொம்பெ மாறிட்டான். இருந்தாலும் அவனது பழக்க வழக்கங்கள் எல்லாம் முன்ன மாதிரியே இருக்குது பார்த்தியா? அதுதான் பார்த்துக்கிட்டிருந்தேன்,” என்றார் வாசுவின் தகப்பனார்.

அறைக்குள் இருந்த வாசு தனது பெற்றோர் பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். தனது தந்தையிடன் நல்ல பேர் எடுக்க, நல்ல பிள்ளையைப் போல் பூஜை அறைக்குள் நுழைந்தான். என்றும் இல்லாமல் அன்று மட்டும் கண்களை முடிக்கொண்டு இறைவனைப் பிராத்தனை செய்வது போன்று பாவனைச் செய்தான்.

ஆனால் அவனது மனமோ நேற்று அவனும் அவனது நண்பர்களும் இன்று என்ன செய்யப் போகிறார்கள் என்று தீட்டிய திட்டத்தை நோக்கியே சென்றுக் கொண்டிருந்தது. வாசுவின் தந்தையோ மகன் பக்தியுடன் இறைவனை தரிசிப்பதைக் கண்டு மனம் பூரித்துப் போனார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பூஜை அறையை விட்டு வெளியே வந்தான் வாசு. அவனது நெற்றி முழுவதும் திருநீற்றால் பட்டைத் தீட்டியிருந்தான். தனது தாயிடம் அன்று தான் வீட்டிற்குச் சற்று தாமதமாக வருவதாகக் கூறினான். அவனது தாய் ஏனென்று கேட்பதற்குள் சக மாணவர்களோடு சேர்ந்துப் படிக்கப் போவதாகக் கூறினான். அவனது தாயும் நல்லதென்றுக் கூறி, வாசுவின் கையில் பத்து ரிங்கிட் நோட்டைத் திணித்தாள்.

வாசு மகிழ்ச்சியுடன் அதனை அவனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தனது தந்தையிடம் அடக்கத்துடன் விடைப்பெற்றுக் கொண்டு தனது மோட்டார் வண்டியில் ஏறிப் புறப்பட்டான். அளவுக்கதிகமான சத்தமில்லாமல் மிதமான சத்தத்துடன் மெதுவாக வண்டியைச் செலுத்தினான். வாசுவின் தந்தை மகனின் அடக்கத்தைக் கண்டு அகமகிழ்ந்துப் போனார். என்னே அடக்கம்! என்னே அடக்கம்!

சற்று தொலைவு சென்ற பின் வாசு தனது வண்டியை வேறு பாதையில் திருப்பினான். தூரத்தில் ஓர் ஒட்டுக்கடையில் அவனது நண்பர்கள் குழுமி இருந்தது தெரிந்தது. சட்டென்று தான் வீட்டில் தீட்டிய திருநீற்றுப் பட்டை ஞாபகம் வர உடனே அதைத் துடைத்துக் கொண்டான். நண்பர்கள் கண்டால் கேலி செய்வார்கள் என்று அஞ்சினான் போலும். வாசுவின் நண்பர்கள் அவனது வரவை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

வாசு மோட்டாரிலிருந்து இறங்கியதுதான் தாமதம். அவனது நண்பர்களில் ஒருவன், “இப்பவே மணி 7.15 ஆயிருச்சி. எட்டு மணிக்கெல்லாம் நமக்காக அங்க இன்னொரு கேங் காத்துக்கிட்டு இருக்கும். நீ போய் சட்டுன்னு சட்டை மாத்திட்டு வா. அப்புறமா போய் எல்லாரையும் கூட்டிட்டுப் போவலாம்,” என்றான்.

“டென்ஷன் ஆகாதடா! இன்னைக்கு எங்கப்பா விட்ல இருந்ததால லேட்டாயிடுச்சி. இப்பப் பாரு, ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்,” என்று பக்கத்தில் இருந்த சிறிய காட்டுக்குள் தனது புத்தகப் பையுடன் நுழைந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

பேரிரைச்சலுடன் அந்த கும்பல் அவ்விடத்தை விட்டு அகன்றது. அந்தக் குண்டர் கும்பலில் உள்ளவர்கள் ஆளுக்கொரு கட்டையை கையில் ஏந்தியவாறு “ஆ, ஊ” என்று என்று கத்திக்கொண்டே சென்றனர்.

அன்று வாசுவின் கும்பலுக்கும் இன்னொரு கும்பலுக்கும் சண்டை அமோகமாக நடந்தது. அவர்கள் சண்டை போட்ட இடத்தில் இருந்த கடைகளில் உள்ள நாற்காலிகளும் மேசைகளும் அங்கும் இங்கும் ஆகாயத்தில் பறந்தன. பசு போல் சாதுவாக இருந்த வாசு தனது எதிரிகள் மீது புலி போல் பாய்ந்தான்.

அப்பொழுது அவர்கள் சற்றும் எதிர்ப்பாராத விதமாக போலீஸ் வண்டி ஒன்று வேகமாக சண்டை நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தது. சண்டைப் போட்டுக் கொண்டிருந்த இரண்டு குண்டர் கும்பல்களும் விழுந்தடித்துக்கொண்டு ஓடின.

வாசு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கண்மண் தெரியாமல் அழுத்தினான். ‘டமார்!” என்ற சத்தத்துடன் வாசுவின் மோட்டார் எதிரே வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது மோதியது. வாசு, “ஆ…” என்றுக் கத்திக்கொண்டே மயங்கி விழுந்தான். அவன் உடல் முழுவதும் இரத்த வெள்ளத்தில் மிதந்தது. அவனுடைய மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக நொறுங்கிக் கிடந்தது.

வாசு கண் விழித்த போது அவனது உடல் முழுவதும் கட்டுப் போடப்பட்டு இருந்தது. எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனது உடல் முழுவதும் வலித்தது. அப்பொழுது அவன் அருகில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து நின்றார். அவர் பக்கத்தில் வாசுவின் தாயும் தந்தையும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களது முகம் அழுது அழுது வீங்கிக் கிடந்தது.

வாசுவைக் கண்டதும் அவனது தாய் இன்னும் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அப்பொழுது அங்கு வந்த டாக்டர், “வாசு…விபத்தின் போது உன்னோட இடது கால்…” என்று இழுத்தார். அப்பொழுது தான் வாசு தனது காலை கவனித்தான்.

தனக்கு ஒரே ஒரு கால் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியேவிட்டான். “அம்மா…அம்மா….என்னோ…என்னோட காலைக் காணோம். அம்மா என் காலை காணோம்மா!” என்று தேம்பி தேம்பி அழுதான்.

“ஏன்’டா… ஏன்’டா இப்படி செய்தே?” என்று அவந்து தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள். வாசுவின் தந்தையோ, செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்

“அம்மா என்னை மன்னிச்சிருங்க. அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. வயசான காலத்துல உங்கள பார்த்துக்க வேண்டிய நானே இன்னைக்கு உங்களுக்கு பாரமாயிட்டேன். இனிமே யாரோடும் சேரமாட்டேன். நான் நல்லா படிச்சு உங்கப் பேரை காப்பாத்துவேன்!” என்று கண்ணீர் மல்க கூறினான்.

நீதிமன்றத்தில், வாசு அறியாமல் செய்த தவறுக்காக மன்னித்து எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், வாசுவின் நண்பர்கள் வசமாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டனர்.

சில தினங்களுக்குப் பின்னர், ‘உணவகத்தில் இரண்டு இந்திய குண்டர் கும்பல்கள் மோதல். ஐவர் கைது’ என்ற தலைப்பில் வாசுவின் நண்பர்களுடையப் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

செய்தித்தாளை படித்து முடித்த வாசு பக்கத்தில் இருந்த மேசை மீது அதனை வைத்தான். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் தனது கால்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவனது கண்கள் கலங்கின.


***முற்றும்***


தமிழ் நேசன், ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 5, 2000

3 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:(((... முயற்சிகள் தொடரட்டும்...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\செய்தித்தாளை படித்து முடித்த வாசு பக்கத்தில் இருந்த மேசை மீது அதனை வைத்தான். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தவன் தனது கால்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அறியாமலேயே அவனது கண்கள் கலங்கின.\\

திருந்துவதற்கு கொடுத்த விலை அதிகம்.

புதியவன் சொன்னது…

தெளிவான நடையில் சென்று ஆழமான உண்ர்வோடு முடித்திருக்கிறீர்கள்...அருமை...

//தமிழ் நேசன், ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 5, 2000//

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே உங்களுக்கு வார்த்தைகள் வசப்பட்டிருக்கிறது...தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...