வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 7)




பேருந்து வடபழனி நிறுத்தத்தை அடையவும், கண்டெக்டர் நாங்கள் இறங்க வேண்டியதை நினைவுப் படுத்தினார். சுற்றும் முற்றும் பார்த்தோம். புதிய சூழலாக இருந்தது. அது வடபழனி தானா எனக் கேட்டு மீண்டும் உறுதிச் செய்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கினோம். புழுதியைக் கிளப்பியப்படி பேருந்து எங்களைத் தாண்டிச் சென்றது.

“தவறுதலாக இறங்கிவிட்டோமோ,” என அக்கா சந்தேகமாகக் கேட்டார். “இதுதான் வடபழனி. சற்று தூரம் நடந்துச் சென்றுப் பார்ப்போம்,” என்றேன். வெயில் இன்னும் குறையவில்லை. இருவரும் நடந்து நடந்து பெரிய சாலையை அடைந்தோம். கைத்தொலைப்பேசி மூலம் அருணைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இறங்கிய இடத்தையும் அங்கு இருக்கும் கடைகளின் பெயர்களையும் சொல்லி விடுதிக்குச் செல்வதற்காக வழி கேட்டோம். அப்போதுதான் அந்தப் புண்ணியவான் நாங்கள் தங்கியிருந்தது ‘வளசரவாக்கம்’ என்று தெரிவித்தார்.

“பின்பு என்ன #$%@-க்கு எங்களிடம் வடபழனி என்று சொன்னாய்,” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. நான் கேட்க நினைத்ததை நாகரிகமாக அக்காவே கேட்டுவிட்டார். “நான் வளசரவாக்கம் என்றால் உங்களுக்குத் தெரியாது என்றுதான் வடபழனி என்றேன். வடபழனி பக்கம்தான் இருக்கிறது,” என காரணம் சொன்னான். ஏனோ தெரியவில்லை, நான் சென்னைக்கு வந்ததிலிருந்து எனக்கு அருணின் மேல் சொல்லமுடியா வெறுப்புணர்ச்சி. அக்காவின் நண்பர் என்ற ஒரே காரணத்தால் பேசாமல் இருந்தேன்.

கதைத்து முடிந்து அக்கா தொலைப்பேசியை வைத்தார். வெயிலில் அலைந்ததால் இரண்டு பேரும் சற்று களைத்துப் போயிருந்தோம். “என்னவாம்?” எனக் கேட்டேன். “இங்கேயே ஏதாவது ஒரு கடையில் காத்திருக்கச் சொன்னான். பிரகாஷ் வந்ததும் நம்மை வந்து அழைத்துச் செல்கிறார்களாம்,” என்றார். சற்று யோசித்தேன். “அக்கா, அதெல்லாம் வேண்டாம். நான் இங்கு வந்ததே அனுபவம் பெறுவதற்குத்தான். எனக்குக் காரில் பயணம் செய்ய பிடிக்கவில்லை. நான் இன்னும் சிறிது தூரம் காலார நடக்கப் போகிறேன். இங்குள்ள கடைகளைப் பார்க்க வேண்டும், மக்களின் வாழ்வியலைப் பார்க்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் அவர்களுடன் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்,” என்றேன்.

ஏதோ ஒருவித நம்பிக்கை. மொழி தெரியாத ஊர்களுக்கே தனியாக சென்று வந்தாயிற்று. என் தாய்மொழிப் பேசும் உறவுகள் வாழும் ஊரில் தொலைந்துப் போய்விடுவேனா என்ன? “எனக்கும் காரில் பயணம் செய்யப் பிடிக்கவில்லை. நாம் இருவரும் நடந்துச் சென்று பிறகு ஆட்டோ பிடித்து விடுதிக்குச் சென்று விடுவோம். அருணிடம் நாம் தங்கியிருக்கும் தெருவின் பெயர் என்னவென்றுக் கேட்கிறேன்,” என்றார்.

“நல்ல யோசனை. ஆனால், அருணிடம் கேட்க வேண்டாம். நாம் யாருடைய துணையுமின்றி தனியாகத்தானே வந்தோம். அதே போல், நாமே சென்று விடுவோம்,” என்றேன். என் முகத்தில் இருந்த அதிருப்தியை அக்கா கவனித்திருக்க வேண்டும். “ஆனால், நமக்கு முகவரி தெரியாதே? என்ன சொல்லி ஆட்டோ எடுப்பது,” என்றார். பட்டென்றுச் சொன்னேன், “வளசரவாக்கம், முருகன் இட்லி கடை!”. இருவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்.

எங்கள் நடைப்பயணம் தொடர்ந்தது. சாலையோரம் அமைந்திருந்தக் கடைகளைப் பார்வையிட்டபடியே நடந்தோம். வாகனங்கள் ‘ஹான்’ சப்தத்தை எழுப்பியபடியும், புழுதியைக் கிளப்பியபடியும் சென்றுக் கொண்டிருந்தன. எங்கள் நாட்டில் ஒரு வாகனம் தேவையில்லாமல் ‘ஹான்’ சப்தம் எழுப்பினாலே மற்ற வாகனமோட்டிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.  இங்கே நொடிக்கொரு தரம் எல்லா வாகனங்களும் சத்தம் எழுப்பிய படியே சென்றுக் கொண்டிருந்தன. சாலையோரங்கள் பானிப்பூரி, சமோசா போன்றவை விற்பனையாகிக் கொண்டிந்தது. பேருந்து நிறுத்தம் ஒன்று தென்பட்டது. அதனைச் சட்டை செய்யாது நாங்கள் எங்கள் நடையைத் தொடர்ந்தோம்.

இனிப்புப் பலகாரக் கடை ஒன்று கண்ணில் தென்பட்டது. அதனுள்ளே ஒரு நீண்ட மேசையும், சில நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. மிகச் சிறிய கடையாக இருந்தாலும் பலவகையான இனிப்பு வகைகள் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இனிப்பு வகையிலேயே எனக்குப் பிடித்த ‘குலாப் ஜாமூனை’ அங்குக் கண்டதும் என்னால் நாவை அடக்க முடியவில்லை.

“அக்கா, சிறிது களைப்பாக இருக்கிறது. கடையின் உள்ளே நாற்காலி இருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்துக் களைப்பாறிச் செல்வோம்,” என்றேன். அக்காவும் சரியென்றபடியால் இருவரும் கடையின் உள்ளே நுழைந்தோம். நானும் அக்காவும் ஆளுக்கொரு குலாப் ஜாமூன் வாங்கிக்கொண்டு நாற்காலியில் வந்து அமர்ந்து இளைப்பாறினோம். எங்கள் நாட்டில் இனிப்புக் கடைகளில் யாரும் அமர்ந்து உண்ண மாட்டார்கள். பெரும்பான்மையான இனிப்புக் கடைகளில் நாற்காலிகளும் இருக்காது. இனிப்பு வகைகளைப் பொட்டலம் கட்டித்தான் வாங்கிச் செல்வார்கள். உணவகங்களில் இனிப்பு வகைகள் விற்பனைச் செய்யப்பட்டால் அங்கு அதனை வாங்கி உண்ணும் வழக்கம் உண்டு.

மாலை நேரமானதால் வேலை முடிந்துச் சிலர் கடைக்கு வந்து  இனிப்பு வகைகளைச் சுவைத்துவிட்டுச் சென்றனர். பெரும்பாலும் ஆண்களே கடைக்கு வந்துப் போயினர். நாங்கள் இரு பெண்கள் மட்டுமே அந்தக் கடையில் அமர்ந்திருந்ததை உணர்ந்தேன். அக்காவால் குலாப் ஜாமுனை சாப்பிட்டு முடிக்க இயலவில்லை. பெருந்தன்மையாக அதனையும் நானே உண்டு முடித்தேன். சில முறுக்கு வகைகளைப் பொட்டலம் கட்டிய பிறகு நாங்கள் அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

நடைப்பயணம் தொடர்ந்தது. பெரும்பான்மையான பெண்கள் சுடிதார், சேலை அணிந்திருந்தனர். பாவாடைத் தாவணி அணிந்தப் பெண்கள் கண்களின் அகப்படவில்லை. ஆண்கள் பெரும்பான்மையோர் முழுக்கைச் சட்டையும், முழுநீல காற்சட்டையும் அணிந்திருந்தனர். சற்று வயதானவர்கள் வேட்டி கட்டியிருந்தனர். சாலையின்  ஓரத்தில் பெண்ணொருத்தி மல்லிகைச் சரங்களை மலை போல் குவித்து வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள். அந்த மலர்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. அத்தனையும் அள்ளி எடுத்து, நீண்ட பின்னலிட்டு, கூந்தலில் சூடிக்கொள்ளலாமா என்ற பேராசையும் எழுந்தது.

வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. அக்காவின் நடையின் வேகமும் குறைந்தது. “வேகம் குறைந்துவிட்டதே. களைத்து விட்டீர்களா அக்கா?” என வினவினேன். “எனக்கு உன்னைவிட பத்து வயது அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்,” என்றார். பாவம் அக்கா. இளவயதான எனக்கே சற்று களைப்பாகத் தான் இருந்தது. என்னைவிட பத்து வயது அதிகமுள்ள அக்கா சீக்கிரம் களைத்துவிட்டதில் ஆச்சர்யமில்லைதான். அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கிற்று.

இன்னும் சற்று தூரம் வரை நடந்துச் சென்றோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை அழைத்து நான் இருக்கும் இடத்தின் அடையாளங்களைக் கூறி அங்கிருந்து எனது தங்கும் விடுதிக்குச் செல்ல ஆட்டோ வாடகைக்கு எடுத்தால் எவ்வளவு ஆகும் என வினவினேன். சுமார் 40 ரூபாய் ஆகுமென்று சொன்னார். ஆட்டோக்கள் சில நின்றுக்கொண்டிருந்தன. ஒரு ஆட்டோவை நெருங்கி, “வளசரவாக்கம், முருகன் இட்லி கடைக்குச் செல்ல வேண்டும்,” என்றோம். அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “100 ரூபாய் ஆகும்,” என்றார். “விலை அதிகம். வேண்டாம்,” என்று சொல்லிவிட்டோம். பின்னாலிருந்த இன்னொரு ஆட்டோக்காரர், “எங்கம்மா போகணும்?” என கேட்டார். இடத்தின் பெயரைச் சொன்னோம். “தலைக்குப் பத்து ரூபாய்,” என்றார். மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஓமென்று ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

இந்தியாவில் உங்களுடைய அனைத்து அனுபவங்களும் அருமையான பதிவுகள்....

Unknown சொன்னது…

உங்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறேன் சகோதரி....

Unknown சொன்னது…

உங்களை தொடர்பு கொள்ள முடியுமா சகோதரி.... +918825744833
நான் மலேசியா வந்தால் சந்திக்க முடியுமா...