புதன், 16 செப்டம்பர், 2015

கடல் ராணி ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-சாண்டில்யன்




நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாண்டில்யனின் எழுத்துக்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. பல வரலாற்றுக் கதைமாந்தர்களையும் சில கற்பனைப் பாத்திரங்களையும் கொண்டு ஆசிரியர் மிக அழகாக இப்புதினத்தைத் தீட்டியுள்ளார். இதனைப் படிப்பதன் மூலம் அன்றைய சரித்திர நிகழ்வுகளை நம் மனக்கண்ணில் கண்டு அதனில் நாமும் ஒரு பாத்திரமாகக் பங்குக்கொள்ள முடிகிறது. 

இக்கதையில் வரும் கடல் ராணியான ரத்னா, அனந், சாரு ஆகிய மூவரும் கற்பனைப் பாத்திரங்கள் என ஆசிரியர் முன்னுரையிலேயே தெளிவுப்படுத்திவிட்டார். {Long John Silver}  ஒற்றைக்கால் சில்வர், காப்டன் மாக்ரே, இங்லண்ட், டெய்லர் என ஏனையோர் அனைவரும் சரித்திரத்தில் பங்குப்பெற்றவர்கள். அதற்கான ஆதாரக் குறிப்புகளையும் நாவலாசிரியர் குறிக்கத் தவறவில்லை.

கற்பனைப் பாத்திரமான கடல் ராணி சிந்து துர்க்கத்தின் கடற்கொள்ளையர்களின் தலைவியாகவும், கோட்டைத் தளபதியான சங்கர் பந்தின் மகளாகவும் புனையப்பட்டுள்ளாள். அவள் பேரழகு வாய்ந்தவளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

சிந்து துர்க்கத்தில் கதை தொடங்கி இறுதியில் பூர்ணகட்டில் முடிகிறது (சிந்து துர்க்கமும் பூர்ணகட்டும் அரபிக் கடலோரும் அமைந்துள்ள தீவுகள்). அரபிக்கடலில்  மேற்கத்திய கடற்கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கவும், ஆங்கிலேயர்களின் சக்தியை ஒடுக்கவும் சபதமேற்று அனந் சிந்து துர்க்கம் வருகிறான். பிரிட்டிஷ் அதிகாரிகளான காப்டன் ஸ்டாண்டன் மற்றும் லெப்டினண்ட் ஷ்மித்திடமிருந்து கடல் ராணியைக் காப்பாற்றி அவளது ஆதரவையும் நம்பிக்கையையும் பெருகிறான். கடலில் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க கடல் ராணியின் படையும் பலமும் அனந்துக்குத் தேவையானதாக இருக்கிறது. இருவரும்  பார்த்த முதல் நாளே காதல் வயப்படுகின்றனர். 

அதே வேளையில் மகாராஷ்டிரத்தில் பலம் பொருந்தியக் கொள்ளைக்காரனான கனோஜி ஆங்கரேயின் மகன் துலாஜி ஆங்கரே  380 பீரங்கிகளைக்கொண்ட காஸண்ட்ரா கப்பலில் கூனியாக மாறு வேடமிட்டு மாலுமியாக தனது ஆட்களுடன் சேர்ந்து அவர்களது பலம்/பலவீனங்களைக் கண்டறிகிறான். உற்ற நண்பர்களான துலாஜியும் அனந்தும் வேளை வருகையில் ஒன்றிணைகின்றனர். மாக்ரேயைப் பிடிப்பதற்குச் சில்வர், இங்லண்ட் மற்றும் டெய்லருக்கு உதவுவதாக உடன்படுகின்றனர். அதே வேளை, காஸண்டாரைப் பெற்றுத் தருவதாக மாக்ரேயிடம் உறுதியளிக்கின்றனர். இப்படியாக இவர்கள் போடும் நாடகங்கள், இராஜதந்திரங்கள் எண்ணிலடங்கா.


இவர்களுடன் பேஷ்வா பாஜிராவின் மருமகளாகப் புனையப்பட்ட சாருவும் சேர்ந்துக்கொள்கிறாள். உளவாளியாக உலா வரும் சாருவும் அனந்தின் மேல் மையலுறுகிறாள். இவ்விடம் இரு பெண்கள் ஒரே சமயத்தில் அனந்தின் மேல் காதல் கொள்வதும், ஒரே சமயத்தில் கட்டிப்புரள்வதும் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்த பொழுதும் கடற்கொள்ளையர்களின் வாழ்வில் அது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. 

இப்படியாக பிரிட்டிஷ் அரசுக்கும், மேற்கத்திய கடற்கொள்ளையர்களும் உதவுவதாக் கூறி முக்கோணப் போரினை உருவாக்குகிறார்கள். கடற்கொள்ளையர்களான சில்வர், டெய்லர், இங்லண்ட் ஒரு பக்கம், பிரிட்டிஷ் கடற்படைத் தளபதியான மாக்ரே ஒரு பக்கம், பேஷ்வா மற்றும் கனோஜி ஆங்கரேயின் பிரதிநிதிகளாக அனந், சாரு, கடல் ராணி, துலாஜி இன்னொரு பக்கம். இதில் கடல்ராணிக்கு உதவுவதற்கும், காஸண்ட்ராவை அடைவதற்கும் அவா கொண்டு பிரெஞ்சு கடற்கொள்ளையனான லா பூஷே இவர்களுடன் இணைந்துக்கொள்கிறான்.

நாவல் முழுக்க இந்த வரலாற்றுபூர்வமிக்க போரை நடத்துவதற்கு அனந், துலாஜி, கடல் ராணி ஆகியோர் எப்படி திட்டம் தீட்டி அதற்குச் செயல்வடிவம் கொடுத்தனர் என நாவலாசிரியர்  கற்பனையில் திளைக்கிறார். இந்தப் போரில் காஸண்ட்ரா பெரிதும் சேதமடைந்து கடல் ராணியின் தரப்பிற்கு வெற்றியினைத் தேடித் தந்தது. 

பல வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் நாவலில் ஆங்காங்கே நயமாகச் சொல்லப்பட்டுள்ளன. வழக்கம் போல சாண்டில்யன் பெண்ணின் அவயங்களை அளவுக்கதிகமாகவே வர்ணித்து எழுதியுள்ளார். 1981 ஆண்டு (நான் பிறப்பதற்கு முன்பு) எழுதப்பட்ட இந்நாவலில் ஆசிரியர் எழுதியுள்ள மொழி தொடர்பான ஒரு விடயம் மனதில் மிகவும் பதிந்துப் போயிற்று.

"சுயமொழி பக்தியால் தேசபக்தியும் அதிகமாகிறது. அந்த அறிவு நமது நாட்டில் சிறிதும் இல்லையே. ஒன்று படாடோபத்துக்காகச் சுயமொழி வெறி, அல்லது சுயமொழி இழிவு, இவற்றைத் தவிர இங்கு வேறென்ன இருக்கிறது? அப்படிச் சுயமொழி பக்தியும் அறிவில் ஆசையும் இல்லாத நாட்டில் வளர்ச்சி ஏது வீரம் ஏது? நாட்டுப்பற்றுதான் ஏது?" -பக்கம் 51

இந்த வாக்கியங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். அதன் உண்மை அர்த்தம் உங்களுக்கு நிச்சயம் விளங்கும். இது போல இன்னும் சில சிந்தினைக்கு உட்பட்ட விடயங்களை ஆசிரியர் ஆங்காங்கே அள்ளித் தெளித்துள்ளார். வாய்ப்புக் கிடைப்பின் நாவலை வாசித்து இன்புறுங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை: