திங்கள், 31 அக்டோபர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 22)





பாடல்களின் கரு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அமைந்திருந்தது. காட்சிகளிலும் எவ்வளவு இயலுமோ அவ்வளவு ஈழம் தொடர்பான செய்திகளைப் புகுத்தியிருந்தார்கள். நல்ல உணர்வுள்ள மனிதர் போலும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

“எதற்காக உங்கள் நாட்டில் அரசியலிலும், சினிமாவிலும் எங்களைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுகிறீர்?” என கவிதா சட்டெனக் கேட்டுவிட்டாள். அவள் கேள்வியால் நான் சற்று அதிர்ந்துத்தான் போனேன். ஈழப்பிரச்சனையை சிலர் அரசியல் ஆக்குவதும் மற்றும் சிலர் சினிமாவில் சம்மாதிக்க அதனையே ஆயுதமாக்குவதும் நாம் அனைவரும் அறிந்ததே. இருந்த போதும், உண்மையான போராட்டவாதிகளும், இந்தப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாடுபடும் திரைப்படக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“எங்களுக்காக இந்த நாட்டுல யாருமே உண்மையாக போராடவில்லை,” என அந்தப் பெண் பொதுவான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தாள். “அப்படி இல்லை, …….” என இயக்குனர் உண்மை நிலவரத்தை அவளுக்குப் புரிய வைக்க முயன்றுக் கொண்டிருந்தார். இவள் கேட்கட்டும், அவர்கள் சொல்லட்டும் என நான் மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா, அக்கா, அத்தான், சித்தி, குழந்தை, காதல் என தன்னைச் சுற்றி ஒரு பாச வட்டத்தினை அமைத்துக்கொண்டு வாழும் அந்தச் சின்னப் பெண்ணுக்கு இவர்களது போராட்டங்கள் தெரிய வாய்ப்பில்லைதான்.

‘இந்தியா கைவிட்டுவிட்டது. தமிழ்நாட்டு தமிழர்கள் ஒன்றும் உதவி செய்யவில்லை’ என்ற பொதுவான எண்ணம் மட்டும் அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்ததை உணர முடிந்தது. “இல்லையம்மா, தமிழ்நாட்டிலும் ஈழத்துக்கு ஆதரவான பல போராட்டங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது,” என இடையில் நானும் விளக்கப்படுத்த முனைந்தேன். “அப்படி என்றால், ஏன் எங்களுக்கு அதனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை?” என அவள் மீண்டும் கேட்டாள்.

“நீங்கள் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். மலேசியாவில் உள்ள இந்தப் பெண்ணுக்கு இங்கே நடக்கும் போராட்டங்கள் தெரியும் போது, இங்கேயே இருக்கும் உங்களுக்குத் தெரியாதது யார் தவறு?” என கீரா கேட்க , அந்தப் பெண் திருதிருவென விழித்தாள். கேள்விகளும், விளக்கங்களும், விவாதங்களும் தொடர்ந்துக் கொண்டே சென்றன.

திடீரென ‘பச்சை என்கிற காத்து’ திரைப்படத்தின் கதாயாநாயகன் வாசகர் அறைக்குள் நுழைந்தார். இவர்தான் படத்தின் நாயகன் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மிகவும் சாதாரணமாக இருந்தார். உயராமாக இருந்தார். முகத்தில் முக்கால் பாகத்தை தாடி மறைத்திருந்ததால் இவர்தான் உண்மையாகவே கதாநாயகனா என்ற சந்தேகம் எனக்குள் இருக்கவே செய்தது. படத்தில் சில காட்சிகளைக் கண்டுவிட்டதால், கிராமத்துக் கதைக்கு ஏற்ற முகமாக இருக்கலாம் என நானே கணக்கிட்டுக் கொண்டேன். உள்ளே நுழைந்த வாசகரை, இயக்குனர் கீரா எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஏதோ அவசர வேளையாக வந்த வாசகர், எங்களை வரவேற்றுவிட்டு நொடிப்பொழுதில் அறையை விட்டு வெளியேறினார்.

திருமணம் தொடர்பான கேள்விகள் தொடங்கின. “ஈழத் தமிழர்கள் ஏன் தமிழ்நாட்டுத் தமிழர்களைத் திருமணம் செய்யத் தயங்குகிறார்கள்? அங்கேயும் சாதியப் பிரச்சனையா?” என்ற வகையில் விவாதம் தொடர்ந்தது. பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. எனக்குக் கவிதாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நல்ல துடிப்புள்ள பெண். அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாளே. அவள் வாழும் சூழலில் வெளி விடயங்களை அறிந்துக் கொள்வது சற்று கடினம்தான். அதனால் தான் என்னவோ பல விடயங்களைக் கேட்கும் போது ஆச்சர்யத்தால் அவளது புருவங்கள் உயர்ந்தன. அவர்களது விவாதங்களில் தலையிடாமல் நான் அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.


நேரமாகிக் கொண்டிருந்தது. நான் தனியே வந்திருந்தால் பரவாயில்லை. உடன் இந்தப் பெண்ணை வேறு அழைத்து வந்திருக்கிறோமே என்ற எண்ணம் வர, கீராவிடம் விடைப்பெற்றோம். முகிலன் பேருந்து நிலையம் வரை எங்களை வழியனுப்ப வந்தார். அங்கே சாலை ஓரமாக ஒரு தள்ளு வண்டியில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. தான் பானிப்பூரியைச் சாப்பிட்டதே இல்லை என கவிதா இதற்கு முன் எம்மிடன் சொல்லியிருந்தாள். அது நினைவிற்கு வர நான், முகிலன், கவிதா ஆகிய மூவரும் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் வாங்கி அங்கேயே உண்ண ஆரம்பித்தோம்.

நாங்கள் ஏதோ கதைத்துக்கொண்டிருக்க, “நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா?” என முகிலன் சட்டெனக் கேட்டார். சில வினாடி மெளனத்திற்குப் பிறகு, “இல்லை,” என்றேன். “அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு தமிழ்நாட்டுக்காரரைத் திருமணம் செய்து அவருக்கு வாழ்க்கைக் கொடுக்கக் கூடாது?” என தயக்கமின்றி கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்தக் கேள்வியை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ‘நான் வாழ்க்கைக் கொடுக்க வேண்டுமா? விசித்திரமாக இருக்கிறதே’ என நினைத்ததோடு நில்லாமல், “ நான் வாழ்க்கைக் கொடுக்கணுமா?” என வாய் திறந்தே கேட்டு விட்டேன்.

“ஏன் கொடுக்க மாட்டீர்களா? பெண்கள் சம உரிமையைப் பற்றி பேசுகிறீர்கள்? எப்போதுமே ஆண்கள் தான் திருமணம் செய்து, வேலைக்குச் சென்று பெண்களைக் காப்பாற்றுகிறார்கள். சம உரிமை கேட்கும் பெண்களும் ஆண்களைத் திருமணம் செய்து, வேலைக்குச் சென்று, அவர்களை காப்பாற்றலாமே?” என்றார். இது எனக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. இப்படியும் கிளம்பிட்டாங்களா? என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். எமது இதழ்களும் விரிந்தன.

“சிரிக்காதீங்க. நான் உண்மையாக கேட்கிறேன். உங்களைப் பார்த்த உடனே தோழர் ஒருவர் நினைவுக்கு வந்தார். முதல்ல முத்துக்குமார் இறப்பு பற்றி பேசினோம் அல்லவா. அவர் இறப்பின் இறுதிச் சடங்கிற்காக தனது வேலையையே உதறி தள்ளிட்டு வந்துட்டார். அப்படி ஒரு உணர்வாளர். உங்களுக்கு மிகவும் பொருத்தமானவர். யோசித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள். நீங்கள் தமிழ்நாட்டு மருமகளாக வரவேண்டும்,” என தனது ஆசையைத் தெரியப்படுத்தினார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “தற்போதைய சூழலில் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை,” எனச் சொல்லி தப்பிக்கலாம் என்று பார்த்தேன். “பரவாயில்லை. எப்போது உங்களக்குத் திருமணம் செய்யும் எண்ணம் வருதோ அப்போது கண்டிப்பாக நீங்கள் எங்கள் நாட்டு மருமகளாகத்தான் வரவேண்டும்,” என உரிமையுடன் கேட்டுக்கொண்டார். “பார்க்கலாம்” என சொல்லி மழுப்பினேன்.

நாங்கள் ஏற வேண்டிய பேருந்து வந்தது. முகிலனிடம் விடைப்பெற்றுக் கொண்டோம். “நான் சொன்னதை யோசித்துப் பாருங்கள்,” என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். பேருந்தில் காலி இருக்கைகள் இல்லாத காரணத்தினால் நாங்கள் நின்றுக்கொண்டே பயணம் செய்ய வேண்டியதாயிற்று. வடபழனி வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம். அங்கேயிருந்து ஆட்டோ எடுத்துச் செல்வதாக உத்தேசித்திருந்தோம். பேருந்து நிறுத்தத்தில் அருகில் இருந்த பழக்கடையில் சில மாம்பழங்கள் வாங்கிக் கொண்டேன். பின்னர் ஆட்டோ எடுத்து இருவரும் வளசரவாக்கம் சென்றோம்.

அங்கே சாலை ஓரத்தில் இறங்கிவிட்டு, குண்டும் குழியுமாக இருந்த செம்மண் சாலையில் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வானம் நன்றாக இருட்டிவிட்டிருந்தது. போகும் வழியில் இருந்த கடை ஒன்றில் சித்தியின் குழந்தைகளுக்குச் சில நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொண்டேன். போகும் வழியெல்லாம் கவிதா கதைத்துக் கொண்டே வந்தாள். வீட்டை அடைந்ததும் பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்த பிறகு, குளித்து, உணவு உண்டோம். பின்னர், சிறிது நேரம் இணையத்தில் உலாவிவிட்டு, படுக்கைக்குச் சென்றேன்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். இன்று நுங்கம்பாக்கம் ‘ஸ்ப்ரீங்’ விடுதியில் முக்கியமான சந்திப்பு ஒன்று இருந்தது. வீட்டில் வேறு வேலை இல்லாததால் பாக்கியா அக்கா என்னுடன் வர சம்மதித்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு வழி தெரியாததால் சற்று தாமதமாகவே விடுதியை அடைந்தோம். அங்கே அனைவரும் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தனர். இன்றும் தாமதமாகிவிட்டதே என சிறிய குற்ற உணர்வு எம்மை ஆட்டிப் படைத்தது. நிகழ்வு ஆரம்பமானது.

கருத்துகள் இல்லை: