திங்கள், 8 ஜூன், 2009

நட்பு!


நட்பு இன்பமானது
உங்களோடு நான் கொண்ட நட்பு
அரிய இன்பத்திலே துன்பமானது
துன்பத்திலும் இன்பமானது!

ஒருநாள் பார்த்து
பலநாள் பழகியதைப் போல்
பேசி சிரித்து விளையாடியது
அனைத்தும் இன்பக் கனா போல்
நெஞ்சினிலே பசு மரத்தாணியாய்!

பிரிவு என்ற கட்டத்தை நெருங்கியபோது
இதயம் கனத்து வலித்து-சுக்குநூறாய்
உடைந்துப் போனதே!

மீண்டும் எப்போது ஒன்றாக சேர்வோம்
நம் மகிழ்ச்சி என்றென்றும் நீடிக்குமா
கடந்த காலங்கள் மீண்டும் திரும்புமா
கலங்கமற்ற நட்பு நிலைத்து நிற்குமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்தக் காலத்தின் கொடுமையினை நினைக்கையிலே
இமை மூடித் திறப்பதற்குள்ளே
அனைத்துமே முடிந்துவிட்டதைப் போல்
நெஞ்சுக்குள் ஓர் உணர்வு!

மீண்டும் நினைத்துப் பார்க்கையில்
கடந்த காலத்தை அசைப்போடுகையில்
என்னையே அறியாமல்-கண்களில்
நீர் தேங்கி வழிகின்றது!

பேசிய வார்த்தைகள் சுற்றிய இடங்கள்
ஐயோ, நெஞ்சம் வலிக்கின்றதே!
மீண்டும் பார்க்கலாம் என்றாலும்
கல்லூரி வாழ்க்கை முடிந்து
ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில்!

நீ எங்கே, நான் எங்கே, அவன் எங்கே?
நான்கு திசைகளுக்கும் பிரிந்துச் சென்றுவிடுவோம்
உங்கள் நட்பினிலே ஆழம் இருக்கின்றது
அதைப் பார்க்கையிலே இதயத்திலோர் ஏக்கம்!

நட்பின் மூலமேநான் சொர்க்கம் காண்கிறேன்
என்னால் இயலவில்லை
சேர்ந்துப் பழகியதை மறக்க இயலவில்லை
தவிக்கிறது நெஞ்சன் தவிக்கிறது
துன்பத்தில் மூழ்கி தவிக்கின்றது!

ஆண்களும் பெண்களும்
பேசி சிரித்துப் பழகினால் காதலா?
என்ன உலகமடா இது?
நட்பில் இத்தனை விதிமுறைகளா?

நட்பு புனிதமானது
ஆண் பெண் பேதம் பாராதது
கவலைகள் தீர்க்க வல்லது
ஜாதி, மதம், இனம் அறியாதது
எல்லைகள் கடந்து சுவாசிப்பது!

சின்ன சின்ன சண்டைகள்
முகம் சுளிக்கும் கிண்டல்கள்
வயிறு குலுங்கும் நகைச்சுவை
போட்டியோடு விளையாட்டு!

நட்பின் ஆழத்தைச் சொல்வதற்கு
எனக்கு வார்த்தைகள் அகப்படவில்லை
இதுநாள் வரை ஒன்றாக இருந்த
நண்பர்க் கூட்டம் பிரியும் வேளை!

மரத்தின் கீழே அமர்ந்து
வெட்டிக் கதைகள் பல பேசி
வகுப்புக்குச் செல்லாமல் மட்டம் போட்டு…
காலம் மாறலாம்-நமது நட்பு மாறுமா?

கல்லூரி வாழ்க்கை முடியும் வேளையிலா
நம் நட்பு தொடங்க வேண்டும்
பிரியும் காலம் நெருங்கிய போதுதானா
நாம் சேர்ந்து பழக வேண்டும்?

செய்ததெல்லாம் சரியா தவறாத் தெரியவில்லை
நடப்பதெல்லாம் நிஜமா கனவாப் புரியவில்லை
பேசியதெல்லாம் மெய்யா பொய்யா அறியவில்லை
அனைத்தையும் மறக்க நெஞ்சில் வலிமையில்லை!

இது விதியின் விளையாட்டா
அல்லது காலத்தின் கட்டளையா
இனி அனைவரும் மீண்டும்
பார்ப்போமா, பழகுவோமா, பேசுவோமா
அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

6 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் ‘நட்பு’ அழகாக இருக்கின்றது

\\சேர்ந்துப் பழகியதை மறக்க இயலவில்லை\\

மறக்க வேண்டிய அவசியம் இல்லையே.

\\இனி அனைவரும் மீண்டும்
பார்ப்போமா, பழகுவோமா, பேசுவோமா\\

பார்த்தாலோ பழகினாலோ பேசினாலோ தான் நட்பா.

மனதளவில் அவர்கள் நலவாய் இருக்க நினைத்து பிரார்த்தித்து கொண்டிருப்பதே ‘நட்பு’ தாங்க.

உங்கள் நட்பு தொடர வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

பெயரில்லா சொன்னது…

கல்லூரி நட்பு மறக்க முடியாததுதான்..
அடிக்கடி சந்திக்க இயலாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது சந்தித்துவிட நினைப்போம்..அப்படி சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. நல்லவேளையாக என் கல்லூரி நண்பர்கள் அனைவரும் தலைநகரில் வேலை செய்கின்றனர் :-)

sivanes சொன்னது…

நல்ல கவிதை தோழி! தமக்காக வாழ்ந்தவர்களையே பலர் மறந்து விடுகின்றனர், நீங்கள் காலங்கள் கடந்தும் நினைவில் வைத்துள்ளீர்கள்! உங்கள் நண்பர்கள் அதிர்க்ஷ்டசாலிகள்!

gayathri சொன்னது…

hey supara iruku pa

ஆர்.வேணுகோபாலன் சொன்னது…

நண்பர்கள் தினத்தை உலகம் கொண்டாடுகிற இந்த நல்ல நாளில் நட்பைப் பற்றிய ஒரு அருமையான கவிதை தந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

துபாய் ராஜா சொன்னது…

அழகான வரிகளில் அருமையான நட்பை பிரிந்த வலி தெரிகிறது.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

http://rajasabai.blogspot.com/2009/08/blog-post.html