வியாழன், 30 ஜனவரி, 2020

எது காதல்? -அத்தியாயம் 1

1
அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டுப் பயின்று வரும் கோதையும் கோகிலாவும் பள்ளி முடிந்து அன்றைக்கு வீட்டுக்குச் செல்லவில்லை. புதன்கிழமைதோறும் மதிய வேளையில் புறப்பாட நடவடிக்கைகள் இருப்பதால் அவர்கள் வீடு செல்லாமல் பள்ளியிலேயே தங்கிவிட்டனர்.பள்ளிக்குத் தொலைவில் வசித்துவரும் மாணவர்கள் மதிய வகுப்பின் போது இவ்வாறு பள்ளியிலேயே தங்கிவிடுவது வழக்கம். வீடு அருகில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குச் சென்று மதியம் மீண்டும் பள்ளி திரும்புவர். இது பெரும்பாலான பள்ளிகளில் வழமை.

அப்போது 'மின்னல்' என்ற தமிழ்ப்படம் வெளிவந்து வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருந்த வேளை. கோகிலாவும் கோதையும் மதிய வகுப்பு தொடங்குமுன் இருக்கும் நேரத்தைச் செலவிட அந்தச் சிறிய பள்ளியை சுற்றி சுற்றி நடந்துக்கொண்டே கதைப்பேசி வந்தனர். அப்போது, "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்ற பாடல்வரிகளை யாரோ ஆண் குரல் பாட, "விளையாட ஜோடி தேவை" என்று கோதை தொடர்ந்தாள். இயற்கையிலேயே சற்று குறும்புத்தனம் மிக்கவள்.

"ஏய்! யாரது எங்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவது" என்று குரலுக்குச் சொந்தக்காரர்களான குமாரும், சரணும் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். குமார், சரண் இருவரும் ஆறாம் ஆண்டுப் படிக்கும் பன்னிரெண்டு வயது மாணவர்கள். கோதையும் கோகிலாவும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் காலம்.

குமாரும் சரணும் வரும் காலடிச் சத்தம் கேட்கவே, கோகிலாவும் கோதையும் சிரித்துக்கொண்டே தலைத்தெறிக்க ஓடினர். அவர்கள் அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த குமாரும் சரணும், "ஏய்! ரெண்டு பேரும் நில்லுங்கள்" என்று கூவியவாறு துரத்திக்கொண்டு வந்தனர். தோழிகள் இருவரும் ஓர் அறையின் வளைவில் ஓடிச்சென்ற வேளையில் எங்கிருந்தோ வந்த பள்ளியாசிரியரைக் கண்ட குமாரும் சரணும் சட்டெனெ நின்றனர்.

"என்ன ஒரே ஓட்டம்?" என்று வினவினார் நாராயணன்.

"ஒன்னுமில்லை சார்... சும்மா விளையாடிக்கொண்டிருந்தோம்" என்று மழுப்பினான் சரண்.

"சரி, இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். சில நோட்டுப்புத்தகங்களைக் காரிலிருந்து எடுத்து வர வேண்டும்," என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார் நாராயணன் என்ற கணக்காசிரியர்.

அவர்கள் போவதை வகுப்பறையின் வளைவிலிருந்து மறைந்து நின்று கோதையும் கோகிலாவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் சிரிப்பு. கோதையின் மனம் என்றைக்கும் விட அப்போது அதிகம் படபடத்தது. ஏதோ ஒருவித கிளர்ச்சி, இனம் புரியாத இன்பம்.

"நல்லவேளை அவனுங்க நம்மள பிடிக்கல," என்றாள் கோகிலா.

அதற்கு பதிலொன்றும் கூறாமல் புன்னகையுடன் தலையசைத்தாள் கோதை.
ஒருவேளை பிடித்திருந்தால்? என்று எண்ணியபோது அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்தது.

குமார் பாடிய அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த சமீபத்திய பாடல், எனவே தான் அதைக் கேட்டதும் அவளும் தொடர்ந்துப் பாடினாள். அதே வேளை தனக்குப் பிடித்த பாடலை இன்னொருவனும் இரசித்துப் பாடுகின்றானே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுள் எதுவோ, என்னவோ செய்தது. அவன் பெயர் அவளுக்குத் தெரியும். அந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான‌வர்களை அவளுக்குத் தெரியும். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் அவளையறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.

"என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு?" என்று வினவினாள் கோகிலா.

"ஒன்னுமில்லை..."

"ஏய், மழுப்பாதே. அவர் பாடுவாராம்; இவங்க சேர்ந்துப் பாடுவாங்களாம். அவர் துரத்துவாராம்; இவங்க ஓடுவாங்களாம். யாருக்கிட்ட?" என்று கிண்டலடித்தாள் கோகிலா. கோதையில் இளமைப் பருவத்தின் மிக முக்கியப் புள்ளியிட்டது அன்று கோகிலாதான். கோதை சிரித்தாள். அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மதிய வகுப்பின் போது கோதையால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவளுக்குப் புதுமையாய் இருந்தது. குமாரையும் அவன் பாடிய பாடலையும் நினைத்த மாத்திரத்தில் அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. வீட்டிற்குச் சென்ற கோதை "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலைத் திரும்ப திரும்பக் கேட்டாள். ஒவ்வோர் வரியையும் இரசித்துக்கேட்டாள். ஒவ்வோர் முறையும் முதன் முறை கேட்பதைப் போலவே அந்தப் பாடல் அவளுக்கு சிலிர்ப்பூட்டியது.

இடையிடையே குமாரின் குரல் அவள் காதுக்கு மட்டும் ஒலித்து மறைந்தது.
அதன்பின் ஒவ்வொரு முறை அவள் குமாரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த பொழுது ஓரக்கண்ணால் நோட்டமிடுவாள். குமார் எப்போதும் நண்பர்கள் சூழ இருந்தான். சரண் அவனை நிழல்போல் தொடர்ந்தான். கோதையும் குமாரும் பல முறை ஒருவரையொருவர் பள்ளியில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த போதிலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில சமயம் நண்பர்கள் காணாத வேளையில் குமார் அவளைப் பார்த்துப் புன்னகைப்பான். அவளுக்கு அப்போது வெட்கம் பிடுங்கித்தின்னும். சட்டென்று பார்வையை வேறு திசைக்குத் திருப்பிவிடுவாள். சில சமயம் இவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள், அவன் முகத்தில் வெட்கம் படர சிரித்தவாறு , நண்பர்கள் கவனியா வண்ணம் முக‌த்தைத் திருப்பிக் கொள்வான். இப்படியே நாட்கள் கடந்தன. அவர்கள் இருவரின் வாய் பேசாவிடினும், கண்களாலேயே அவர்கள் ஆயிரம் கதைகள் பேசினர்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்ற கோதை ஒரு முறையாவது அவனைக் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கினாள். அவள் ஏக்கத்தைப் புரிந்துக்கொண்டவன் போல் குமார் அடிக்கடி அவளது வகுப்பறையைக் கடந்துப் போனான். அவன் வரும்போதும், போகும் போதும் ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். இதனைக் கோதையின் இணைப்பிரியா தோழி கோகிலாவும் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன? உன் ரோமியோ அடிக்கடி இந்தப் பக்கம் வரமாதிரி இருக்கு?" என்று கிண்டலடித்தாள்.

"யாரு?" என்று ஒன்றும் தெரியாதது போல் வினவிளாள் கோதை.

"நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஓரக்கண்ணுல பார்க்கிறதும் நீ சிரிக்கிறதும்.

"சிரிச்சா தப்பா?"

"சிரிச்சா தப்பில்ல. ஆனால், நீ சிரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கு. அங்க பார்வையும் வேற மாதிரி வருது."

கோதை பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது? அதற்குள் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைய அவர்கள் பேச்சு அத்தோடு நின்றது. இந்தப் பேச்சி அடியோடு நின்றது என்று சொல்வதற்கில்லை. கோதையும் குமாரும் சிரிப்பையும் பார்வையையும் பரிமாறிக்கொள்வதை அவர்களின் நண்பர்களும் நாளடைவில் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போதோ அல்லது ஒருவரை ஒருவர் கடந்துப் போகும் போது அவர்களுடைய‌ நண்பர்கள் தொண்டையைக் கணைத்து அர்த்தப் புன்னகை வீசுவர். அவர்களின் நட்பும் அன்பும் அந்த அளவிலேயே வளர்ந்தது எனலாம். அவர்கள் இருவருக்கும் அப்பருவத்தில் அதுவே தேவையாய் இருந்தது, ஆயிரம் அர்த்தம் தரக்கூடிய அந்தப் பார்வையும், உலகையே ஒரு கணம் மறக்கச்செய்யும் அந்தப் புன்னகையும் மட்டுமே.

அவர்கள் இருவரின் மனதிலும் வேறு எதுவும் இல்லை. அவளின் முகம் அவனுக்கும், அவனின் எண்ணம் மட்டுமே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது. பதினொன்று வயது சிறுமிக்கும், பன்னிரெண்டு வயது சிறுவனுக்கும் அந்த தொன்னூறுகளில் வேறு என்னதான் எண்ணத் தெரியும். அப்பழுக்கற்ற அவர்கள் இதயத்தில் தூய அன்பொன்று அழகாய் வேறூன்றத் தொடங்கியது.






புதன், 2 ஜனவரி, 2019

தீட்டு!


தீட்டென்று ஏதுமில்லை
தாரகத்தின் எல்லைக்குள்ளே
என்னைப் படைத்தவனே
உன்னையும் படைத்தான்
பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான்!

உதிரம் உதிர்வதனால்
உட்கார வைத்தார்கள்
வயிற்றுவலி வந்ததினால்
வீட்டோடு வைத்தார்கள்!
மூன்றுநாள் மூலையிலே
முடக்கி வைத்ததினால்
மூளையற்ற மூடர்கள்
தீட்டென்றுச்  சொன்னார்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மன்னித்துவிடு மகனே



No automatic alt text available.
தாய்மையற்ற எனக்கு
தலைமகனாய் வந்தவனே
நான்குகால் நாய்மகனே
நல்லுள்ளம் கொண்டவனே...

குட்டியாய் நீ இருந்தாய்
குதூகலம் எனக்களித்தாய்
எத்தனை இன்பம் கண்டோம்
அன்பிலே திளைத்திருந்தோம்

வாழ்க்கையை வாழ நினைத்து
வீட்டை நான் விட்டு வந்தேன்
வருத்தம் கொண்ட போதும்
வந்திடுவாய் என நினைத்தேன்

ஏமாந்துவிட்டேன் மகனே
உன்னை நான் இழந்துவிட்டேன்
பழிவாங்கும் இழிபிறவி
பிரித்துவிட்டான் நம்மையடா

ஏதுமில்லையடா எனக்கு
நீயின்றி உயிரும் போகுதடா மகனே
கோபம் வருகிறது, மனது வலிக்கிறது
கொஞ்சம் குரைத்து உன் வருகையைச் சொல்லிவிடு

என்றாவது நீ வருவாய்
என்று நான் காத்திருந்தேன்
அனைத்தும் கனவாக‌
அலைக்கடலில் கரைகிறதே!

உன் கண்களைக் காணாது
என் கண்கள் கலங்குகிறது
உன் காதுகளைத் தடவ வேண்டும்
உரசி அமர்ந்துவிடு

மடிமீது துயில்வாயே
மழலைப்போல் பார்ப்பாயே
கருவர்ண கண்ணா நீ
கருணைக்கொள் எந்தன் மீது!

செல்லக்குட்டி ரோக்கி
என் அம்முக்குட்டி ரோக்கி
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா உலகமடா

மனிதனின் கொடூர புத்திக்கு
நம் உறவு பலியாகிவிட்டது
நீ எனக்கு வேண்டுமடா
உன்னை நான் பிரியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
கலங்காத இரவில்லை
வந்துவிடு செல்லக்குட்டி
என்னைச் சேர்ந்துவிடு ரோக்கி குட்டி!

அம்மா அழைக்கிறேன்
வந்துவிட்டு ரோக்கி குட்டி
பாய்ந்தோடி வாடா செல்லம்
சென்றிடுவோம் தூரமாக!

உன்னை நான் நீங்கவில்லை
நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாய்
இன்னமும் போராடுகிறேன்
உன்னை மீட்டெடுக்க..

யாருமில்லையடா இங்கெனக்கு
பழிச்சொல் தவிர வேறேதும் இல்லையா
உனக்குத் தெரியாதா என் அன்பு உண்மையென்று
நானின்றி நீ எப்படியடா இருக்கிறாய்?

நான் என்ன செய்ய சொல் மகனே?
குறுக்குப்புத்தி எனக்கு இல்லை
எவரையும் துன்புறுத்தும் எண்ணமில்லை
எட்டிச் செல்வதனால், எட்டி மிதிக்கின்றனரே?

காசு பணம் வேண்டாமடா
நீ மட்டும் போதுமென்றேன்
பலவீனம் தெரிந்ததனால்
பிரித்தனரோ நம்மை இன்று?

ரோக்கி...
கேட்கிறதா ரோக்கி?
அம்மாவின் குரலைத் தேடுகிறாயா?
என்னைக் காணாது ஏமாந்துப் போனாயா?

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்
உன்னை இழந்துவிட்டேனே ரோக்கி
என் முதல் குழந்தையடா நீ
நீயின்றி எப்படி வாழ்வேன்?

உறக்கம் பிடிக்கவில்லை ரோக்கி
உயிர்பிரியும் வலி உணர்கிறேன்
அனைத்தையும் பிரிந்த எனக்கு நீதானே ஆறுதல்?
அம்மா செல்லம் ரோக்கி, ஓடி வா ரோக்கி!

என் செல்லமே  வாடா செல்லம்
அம்மா இங்கு இருக்கிறேன்
அழுதாயா என்னைத் தேடி
அழைத்தாயா நடு இரவில்?

யாருக்கும் புரியவில்லை
நாய்தானே என்கின்றனர்
அவர்களுக்கு என்ன தெரியும்?
இந்த நாய்க்கு நான் தாய் என்று?

கெஞ்சிக் கதறினேன் மகனே
நீ எனக்கு வேண்டுமென்று
வசைச்சொல் பொறுத்தேன்
வலிகளைத் தாங்கினேன்

ஏதும் பலிக்கவில்லையடா
நம் அன்பு ஜெயிக்கவில்லையடா
என்னை மன்னித்துவிடு ரோக்கி
அம்மாவை மன்னித்துவிடு!

நான் உன்னை புரக்கணிக்கவில்லை
ஐயகோ, அப்படி மட்டும் எண்ணிவிடாதே
நீ என்னிடமிருந்துப் பறிக்கப்பட்டாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாய்

என்னை வெறுத்துவிடாதே ரோக்கி
இப்படி ஏதேனும் நிகழும் என்ற அச்சத்தால்
பெக்கியை உனக்குத் துணையாக்கினேன்
உன்னை நான் தனிமையில் விடமாட்டேன்!

என்னை நினைக்கின்றாயா ரோக்கி?
என் நினைவு இருக்கின்றதா?
மறந்துவிடு மகனே
மகிழ்வாய் இருந்துவிடு மகனே

இந்தத் துன்பம் என்னோடு போகட்டும்
என்னை நினையாதே
நினைத்து உருகும் வாழ்க்கை உனக்கு வேண்டா
நீ நன்றாய் வாழ வேண்டும்!

தூக்கி தூக்கி வளர்த்தேனடா
துயில்வதைக் கூட இரசித்தேனடா
வாஞ்சையில்லா உன் அன்பு
வஞ்சனைக்கொண்ட மனிதர்க்குப் புரிவதில்லை

எப்படி புரியவைப்பேன் உனக்கு?
என்னை மன்னித்துவிடு ரோக்கி
பாதியில் விட்டுச்சென்ற என்னை
மன்னித்துவிடு மகனே...


இது வேறு உலகம்!

பிராவுன்ஸ்பீல்ட், டெக்சாஸ்

மகிழுந்து நீண்ட நேரம் மனித நடமாடமற்ற அந்தச் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தது. காட்டு மிருகங்கள், குறிப்பாக மான்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கும் குறைவாகவே மகிழுந்தைச் செலுத்த வேண்டியதாயிற்று.

உங்கள் இடம் வந்தாயிற்று என ஜி.பி.எஸ். அலறவும் நான் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். இந்தக் காட்டுக்குள்ளா வீடு இருக்கிறது?  ஆம், சுற்றும் முற்றும் மனித நடமாடமற்ற காட்டிற்குள்தான் வீடு. அது ஒரு தனி வீடு. பெரிய நிலம், சுற்றிலும் மரம், செடி கொடிகள் தாறுமாறாக வளர்ந்திருந்தது. பிரம்மாண்டமான பலகை வீடு. வீட்டிற்குள் நவீனத்தின் அறிகுறியாக குளிர்ச்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதே சமயம், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டு, வீட்டின் சுவர்களை அலகங்கரித்தன. வீட்டின் வடிவமைப்புத் தவிர, நவீன வீட்டிற்கான அத்தனை வசதிகளும் அந்தப் பலகை வீட்டில் செய்யப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல். ஊஞ்சல், சறுக்கு மரம், கூடைப்பந்து விளையாடும் என அடிப்படை விளையாட்டு வசதிகள் இருந்தன. இன்னொரு பக்கம் சிறு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடம் ஓய்வாக அமர்ந்துப் பேச நாற்காலி, மேசைகள், மின்விசிறி போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி நீச்சல் குளம். சிறுவர்கள் நீந்தி விளையாட, பெரியவர்கள் கூடாரத்தில் அமர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

மாலை மங்கி இரவு வந்தது. அந்த வானத்தில்தான் எத்தனை நட்சத்திரங்கள்? பட்டணத்து வானத்தில் இல்லாத நட்சத்திரங்கள் அனைத்தும் யாருமற்ற இந்தக் காட்டில் வந்து ஒளிந்துக் கொண்டனவையா? சற்று தூரத்தின் சிறு அரவம். மான்கள் இரண்டு தங்கள் இரவு உணவை வேலியின் ஓரமாகக் கொறித்துக்கொண்டிருந்தன. என்ன ஒரு அருமையான காட்சி! எங்களுக்கு இரவு உணவாக கோழி, மான் இறைச்சி, சோளம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் இரவை இரசித்தபடி கூடாரத்திலேயே உணவை ருசித்தோம்.

அவர்களிடமிருந்து விடைபெறும் முன், வீட்டையொட்டிய கொட்டகையைப் பார்வையிட்டோம். சிறியவையிலிருந்து, பெரியவை வரையிலான, பலவகைத் துப்பாக்கிகள் அவ்விடம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகளைக் காட்டுவதற்காக அதன் மீது ஒலி உறிஞ்சியைப் பொருத்தி, வானின் மீது ஒருமுறை சுட்டுக்காட்டினார்கள். சத்தமே வரவில்லை. இதனைக்கொண்டுதான் விலங்குகளை வேட்டையாடுவார்கள், இன்னமும்.

இப்படியானவொரு வாழ்வை சில படங்களில் கண்டுள்ளேன். அதனையே நேரில் பார்க்கும் போது என்னையும் மறந்து வியந்து நின்றேன். இது வேறு உலகம்!

ஞாயிறு, 11 ஜூன், 2017

முதிர்ச்சி (All Grown up) -Jami Attenberg


Image result for all grown up novel

ஆண்ரியா 40 வயதைத் தொடும் திருமணமாகாதப் பெண். அவள் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என தீர்மானிக்கவில்லை. சமூகம் விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டுக்கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவில்லை. அவள் மனம் போன போக்கில் வாழ்கிறாள். தனிமை அவளை வாட்டுகிறது, ஆனால் அவள் தனது வாழ்க்கையை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பவில்லை. தான் விரும்பும் ஆணுடன் உறவுக்கொள்கிறாள். வேண்டிய நேரத்தில் போதையின் உதவியை நாடுகிறாள். தான் வளர்ந்துவிட்டபடியால் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி தனக்கிருப்பதை உணர்கிறாள். இருப்பினும், அவளுக்கு அது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சி அவளை ஏதோ செய்கிறது. மனதளவில் தான் இன்னும் வளரவில்லை என்ற உண்மை அவளுக்குப் புரிகிறது.

தனது அண்ணன் மகள் ஊனமுடன் பிறந்து, வளர்ச்சியின்றி இறப்பதைப் பார்க்கிறாள். தன் தந்தை அளவுக்கதிமான போதையில் இறப்பதைப் பார்க்கிறாள். தான் விரும்பிய ஆண், வாழ்க்கையைப் பற்றி கவலைக்கொள்ளாமல் ஏழ்மையில் தவிப்பதைப் பார்க்கிறாள். தன் தாய் வாழ்க்கையை வாழ பிற ஆண்களின் தயவை வேண்டி நிற்பதைப் பார்க்கிறாள். திருமணமான தனது தோழி, விவாகரத்துக் கேட்டு நிற்பதைப் பார்க்கிறாள். இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஏதோ ஒரு சிரமத்தை, தடையை விதித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்ரியாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சியை அவள் விரும்பவில்லை. இருப்பினும், அவளின் அனுமதியின்றி அவள் வளர்ந்துவிட்டாள். எனவே, இந்த வாழ்க்கையை அவள் வாழ வேண்டும்; அவள் போக்கில்...

பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் சிந்திக்கும் விதமும், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் வழியும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சற்று விரக்தியாகவே நகர்கிறது. வளர்ந்துவிட்டவர்களின் வாழ்க்கையே விரக்தி நிறைந்தது தானே? வளர்ச்சியும், வயதின் முதிர்ச்சியும் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, சிந்திக்க வைக்கிறது என்பதை விளக்க நாவலாசிரியர் ஜாமி அத்தென்பெர்க்ஸ் முயன்றுள்ளார். 

செவ்வாய், 30 மே, 2017

நேசிக்க நேரிடும் (May Cause Love)

Image result for may cause love
பத்தொன்பது வயதில் தான் கர்ப்பமாக இருப்பதை காசி அன்டர்வூட் அறிகிறாள். கையில் பணமில்லை, திருமணமாகவில்லை, மதுவுக்கு அடிமை, வீட்டைலிருந்து வெகு தூரம் வசிக்கும் வேளையில், கருவினைக் கலைக்க முடிவு செய்கிறாள். அவளின் முடிவு சரியா தவறா என்று அவளுக்குத் தெரியவில்லை.

கருக்கலைப்பு அவளிடமிருந்த பெண்ணியச் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமை, எதையோ தொலைத்த உணர்வு, எல்லையில்லா குடிப்பழக்கம் என அவள் தனது மனதினை தேர்த்த முயல்கிறாள். தனது கருக்கலைப்பினைப் பற்றிப் பெற்றோர், நண்பர்கள், அயலார் என எல்லாரிடமும் உரையாடுகிறாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு எவ்வாறோ குடிப்பழக்கத்தை நிறுத்தி, தனது கனவு வேலையில் அமர்கிறாள். அப்போது அவளைக் கருவுறச் செய்த முன்னாள் காதலன் வேறு ஒருத்தியுடன் குழந்தைப் பெற்றுக்கொண்ட செய்தி அவளை என்னவோ செய்கிறது. அவள் உடைந்துப் போகிறாள். ஆழ்ந்த மன அழுத்தம் அவளை உட்கொள்கிறது. கருக்கலைப்புச் செய்த குற்ற உணர்விலிருந்து தான் என்றுமே விடுப்பட போவதில்லை என எண்ணுகிறாள்.

உணர்ச்சிகளை வெல்ல ஆன்மீகத்தைப் பயன்படுத்திய‌ பெண்களின் சரித்திரத்தைத் தேடிப் படித்த காசி, தானும் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கிறாள்.  புத்தம், ரோமன் கத்தோலிக், மனோதத்துவ நிபுணர் என இன்னும் பலரின் உதவியுடன் அவள் தனது தேடலைத் தொடர்கிறாள். கருக்கலைப்புச் செய்த பெண்களுக்கு ஆறுதலாகச் செயல்படவும் ஆரம்பிக்கிறாள்.

காசியின் இந்த வாழ்க்கைச் சரித்திரம் கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற ஒரு பெண் சந்தித்த ஏமாற்றங்களும் சவால்களும், அதனை எதிர்க்கொள்ள அவள் செய்த முயற்சிகளையும் இரசனையுடன் சொல்லும் நாவல். நாவலில் ஆங்காங்கே வெளிப்படும் காசியின் வாழ்க்கைச் சிந்தனைகள் எம்மை வியப்புறச் செய்தன.

காசி...அவளுக்கு என் வயதோ அல்லது என்னைவிட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருக்கலாம். அவள் மேற்கொண்ட பயணங்கள், வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி இவற்றில் நூறில் ஒரு பங்குக் கூட நான் செய்ததில்லை. காசியின் விடிவை நோக்கிய இந்தப் பயணம் என்னுள் ஓர் எழுச்சியை உண்டாக்குகிறது. எனது வட்டத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது. இவ்வுலகை வேறு கண்ணோட்டத்தில் காண வைக்கிறது.






திங்கள், 22 மே, 2017

இதயம் இருக்கும் இடம் (Where The Heart Is)

Image result for where the heart is


நோவலி பதினேழு வயது நிறைமாத கர்ப்பிணி. தனது காதலன் வில்லி ஜாக்குடன் புதிய வாழ்வை ஆரம்பிக்க கனவுகளுடன் கலிபோர்னியா நோக்கி பழைய மகிழுந்தில் பயணம் மேற்கொள்கிறாள். வில்லி ஜாக்கின் கையைப் பிடித்து தனது வயிற்றின் மீது வைத்து, "கேட்கிறதா? இதுதான் இதயம் இருக்கும் இடம்," என்கிறாள். அவனோ எதுவும் கேட்கவில்லை என மிக அலட்சியமாகக் கூறி கையை இழுத்துக்கொள்கிறான். பயணத்தின் போது அவளது காலணி மகிழுந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்துத் தொலைந்துப் போனது. அவளிடம் இருந்த ஒரே காலணி அது மட்டுமே. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணாகிய அவளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு. பயணத்தின் ஊடே 'வால்மாட்' எனும் பேரங்காடியைக் கண்ட நோவலி செருப்பு வாங்கவும், சிறுநீர் கழிக்கவும் அவ்விடம் வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

பேரங்காடியில் செருப்பு வாங்கிக்கொண்டிருந்தவளின் மூளையில் ஏதோ தோன்ற, ஓடி வந்து வெளியே பார்க்கிறாள். அங்கு வில்லி ஜாக் இல்லை. அவளது புகைப்படக் கருவி மட்டுமே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்தது. அவளிடம் எதுவுமே இல்லை, வயிற்றில் சுமக்கும் குழந்தையும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைத் தவிர்த்து. அந்நேரத்தின் சிஸ்டர் ஹஸ்பண்ட் எனும் பெண்மணி, நோவலியை வேறொரு பெண் என நினைத்து உரையாடுகிறார். அந்த சிறு பட்டணத்திற்கு மீண்டும் திரும்பி வந்திருப்பதாக நினைத்து வரவேற்புப் பரிசுக் கூடை ஒன்றையும் நோவலியின் கையில் திணித்துவிட்டு நேரம் இருக்கையில் தன் வீட்டுற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

நோவலி பட்டணத்தைச் சுற்றி வரும் போது, பென்னி குட்லட் எனும் சிறுவன் அவளுக்கு 'பக் அய்' எனும் மரக்கன்றை வழங்கி, அது நல்ல சகுனத்தை வழங்கும் எனக் கூறுகிறான். அடுத்து என்ன செய்வது என்றறியாது தவித்த நோவலி பக் அய் செடியுடன் வால்மாட் பேரங்காடியில் வாழ ஆரம்பிக்கிறாள். ஒரு சமயம் தனது செடி வாடுவதைக் கண்ட அவள் அதனைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள நூலகம் செல்கிறாள். அங்கே போர்னி அவளுக்கு உதவி புரிகிறான். சிஸ்டர் ஹஸ்பண்ட் வீட்டிற்குச் சென்று அந்தச் செடியை நட உரிமைப் பெற்று அங்கேயே செடியை நடுகிறாள்.

ஒருநாள் இரவு அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது. அவள் பேரங்காடியில் தங்கியிருப்பதை ஏற்கனவே போர்னி அறிந்துக்கொண்டான். நோவலி வலியில் துடித்த போது, கண்ணாடி கதவினை உடைத்து போர்னி அவளுக்கு பிரசவம் பார்க்கிறான். வால்மாட்டில் வசித்து, அங்கேயே குழந்தைப் பெற்ற நோவலியைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது. வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ் என அனைத்திலும் அவளைப் பற்றிய செய்திகள் வெளியாயின. அதனைக் கண்ட நோவலியின் தாய், பத்து வருடங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நோவலியைப் பார்க்க வருகிறாள். மகளுக்கு உதவி செய்வதாகக் கூறி அவளிடம் இருந்த அனைத்துப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்று விடுகிறார். சென்றவர் மீண்டும் வரவே இல்லை.

சிஸ்டர் ஹஸ்பண்ட் நடந்ததைக் கேள்வியுற்று, நோவலியையும் அவளது மகள் அமெரிகுஸ் நேசனையும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். நோவலிக்கு வால்மாட் பேரங்காடியில் வேலை தரப்பட்டது. கால ஓட்டத்தின் மோசசின் உதவியுடன் புகைப்படங்கள் எடுக்கக் கற்றுக்கொண்டு சிறந்த புகைப்படக் கலைஞர் விருதையும் பெறுகிறாள். போர்னி அவளுக்கு நிறைய நூலக புத்தகங்களையும் தந்து வாசிக்கிக் கற்றுக்கொடுத்து, அவளைப் புதிய மனிதனாக்குகிறான். அவளை வீதியில் விட்டுச்சென்ற வில்லி ஜாக், சிறைச் சென்று, பலவாறாகத் துன்புற்று, இறுதியில் தண்டவாளத்தில் தனது கால்களை இழக்கிறான்.  போர்னியும, நோவலியும் இறுதியில் ஒன்றாக இணைகின்றனர்.

இந்நாவலில் 'லெக்சி' போன்று இன்னும் சில முக்கியக் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் இருக்கின்றன. பதினேழு வயது பெண்ணின் முட்டாள் தனமும், போராட்டமும், அமெரிக்க வாழ்க்கை முறையும் இந்நாவலில் வெகுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நாவல் இதே தலைப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.