வியாழன், 7 ஜூலை, 2016

கடல் புறா -சாண்டில்யன் (பாகம் 3)


அஷையமுனையை விட்டு கடலில் பயணம் மேற்கொண்ட இளைய பல்லவன் மனதில் கடாரத்து இளவரசி காஞ்சனா தேவியும், மஞ்சளழகியும் மாறி மாறி வந்துப் போயினர். கடல் மோகினியை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த கடல் புறாவை கலிங்கத்துப் போர்க் கப்பல்கள் தாக்க ஆரம்பித்தன. கடல் புறாவின் முதல் கடல்போர் வெற்றியில் முடிந்தது. அதிஷ்டவசமாக, கடாரத்து இளவரசி காஞ்சனாதேவியும், அவளது தந்தை குணவர்மனும் கலிங்கத்து கப்பல்களில் இருந்ததினால், அவர்களையும் இளைய பல்லவன் காப்பாற்றினான்.

நக்காவரத்தில் இருக்கும் தமிழர்கள் துணையுடன் போரினால் சேதமடைந்த  தனது கப்பல்களைச் சரிசெய்ய நினைத்த இளைய பல்லவனுக்கு பெருத்த அதிர்ச்சிக் காத்திருந்தது. மாநக்காவரத்தில் இருந்த கங்கதேவனைச் சூழ்ச்சியின் மூலம் வீழ்த்துகிறான் கருணாகரப் பல்லவன். கங்கதேவன் காஞ்சனா தேவியை அடைய முயன்றதால், அவனைக் கொலையும் செய்கிறான். அடுத்ததாக, கடாரத்தைப் பலவர்மனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அடுத்தக் கட்ட முயற்சியில் ஈடுபடுகிறான். கடாரத்தில் குணவர்மனையும் காஞ்சனா தேவியையும் விட்டுவிட்டு, கடல் நாடுகளில் காலை ஊன்றச் சென்றுவிடுகிறான். வெற்றிக்கொண்டு மீண்டும் கடாரம் வந்திறங்கிய இளைய பல்லவனை சொர்ணபூமிக் கடல் பிராந்தியங்களுக்குச் சோழ மன்னரால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட இளவரசர் அநபாயர் சிறைப்பிடிக்கிறார். 

இளைய பல்லவனின் சிறைப்பிடிப்பு ஒரு அரசியல் நாடகம் என்பதை அநபாயர் அவனுக்கு விளக்குகிறார். கருணாகரனைச் சிறிது காலம் அஷையமுனையில் தங்கியிருக்குமாறும், காஞ்சனா தேவியை உடன் அழைத்துச் செல்லுமாறும் உத்தரவுப் பிறப்பிக்கிறார். மஞ்சளழகியை நினைத்து இளைய பல்லவன் அதற்கு உடன்பட மறுக்கிறான். அனைத்தையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த அநபாயக் குலோத்துங்கன் அமீரின் உதவியுடன் தந்திரம் செய்து அவர்களை அஷையமுனைக்கு அனுப்புகிறான். இருப்பினும், கடல் பயணத்தின் பாதி வழியில், இளைய பல்லவன் கப்பலில் வழியை மாற்ற, அது மலையூர்க் கோட்டையை நோக்கிச் சென்றது. ஜம்பி நதி முகத்துவாரத்தில் பெரும் போரில் ஈடுப்பட்ட கடல்புறா இறுதியாக, ஸ்ரீவிஜயத்தின் கடற்படை தளபதி விஜயசந்திரனைச் சுற்றி வளைத்தது. 

மலையூரைத் தன் வசமாக்க நினைத்த இளைய பல்லவன், கோட்டையில் மஞ்சளழகியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறான். ஜெயவர்மன் மஞ்சளழகியைத் தன் மகளாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீவிஜயத்தின் இளவரசி பட்டத்தினை அளித்ததையும், தாம் தற்போது மலையூர்க் கோட்டையின் தலைவர் என்பதையும் மஞ்சளழகி விளக்குகிறாள். இருப்பினும், இளைய பல்லவன் மீதுள்ள காதலினால், அவனுக்கு உதவ முற்படுகிறாள். 

இவ்வேளையில், இளைய பல்லவனைத் தேடி கோட்டைக்கு வந்த காஞ்சனா தேவிக்கும், மஞ்சளழகிக்கும் வாக்கு வாதமும், மனவருத்தமும் முற்றுகிறது. மஞ்சளழகி கோட்டையைப் பிடிப்பதற்கு உதவியதையும், தனக்காகச் செய்த பெரும் தியாகத்தையும் இளைய பல்லவன் காஞ்சனா தேவியிடம் விளக்கு இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறான். மலையூர்க் கோட்டையை தன் வசமாக்கிக்கொண்ட இளைய பல்லவன், மங்கையர் இருவரையும் கடல்புறாவில் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவிஜ‌யத்தை நோக்கிப் பயணமானான். 

சுமார் மூன்று நாட்கள் நடந்த போரில், ஸ்ரீவிஜயம் வீழ்ந்தது. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சொர்ணத் தீவும், கடாரமும் சேர்ந்த பெரும்பகுதி குணவர்மனுக்கும், சைலேந்திரர்களின் ஜன்ம பூமியான சாவகத் தீவு ஜெயவர்மனுக்கும் பிரித்தாள கொடுக்கப்பட்டன. 

தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற இளையபல்லவனை வரவேற்ற வீரராஜேந்திர சோழர் வண்டைக் குறுநிலத்தை இளையபல்லவனுக்கு அளித்து கருணாகரத் தொண்டைமான் என பெயரும் வழங்குகிறார். அவனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், மஞ்சளழகியையும், காஞ்சனாதேவியும் மணமுடித்து வாழ ஆசியும் வழங்குகிறார் வீரராஜேந்திர சோழர். 

இவ்வாறாக சுபமுடன் நாவல் முடிவுறுகிறது. மூன்று பெரும் பாகங்களாகப் படைக்கப்பட்டுள்ள இந்நாவலின் முதல் பாகத்தில் காஞ்சனா தேவியும், இரண்டாம் பாகத்தில் மஞ்சளழகியும் கதைத்தலைவிகளாக வலம்வருகின்றனர். நாவலின் மூன்றாம் பாகத்தில் மட்டுமே மங்கையர் இருவரும் சந்திக்கின்றனர். ஆகவே, மூன்றாம் பாகத்தில் இளையபல்லபன் மற்றும் இரு மங்கையர் துணையுடன் பயணிக்கிறது கடல்புறா. 

நாவலில் இடம்பெரும் கடாரம் பற்றிய சில குறிப்புகள்:

*இராஜேந்திர சோழதேவரைப் போன்ற வீரரும் ரசிகரும் தமிழகத்தில் இருந்ததில்லை காஞ்சனாதேவி. அவர் கங்கையைக் கொண்டதன்றிக் கடாரத்தையும், ஏன் கீழ்த்திசை முழுவதையுமே வெற்றிக் கொண்டதும் உலகமே வியந்தது. பக்.70

*தமிழர்கள் சங்க காலம் முதல் அறிந்த கடாரத்தின் சிறப்பையும் இயற்கைக் காவலையும் கூட அசட்டை செய்தவண்ணம்... பக்.362

*'தொடு கடல் காவல் கடுமுரட்  கடாரமும்' என்று இராஜேந்திர சோழ தேவர் தஞ்சை இராசராசேச்சுரத்துக் கர்ப்பக்கிருகத்தில், தென்புறத்திலுள்ள இரண்டாம் பட்டைக் கல்வெட்டில் படைத்த சாஸனத்தை நினைத்து ஓரளவு புன்முறுவல் கொண்டான். பக்.363

* "கலைத்தக்கோர் புகழ் தலைத்தக் கோலமும்
    திதமாவல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிரக்'
    கடுந்திறல் இலாமுரி தேசமும் தெனக்க வார்பொழில்
    மானக்காவரமும் தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்..."  பக்.363

*மலாக்க ஜலசந்தி என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஞ்யக் கடற்பகுதி நாடுகளில் பல இடங்களில் தனது கால்களை ஊன்றினான். பக்.365

*கி.பி. 1062-வது வருடத்திற்குப் பிறகு குலோத்துங்கத் தேவன் கடாரத்தில் வீரராஜேந்திரன் பிரதிநிதியாகப் பணியாற்றியதாகவும், சோழநாட்டுத் தூதனாக கி.பி.1067-ல் சீனத்துக்கும் சோழத் தூதராகச் சென்றதாகவும் கூறுகிறார். பக்.372

*நமது நாட்டு இளவலொருவன் தற்கால வசதிகளில்லாத அக்காலத்தில் கடாரத்தில், அங்குள்ள மன்னர்களுக்கும் உத்தரவிடும் நிலையில் அமர்ந்திருந்தான். பக்.373



ஞாயிறு, 3 ஜூலை, 2016

கடல் புறா- சாண்டில்யன் (பாகம் 2)



பாலூர்ப் பெருந்துறையில் சிக்கிக்கொண்ட இளைய பல்லவனை அகூதா காப்பாற்றி கப்பலில் போர் பயிற்சி அளிக்கிறார். அகூதாவின் வழிக்காட்டலின் பேரில் மிக விரைவிலேயே இளையபல்லவன் பிரசித்திப்பெற்ற கடற்போர் வீரனாக அறியப்படுகிறான்.

நாவலின் இரண்டாம் பகுதி அஷையமுனையில் தொடங்குகிறது. அஷையமுனைக் கோட்டைத் தலைவன் பலவர்மன், குணவர்மனின்  ஒன்றுவீட்டுச் சகோதரன் என்பதையும் , மிகவும் ஆபத்தானவன் என்பதையும் இளையபல்லவன் கண்டறிகிறான். அஷையமுனையில் தான் சிறிய கடற்படை அமைக்க விரும்புவதாக கோட்டைத் தலைவனின் உதவியை நாடுகிறான். அவ்விடம் கோட்டத் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சளழகியின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மஞ்சளழகியும் இளையபல்லவன் பால் ஈர்க்கப்படுகிறாள். இவற்றை தனது அரசியலில் இலாபத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள பலவர்மன் முனைகிறான். 

இதற்கிடையில் மஞ்சளழகியை மணமுடிக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனக்குக் கிடைத்த சலுகையைப் பயன்படுத்தி இளையபல்லவன் தனது மரக்கலத்தை மறுசீரமைக்கிறான். அதற்கு புறாவின் முகத்தை அமைத்து, கடாரத்தின் இளவரசியின் நினைவாக 'கடல் புறா' என பெயரிடுகிறான். இளையபல்லவனைக் கொலை செய்ய பலவர்மன் வெகுவாக முயன்று தோல்வியைத் தழுவுகிறான். மஞ்சளகி அகூதாவின் சகோதரிக்கும் ஜெயவர்மனுக்கும் பிறந்தவள் என்ற இரகசியம் வெளிவருகிறது.

இறுதியாக, தனது சாமர்த்தியத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலமாகத் திகழ்ந்த அஷையமுனையை இளையபல்லவன் கைப்பற்றி, மறுசீரமைக்கிறான். அதனை மஞ்சளழகிக்கு அளித்து அரசாளும் உரிமையை வழங்குகிறான். பின்னர், மிஞ்சியிருக்கும் தனது கடமையை நிறைவேற்ற மீண்டும் படற்பயணம் மேற்கொள்கிறான். இம்முறை கரையிருந்தபடியே கனத்த இதயத்துடன் அவனை வழியனுப்புவது மஞ்சளழகி.

...தொடரும்...








சனி, 2 ஜூலை, 2016

கடல்புறா -சாண்டில்யன் (பாகம் 1)




சரித்திர நாவல்களில் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு. அதிலும் கல்கி, சாண்டில்யன் ஆகிய இருவரின் தீவிர வாசகி. வெகுகாலமாகவே சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மலேசியாவின் 'கெடா' (கடாரம்) என்ற மாநிலம் குறித்து இந்நாவலில் சில குறிப்புகள் இருந்ததனால் இது எனது ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. நாவலை வாசித்து முடித்து பல மாதங்கள் ஆன போதிலும் இதனைப் பற்றி சிலவற்றை குறிப்பெழுத வேண்டும் என உள்மனம் நச்சரித்துக்கொண்டே இருந்தது. அதற்கான அரிய வேளை இப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது.

கடல்புறா நாவல் மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 1967-இல் எழுதப்பட்ட இந்நாவலில் பல சரித்திர நிகழ்வுகள் பதியப்பெற்றிருக்கின்றன. புனைக்கதையாக இருந்த போதிலும் பல வரலாற்று நூல்களின் துணைக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இளைய பல்லவனைக் (கருணாகர பல்லவன்) கதைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்தில் கதைத் தொடங்குகிறது. பாலூர்ப் பெருந்துறையில் வந்திரங்கிய உடனேயே சிக்கலில் மாட்டிய கருணாகரனுக்குச் சுங்க அதிகாரி தப்புவதற்கு உதவி செய்கிறான். உயிர் தப்பி ஒரு மாளிகையில் தஞ்சம் புகுந்த இளைய பல்லவன் அவ்விடம் கடாரத்தின் அரசகுமாரி காஞ்சனா தேவியைச் சந்திக்கின்றான். கலிங்க வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைய பல்லவனையும், கூலவாணிகன் சேந்தனையும், அநபாய குலோத்துங்கன் (சோழர் குல இளவல்) மற்றும் காஞ்சனாதேவி ஆகிய இருவரும் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர்.அநபாயரின் நண்பனான அரபு நாட்டைச் சேர்ந்த அமீர் அவர்களுக்கு உதவ முன்வருகிறான். அமீர் பிரசித்திப்பெற்ற கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் சிறந்த சீடன் என்பது குறிப்பிடத்தக்கது. அகூதா மற்றும் அமீரின் துணையுடன் அநபாயன், காஞ்சனாதேவியையும் அவளது தந்தை குணவர்மனையும் கப்பலில் ஏற்றி கலிங்கத்தை விட்டு வெளியேறுகிறான். இவர்களைத் தப்புவிக்கும் முயற்சியில் அமீரும், இளைய பல்லவனும் கரையிலேயே தங்கி விடுகின்றன. மாளிகையில் முதன் முதலாகச் சந்தித்த அன்றே தனது இதயத்தை இளைய பல்லவனிடம் பறி கொடுத்த காஞ்சனா தேவி கனத்த இயத்துடன் கப்பலில் பயணிக்கிறாள். இவ்வாறாக நாவலின் முதல் பாகம் சோகத்துடன் நிறைவடைகிறது.

கடாரத்தைப் பற்றி நாவலில் இடம்பெறும் சில தகவல்கள்:

*வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத்தீவுக்கும் இந்த பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். -பக்.44

*தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப்பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் ஆபரண வாயிலையும் கொண்டு வந்தும்  முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்துதான் கிளம்பியது. -பக்.45

*கோட்டைக் காவலரிடமிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்ப்பார்த்திருக்க முடியும்? -பக்.68

*தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா? -பக்.68

*ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது! -பக்.74

*கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது. -பக்.78

*கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. -பக்.90

*கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே? -பக்.90

*அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்தர்களின் மாபெரும் அரசான ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. -பக்.91

*பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான்,  கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. -பக்.92

*ஸ்ரீமார விஜயதுங்கவர்மனுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட இராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீ விஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டி பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத்தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீ விஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கினார் என் தந்தை. -பக்.95

*ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத்துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோதமும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறான்.  அவன் அச்சம் குலையுமுன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும் , என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். -பக்.96

*கடாரத்தின் மன்னர்-இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது- ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும்  கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். -பக்.367

...தொடரும்...





வெள்ளி, 24 ஜூன், 2016

மரணம்


மரணம்...ஆம், அவ்வளவுதான் வாழ்க்கை. நாம் எவ்வளவுதான் இந்த வாழ்க்கையை எதிர்க்கொள்ள போராடினாலும்,இறுதியில் அனைவருக்குமே மரணம்தான். எவ்வளவோ கற்றுக்கொண்ட மனிதனால் இன்று வரையில் காலனை வெல்லும் வழியினைக் கண்டுக்கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மரணமே இல்லாதவர்கள் போல் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். எத்தனைப் பெருமை, கர்வம், பொறாமை, வஞ்சகம், போட்டி?? இறுதியில் நடப்பதென்ன? காலன் வெல்லும்போது நாம் நமது இயலாமையை உணர்கிறோம். 

நமது உடல் மிகவும் மென்மையானது. அதனை ஒவ்வொருவரும் பெரும்பாடுபட்டுக் காக்க வேண்டியுள்ளது. சிறு கீறலும் கூட நம் உயிரை பறித்துவிடும். தீயில் எளிதில் கருகி வெந்துவிடுவோம். சாலை விபத்தில், கணத்தில் மரணம் நிகழலாம். நாம் சக்தியற்றவர்கள். நாம் தினமும் உயிர் வாழ உண்ணும் உணவு கூட சில சமயங்களில் நமக்கு எமனாய் வந்து நின்றுவிடுகிறது. இவ்வளவுதான் மனிதன். பிற உயிர்களைப் போல் வெறும் இரத்தமும், எலும்பும், சதையும் கொண்டவன். ஆனால், மரணம் கண் முன் தெரியும்வரை மனிதன் இதனை உணர மறுக்கிறான்.

எவ்வளவு படித்திருந்தும், எவ்வளவு அனுபவங்கள் பெற்றிருந்தும், நமது வாழ்க்கையின் முடிவு மரணம்; அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற உண்மையை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ சாகாவரம் பெற்றவர்கள் போல் கர்வத்துடன் பூமியில் அலைகிறோம். வாழ்க்கையை மேம்படுத்த, பணம் சம்பாதிக்க என்னென்னவோ செய்கிறோம். பெயரையும் புகழையும் தேடி ஓடுகிறோம். பிறரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறோம். அடுத்தவரைக் கண்டு நகைக்கிறோம்; ஏளனம் செய்கிறோம். பிறர் மரணத்தைக் கண்டு பரிதாபம் கொள்கிறோம். நாமும் எதிர்க்காலப் பிணம் என்பதை உணர மறுக்கிறோம்.

மரணம், இதுதான் வாழ்க்கையின் முடிவு. பிறந்த ஒவ்வொருவருக்கும் இதுதான் முடிவு. இதில் எள்ளளவும் மாற்றமில்லை. அது இப்போதும் நிகழலாம், எப்போதும் நிகழலாம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த இடைவெளியைத்தான் நாம் வாழ்க்கை என்கிறோம். இந்த இடைவெளி சிலருக்குக் குறுகியதாய் இருக்கலாம், பலருக்கும் நீண்டதாய் இருக்கலாம். எப்படி இருப்பிலும், இடைவெளி நீங்கியப்பின் நமக்கெல்லாம் காத்திருப்பது மரணம்! ஆம், எனக்கும் மரணமுண்டு, உனக்கும் மரணமுண்டு!


வெள்ளி, 27 மே, 2016

நிரந்தரமில்லை...


இதுவும் நிரந்தரமில்லை 
அதுவும் நிரந்தரமில்லை 
சுற்றும் உலகில்
எதுவும் நிரந்தரமில்லை!

நேற்று அழுதவன் 
இன்று சிரிக்கிறான்
இன்று சிரிப்பவன்
நாளை அழுகலாம்...

மாடியில் இருப்பவன் 
குடிசைக்கு வரலாம்
குடிசையில் இருப்பவன்
மாடி ஏறலாம்...

இன்றைய காதலி மனைவியாகலாம்
நேற்றைய நண்பன் பகைவ‌னாகலாம்
பெற்ற தாயும் மறைந்துப் போகலாம்
வாழ்க்கை என்பதே வெறுத்துப் போகலாம்

நேற்றைய பழக்கம் மாறி போகலாம்
புதியன அனைத்தும் வந்து சேரலாம்
நண்பர் கூட்டம் பெருகிப் போகலாம்
அடுத்த நாளே இறந்துப் போகலாம்!

இதுவும் இல்லை
அதுவும் இல்லை
வாழ்க்கையில் எதுவும்
நிரந்தரமில்லை!

ஹரி போட்டரும் மந்திரவாதியின் கல்லும் -ஜெ.கே.ரோவ்லிங் (Harry Potter and The Sorcerer's Stone)


பெற்றோர் மறைவிற்குப் பிறகு ஹரி சித்தியின் வீட்டில் பல கொடுமைக்களுக்கிடையில் வளர்கிறான். பதினோரு வயது வரையில் தனது பிறந்தநாளை ஒருநாள் கூட அவன் கொண்டாடியதில்லை. ஒருநாள் அவனுக்கு ஆந்தையின் மூலம் கடிதம் கொண்டு வரப்பட்டது. அவனது சித்தாப்பாவும் சித்தியும் அதனை அவனிடம் கொடுக்காது கிழித்துவிடுகின்றனர். சித்தியின் குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு உறவோ நட்போ இல்லாத நிலையில் அவன் அந்தக் கடிதம் யாருடையதாக இருக்கும் என நினைத்து ஏங்குகிறான். அவனது ஏக்கத்தைப் போக்க, கடிதங்கள் கிழிக்கப்பட இன்னும் பல கடிதங்கள் வந்த வண்ணமாகவே இருந்தன. 

ஹரியின் 11-வது பிறந்தநாளன்று ஹாக்ரிட் எனப்படும் பெரிய மனிதன் ஒருவன் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, ஹாரி ஒரு மந்திரவாதி என்ற உண்மையைச் சொல்கிறான். மேலும், மந்திரவாதிகளான ஹரியின் பெற்றோர் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் விவரிக்கிறான். ஹரியை ஹோக்வர்ட் எனப்படும் மந்திரம் பயிலும் பள்ளியில் சேர்ப்பதற்கே தான் அவ்விடம் வந்ததாகக் கூறி அழைப்புக் கடிதத்தை கொடுத்து ஹரியை அழைத்துச் செல்கிறான். 

ஹரியின் படிப்புச் செலவிற்கு அவனது பெற்றோர் அதிகமான செல்வத்தை வங்கியில் வைத்திருந்தனர். ஹாக்ரிட்டின் உதவியின் மூலம், வங்கிலியிருந்து பணத்தை எடுத்துப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறான். பொருட்கள் வாங்கும் சந்தையில் ஏறத்தாள அனைவருக்குமே ஹரியை நன்குத் தெரிந்தது. அவனது நெற்றியில் இருந்த மின்னல் வெட்டு போன்ற தழும்பு அவன் மரணத்தை வென்ற 'ஹரி போட்டர்' என்பதை உலகிற்குப் பறைச்சாற்றியது.

மாயத் தொடர்வண்டியில் ஏறி மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஹரிக்கு, ரோன் மற்றும் ஹெர்மியோனியின் நட்பு கிட்டுகிறது. பள்ளியிலும் மூவருக்கும் ஒரே குழுவில் இடம் கிடைத்ததால் பிற்காலத்தில் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். மாயப்பள்ளியின் அழகையும் ஆடம்பரத்தையும் கண்டு ஹரி மயங்குகிறான். அவனிடம் மற்ற சிறுவர்களைவிட ஏதோ ஒரு பெரிய சக்தி இருப்பதை அனைவரும் உணர்கின்றனர். ஹோக்வர்ட்டின் பிரபலமான பறக்கும் பந்து விளையாட்டுப் போட்டிலும் ஹரி கலந்துக்கொண்டு தன் குழுவிற்கு வெற்றித் தேடி தருகிறான். பள்ளியின் தலைமையாசிரியர் அல்புஸ் டம்பெல்டோர் மற்றும் ஹாக்ரிட் இருவரும் ஹரியிடம் மிகுந்த அன்புக் காட்டுகின்றனர். இருந்த போதிலும், பேராசிரியர் சினேப் அவனை விரோதியைப் போல் நடத்துகிறார். 

ஒரு சமயம் வங்கியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாட முயற்சி நடந்திருப்பதான செய்தி நாளிதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முந்தினம்தான்  தலைமையாசிரியரிடம் ஒப்படைப்பதற்காக ஹாக்ரிட் வங்கியிருந்து அதனை எடுத்து வந்திருந்தான். அது என்னப் பொருளாக இருக்கும் என அலசி ஆராய்ந்துக் கடைசியாக அது, மரணமில்லாமல் வைத்திருக்கும் மந்திரக் கல் என்பதை ஹரி தெரிந்துக்கொண்டான். அந்தக் கல்லைப் பெருவதற்கு சினேப்  முயன்றுக்கொண்டிருக்கிறான் என்றெண்ணி எப்படியாவது அந்தக் கொடியவனைத் தடுக்க வேண்டி தனது நண்பர்கள் ரோன் மற்றும் ஹெர்மியோனியின் உதவியுடன் செயல்படுகிறான். 

பலத் தடைகளைத் தாண்டி, இறுதியாக மந்திரக்கல் இருக்கும் இடத்தை அடைந்த ஹரி, பேராசிரியர் கியூரல் என்பவரே அந்தக் கல்லைப் பெருவதற்கு முயற்சிகள் செய்துவந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறான். தன் பெற்றோரைக் கொன்ற வொல்டெமோர்ட் என்ற தீயச்சூனியக்காரனுக்கு கியூரல் உதவி வந்துள்ளதை அறிந்து அந்தக்கல்லை அவனிடமிருந்துக் காப்பாற்ற முயல்கிறான். மாயக்கண்ணாடியின் உதவியால் கல் ஹரியின் காற்சட்டைப்பைக்குள் வருகிறது. கியூரலால் ஹரியைத் தடுக்க முடியவில்லை. ஹரியிடமிருந்த  மாயச்சக்தி கியூரலைத் தடுத்தது. பள்ளி முதல்வர் டம்பெல்டோர் தக்க சமயத்தில் வந்து ஹரியைக் காப்பாற்றுகிறார். அந்தக் கல் மேலும் துன்பங்களை விளைவிக்காமல் இருப்பதற்கு அதனை அழிக்கவும் செய்கிறார். 

இவ்வாறாக, ஹரி போட்டரும் மந்திரக்கல்லும் என்ற இந்தப்பாகம் நிறைவடைகிறது. மாயஜாலங்கள் நிறைந்த இக்கதை வாசிக்க மென்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இக்கதைத் திரைப்படமாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கதையில் வரும் அனைத்துச் சம்பவங்களையும் அற்புதங்களையும் எம்மால் இவ்விடம் பதிய முடியவில்லை. வாய்ப்பிருப்பின், நீங்களே படித்து ஹரி போட்டரின் மாய உலகில் வலம் வாருங்கள். 

வியாழன், 19 மே, 2016

பாவப்பட்டப் பெண் -ஜாக்கி கோலின்ஸ் Poor Little Bitch Girl -Jackie Collins



டென்வர் ஜோன்ஸ், அனபெல்லா, கரோலின் ஆகிய மூவரும் பெவெர்லி ஹில்சில் ஒன்றாகப் படித்தவர்கள். 

அனபெல்லா
பிரபலமான சினிமா நடிகர்களின் ஒரே மகள். பால்ய வயதிலேயே அழகினைக் கூட்டுவதற்காகப் பல அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவள். அழகியாக இருந்த போதிலும், பெற்றோரின் கவனிப்பு இல்லாமையால் செல்வத்தை தன் விருப்பப்படி செலவழிக்கிறாள். நியூ யார்க்கில் ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனி அடையாளத்தைத் தேடுவதற்காகப் புறப்படுகிறாள். சென்ற இடத்தில் போதைப் பித்தனான பிராங்கியுடன் காதல் வயப்படுகிறாள். இருவரும் விரைவான வழியில் பணம் சம்பாதிப்பதற்காக விபச்சாரத்தைக் கையிலெடுக்கின்றனர். மிகவும் பிரபலமான பணக்காரர்களுக்கு உயர்தர நடிகைகள், அழகிகளைத் தயார் செய்து கொடுப்பது இவர்களது இரகசியத் தொழிலாக இருந்தது. இதற்கிடையில் அனபெல்லாவின் அழகிய தாயார் சொந்த வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார். அதே சமயம், இவளது இரகசிய தொழில் பத்திரிக்கைகளில் ஆதாரத்தோடு அம்பலத்திற்கு வருகிறது. இறுதியாக, பிராங்கியை விட்டுப் பிரிகிறாள்.

கரோலின்
வாசிங்டனின் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரேகரியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு கர்ப்பமாகிறாள். தனது காதலனைக் கலட்டிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினரைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள். ஏற்கனவே திருமணமான கிரேகரி அதனது குடும்பத்தை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதற்கெல்லாம் கரோலினின் கர்ப்பம்தான் காரணம் என எண்ணிய அவன் ஆட்களை வைத்து அவளைக் கடத்து கர்ப்பத்தை கலைக்க முயல்கிறான். பல இன்னல்களுக்குப் பிறகு எப்படியோ உயிர்த்தப்பிய கரோலினை டென்வர் காப்பாற்றுகிறாள். கிரேகரியின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த கரோலின், அவனை விட்டு நீங்கி தனது சொந்த ஊருக்கே செல்கிறாள். 

டென்வர் ஜோன்ஸ்
சிறுவயதிலேயே நன்றாகப் படித்து சட்டதாரியாக உருவெடுக்கிறாள். அனெபெல்லாவின் தாயாரின் திடீர் கொலை அவளை ஊரெங்கும் அலைய வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே தனது நீண்டநாள் காதலனால் கைவிடப்பட்ட டென்வர் மனதை ஒருநிலைப் படுத்தி தனது வேலையிலேயே குறியாக இருக்கிறாள். அப்பொழுதுதான் பள்ளியில் தான் விரும்பிய பணக்காரப் பையனான போப்பியைச் சந்திக்கிறாள். பலப் பெண்களுடன் பழகி சலிப்புற்ற போப்பி அனெபெல்லாவின் இயற்கையான நற்குணத்தில் தனது மனதைப் பறிக்கொடுக்கிறான். இறுதியாக இருவம் காதல் வயப்படுகின்றனர்.


முடிவுரை
ஹாலிவுட்டில் இளையோர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களிடையே நிலவும் சீர்க்கேடுகளையும் இந்நாவலின் வழி அறிந்துக்கொள்ள முடிகிறது.