புதன், 23 பிப்ரவரி, 2011

கிழக்கு வாசல் திரைப்படம் காட்டும் பெண்களின் வாழ்க்கை



முன்னுரை
இயக்குனர் ஆர். வி. உதயகுமார் கைவண்ணத்தில் தலித் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ள திரைப்படம் ‘கிழக்கு வாசல்’ ஆகும். இதில் முன்னனி கதாப்பாத்திரங்களாக கார்த்திக் (பொன்னுரங்கம்), மனோரமா (சின்னத்தாயி), ரேவதி (தாயம்மா), குஷ்பு (செல்வி), விஜயகுமார் ( கவுண்டர்) ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பெண்ணடிமைத்தனம், தாசிக்குலம், சாதி பேதம் ஆகியவைப் பற்றி இப்படத்தில் பேசப்பட்டுள்ளன.

கதைச்சுருக்கம்
இப்படத்தில் பொன்னுரங்கம் கூத்துக்கட்டும் இளைஞனாக வருகிறான். கதையின் தொடக்கத்திலேயே தன்னுடன் கூத்துக்கட்டும் பெண்ணை பலவந்தப்படுத்த முயன்ற பண்ணையாரையும் அவரது ஆட்களையும் வெளுத்துக்கட்டுகிறான் பொன்னுரங்கம். அவனிடம் விளையாட்டுத் தனமாக குறும்புகள் செய்யும் குறும்புக்காரப் பெண்ணாக செல்வி வருகிறாள். இதனிடையே கவுண்டரின் தோப்பு வீட்டிற்குத் தாயம்மாவும் பெரியகருப்புத்தேவரும் வருகின்றனர். தாயம்மாவுடன் பொன்னுரங்கத்தின் நட்பு தொடர்கிறது. ஒரு முறை தன்னைப் பெண் கேட்டு வருமாறு விளையாட்டுத்தனமாக செல்வி கூற அதனை உண்மை என்று நம்பி தனது தாயைப் பெண் கேட்க அனுப்புகிறான் பொன்னுரங்கம். பெண் கேட்கப் போன இடத்தில் வள்ளியூரானால் அடிக்கப்பெற்று அவமானப்படுத்தப்பட்ட பொன்னுரங்கத்தின் தாய் சின்னத்தாயி வேதனைத் தாங்க மாட்டாது உள்ளுக்குள்ளேயே புழுங்கி உயிர் மாய்க்கிறாள். உண்மை அறிந்த பொன்னுரங்கம் வள்ளியூரானிடம் நியாயம் கேட்கிறான். வள்ளியூரானும் தன் தவற்றை உணர்ந்து செல்வியைக் கண்டிக்கிறார். பின்னர் செல்விக்கு தன் மாமன் மகனுடன் திருமண ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன.

செல்வியும் பொன்னுரங்கமும் தனிமையில் பேசுவதைக் கேட்ட கவுண்டரின் மகன் அவள் மீது சந்தேகம் கொள்கிறான். சொத்திற்காக மட்டும் அவளை மணக்க சம்மதிக்கிறான். இதனை அறிந்த வள்ளியூரான் திருமணத்தை நிறுத்துகிறார். இதனிடையே தாயம்மாவின் உண்மை நிலையை அறிந்து பொன்னுரங்கம் அவள் மீது பரிதாபம் கொள்கிறான். அவளுக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்பதையறிந்து தான் அவளுக்குத் துணையாக வர ஆவல் கொள்கிறான். தாயம்மாவின் சம்மதத்தையும் பெறுகிறான். செல்வியின் மாமன் மகன் விஷம் தடவிய அரிவாளால் பொன்னுரங்கத்தை வெட்டிவிடுகிறான். விதிவசத்தால் பொன்னுரங்கம் உயிர் பிழைக்கிறான். இதனிடையே குஷ்பு பொன்னுரங்கத்தைத் திருமணம் புரிய விரும்புகிறாள். கவுண்டர் தாயம்மாவை பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறார். பொன்னுரங்கத்தையும் அடித்து கொடுமைப்படுத்துகிறார். இச்சம்பவத்தின் போது அவ்விடம் வந்த வள்ளியூரான் ஊர் மக்களைத் திரட்டி கவுண்டருக்கும் அவனது மகனுக்கும் சரியான தண்டனை வழங்குகிறார். கவுண்டரும் தாயம்மாள் சுத்தமானவள் என்பதை ஊர் மத்தியில் ஒப்புக்கொள்கிறார். பொன்னுரங்கமும் தாயம்மாவும் ஒன்று சேர்கின்றனர். இதுதான் ‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

சின்னத்தாயி
தலித் குலத்தில் பிறந்த சின்னத்தாயி இப்படத்தில் மிகவும் இழிவுப் படுத்தப்படுகிறாள். முதலாவதாக பெண் என்ற அடிப்படையிலும், கீழ் சாதியானதாலும், விதவையாக இருப்பதாலும் அவள் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் இவளே இன்னொரு பெண்ணின் மனதைப் பிள்ளை இல்லாத வெறுஞ்சிருக்கி என்றுக் கூறிப் புண்படுத்துகிறாள். இவளிடம் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருக்கிறது. பொன்னுரங்கம் வள்ளியூரான் மகள் செல்வியைப் பெண் கேட்கச் சொன்ன அடுத்த நிமிடமே சின்னத்தாயி அதிர்ச்சியுறுகிறாள். தம் தகுதிக்கு வள்ளியூரான் வீட்டுப் பெண்ணைக் கேட்கலாமா என்று தயங்கி நிற்கிறாள். இருந்தாலும் மகனின் ஆசைக்காகப் பெண் கேட்கச் சம்மதிக்கிறாள். போன இடத்தில் வள்ளியூரானால் மோசமாகத் திட்டி அடிக்கப்படுகிறாள். பெண் என்றும் பாராமல் வள்ளியூரானின் வேலை ஆட்கள் அவளைத் தரமட்டமாக அடிக்கின்றனர். அடித்த அடியின் வலியையும், வார்த்தைகளின் இரணத்தையும் தாங்க மாட்டாதச் சின்னத்தாயி மறுநாளே தன் உயிரை விடுகிறாள். தலித் குலத்தில் தோன்றியவளானாலும் சின்னத்தாயிடம் சுயமரியாதையும் தன்மானமும் இருப்பதை இதன் மூலம் காண முடிகின்றது. நம் சமுதாயத்தில் கீழ் சாதிப் பெண்களைப் பார்க்கும் பார்வையில் வேறுபாடு இருப்பதையும் இக்கதையில் அறிய முடிகிறது. உதாரணமாக, பெண் கேட்க வந்த சின்னத்தாயை வள்ளியூரான் ‘முண்டச் சிருக்கி’ என்று திட்டுகிறார். ஒரு வயதான பெண் என்றும் பாராமல் சின்னத்தயை அடிப்பது கொடுமையான ஒன்றாகத் தெரிகிறது. இதிலிருந்து மேல் சாதியினர் எவ்வாறு கீழ்சாதியினரை அடக்குமுறைச் செய்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.


செல்வி
              மேல்குலத்தைச் சார்ந்த பணக்கார வள்ளியூரானின் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். இதனால் இவள் மற்ற கீழ்சாதிப் பையன்களை கிண்டல் கேளி செய்து விளையாடுகிறாள். ஆண்களின் உணர்வுகளோடு விளையாடுபவளாக இவள் சித்தரிக்கப்பட்டுள்ளாள். பின்விளைவுகளை யோசிக்கத் தெரியாத ஒரு முட்டாள் பெண்ணாகச் செல்வி காட்டப்படுகிறாள். விளையாட்டுத் தனமாகப் பொன்னுரங்கத்தைப் பெண் கேட்க வரச் சொல்வதிலிருந்து இக்கூற்றுத் தெளிவாகிறது. இவளது விளையாட்டுத்தனம் எல்லை மீறிப் போவதைக் கண்ட வள்ளியூரான், கவுண்டர் மகனுக்கு அவளைக் கட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார். இவ்விடம் செல்வியின் சம்மதம் சிறிதேனும் கேட்கப்படவில்லை. அவளது ஆசைகளுக்கும் உணர்வுகளுக்கும் தந்தை என்ற முறையில் வள்ளியூரான் முறையான மதிப்பளிக்கவில்லை. திருமண விசயத்தைப் பொருத்த மட்டில் செல்வி ஒரு கைபொம்யாகவே காட்டப்படுகிறாள். அவளது திருமணம் நின்ற பிறகே வள்ளியூரான் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இதனை முதலிலேயே ஏன் வள்ளியூரான் செய்யவில்லை? மேலும் தன் தாயை இழந்த பின்பும் பொன்னுரங்கம் எப்படி செல்வியை ஏற்றுக்கொள்வான் என்று வள்ளியூரான் நினைத்துப் பார்க்கவில்லை. கெட்டுப்போன ஒரு பொருள் மேல் சாதியிடம் இருந்தால் என்ன கீழ் சாதியிடம் இருந்தால் என்ற நினைப்பில் செல்வியைப் பொன்னுரங்கத்திற்குக் கட்டி வைக்கத் துணிந்ததாகவே தோன்றுகிறது.

தாயம்மா
தாயம்மா நாச்சியம்மை என்ற தாசிக்கு வளர்ப்பு மகளாகக் காட்டப்படுகிறாள். சிறு வயதிலேயே நாச்சியம்மையிடம் தஞ்சமடைந்த தாயம்மாவிற்கு ஏன் வயது வந்தப் பிறகே நாச்சியம்மையைப் பற்றிய உண்மைத் தெரியவருகிறது. உண்மை தெரியாதவாறு தாயம்மா எவ்வாறு வளர்க்கப்பட்டாள் என்பது இவ்விடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. பெண் என்பவள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை மிகத் தாமதமாகவே அறிந்துக்கொள்கிறாள் என்பதை இயக்குனர் கூற வருகிறாரா என்று தெரியவில்லை. இப்படத்தில் தாயம்மா அடிமைப்படுத்தப்பட்ட தலித் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். நாச்சியம்மையின் மருத்துவச் செலவிற்காக வாங்கியப் பணத்தைத் திருப்பித் தர இயலாததால் கவுண்டருக்கு அடிமையாக வேண்டிய சூழல் இவளுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இவள் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறாள். நித்தம் ஒரு நாடகம் நடத்தி தனது கற்பைக் காப்பாற்றுகிறாள். இறுதியில் தான் இவ்வளவு நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த துணை பொன்னுரங்கம்தான் என அறிந்து அவனை ஏற்கிறாள். இக்கதையில் வரும் கவுண்டர் தாயம்மாவை வெறும் போகப்பொருளாகவே பார்க்கிறான். தன் மகள் வயதை ஒத்த தாயம்மாவுடன் உறவுக்கொள்ளத் துடிக்கிறான். இங்கே தாயம்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. பல இன்னல்களுக்கிடையேயும் தாயம்மா உறுதியுடனும் கற்புடனும் வாழ்கிறாள். இயக்குனர் அவர்கள் தாயம்மா என்பவளை ஓர் உன்னத கதாப்பாத்திரமாகப் படைத்துள்ளார் என்றால் மிகையில்லை.



நாச்சியம்மை
‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் நாச்சியம்மை ஒரு தாசிப் பெண்ணாக, கவுண்டரின் போகப்பொருளாகக் காட்டப்படுகிறாள். இவளது நிலை கட்டுப்படுத்தப்பட்ட ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கிறது. தாசிக்குலத்தைச் சார்ந்தவளானாலும் தாயம்மாவை உத்தமியாகவே வளர்க்கிறாள். ஆதரவற்ற தாயம்மாவிற்கும் பெரியகருப்பத்தேவருக்கும் அடைக்கலம் தருகிறாள். இருந்தபோதிலும் தான் ஒரு தாசி என்ற உண்மையைத் தாயம்மாவிற்குத் தெரியாமல் மறைத்து வளர்க்கிறாள். இது இவளிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது. தாயம்மா தன்னை விட்டு போவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர் விடுகிறாள். இங்கே பெண்ணை நிகழ்காலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கோழையாகக் காட்டியுள்ளது வேதனைக்குறியதாகும்.

கவுண்டரின் மனைவி
இத்திரைப்படத்தில் கவுண்டர் தன் மனைவிக்கு உரிய உரிமையும் மரியாதையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. தன் மனைவியை ஒரு அடிமைப் போலவே நடத்துகிறான். அவளுக்கு பேச்சுரிமைக் கொடுக்கப்படவில்லை. கவுண்டரின் மனைவியும் கணவனை எதிர்க்கத் துணிவற்றப் பெண்ணாகவே காட்டப்படுகிறாள். கவுண்டர் தோப்பு வீட்டுச் சாவியை ஏன் எடுத்து வரச் சொல்கிறார் என்று தெரிந்திருந்தும் அதனை மறு பேச்சுப் பேசாமல் எடுத்து வருகிறாள். தன் கணவனின் நடத்தைத் தெரிந்திருந்தும் மரபு வழி வந்தப் பெண்ணாக அவனுடனேயே தன் வாழ்நாளைக் கழிக்கிறாள். இவ்விடம் ஒரு பெண் திருமணமானப் பிறகு கணவனுக்கு அடிபணிந்து அடிமைப் போல் வாழும் நிலை எடுத்துக்காட்டப்படுகிறது.

முடிவுரை
‘கிழக்கு வாசல்’ திரைப்படம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் எப்படியெல்லாம் மேல் சாதி மக்களாலும், ஆண்களாலும் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படத்தில் காணமுடிகின்றது. இப்படத்தில் வரும் அனைத்துப் பெண் பாத்திரங்களும் ஒருவித கோழைத்தனத்துடன் படைக்கப்பெற்றிருக்கிறார்கள். செல்வி தன் தந்தைக்குப் பயந்து கவுண்டர் மகனைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்; சின்னத்தாயி மேல் சாதியான வள்ளியூரானைக் கண்டு பயப்படுகிறாள்; கவுண்டரின் மனைவி தன் கணவனுக்குப் பயப்படுகிறாள்; நாச்சியம்மை உண்மைக்குப் பயந்து தான் ஒரு தாசி என்பதை தாயம்மைக்குக் கூறாமலேயே வளர்க்கிறாள்; தாயம்மா கவுண்டருக்குப் பயந்து அவரது தோப்பு வீட்டில் குடியேறுகிறாள். இவ்வாறாகப் பெண்களின் பாத்திரப் படைப்பு என்பது ஒரு கோழைத்தனமான சூழலிலேயே படைக்கப்பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கச் செய்தியாகும்.



7 கருத்துகள்:

logu.. சொன்னது…

எது எப்படியோ..

அந்த படத்துல வரும் “பாடி பறந்த கிளி “ பாட்டு எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.

மாணவன் சொன்னது…

விமர்சன பகிர்வுக்கு நன்றிங்க... :)

து. பவனேஸ்வரி சொன்னது…

லோகு: மன்னிகவும். பாடலை நான் ஆராய்யவில்லை நண்பரே. இருப்பினும், நல்ல பாடல்தான்.

மாணவன்: தங்களுக்கும் என் நன்றி

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பதிவு ரொம்பப் பெரியதாக நீளமாக இருக்கிறது.
சுருக்கமாக இருந்தால் நீங்க சொல்ல வரும் கருத்து எல்லாரையும் சென்று அடையும்

jothi சொன்னது…

நல்ல அலசல்,.. படம் பார்க்கும் போது இதெல்லாம் தோணவில்லை,..

ஜனகராஜ் அடிக்கடி சொல்லும் "தாயம்மா கறந்த பாலைவிட சுத்தமானவய்யா" வசனமும் "பொன்னுமணி" என அடிக்கடி கார்த்திக்கை ரேவதி சொல்லும் காட்சிகளும் இன்னும் கண் முன் வந்து போவது டைரக்டரின் வெற்றிதான்,..

து. பவனேஸ்வரி சொன்னது…

ராம்ஜி: ஓம். அடுத்தமுறை பதிவெழுதும் போது நீளமாக இருந்தால் இரு பகுதிகளாகப் போடலா என்று இருக்கிறேம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

லோகு: நல்லப் படம். பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டிய இயக்குனருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

பெயரில்லா சொன்னது…

puvaneshwari keep it up, i like ur blog & also u..!