“சரி, மோகினியை எப்படிப் பார்க்கிறது?” என ராம் கேட்டான். அதற்கும் சசி
பதில் சொல்லத் தொடங்கினான்.
“இது
என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. நீ மோகினியைப்
பார்க்கணும்னா நினைச்சா இதைச் செஞ்சுப் பார்க்கலாம். ஆனா, இது
ரொம்ப ஆபத்தானது. இராத்திரி நேரத்துல
ஒரு சிவப்பு நூல் எடுத்து, வீட்டுப் பின்னால
இருக்கிற வாழை மரத்துல கட்டணும். அந்த நூலை
நீளமா இழுத்துக்கிட்டே வந்து நீ படுத்திருக்கிற கட்டிலோட காலுல கட்டணும். அதாவது, அதாவது
வாழை மரத்துக்கும் உன் கட்டிலுக்கும் சிவப்பு நூல் வழியா தொடர்பு ஏற்படுத்தணும்.”
சசி சொல்லிக்கொண்டிருக்க மற்றவர்கள் தீவிரமாக அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர். சசியின் பேச்சுக்குரலும் மற்றவர்களின் மூச்சுச் சத்தத்தையும் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கே கேட்கவில்லை. சசி சற்று நிறுத்தி அனைவரின் முகங்களையும் நிதானமாகக் கவனித்தான். தான் சொல்வதை மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்கிறார்கள் என்ற திருப்தியுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.
“சிவப்பு
நூல் கட்டின பிறகு, ஊசியால விரலைக்
குத்தி மூனு துளி இரத்தத்தை வாழை மரத்துல விடணும். இராத்திரி 12 மணி
ஆகும் போது வீட்டுல இருக்கிற எல்லா விளக்கையும் அணைக்கணும். கட்டில் பக்கத்துல ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏத்தி வச்சுக்கணும். சரியா 12 மணிக்கு இன்னொரு மூனு துளி இரத்தத்தை கட்டில் காலில் கட்டியிருக்கும் சிவப்பு நூலில் மேல் விடணும். பிறகு, அமைதியா
தூங்கற மாதிரி படுத்திருக்கணும். தலையணைக்கு அடியில நூலை அறுத்துவிடறதுக்கு ஏதுவா கத்தி இல்லாட்டி கத்தரிக்கோல் வச்சிருக்கணும்.”
சசியின்
உடன்பிறப்புகள் விழிகள் பிதுங்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பட்டப்பகல் கூட அவர்கள் கற்பனைக்கு நள்ளிரவாய் காட்சியளித்தது.
“இராத்திரி
ஆனதும் மாழை மரத்துல உள்ள மோகினி அங்க சிந்தியிருக்கிற இரத்தத்தை ருசி பார்க்கும். சிவப்பு நூல் வழியா இரத்த வாடையை மோந்துப் பார்த்துக்கிட்டே வரும். அங்க தனியா
ஆம்பிளைப் படுத்திருந்தா அது குஷியாயிடும். அப்போ, நீ எழுந்து
அதைப் பார்க்கலாம்; அதுக்கிட்டப் பேசலாம். அதுவும் உன்
கூட பேசும். அது உன்னை
ரொம்ப நெருங்கி வர மாதிரி தெரிஞ்சதுன்னா, உடனே கட்டிலில் உள்ள நூலை அறுத்துவிட்டிறணும்.”
“அப்படி
அறுத்து விடலைன்னா?” என ராம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“நூலை
சரியான நேரத்துல அறுத்துவிடலைன்னா அது உனக்குள்ளே புகுந்துக்கும். இது என் கூட்டாளியோட அண்ணன் சொன்னது. இந்த வீட்ல
நிறைய பேர் இருக்கோம். ஒருநாள் தனியா
இருக்கும் போது இதைச் செஞ்சுப் பார்க்கப் போறேன்.” சசி ஆர்வமாய் சொன்னான். பவானிக்கு அடிவயிறு
கலங்கியது.
“என்ன
கூட்டமா மாநாடு நடக்குது?” வழமையான குட்டித் தூக்கம் கலைந்து வந்தப் பாட்டிக் கேட்டார். அவரைத் தொடர்ந்து
அம்மாவும் வந்தார். “நீங்க யாரும் தூங்கலையா?” என அம்மா தன் பங்குக்குக் கேட்டார். பிள்ளைகள் மதியம்
தூங்குவது அரிது என்று அறிந்த போதும், பள்ளி முடிந்து
வரும் பிள்ளைகள் பகலில் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் வலியுறுத்து வந்தனர்.
பிள்ளைகளோ
பெரியவர்கள் கண் முன்னே ஓய்வெடுப்பது போல் சென்றுவிட்டு, அவர்கள் உறங்கியப் பிறகு சத்தம் போடாமல் எழுந்து தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவர்.
அம்மாவின்
கேள்வியைப் புறக்கணித்துவிட்டு, “இல்ல பாட்டி. சும்மா பேசிக்கிட்டிருந்தோம்…” என்று மேகலாவும் வாணியும் ஒருசேர மழுப்பினர். மற்றவர்கள் எழுந்து வெளியே மீண்டும் விளையாடச் சென்றனர்.
அன்றைய
கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘அது’ எப்படி
இருக்கும்? அதனை எப்படிப்
பார்ப்பது? அதனுடன் எப்படிப்
பேசுவது? என அனைவரும்
ஆராய்ச்சியில் இறங்கினர். ஒருநாள் பள்ளி
முடிந்து வந்த மேகலா வாயெல்லாம் பல்லாக வாணியையும் பவானியையும் பார்த்தாள். அவள் சிரிப்பினில் மர்மம் இருந்தது. வாணி கண்களாலேயே
என்னவென்று விசாரித்தாள்.
“அம்மாவும்
பாட்டியும் தூங்கட்டும்,” என்று கிசுகிசுத்துவிட்டு மீண்டும் ஒரு மர்ம புன்னகை உதிர்த்தாள் மேகலா.
மதிய
உணவிற்குப் பிறகு அனைவரும் தூங்கச் சென்றனர். பெரியவர்கள் அனைவரும்
தூங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகு அமைதியாக ஒருவர் பின் ஒருவராக எழுந்துச் சென்றனர். சசி,
ராம், இந்திரன் மூவரும்
வழக்கம் போல் நண்பர்களுடன் காற்பந்து விளையாடச் சென்றுவிட்டனர். வாணியும் பவானியும் கடைசி அறையில் மேகலாவிற்காகக் காத்திருந்தனர். கடைசியாக எழுந்து வந்த மேகலா சத்தம் போடாமல் அறைக்குள் நுழைந்துக் கதவைத் தாளிட்டாள். அவளதுக் கையில் வெள்ளை நிற வரைத்தாலும் சில எழுதுகோல்களும் இருந்தன.
மற்ற
இருவரும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தனர்.
”நாம்
இன்னைக்கு ‘அது’க்கூட பேசப் போறோம்,” என்றுச் சொல்லிக் கண்ணடித்தாள் மேகலா. ‘அது’ என்று
அவள் சொன்னது எதுவென்று பவானிக்கு நன்கு விளங்கியது. அதன் பெயர் சொன்னால், தன்னைப் பற்றி
என்ன பேசுகிறார்கள் என்று அறிந்துக்கொள்ள ’அது’வும்
வந்துப் பக்கத்தில் அமர்ந்துக் கதைக் கேட்கும் என வாணி அவர்களைப் பயமுறுத்தி வைத்திருந்தாள்.
மேகலா
தான் கொண்டு வந்திருந்த வரைத்தாளைத் தரையில் விரித்தாள். தனது சட்டைப்பையிலிருந்து இருபது மற்றும் ஐம்பது காசு நாணயங்களை வெளியே எடுத்தாள். தாளின் நடுப்பக்கத்தின்
ஐம்பது காசு நாணயத்தைக் கொண்டு பெரியதாய் மூன்று வட்டம் வரைந்தாள். அதனுள், ‘ஹோம்’[1], ‘யெஸ்’[2], ‘நோ’[3] என ஆங்கிலத்தில் எழுதினாள். அதனைச் சுற்றிலும்
மண்டை ஓடு, சுடுகாடு, எலும்புக்கூடு போன்ற படங்களை வரைந்தாள். அவள் சிறிதும்
யோசிக்காமல் விறுவிறுவென வரைவதைப் பார்க்கும் போது, இதனை ஏற்கனவே
வரைந்துப் பழகியிருக்கிறாள் என்பது தெரிந்தது. இருபது காசு
நாணயத்தைக் கொண்டு வரைத்தாளின் ஓரங்கள் முழுவதும் 36 வட்டங்கள் வரைந்தாள். அதனுள் 26 ஆங்கில
எழுத்துக்களையும் அச்சடித்தாற்போல் தெளிவாக எழுதினாள். பின்னர் சுழியத்திலிருந்து
ஒன்பது வரையிலான எண்களை ஒவ்வொன்றாய் எழுதினாள். இப்பொழுது அவள்
முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.
”என்னதிது?” என ஆர்வம் தாங்காமல் பவானி கேட்டாள். மேகலா பதில்
சொல்லத் தொடங்குவதற்கு முன்பு அந்தக் கடைசி அறையின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. மூவரும் திடுக்கிட்டு, “யாரது” என ஒரே
குரலில் கேட்டனர்.
“நான்தான்
பாலா” என்று பதில்
வந்ததும் மூவருமே நிம்மதி பெருமூச்சு விட்டனர். வாணி எழுந்துக்
கதவைத் திறந்தாள்.
“நீ
தாத்தாவுக்கு உதவி செய்யலையா பாலா?” என்று வந்ததும் வராததுமாய் பவானி கேட்டாள்.
“இன்னைக்கு
வியாபாரம் குறைவு. தாத்தா என்னைத்
தூங்கச் சொன்னாங்க. எனக்குத் தூக்கம்
வரல,” என்றவன் அறையின்
நடுவே விரிக்கப்பட்டிருந்த வரைத்தாளைக் கவனித்தான். குறிப்புணர்ந்த வாணி, “போய் உட்கார்” என்று சொல்லிவிட்டுக்
கதவைச் சாத்தினாள். பாலா மேகலாவின் அருகில் சென்று உட்கார்ந்து வரைத்தாளை உற்று நோக்கினான். அதற்குள் வாணியும் தனது இடத்தில் வந்தமர்ந்தாள்.
”என்ன’லா செய்யறீங்க?” என்று கேட்டான் பாலா. “உஷ்” என்று
அவனைது கேள்விக்குப் பதிலளிக்காமல் மிரட்டினாள் பவானி.
மேகலா 20 காசு நாணயத்தை எடுத்து ‘ஹோம்’
என்று குறியிடப்பட்ட வட்டத்திற்குள் வைத்தாள். இன்னொரு வெற்றுத்
தாளை அருகில் வைத்துக்கொண்டாள்.
“எல்லாரும்
அமைதியா இருங்க. யாரும் குறுக்கப்
பேசக் கூடாது. யாரும் சாமி
கும்பிடக் கூடாது. இப்ப நாம
இங்க இருக்கிற ஆவிக்கிட்ட பேசப் போறோம். நான் இந்தக்
காசு மேல என்னோட விரலை வைப்பேன். ஆவி நம்ம
கூடப் பேச தயாரா இருந்தா இந்தக் காசு தன்னால நகர்ந்து ‘எஸ்’
என்ற வட்டத்துல போய் நிற்கும். அதுக்கப்புறம் நாம
கேட்குற கேள்விகளுக்கு எழுத்துகள் மூலமா பதில் சொல்லும். உதாரணமா, நாம
அதோட பெயரைக் கேட்டா, காசு மெதுவா
நகர்ந்து ஒவ்வொரு எழுத்தையும் காட்டும். அது காட்டுற
எல்லா எழுத்தையும் கூட்டினா, அதோட பெயர்
நமக்குத் தெரிஞ்சிடும். வயசைக் கேட்டா, இங்க இருக்கிற ‘நம்பரை’க்[4] காட்டும்.”
“அதுக்கு
நம்ம கூட பேச விருப்பம் இல்லைனா?” பவானி சந்தேகத்துடன் கேட்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக