வியாழன், 17 செப்டம்பர், 2015

அவளும் அதுவும்... (பாகம் 9)


4.நாடகம்

பேச்சியம்மனுக்குப் படையல் போட்டு ஆறு வாரங்கள் ஓடி முடிந்தன. சிவகாமி அத்தைக்குப் பிறந்தநாள் வந்தது. திருமணமாகி வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அவரின் கணவர் குமார் அதனை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்தார். அத்தை இன்னமும் பாட்டி வீட்டிலேயே இருந்ததால் அங்கேயே விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாட அனைவரும் முடிவு செய்தனர். பிறந்தநாள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பாட்டி அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு விவரம் சொல்லி அழைப்புவிடுத்தார். இது போன்ற விழாக்காலங்களில் அக்கம் பக்கம் உள்ளோர் அனைவரும் சேர்ந்து பலகாரங்கள் செய்வதும், வீட்டை அலங்கரிப்பதில் உதவி செய்வதும் அந்தப் பகுதிவாழ் மக்களின் வழக்கமாக இருந்தது.

இதுபோன்று பிறந்தநாள்களை அந்தக் குடும்பத்தில் விமரிசையாக கொண்டாடுவதில்லை என்பதனால் குழந்தைகளும் அதனை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்தனர். குழந்தைகள் அனைவருக்கும் குமார் மாமா புத்தாடை வாங்கித் தந்து அவர்களது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கினார். விழாவிற்கு முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து இனிப்பு பலகாரங்கள் செய்துகொடுப்பதற்காக பெண்கள் பாட்டி வீட்டு சமையல் அறையில் தஞ்சம் புகுந்தனர். வீட்டின் பெண் குழந்தைகளும் அவர்களுக்குத் துணையாக ஓடியாடி வேலை செய்தனர். சசி, ராம், இந்திரன் மூவரும் வீட்டை அலங்கரிப்பதில் முனைந்தனர். 

மறுநாள் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்துக்கொண்டிருந்தது. அனைவரும் புத்தாடை உடுத்தி, அலங்காரம் செய்து, உண்டு மகிழ்ந்திருந்தனர். குமார் மாமா தனது குறுந்தட்டுகளிலிருந்துப் புதுப்புதுப் பாடல்களை ஒலியேற்ற குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆட ஆரம்பித்தார்கள். சிவமும் தாளத்திற்கு ஏற்றவாறு தலையாட்டி, கைத்தட்டிக் குழந்தைகளை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அதனைப் பார்த்த குமார் மாமா ஒலிப்பெருக்கியின் சத்தத்தைக் கூட்டினார். அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத சிவம் எழந்து ஆட ஆரம்பித்தார். சிவம் ஆடுவதைப் பார்த்தா குமாரும் அவருடன் சேர்ந்து ஆடத் தொடங்கினார். அவர்கள் இருவரைத் தொடர்ந்து சில நண்பர்களும் இணைந்துக்கொண்டார்கள்.  

இப்படியாக அனைவரும் ஆடலிலும் பாடலிலும் திளைத்திருந்த வேளையில் திடீரென பாட்டி தனது இரு கைகளையும் சுழற்றி சுழற்றி சூறாவளியென ஆடிக்கொண்டே கூட்டத்திற்குள் நுழைந்தார். பாட்டி ஆடுவதைக் கண்ட சிவம் உற்சாகத்துடன் அவருடன் இணைந்து ஆடத்தொடங்கினார். சில வினாடிகள் கழித்தே பாட்டியின் முகத்திலும் அசைவிலும் இருந்த வேறுபாட்டினைச் சிவம் உணர்ந்தார். "அம்மா! அம்மா!" என சிவம் அழைக்க, பாட்டி அதனைக் காதில் வாங்கமலே கைகளை வீசி வீசி ஆடிக்கொண்டிருந்தார். அவரின் இலக்கற்ற ஆட்டம் குழந்தைகளை விலகி நிற்க வைத்தது. ஒரு கணம் அனைவரும் ஆடுவதை நிறுத்தி ஒதுங்கி நின்று பாட்டியைக் கவனிக்கலானார்கள். சிவம் குறிப்புக்காட்ட குமார் சட்டென வானொலியை நிறுத்தினார். அப்போதும் பாட்டியின் ஆட்டம் நிற்கவில்லை. பாடல் இல்லாமலேயே அவர் முன் போலவே அசுரத்தனமாக ஆடிக்கொண்டிருந்தார். பாடல் நின்றுவிட்டதை சில வினாடிகள் கழித்தே அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

"அடேய்! பாட்டைப் போடு! ஆடுங்கடா! எல்லாரும் சந்தோஷமா ஆடுங்க!" என்ற பாட்டியின் குரலின் இருந்த மாற்றத்தை அனைவரும் கவனிக்கவே செய்தனர். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதது என்பதை அறிந்த குழந்தைகள் இரண்டடி பின்னடைந்தனர். 

"என்னம்மா ஆச்சி உங்களுக்கு?" என்று சிவம்தான் முன் வந்து கேட்டார். பாட்டியின் கால்கள் அப்போதும் தரையில் நிலையாக நிற்கவில்லை. மெதுவாகக் குதித்துக்கொண்டே சிவத்தின் கேள்விக்குப் பதிலாகப் பயங்கர சிரிப்பை வெளியிட்டார். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த தாத்தா,

"மறுபடியும் வந்திட்டியா? உன்னைத்தான் எதிர்ப்பார்த்திருந்தேன். என்ன தைரியம் இருந்தா அன்றைக்கு என்னையே ஏமாத்தியிருப்பே?" என்று கோவத்துடன் முன் வந்தார். சுற்றியிருந்தவர்கள் ஏதும் புரியாமல் முழித்தனர். "என்னப்பா?" என்று சிவம்தான் மீண்டும் கேட்டார்.
பாட்டி பதிலேதும் சொல்லாமல் இன்னமும் அர்த்தமின்றிச் சிரித்துக்கொண்டிருந்தார். இங்கே நடப்பவை எதுவும் தமக்கு விளங்கவில்லை என்பதன் அறிகுறியாகக் குமார் தனது தோள்களையும் புருவங்களையும் லேசாகத் தூக்கி சைகை மொழிப் பேசினார். 

வள்ளியும் சிவகாமியும், "என்னப்பா? என்ன ஆச்சு?" என்றுக் கூட்டத்தை விலக்கிக்கொண்டுத் தந்தையின் அருகே வந்து நின்றனர். 

"நல்லா இருக்கிற குடும்பத்துல குழப்படிப் பண்ணப் பார்க்கிறியா? இப்ப போகப் போறியா? இல்லையா?" என்று இரண்டடி பாட்டியை நோக்கி முன்னே வைத்தார். இப்போது பாட்டியின் சிரிப்பு நின்று முகத்தில் கலவரம் தோன்றியது.

"டேய், யாருக்கிட்ட என்ன பேசுற? உன் குடும்பத்த காவந்துப் பண்ற தெய்வம்'டா நானு!" என ஆவேசமாக இரைந்துக் கூறினார்.

"தெய்வமா? அடி செருப்பால! டேய் சிவம், வெளியில இருக்கிற செருப்பைக் கொண்டா! இன்னைக்கு அடிக்கிற அடில இனி இவ இந்த வீட்டு வாசப்படியத் தொடக்கூடாது!" தாத்தாவின் தொனியில் கோவம் உச்சத்தைத் தாண்டியது. சிவம் கண்ணசைக்க, அதனைப் புரிந்துக்கொண்ட ,,இந்திரன் வெளியில் இருந்த தாத்தாவின் செருப்பைக் கொண்டு வந்து நீட்டினான். பெண்கள் இருவரும் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். குமார் கைகளைக் கட்டியபடி ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தார். பாவம், அவர் வேறு என்னதான் செய்வார்? செருப்பை வாங்கிக்கொண்ட தாத்தா இன்னும் இரண்டடி முன்னெடுத்தார்.

"ஏய்! என்கிட்ட வராத! உங்கப்பன் புத்தியை இழந்துட்டான். அவனை என்கிட்ட வரவேண்டாம்'னு சொல்லுடா," என சிவத்தை நோக்கிக் கதறினார் பாட்டி. 

"நீங்க யாரு? ஏன் திரும்ப திரும்ப வர்றீங்க? " என்று சிவம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.

"தெய்வம்'டா. உங்களையெல்லாம் காவந்துப் பண்ற தெய்வம்!"

இப்போது தாத்தா பொறுமையிழந்தார். "திரும்பத் திரும்பப் பொய்யா சொல்ற?" எனப் பாய்ந்துச் சென்றுப் பாட்டியின் முடியைக் கொத்தாகப் பிடித்தார். ஒரு கையில் பாட்டியின் முடி சிக்கியிருக்க, மறு கையில் அடிப்பதற்குத் தயாராகச் செருப்புப் பாதி உயர்ந்து நின்றது. இந்த விபரீதச் சூழலை எப்படி சமாளிப்பது என யாருக்கும் புலப்படவில்லை. 

"கையை எடுடா! தப்பு செய்ற! ரொம்ப தப்பு செய்ற!" என அலறினார் பாட்டி. 

"யாரை மரியாதை இல்லாம பேசுற?" என தாத்தா பாட்டியின் தலைமயிரை இழுத்து, செருப்பை ஓங்கினார். ஒரு கணம்தான்! ஒரே ஒரு கணம்தான்!

"ச்சே! என்ன விளையாட்டு! கையை எடுங்க!" என பாட்டித் தாத்தாவின் கையைத் தட்டிவிட்டார். அவரது இன்னொரு கையில் இருந்த செருப்பை பாட்டி நிச்சயமாகக் கவனிக்கவில்லை. பாட்டியின் திடீர் மாறுதல் அனைவரையும் வியக்க வைத்தது.

"என்ன? என்ன எல்லாரும் என்னையே பாக்கறீங்க?" என ஆடிய ஆட்டத்தில் சற்றே தளர்ந்த தனது சேலையைச் சரிசெய்தார் பாட்டி. அவரது முகத்தில் வெட்கம், குழப்பம், சந்தேகம் என அனைத்தும் ஒருங்கே கலந்திருந்தன. சுற்றியிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கைத்தேர்ந்த நடிகையைப் போல் பாட்டி சட்டென தனது குரலையும் முகபாவத்தையும் மாற்றிக்கொண்டது சற்று வினோதமாகத்தான் இருந்தது.

"செருப்ப கைல எடுத்தவுடன் ஓடிப் போய்விட்டது பார்த்தியா?" என லேசான வெற்றிப் புன்னகையுடன் தாத்தா நகர்ந்துச் சென்றார். அவர் அப்பால் இரண்டடி எடுத்து வைத்ததும், 

"என்னை அடிக்க செருப்பா எடுத்துட்டு வர்ற? உங்களுக்கெல்லாம் நல்லது பண்ணத்தானே நான் வந்தேன்? என்னையே அடிக்க வர்றே?" என்று கோபமும் கண்ணீரும் ஒருசேர‌ பாட்டி திடீரென அழுதுக்கொண்டே குதித்தார். சட்டென மீண்டும் மாறிய பாட்டியை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

"இன்னும் போகலையா நீ?" என தாத்தா மீண்டும் அதே செருப்பை நீட்டிகொண்டு விரைந்து வந்தார். அவர் மீண்டும் பாட்டியின் குழலைப் பிடித்ததுதான் தாமதம், "சொல்லிக்கிட்டே இருக்கேன், என்ன விளையாட்டு? சும்மா சும்மா எதுக்கு முடியைப் பிடிச்சு இழுக்குறீங்க?" என பாட்டி பழைய மாதிரி ஆனால் சற்று கடுப்புடன் பேசினார். இப்படி அந்நியன் பட கதாநாயகன் போல் பாட்டி நொடிக்கரம் மாறியது வியப்பாக இருந்த போதிலும் பயத்தையும் கலக்கவே செய்தது.

"என்ன விளையாடுற? என்கிட்ட உன் வேலையைக் காட்டுறியா?" என தாத்தா பாட்டியின் குழலை விடாமல் ஆத்திரத்துடன் செருப்பை மீண்டும் தூக்கினார்.

எதுவும் புரியாமல் சுற்றி நின்றவர்களைப் பார்த்த பாட்டி, "என்ன சிவம்? உங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? என் முடியை விடச்சொல்லு!" என்று கலவரத்துடன் கூறினார்.

"விடுங்கப்பா! இது அம்மாதான். அது போயிருச்சி. நீங்க என்ன முடியைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க? எல்லாரும் பாக்கறாங்க. விடுங்க," என தாய்க்கு ஆதரவாகப் பேசினார். "விடுங்க மாமா," என குமாரும் ஒத்து ஊதினார். தாத்தாவும் சற்று தயங்கி நின்று பின்னர், "எல்லாம் நாடகம்" எனக் கூறிக்கொண்டே வரவேற்பறையைத் தாண்டி தனது அரவை அறைக்கு விருவிருவெனச் சென்றுவிட்டார். பாட்டியும் ஒன்றும் நடவாதது போல், "வந்தவங்க எல்லாம் சாப்டாங்களா?" எனக் கேட்டுக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றார்.

"எல்லாரும் போய் விளையாடுங்க," என முருகன் குழந்தைகளை அனுப்பி வைத்தார். பெரியவர்கள் அறுவரும் (சிவம், அமுதா, சிவகாமி, குமார், வள்ளி, முருகன்)மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

...தொடரும்...



3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையாகத்தான் போகுது. ஆனா சீரியல் மாதிரி படக்குனு முடிஞ்சிருது

Unknown சொன்னது…

அருமையாகத்தான் போகுது. ஆனா சீரியல் மாதிரி படக்குனு முடிஞ்சிருது

து. பவனேஸ்வரி சொன்னது…

பரிதிவாணர்கோன் கருத்துக்கு நன்றி. நீளமாக இருந்தால் சிலர் படிக்க சோம்பலுறுகிறார்கள். அதனால் குறைவாக் எழுதுகிறேன். தொடராக எழுதுவதால் தினமும் கொஞ்சமாவது படிப்பார்கள்.