செவ்வாய், 6 ஜனவரி, 2009

எங்கே செல்லும்…? (3)


திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன!

‘ஐயோ, மணி நாலே முக்காலாச்சே! பஸ் இன்னும் வரலையே! வீட்ல கேட்டா என்ன சொல்றது? கிளாஸ் மூனு மணிக்கு முடிஞ்சிரும்’னு சொல்லிட்டேனே. இப்ப எப்படி சமாளிக்கறது?’

‘கிழவிக்கு நல்ல மூட் இருந்தா ஒன்னும் கேட்டுக்காது. நேரம் கெட்ட நேரத்துல அது கண்ணுல மாட்டினோம்’னா கேள்வி கேட்டுக் கொன்னுடுமே? அந்த நேரத்துல கிழவன் வந்தான்’னா அவ்ளோ தான்! செத்தோம்! நல்ல நாளுலேயே வீட்ல எனக்கு ரொம்பெ நல்ல பேரு! இந்த இலட்சணத்துல லேட்டா வேற போனோம்’னா அவ்ளோ தான்!’

கவிதா பலவாறாகக் குழம்பினாள். அவள் கிழவி கிழவன் என்றுச் சொன்னது அவளது பாட்டி தாத்தாவைத்தான். இவ்வாறாக அவள் குழம்பிக்கொண்டிருக்கும் போதே பேருந்து வந்துவிட்டது. ‘அப்பாடா…’ என்று பெருமூச்சுடன் பேருந்தில் ஏறி வீடு நோக்கிப் பயணமானாள் கவிதா.

நல்ல வேளையாக அவள் வீடு வந்த சமயத்தில் பாட்டி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டிற்குக் கதையளக்கப் போயிருப்பார் போல. வீட்டு முன் கட்டிலுள்ள ஒட்டுக்கடையில் இருந்த தாத்தா கவிதா வந்ததை அறவே கவனிக்கவில்லை. நல்ல சமயம் என்றெண்ணிய கவிதா பூனை போல அடி மேல் அடி வைத்து வீட்டுப் பின்கட்டில் உள்ள தனது அறைக்குள் வந்தாள். கதவை ஓசைப்படாமல் தாழிட்டாள். அந்த நேரம் பார்த்து, பின்கட்டு வாசல் வழியாக பாட்டியின் பேச்சுக்குரல் கேட்டது.

‘ஐய்யோ, கிழவி வந்துருச்சா? நல்ல வேளை, ரூம்புக்கு வந்துட்டோம். இதுக்கு மேல பிரச்சனை இல்ல. சமாளிச்சுடலாம்’ என்று எண்ணிக்கொண்டே பள்ளிச்சீருடைகளைக் களைந்து உடைமாற்றிக் கொண்டாள். வெளியிருந்து பேச்சுக்குரல் கேட்டது. உற்றுக் கேட்டாள்.
ஆம்! பாட்டியின் பேச்சுக் குரல் தான் அது. யாருடன் பேசுகிறார்? காதைக் கதவோரமாக வைத்து இன்னும் உன்னிப்பாக என்னதான் பேசுகிறார்கள் எனக் கேட்க ஆரம்பித்தாள்.

“தேவி ஸ்கூலு முடிஞ்சி வந்திருச்சா? கவிதா இன்னும் வரலையே!? மூனு மணிக்குத்தான் கிளாசு முடியும்’னு சொன்னிச்சு. மணி அஞ்சு முப்பதாச்சு. ஆளக் காணோம்,” என்று யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் கவிதாவின் பாட்டி மூக்காயி. கவிதாவின் நெஞ்சம் ‘படக் படக்’ என்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. காதை இன்னும் கூர்மையாகத் தீட்டினாள்.

“ஆமாவா? தேவி ரெண்டரை மணிக்கே வந்திருச்சே? கவிதாவுக்குக் கிளாஸ் இருக்குன்னு சொன்னிச்சு. இன்னும் வீட்டுக்கு வரலையா? எங்கப் போயிருக்கும்?” இம்முறைப் பேசியது கவிதாவின் வீட்டு வரிசையில் இருக்கும் தேவியின் அம்மா கமலம் தான்.

“அதான் தெரியல. இருங்க… அந்தப் பிள்ள வந்திருச்சான்னு பார்த்துட்டு வரேன்,” என்றவாறு கவிதாவின் அறையை நோக்கி நடந்து வந்தார் மூக்காயி. அறைக்கதவை வேகமாகத் திறக்க முற்பட்டார், முடியவில்லை. ‘டொக், டொக்’ என்று இரண்டு முறை வேகமாகத் தட்டி கவிதாவின் பெயரை அழைத்துப் பார்த்தார்.

“ஆ…வரேன்…” என்று பாதித்தூக்கத்தில் இருப்பவள் போல கதவைத் திறந்தாள் கவிதா. படுத்திருந்ததிற்கு அடையாளமாக கட்டிலில் நன்றாக புரண்டு எழுந்தாள். கட்டில் அலங்கோலமானது. கூந்தலையும் கொஞ்சம் கலைத்துவிட்டாள். அரைமயக்கத்தில் இருப்பது போல கண்களையும் முகத்தையும் வைத்துக் கொண்டாள்.

படீரென்று கதவைத் திறந்து பாட்டியை ஒரு பார்வைப் பார்த்தாள். ஒரு வினாடிதான்! ஒரே ஒரு வினாடிதான்! திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்தாள். அவளது தோரணை மிகுந்த களைப்பில் உறங்குவது போல் இருந்தது. பாட்டி இரண்டடி எடுத்து வைத்து அறைக்குள் வந்தார். கவிதாவைப் பார்த்தார்.

“வந்துட்டியா…” என்றவாறு தனக்குள்ளேயே முனகிக்கொண்டு மீண்டும் அறையை விட்டு வெளியேறி கதவைச் சாத்திவிட்டுச் சென்றார். அவருக்குத் தெரியும். தூங்கும் போது எழுப்பினால் கவிதாவிற்குப் பிடிக்காது என்று. கவிதாவிற்குத்தானே தெரியும் தான் தூங்குவது போல் நடித்தால்தான் பாட்டியின் கேள்விக் கணைகளிலிருந்து தப்ப முடியும் என்று!

பாட்டிச் சென்று விட்டார் என்று உறுதிப்படுத்திய பிறகு மீண்டும் அடி மேல் அடி வைத்துக் கதவருகே சென்றாள். காதுகளை கதவருகில் பொருத்திக்கொண்டாள்.

“கவிதா தூங்குது… மொதல்லயே வந்துருச்சுப் போல. நான் கவனிக்கவே இல்ல. பாவம் பிள்ள, அலுப்பு போல. நல்லா தூங்குது!” என்று கமலத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார் மூக்காயி.

“தூங்குதா…அதானே… தேவி கூட வீட்ல தூங்கிக்கிட்டுதான் இருக்கு. பாவம் பிள்ளைங்க. ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து அலுப்புல தூங்குதுங்க. நீங்க என்னான்னா பிள்ள இன்னும் வரலைன்னு காத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க!”

“என்ன செய்யிறது கமலம்… வயசாயிடுச்சில்ல. அதுகளும் ஸ்கூல் முடிஞ்சு வந்திட்டேன்னு வந்து சொல்ல மாட்டுதுங்க. எப்ப வருதுங்க, எப்பப் போவுதுங்கன்னு ஒன்னுமே தெரிய மாட்டுது!” என்று புலம்ப ஆரம்பித்தார் மூக்காயி.

சற்று நேரத்தில் கவிதாவைப் பற்றிய சிந்தனை மறந்து இருவரும் வேறு கதைகள் பேச ஆரம்பித்தனர். கதவருக்கில் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த கவிதாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்ந்தது. நிம்மதியுடன் பஞ்சணையில் சாய்ந்தாள். அப்போது, மூக்காயி, கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…

தொடரும்…

11 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\திடீரென சுயநினைவுப் பெற்றவள் போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் மிரண்டன!\\

நல்ல துவக்கம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…
\\

சரியாக வைக்கிறீர்கள் தொடரும் ...

அப்துல்மாலிக் சொன்னது…

முக்கிய நேரத்தில் மின்சாரம் நின்னது மாதிரி தொடரும் போட்டுடீங்களே... அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அட சஸ்பென்சுக்கு மேல சஸ்பென்சா இருக்கு... ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்...

புதியவன் சொன்னது…

தொடர்கதை இனிமையான ரயில்
பயணம் போல் தொடர்கிறது
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...

பெயரில்லா சொன்னது…

யக்கா...செக் மேல செக் வச்சுட்டீங்க..அடுத்த பகுதி எப்போது?

logu.. சொன்னது…

nallarukkuthunga..


kathaiya seekram mudinga..
thodarumnu potta nallallanga..

தேவன் மாயம் சொன்னது…

நல்ல இருக்கு கதை

தேவா...

A N A N T H E N சொன்னது…

//‘கிழவிக்கு நல்ல மூட் இருந்தா ஒன்னும் கேட்டுக்காது. நேரம் கெட்ட நேரத்துல அது கண்ணுல மாட்டினோம்’னா கேள்வி கேட்டுக் கொன்னுடுமே? அந்த நேரத்துல கிழவன் வந்தான்’னா அவ்ளோ தான்! செத்தோம்! நல்ல நாளுலேயே வீட்ல எனக்கு ரொம்பெ நல்ல பேரு! இந்த இலட்சணத்துல லேட்டா வேற போனோம்’னா அவ்ளோ தான்!’//
பதிவுலகுல இருக்கும் தாத்தா பாட்டிகளே, கவனிங்க… இப்ப உள்ள பொண்ணுங்கல்லாம் இப்படித்தான் பேசி திரியுதுங்க போல… பசங்க நாங்கத்தான் ஒழுக்க திருத்தமா மரியாதையா உங்கள நினக்கிறோம்….

//திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்தாள். அவளது தோரணை மிகுந்த களைப்பில் உறங்குவது போல் இருந்தது.//
தமிழ் சினிமாவுல, ஆம்பிள பெயரைக் கலங்கப்படுத்த சில விலைப்பெண்கள் செய்யுற உத்தி மாதிரில இருக்கு… கவிதா, நல்ல முன்னேற்றம்மா!

//அப்போது, மூக்காயி, கமலத்தின் குரல்களைத் தவிர்த்து வேறொரு குரலும் ஒலித்தது. கவிதா சட்டென எழுத்து கட்டிலில் அமர்ந்தாள்…//
ஐயய்யய்யயே… சஷ்பென்ஸ் வெச்சி மிரட்டுரீங்க…
ஆனா, நல்லாத்தான் சுவாரசியமா போகுது…

Sathis Kumar சொன்னது…

மேலும் படிக்க ஆவலைத் தூண்டும் தொடராக உள்ளது.. வாழ்த்துகள்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
நட்புடன் ஜமால் அவர்களின் கருத்துக்கு நன்றி.

அபுஅஃப்ஸர் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நின்ற மின்சாரம் விரைவில் திரும்ப வரும்...அது போல கதையும் தொடரும். காத்திருந்தமைக்கு நன்றி.

விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி. கவலைப்படாதீங்க அதிகமா சஸ்பன்ஸ் வைக்க மாட்டேன்.

புதியவனின் பயணம் இனியதாய் அமைந்தால் எமக்கும் மகிழ்ச்சிதான்.
கருத்துக்கு நன்றி.

புனிதாவின் கருத்துக்கு நன்றி. செக் வச்சாலும் ஆட்டம் முடியாதம்மா. தொடரும்...

லோகு அவர்களின் கருத்துக்கு நன்றி. என்னங்க, சீக்கிரம் முடிக்கச் சொல்றீங்க? இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன்? இன்னும் சூடு பிடிக்கலையே?

தேவன்மயம் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அனந்தனின் கருத்துக்கு நன்றி. பெண்களை விட பசங்க இன்னும் மோசமா பேசுறானுங்கய்யா. இத நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா? இன்னொரு விசயம், கவிதாவை தமிழ்ச் சினிமாவில் வரும் விலைப்பெண்களுக்கு நிகராச் சொன்னது சரியில்ல. அவ கேரக்டர் என்னான்னு நமக்கு இன்னும் சரியாத் தெரியல இல்லையா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

சதீசு குமார் கருத்துக்கு நன்றி. விரைவில் அடுத்தப் பகுதி இடம்பெறும்.