புதன், 26 நவம்பர், 2008

என் பாத்திரமென்ன?

ஒவ்வொரு விடியலும்
இரவாகிப் போவது ஏன்?
நெஞ்சில் உரம் போட்டு
காதல் வளர்த்ததாலா?
நிலவு சூரியனாய்
மாறியதில் ஆச்சர்யமில்லை
எனக்கு மட்டும் எப்படி
சூரியன் கூட நிலவாய்?

கனவில் நீ வருவதனால்
இரவெல்லாம் விழித்திருந்தேன்
விடிந்ததும் உறக்கம் கொண்டேன்
இருந்தும் நிம்மதியில்லை!
ஆயிரம் பேர் கொண்ட சபையில் நான்
கேளிக் கதைப் பேசி சிரித்த வேளை
உள்ளத்தில் எங்கோ ஓர் மூலையில்
உணர முடியா தனிமை…!

தனிமையில் இனிமையா?
சொன்னவன் நிச்சயம் பைத்தியக்காரன்
தனிமையை விட கொடுமையா?
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
தனிமையை விட சிறந்ததையும்
நான் இன்னும் காணவில்லை
தனிமை இனிமையா கொடுமையா?
பதில் சொல்லத் தெரியவில்லை!

உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீ
காணும் காட்சியெல்லாம் உன் முகம்
உன்னை நான் நினைக்கவில்லை;
இனி நினைக்கவும் மாட்டேன்
மறந்தால்தானே நினைப்பதற்கு!
மன்னிக்கவும்…மறக்க முடியவில்லை
முயன்று முயன்று பார்க்கிறேன்
தோல்வியே நிச்சயம் என்று தெரிந்த போதும்…!

நான் செய்த பாவமா
இல்லை பிறர் கொடுத்த சாபமா
அரை பைத்தியமாய் திரிகின்றேன்
என்னை நானே கேட்கிறேன்
நான் யார்? உனக்காவது தெரியுமா?
‘நீ என் காதலி’ என்ற உதடுகள்
இன்று சுவடு கூட தெரியாமல்
எங்கோ ஓர் மூலையில்…!


எல்லாம் வார்த்தைகள்
எறும்பு மொய்க்கும் வார்த்தைகள்
உன்னைச் சோல்லிக் குற்றமில்லை
ஏமாந்த முட்டாள் நானல்லவா…?
வானளாவிய கனா கண்டேன்
விடிந்ததும் தெளிந்துவிட்டேன்
கண்டது வெறும் கனவுதான்;
நிஜம் என்று எதுவுமில்லை!

உன்னுடன் இருந்த நாட்களைவிட
நாம் பிரிந்து வாழ்ந்த நாட்கள் அதிகம்
ஆனால், அதுதான் என் வாழ்வின் சரித்திரம்!
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
சொச்சம் வைக்காமல் வாழ்வதற்கு
உன்னுடன் சேர்ந்து வாழ்வதை விட
உன் நினைவுகளுடன் வாழ்வதே
சிறந்தது…!

உன்னை நான் வெறுக்கவில்லை
எந்த உரிமையில் வெறுப்பது?
அன்பு, பாசம், நேசம், காதல்
அத்தனையும் புரிய வைத்தவன் நீயல்லவா?
எனக்குப் புரிய வைத்த உனக்கு
என்னைப் புரிந்துக்கொள்ள முடியவில்லையே
வேடிக்கையாகத்தான் இருக்கின்றது;
எனது வாழ்க்கையே…!

நீ இல்லாத வாழ்க்கை
நினைக்கக் கூட முடியவில்லை
நினைத்துப் பார்க்கிறேன்; அழுது பார்க்கிறேன்
அனைத்தும் மறந்து சிரித்துப் பார்க்கிறேன்
என்னையே வெறுத்து நடித்துப் பார்க்கிறேன்
உலகமே நாடக மேடையாமே…?
நடிப்பதற்குத் தயாராக நான்
பாத்திரம்தான் தெரியவில்லை!

7 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஹம்ம்ம்ம்ம்...

புதியவன் சொன்னது…

//உலகமே நாடக மேடையாமே…?
நடிப்பதற்குத் தயாராக நான்
பாத்திரம்தான் தெரியவில்லை!//

அருமையான வரிகள்.

பெயரில்லா சொன்னது…

வரிகள் அற்புதமாக இருக்கு :-)

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

Muniappan Pakkangal சொன்னது…

kaadhal experience nalla irukku.

நான் சொன்னது…

உன்னுடன் இருந்த நாட்களைவிட
நாம் பிரிந்து வாழ்ந்த நாட்கள் அதிகம்
ஆனால், அதுதான் என் வாழ்வின் சரித்திரம்!
மிச்சமிருக்கும் வாழ்க்கையை
சொச்சம் வைக்காமல் வாழ்வதற்கு
உன்னுடன் சேர்ந்து வாழ்வதை விட
உன் நினைவுகளுடன் வாழ்வதே
சிறந்தது…!


அருமையான உணர்வுகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

முனியப்பன் அவர்களே, காதல் அனுபவம்....இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்...

நான் அவர்களின் கருத்துக்கு நன்றி... அருமையான உணர்வுகள் என்பதைவிட அழியாத உணர்வுகள் என்று கூறலாமே?