புதன், 24 ஜூன், 2015

அவளும் அதுவும்... (பாகம் 5)


 
"அதுக்கு நம்ம கூட பேச விருப்பம் இல்லைனா?" பவானி சந்தேகத்துடன் கேட்டாள்.

"இல்லைனா ‘நோ’ என்ற வட்டத்தைக் காட்டும்".

"இங்கே பேயே இல்லைனா?" இப்போது பாலா கேட்டான்.

"ஒன்னுமே இல்லைனா காசு நகராது. ‘ஹோம்’லேயே இருந்திடும். ஆனா, நாம ரொம்பெ நேரம் முயற்சி செஞ்சாதான் ‘அது’ வரும். எல்லார்கிட்டேயும் அது பேசாது. அதுக்குப் பிடிச்ச ஒருசிலர்கிட்ட மட்டும்தான் அது பேசும். இப்ப நான் ‘அதை’க் கூப்பிடப் போறேன். எல்லாரும் மெதுவா ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’னு சொல்லிக்கிட்டே இருக்கணும். சரியா?"

"சரி" என மூவரும் தலையசைத்தனர். மேகலா தனது ஆள்காட்டி விரலை நாணயத்தின் மேல் பட்டும் படாமல் வைத்தாள். "ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்" என அனைவரும் அதனை அழைக்கத் தொடங்கினர். நால்வரின் தலைகளும் குனிந்து கண்கள் நாணயத்தின் மேல் நிலை குத்தின. சிறிது நேரத்திற்குப் பிறகு மேகலா கண்களை மூடிக்கொண்டாள். அந்த அறை முழுவதும் ஒருவகையான சூன்யம் பரவியது. மேகலாவின் விரல் லேசாக அசைந்தது. நாணயம் ‘ஹோம்’ என்ற வட்டத்தைச் சுற்றி மெதுவாக வட்டமிட ஆரம்பித்தது. பவானியின் கண்கள் பெரிதாயின.

"பாலா!!! ஏய், பாலா…!" என்று தாத்தா பாலாவைத் தேடிக்கொண்டு வரும் சத்தம் கேட்டது. நாணயம் சட்டென நின்றது. மேகலா பட்டென கையை எடுத்தாள். சில வினாடிகள் செய்வதறியாது நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். தாத்தாவின் குரல் இப்போது வெகு அருகில் சத்தமாக ஒலித்தது. வாடிக்கையாளர்கள் யாராவது வந்திருக்க வேண்டும். அதனால்தான் தாத்தா பாலாவைத் தேடிக்கொண்டு வருகிறார்.

"இங்கே இருக்கேன் தாத்தா!" என்று பதிலுக்கு உரத்துக் கத்தியபடி பாலா எழுந்துச் சென்றான். அதேவேளையில், மேகலா அந்த வரைத்தாளைச் சுருட்டி பத்திரமாக கட்டிலுக்கடியில் மறைத்து வைத்தாள்.

"நாளைக்குத் திரும்பவும் முயற்சிப் பண்ணலாம்," என்று மெல்லியக் குரலில் கூறினாள். மூவரும் அறையை விட்டு வெளியேறினர். வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்தனர். பவானி மேகலாவிற்கும் வாணிக்கும் இடையே அமர்ந்துக்கொண்டாள். நாவல் மர நிழலும், மெல்லிய காற்றும் மாலை வெயிலுக்கு இதமாக இருந்தன.

"நிஜமாவே காசு நகர்ந்துச்சா இல்ல, நீ விரலை வச்சு நகர்த்தினியா?" வாணிதான் நம்பமுடியாமல் கேட்டாள். மேகலா கடுப்புடன் அவளைப் பார்த்தாள்.
"உண்மையாவே நகர்ந்துச்சு’லா. நாங்க ‘ஸ்க்கூல்’ல செஞ்சுப் பார்த்தோம். சுகன்யாதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தா. சுகன்யா செய்யும் போது காசு ரொம்ப வேகமா நகர்ந்துச்சு. நான் செய்யும் போது ரொம்ப மெதுவா நகருது."
"நாளைக்கு திரும்பவும் முயற்சி செஞ்சுப் பார்க்கலாமா?" பவானி ஆர்வம் மேலிட கேட்டாள். மேகலா சம்மதமாய் தலையசைத்தாள்.


மறுநாள் பள்ளி முடிந்து மூவரும் மறுபடியும் அந்தக் கடைசி அறையில் கூடினர். இன்று பாலாவும் சீக்கிரமே வந்து சேர்ந்தான். முந்தைய தினத்தைவிட அனைவரின் கண்களிலும் ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகத் தெரிந்தன.


"ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன், ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்," என நால்வரும் இடைவிடாது ‘அத’னை அழைக்கத் தொடங்கினர். சில நிமிடங்களுக்குப் பிறகு அறை முழுவதும் ஒருவித குளிர்ச்சிப் படர்வதை பவானி உணர்ந்தாள். அவளது உடம்பின் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. மேகலாவின் கண்கள் மூடியிருந்தன. அவளது மெல்லிய விரலில் ஒருவித நடுக்கம் தென்பட்டது. இருபது காசு நாணயம் மெதுவாக நகர ஆரம்பித்தது. பாலா ஆச்சர்யத்தில் அழைப்பதை நிறுத்தினான். மற்ற மூவரும் அதனைத் தொடர்ந்து அழைத்தனர். நாணயம் ‘யெஸ்’ என்ற வட்டத்தை அடைந்தது. மேகலா கண்களைத் திறந்தாள். இன்னொரு விரலை உதட்டின் மேல் வைத்து அமைதியாக இருக்கும்படி மற்றவர்களுக்குக் கட்டளையிட்டாள். அனைவரும் அழைப்பதை நிறுத்தினர்.
"உன் பெயர் என்ன? ‘சியாபா நாமா காமு’?" என்று தமிழிலும் பின்னர் மலாயிலும் இரண்டு முறைக் கேட்டாள். நாணயம் மறுபடியும் நகரத் தொடங்கியது. அதன் நகர்வு ஆமையை விட மெதுவாக இருந்தது. ‘எம்’ என்ற வட்டத்தை அடந்த நாணயம் அதனுள்ளேயே ஒருமுறை சுற்றியது. மேகலா சைகைக் காட்ட, வாணி வெள்ளைக் காகிதத்தில் அவ்வெழுத்தைக் குறித்துக்கொண்டாள். நாணயம் மெதுவாக நகர்ந்து ‘எ’ என்ற எழுத்தை வட்டமிட்டது. அடுத்ததாக அது நகர ஆரம்பிக்கும் போது வாணியின் விரலை மெதுவாக எடுத்து, மேகலா தனது விரலுக்கருகில் நாணயத்தின் மீது வைத்தாள். மின்சாரம் தாக்கியது போல் வாணி பட்டென விரலை நாணயத்திலிருந்து எடுத்தாள். நாணயத்தின் மேல் வைக்கப்பட்ட விரலில் சூடு பட்டுவிட்டதைப் போல் அழுத்தித் தேய்த்தாள். மேகலாவின் நுனி விரலின் கீழ் நகர்ந்துக் கொண்டிருந்த நாணயம் நகர்ந்து இப்போது ‘ஆர்’ என்ற எழுத்தை வட்டமிட்டது. நாணயம் அடுத்த வட்டத்தை நோக்கிச் செல்லும் போது வாணி மெதுவாக தனது விரலை அதன் மீது வைத்தாள். வாணியின் விரல் முழுவதுமாக நாணயத்தின் மீது படர்ந்தபின் மேகலா தன் விரலை மீட்டுக்கொண்டாள். இப்போது வாணியின் விரல் நுனியின் கீழ் நகர்ந்த நாணயம் ‘ஐ’ என்ற எழுத்தை வட்டமிட ஆரம்பித்தது.

"அடாகா நாமா அண்டா மரியா?" என்று மேகலா மலாய் மொழியில் கேட்டாள். நாணயம் நகர்ந்து ‘எஸ்’ என்ற வட்டத்தை அடைந்துச் சுற்றியது.

"பெராபாகா உமூர் அண்டா?" என்று மீண்டும் மேகலாவே கேட்டாள். வாணி ஆச்சர்யமாக தன் விரல் நுனியில் அசையும் நாணயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாணயம் 3 என்ற எண்ணை அடைந்தது. அடுத்த எண்ணுக்கு அது நகர ஆரம்பிக்கும் போது பவானி வாணியின் தொடையைச் சுரண்டினாள். தானும் நாணயத்தின் மேல் விரல் வைக்க விரும்புவதாகச் சைகை செய்தாள். வாணி மூத்தவளான மேகலாவைப் பார்த்தாள். மேகலா தலையசைத்து, "மெதுவா பட்டும் படாம வை", என்று கிசுகிசுத்தாள்.


பவானி தனது ஆள்காட்டி விரலை நாணயத்திற்கு மிக அருகில் கொண்டுச் சென்றாள். அவளது விரல் நாணயத்தில் உரசிய உணர்ச்சிக் கூட அவளுக்கில்லை. சட்டென நாணயத்தின் நகர்வு நின்றது. பவானி குழப்பத்துடன் தனது சகோதரிகளைப் பார்த்தாள். அவர்கள் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. ‘ப்பிளீஸ் ப்பிளீஸ் கம் இன் தெ காய்ன்’ என மேகலா மீண்டும் அழைக்கத் தொடங்கினாள். பவானி தன் விரலை எடுத்துக்கொண்டாள். வாணியின் விரல் நுனியில் இருந்த நாணயம் அசையவே இல்லை. மேகலாவும் முயற்சி செய்தாள். பலன் இல்லை.



பவானிக்கு மிகுந்தக் குழப்பமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல, மேகலா வாணிக்கும் அதே நிலைதான். நாணயத்தின் நகர்வு ஏன் திடீரென நின்றது? அது தானாகவே நின்றதா அல்லது பவானியின் விரல் பட்டு நின்றதா? மறுநாள் அதனைச் சோதனைச் செய்துப் பார்த்துவிட வேண்டும் என மூவரும் முடிவு செய்தனர்.
 
...தொடரும்...

கருத்துகள் இல்லை: