வெள்ளி, 15 ஜனவரி, 2016

இரகசியக் காதலி (Mistress) ‍‍-அனிதா நாயர்




தென்னிந்தியாவைச் சுற்றி இக்கதைப் பின்னப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவையும் அதன் பிரசித்திப்பெற்ற கதக்களி நடனத்தையும் மையமாக வைத்து எழுத்தாளர் மிக அழகாகக் இக்கதையைக் கூறியுள்ளார். கலைக்கும் காதலுக்கும் ஏதோவொரு பந்தம் இருக்கவே செய்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நாவலில் ஒரு சில மலையாளச் சொல்லாடல்களும் இருக்கவே செய்கின்றன. வாசகர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் அவைக்குறிய அர்த்தங்களும் குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

நடனக்கலை என்பது நவரசத்தையும் தன்னகத்தே கொண்டது; வாழ்க்கையைப் போல. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி என ஒன்பது அம்சங்களையும் பிரதிபலிப்பதுதான் மனித வாழ்க்கை. இதிலிருந்து எவரும் விடுபடுவதில்லை. கதையில் முக்கியக் கதாப்பாத்திரமாக வரும் கோமன், சேது, ராதா, கிறிஸ், சியாம்,  என அனைவருமே வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களைச் சந்தவர்கள்தான்.

சேது
சிறு வயதில் கொலொம்போ ஓடிச்செல்கிறான். அங்குப் படித்து வேலை செய்து ஒரு சிறு கைகலப்பில் ஈடுப்பட்டு கடலில் குதிக்கிறான். கடலில் மிதந்து வந்தவனை மருத்துவர் சாமுவல் காப்பாற்றி அரவணைக்கிறார். சேது அரைமயக்கத்தில் தனது பெயரை 'சேத்' எனச் சொல்ல, அவனைக் கிறிஸ்துவன் என நினைத்து அவனுக்கும் புனித நூலையும் கொடுத்துப் படிக்க ஊக்குவிக்குறார். புதிய இடத்தில் புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சேது முஸ்லிம் பெண்ணான சாதியாவுடன் காதல் வயப்பட்டு அவளை மணந்துக்கொள்கிறான். இதனால் மருத்துவரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்கிறான். மதங்களிடையே இருக்கும் வேறுபாடு இருவர் மனதிலும் நுழைய, அவர்களின் இல்லற வாழ்க்கைக் கசக்க ஆரம்பித்தது. குழந்தை (கோமன்) பிறந்த பிறகு அவர்களின் விரிசலும் விரிந்தது. ஒரு சமயம் சாதியா மனம் வெறுப்புற்று கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். சிறிது காலம் துன்பத்தில் உழன்ற சேது பின்னர் தொழிலில் ஈடுபட்டு தன்னை உயர்த்திக்கொள்ள வழி காண்கிறான். நன்றாகப் பணம் சேர்த்த பிறகு தன் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று தொழில் தொடங்கி வேறு திருமணமும் செய்துக்கொள்கிறான். தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த போதும் அவன் சாதியா மூலம் பிறந்த கோமனை அனாதையாக விடவில்லை. அவனுக்கும் தனது வீட்டில் இடம் கொடுத்து ஒற்றுமையாக தனது பிள்ளைகள் மூவரையும் வளர்த்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்துக்கொடுக்கிறான்.  

ராதா
கோமனின் தம்பி மகள். அனைத்துச் சொத்துகளுக்கும் ஒரே வாரிசு. படித்தவள்; கலையார்வம் மிக்கவள்; எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவள்; இவள்தான் இரகசியக் காதலி. படித்து முடித்து ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் போது, தன்னைவிட அதிக வயது மூத்த அதிகாரியின் காதல் வலையில் விழுந்து, அவனது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்தவள். அவன் மூலம் கருத்தரித்து அதனை தைரியமாகக் கலைக்கவும் செய்கிறாள். இதனை வெளியார் மூலம் கேள்விப்பட்ட ராதாவின் பெற்றோர், உறவுக்காரனான சியாமிற்கு ராதாவைத் திருமணம் செய்து வைக்கின்றனர். காதல் நினைவுகளிலிருந்து விடுபட நினைத்த ராதாவும் அதனை ஒரு மாற்று மருந்தாக நினைத்துத் திருமணம் புரிகிறாள். முதல் இரவன்றே தனது கனவனிடம் தான் 'கன்னி' அல்ல என்றும் ஏற்கனவே வேறொருவனுடன் உறவுக்கொண்டவள் என்பதையும் வெளிப்படையாகக் கூறுகிறாள். ராதா தனது மனைவி பாத்திரத்தை நல்லபடியாகவே நடித்தாள். சியாமிற்கு சமைத்துப் போட்டாள்; அவனுடன் வெளியில் சென்றாள்; சம்பிரதாய இரவுகளில் சரசமாடினாள். ஆனால், அவளால் அவனைக் காதலிக்க முடியவில்லை. அவள் எவ்வளவோ முயன்றாள். அவர்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகள் முட்களாய் அவள் இதயத்தைத் தைத்துக்கொண்டே இருந்தன. இருந்தும், அவள் தன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவே செய்தாள். 

கிறிஸ்'சின் வருகை அவள் வாழ்க்கையில் புயலை உருவாக்கியது. கண்டதும் அவர்கள் இருவருக்குள்ளும் பலவகை இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன. அவள் தன்னையிழந்தாள். கிடைக்கும் தருணங்களில் அவனுடன் காதல் செய்தாள். அவளைக் குற்ற உணர்வுத் தீண்டவில்லை. மாறாக, அவள் எல்லையில்லா மகிழ்ச்சியிலும் கற்பனையிலும் திளைத்தாள். அவளுக்கு அது பிடித்திருந்தது; அவளுக்கு அது தேவையாயிருந்தது; அது அவளை மீண்டும் உயிர்ப்பித்திருந்தது. இருந்தும் கிறிஸ்'வுடன் செல்ல அவள் தயங்கினாள். இந்த உறவு எதுவரை நீளும் என சந்தேகித்தாள். முதல் முறையாக தனது கணவனுக்கு இழைத்த துரோகத்தை நினைத்துக் கூனி குறுகிறாள். அவள் வயிற்றில் கிறிஸ்'சின் குழந்தை. ஆனால், அதனை அவள் அவனிடம் சொல்லவே இல்லை. இரு ஆண்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் தன் வாழ்க்கையை நினைத்துப் புலம்புகிறாள். பின்னர் இருவரையுமே தன் வாழ்க்கையிலிருந்து விலக்குகிறாள். அவளுக்குத் துணை அவள் வயிற்றிலேயே வளர்கிறது.

சியாம்
ராதாவை மணந்துக்கொள்ளத் தன்னை அவளது பெற்றோர் அணுகிய போதே ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்கிறான். சிறு வயதிலேயே தந்தையை இழந்து ஏழ்மையில் வாடிய சியாமிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. மற்றொன்று, அவன் நீண்டகாலமாக ராதாவை ஒரு தலையாக நேசித்து வருகிறான். எனவே, ராதாவைத் திருமணம் செய்கிறான். ராதா தனது ரகசியத்தை முதலிரவன்று சொன்ன போது அவன் அதிர்ச்சியடையவில்லை. மாறாக அதனை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். ராதாவின் மனதை தன் வசம் இழுக்க பெரும் பாடுபடுகிறான். நிறைய சம்பாத்தித்து அவளுக்கு நகைகளும் பரிசுப்பொருட்களும் வாங்கிக் குவிக்கிறான். அவள் தனக்குரியவள் என்பதில் தீர்மானமாக இருக்கிறான். அவளது எல்லா செயல்களையும் கூர்ந்து கவனித்து அவளை இளவரசி போல் தாங்குகிறான். ஆனால், அவளது அன்பு மட்டும் அவனுக்குக் கிட்டவே இல்லை. ராதா சொடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல் அவனுடன் வாழ்ந்தாள். சியாமிற்கு எல்லாமும் தெரிந்திருந்தது; ராதாவின் இரகசியக் காதல் உட்பட. இருப்பினும் சியாமால் ராதாவை வெறுக்க முடியவில்லை. என்றாவது ஒருநாள் தன் காதலைப் புரிந்துக்கொண்டு ராதா தன்னைக் காதலிப்பாள் என சியாம் காத்திருக்கிறான். கிறிஸ் ஊரை விட்டுச் சென்றதும், அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக வளர்க்கவும் தயார் என்ற மனநிலையுடன் தொடர்ந்து ராதாவைக் காதலிக்கிறான்.

கோமன்
இந்நாவலின் கதாநாயகன். கதக்களி ஆட்டக்காரன்; ஆசான்; சேது மற்றும் சாதியாவின் காதல் சின்னம்; ராதாவின் பெரியப்பா; கிறிஸ்'சின் தாயார் அஞ்சலேயாவின் காதலன்; இப்படி பல கதாப்பாத்திரங்களில் வாழும் 'வேசக்காரன்'. இதற்குமேல், நீங்களே வாசித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்....

கருத்துகள் இல்லை: