பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

இது வேறு உலகம்!

பிராவுன்ஸ்பீல்ட், டெக்சாஸ்

மகிழுந்து நீண்ட நேரம் மனித நடமாடமற்ற அந்தச் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தது. காட்டு மிருகங்கள், குறிப்பாக மான்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கும் குறைவாகவே மகிழுந்தைச் செலுத்த வேண்டியதாயிற்று.

உங்கள் இடம் வந்தாயிற்று என ஜி.பி.எஸ். அலறவும் நான் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். இந்தக் காட்டுக்குள்ளா வீடு இருக்கிறது?  ஆம், சுற்றும் முற்றும் மனித நடமாடமற்ற காட்டிற்குள்தான் வீடு. அது ஒரு தனி வீடு. பெரிய நிலம், சுற்றிலும் மரம், செடி கொடிகள் தாறுமாறாக வளர்ந்திருந்தது. பிரம்மாண்டமான பலகை வீடு. வீட்டிற்குள் நவீனத்தின் அறிகுறியாக குளிர்ச்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதே சமயம், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டு, வீட்டின் சுவர்களை அலகங்கரித்தன. வீட்டின் வடிவமைப்புத் தவிர, நவீன வீட்டிற்கான அத்தனை வசதிகளும் அந்தப் பலகை வீட்டில் செய்யப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல். ஊஞ்சல், சறுக்கு மரம், கூடைப்பந்து விளையாடும் என அடிப்படை விளையாட்டு வசதிகள் இருந்தன. இன்னொரு பக்கம் சிறு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடம் ஓய்வாக அமர்ந்துப் பேச நாற்காலி, மேசைகள், மின்விசிறி போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி நீச்சல் குளம். சிறுவர்கள் நீந்தி விளையாட, பெரியவர்கள் கூடாரத்தில் அமர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

மாலை மங்கி இரவு வந்தது. அந்த வானத்தில்தான் எத்தனை நட்சத்திரங்கள்? பட்டணத்து வானத்தில் இல்லாத நட்சத்திரங்கள் அனைத்தும் யாருமற்ற இந்தக் காட்டில் வந்து ஒளிந்துக் கொண்டனவையா? சற்று தூரத்தின் சிறு அரவம். மான்கள் இரண்டு தங்கள் இரவு உணவை வேலியின் ஓரமாகக் கொறித்துக்கொண்டிருந்தன. என்ன ஒரு அருமையான காட்சி! எங்களுக்கு இரவு உணவாக கோழி, மான் இறைச்சி, சோளம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் இரவை இரசித்தபடி கூடாரத்திலேயே உணவை ருசித்தோம்.

அவர்களிடமிருந்து விடைபெறும் முன், வீட்டையொட்டிய கொட்டகையைப் பார்வையிட்டோம். சிறியவையிலிருந்து, பெரியவை வரையிலான, பலவகைத் துப்பாக்கிகள் அவ்விடம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகளைக் காட்டுவதற்காக அதன் மீது ஒலி உறிஞ்சியைப் பொருத்தி, வானின் மீது ஒருமுறை சுட்டுக்காட்டினார்கள். சத்தமே வரவில்லை. இதனைக்கொண்டுதான் விலங்குகளை வேட்டையாடுவார்கள், இன்னமும்.

இப்படியானவொரு வாழ்வை சில படங்களில் கண்டுள்ளேன். அதனையே நேரில் பார்க்கும் போது என்னையும் மறந்து வியந்து நின்றேன். இது வேறு உலகம்!

புதன், 14 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 11)




காலை மணி 10 அளவில் ‘ஏழாம் அறிவு’ படம் பார்க்கச் செல்லலாம் என பாக்கியா அக்கா அழைத்தார். குடும்பம், உனவினர், நண்பர்கள் என சுமார் 30 பேர் படம் பார்க்கக் கும்பலாகப் புறப்பட்டுச் சென்றோம். படம் பார்த்து முடிந்த பிறகு, நான் மட்டும் தனியே ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து அருகே நடக்கும் பட்டினி போராட்டத்திற்குச் செல்வதாகக் கூறினேன். அம்மா என்னை பரிதாபமாகப் பார்த்தார். “இப்படியே போராட்டம் போராட்டம் என்றிருந்தால் உடம்பை எப்படியம்மா கவனிக்கிறது? காலையிலிருந்து இன்னும் சாப்பிடக் கூட இல்லை,” என பெரிய சித்தி பரிவுடன் கூறினார்.

அவர்களுக்குப் பதிலாக சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு ஆட்டோ பிடித்து கோயம்பேட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் பேரறிவாளனின் தாய் பார்வதியம்மாள், பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர் செளர்தர்ராஜன், கீரா அண்ணா ஆகியோர் அவ்விடம் இருந்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பிரமுகர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென அடுத்ததாக உரையாற்ற வருமாறு எம் பெயரை அறிவித்துவிட்டனர். இந்தத் திடீர் அறிவிப்பால் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. “மனசுல பட்டத தைரியமா பேசு,” என கீரா அண்ணா தெம்பூட்டினார்.

நானும் சில நிமிடங்களுக்கு ஏதேதோ பேசினேன். கூட்டம் அமைதியாக என் பேச்சினை செவிமடுத்தது. இருந்த போதிலும், எமது குரலில் இருந்த நடுக்கத்தை என்னாலேயே உணர முடிந்தது. பேசி முடிந்து அமரும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, “இவ்வளவு அருமையாக பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் முன்னதாகவே உங்களைப் பேசச் சொல்லியிருப்போமே,” எனப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தேன். கீரா அண்ணா அப்போதே அண்ணிக்கு அழைத்து, “தங்கச்சி அருமையா பேசினா. நான் கூப்பிடும் போதெல்லாம் நீ நிகழ்ச்சிக்கு வரமாட்ற. நாங்க தான் மனைவி பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கூட்டி வர்றதில்லனு மைக்கிலேயே சொல்லிட்டா,” என்றார். அவர்களின் ஆதரவும் அன்பும் எம்மை நெகிழச் செய்தன.

எனக்கு அடுத்ததாக பேரறிவாளனின் தாயார் உரையாற்றினார். அவரின் பேச்சு வந்திருந்தோரின் நெஞ்சைக் கலங்கச் செய்தது. “நான் செய்த தப்பு ஒரு நல்லவனைப் பெற்றது,” என அவர் கூறிய போது அவரின் கண்கள் குளமாயின. தள்ளாத வயதிலும் நீதி வேண்டி அந்தத் தாய் படும் அலைச்சலும், சிரமும் சொல்லில் அடங்கா. போராட்டம் முடிந்த பிறகு அண்ணா சில தோழர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். போராட்டத்திற்காக அவ்விடத்தினை இலவசமாக வழங்கிய செளந்தர்ராஜன் ஐயா எனது பெயரட்டையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். இலவசமாக எனக்கு இரு புத்தகங்களையும் வழங்கினார். சற்று நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

பின்னர் தலைவர் பிரபாகரன் உருவம் பதித்த சாவி மாட்டல்களையும் (கீ செயின்ஸ்), சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். புத்தகம் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். மாலை 6 மணியளவில் கோடம்பாக்கத்தின் அமைந்திருக்கும் அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். திரைப்படத்துறையைச் சார்ந்த அண்ணாவின் தோழர்கள் சிலர் எங்களுடன் அலுவலகத்திற்கு வந்தனர். நாளை நான் மலேசியா திரும்ப இருப்பதால் இன்று தன் கையால் சமைக்கப்படும் உணவை கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என ஏகலைவன் அண்ணா அன்புக் கட்டளையிட்டார். அவரின் கட்டளையை என்னால் மீற முடியவில்லை.

கடைக்குச் சென்று கோழி இறைச்சி வாங்கி வந்து அவர் சமையலை ஆரம்பித்தார். அவர் சமைக்கட்டும் என நான் காத்திருந்தேன். அண்ணாவும் தோழர்களும் பல விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே மது அருந்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஆடல், பாடல்கள் அவ்விடம் அரங்கேறின. மிகவும் மகிழ்ச்சியான சூழலாக அது விளங்கியது. தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். ஒரு சமயம் கீரா அண்ணா மெய்மறந்து ஆட ஆரம்பித்தார். அவர்களின் சேட்டைகளைப் பார்த்துக்கொண்டே நான் நாற்காலியிலேயே உறங்கிவிட்டேன்.

சமையல் முடிந்த பிறகு அருண்ஷோரி என்னை எழுப்பிவிட்டார். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். ஏகலைவன் அண்ணாவின் சமையல் நன்றாகவே இருந்தது. அவரின் சமையலை விட அவர் எம்மீது காட்டிய அன்பு எமக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என தோன்றியது. மிகவும் களைப்பாக இருந்ததால் உண்டவும் நான் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். இரவு 11 மணியளவில் வீட்டை அடைந்தேன். நேரமாகிவிட்டதால் அப்படியே படுக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தேன்.

காலை 7 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்து, சேலை உடுத்திக் கொண்டேன். தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். அண்ணியுடன் பேசி விடைப்பெற்ற பிறகு, நான், கீரா அண்ணா, அருண்ஷோரி மூவரும் புத்தகம் வாங்க கடைக்குச் சென்றோம். நான் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கீரா அண்ணா பட்டியலிட்டு வைத்திருந்தார். நாங்கள் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே 10 கிலோவைத் தாண்டிவிட்டன. காலையிலேயே மலை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் வாங்கிய பிறகு நானும் அருண்ஷோரியும், ‘கோவை மாநாடு’ தொடர்பான பத்திரிக்கைச் சந்திப்பிற்குச் சென்றோம்.

அவ்விடம் கொளத்தூர் மணி ஐயாவும், பார்வதி அம்மாவும் வந்திருந்தனர். பார்வதி அம்மா எம்மை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினார். அவரின் எளிமை எம்மை வெகுவாகக் கவர்ந்தது. அவர் எனது மலேசியத் தொடர்பு எண்களைக் கேட்ட போது நான் நெகிழ்ந்துப் போனேன். நேரமாகிக் கொண்டிருந்ததால் அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு, மருத்துவமனை அருகே ‘மரணதண்டனைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்’  நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்தோம். தோழர் இரமணி அவ்விடம் இருந்தார். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டேன். பெண்கள் பலரும் அவ்விடம் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்தது பாராட்டக்கூடிய விடயமாக இருந்தது.

ஆடல், பாடல், பறை அடித்தல் போன்ற கூத்துகளும் அவ்விடம் அரங்கேறின. பனகல் மாளிகை அருகே கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் சிலரையும் அவ்விடத்தில் காண நேர்ந்தது. அவர்கள் அனைவரிடமும் பேசி விடைப்பெற்றுக் கொண்டேன். இறுதிவரை போராட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதற்காக உண்மையிலேயே வருந்தினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் கொளத்தூர் மணி ஐயாவும் அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். சென்ற முறை தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொண்ட போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அதனை அவர் இன்னமும் நினைவு வைத்திருந்தார். அவரிடமும் சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.

வீட்டை அடைந்தவுடன் அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தேன். அன்றைய தினம் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் விருந்தினர் வீட்டில்தான் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணா அண்ணா எம்மை அங்கு அழைத்துச் சென்றார். மதிய உணவு உண்டு முடித்து அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டேன். கண்ணா அண்ணாவும் அம்மாவும் எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரை உடன் வந்தனர். நான் அம்மண்ணிலிருந்துக் கிளம்பப் போகிறேன் என்பதாலோ என்னவோ வானம் கதறியழுதுக் கொண்டிருந்தது.

அந்தக் கொட்டும் மழையிலும் தோழர் அருண்ஷோரி எம்மை வழியனுப்ப விமான நிலையம் வரையில் வந்திருந்தது எம்மை நெகிழச் செய்தது. சிறிது நாள் பழகிய போதிலும் இவர்கள் எம்மீது காட்டும் பாசத்திற்கும் அன்பிற்கும் விலையேது? சிறிது நேரம் கதைத்துவிட்டு, இறுதியாகக் கைக்குலுக்கிப் பிரிந்த போது நெஞ்சம் வலிக்கவே செய்தது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து அனைவருக்கும் கைப்பேசியில் அழைத்து நால் செல்வதைத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன். பார்வதியம்மாவுக்கும் மறவாமல் தெரியப்படுத்தினேன்.

பயணத்திற்காகக் காத்திருந்த வேளையில் தூரத்தில் ஏதோ பழக்கப்பட்ட முகம் ஒன்று எம்மை நோக்கி புன்னகைத்தது. அவ்வுருவம் என்னருகே வரவும் யாரென்று கண்டுக்கொண்டேன். மலேசியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் இளந்தமிழ் ஐயா! மலேசியத் தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பிலும் இன்னும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அவரைச் சந்தித்துள்ளேன். அவரைச் சென்னை விமான நிலையத்தில் சந்திப்பேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. எவ்வளவு சிறிய உலகம்! நான் வரும் போது ஒருவர் எம்மை அடையாளம் கண்டுக்கொண்டார், போகும் போது இன்னொருவரைப் பார்க்கிறேன்.

இளந்தமிழ் ஐயாவோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக நடத்தவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் பயணம் செய்ய இருக்கிறோம். சரியாக இந்திய நேரம் மாலை 5.50 மணிக்கு விமானம் சென்னையிலிருந்துப் புறப்பட்டது.  விமானத்தில் ஏறிய சில நொடிகளிலேயே அசதியில் கண்ணயர்ந்தேன். எனது இனிமையான பயண அனுபவங்கள் கனவுகளாக மாறி தமிழ்நாட்டினையே சுற்றிக்கொண்டிருந்தன. அடுத்த முறை மீண்டும் வருவேன்… தமிழ்நாட்டு கிராமங்களைக் காண….

***முற்றும்***

சென்னைப் பயணம் (பாகம் 10)




பாக்கியா அக்காவின் வீட்டிலிருந்து விருந்தினர் வீட்டிற்குச் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களை அழைத்துச் சென்றார். எங்களின் போதாத வேளை சாலை விருந்தினர் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வெள்ளமும் சேறும் நிரம்பி வழிந்தது. மகிழுந்தில் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ளும் என்ற அச்சத்தினால் சின்னவன் அண்ணா அதனை சற்று தொலைவிலேயே நிறுத்தி வைத்துவிட்டார். சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நாங்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த நள்ளிரவில் சேற்றிலும் வெள்ளத்திலும் நடந்துச் செல்வது புதிய அனுபவமாக இருந்தது.

இளைய தம்பி தினேஸ் என்னுடன் மெதுவாக நடந்து அதன் சுகத்தை அனுபவித்தான். சில்லென்ற சேற்றில் கால் புதைவதும் பின்னர் வெள்ள நீரில் கழுவப்படுவதும், பின் மீண்டும் புதைவதும் கழுவப்படுவதுமாக நடைப்பயணம் சுகப்பயணமானது. பாதணி அணியாமல் நடந்துச் சென்ற அவ்வேளையில் சில கற்கள் பாதங்களைப் பதம் பார்க்கவே செய்தன. நள்ளிரவு நேரமாததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. நாங்கள் நால்வர் மட்டுமே அவ்விடம் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தோம். சின்னவன் அண்ணாவும், தேவாவும் முன்னே வேகமாக நடந்துச் செல்ல. நானும் தினேசும் பின்னே மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் வெளிச்சமின்றி இருட்டாக இருக்க, நாய்கள் சில கூட்டாக குரைக்க ஆரம்பித்தன. ஏற்கனவே எனக்கு நாய்களைக் கண்டால் ஆகாது.

கால்கள் ஓட்டமெடுக்க தயாராகின. தம்பியைப் பிடித்திருந்த கை இன்னும் இருகியது. அவன் எனது செயல்பாட்டினை அறிந்திருக்கவோ/ ஊகித்திருக்கவோ வேண்டும். “அக்கா, தயவு செய்து ஓடிடாதீங்க. பிறகு நாய்கள் துரத்தினா அவ்வளவுதான். மெதுவா நடந்தே போவோம். அதுகள் ஒன்னும் செய்யாது,” என தைரியம் கூறினான்.. இருந்த போதும் அவனின் நடையின் வேகம் அதிகரித்தது. நானும் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஒருவாறு வீட்டை அடைந்த பிறகுதான் பயம் அகன்று நிம்மதி பிறந்தது. வீட்டை அடைந்த பிறகு தம்பிகளுடன் அன்றைய அனுபவங்கள் பற்றி சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் அனைவரும் படுக்கைக்குச் சென்றோம்.

மறுநாள் காலையில் கவிதாவின் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். தம்பிகள் இருவரும் எழும்பி தயாராக ஆரம்பித்தனர். காலை 6.00 மணியளவில் தோழர் அருண்ஷோரி கைப்பேசிக்கு அழைத்திருந்தார். அவரிடம் 10 முழம் மல்லிகைச் சரம் வாங்கிவரச் சொன்னோம். வாங்கி வந்த 10 முழத்தில் 5 முழம் சரத்தை மட்டுமே தலையில் சூட முடிந்தது. மலேசியாவில் 10 முழம் வாங்கினால் கூட தலை நிறைய சூட முடியாது. பூக்களின் இடைவெளி அதிகமாக விட்டு சரம் பின்னி வைத்திருப்பர். தமிழ்நாட்டிலோ மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் மல்லிகைச் சரம் பின்னியிருந்தனர். 5 முழமே போதுமானதாக இருந்தது.

நான் சேலை அணிய, தம்பிகள் இருவரும் வேட்டி ஜிப்பா அணிந்திருந்தனர். தெரு முழுக்க வெள்ளமாகவும் சேறாகவும் இருந்ததால் அருண்ஷோரி வீதி வரை தனது வண்டியில் ஏற்றிச் சென்றுவிட்டார். வீதியில் சின்னவன் அண்ணா மகிழுந்தில் எங்களுக்காகக் காத்திருந்தார். பின்னர் அனைவரும் திருமண வீட்டிற்குச் சென்றோம். மணப்பெண்ணின் அலங்காரம் இன்னும் முடியவில்லை. வீட்டுப் பெண்கள் சிலர் இன்னும் சேலை கூட அணியாமல் அவசர அவசரமாகத் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். தாமதமாகிவிட்டதால் நானும் இயன்றவரையில் அவர்களுக்கு அலங்காரம் செய்ய உதவினேன்.

மற்ற யுவதிகளுடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வந்திருந்த அனைவருக்கும் இனிப்பும், சுவைபாணமும் வழங்கினோம். நேரமாகிக்கொண்டே இருந்தது. காலையில் நடக்க வேண்டிய திருமணம். மதியம் 1 மணிக்குத்தான் மணமகளின் கழுத்தில் தாலி ஏறியது. திருமணத்திற்குப் பிறகு கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். மனம் திறந்து சொல்கிறேன், அப்படி ஒரு கச்சேரி இவ்விடம் நடத்தப்பட்டிருக்குமானால், அடித்தே கொன்றிருப்பார்கள். அவ்வளவு கொடுமையாக இருந்தது. திருமணத்தில் எம்மாதிரியான பாடல்களைப் பாட வேண்டும் என்று தெரியாமல் கண்ட குப்பைகளையும் பாடிக்கொண்டிருந்தனர். அதிலும், ஈசன் திரையில் இடம்பெற்ற “வந்தானம்மா வந்தானம்” என்ற பாடல் அச்சூழலுக்குத் தேவையானதாக எமக்குத் தோன்றவில்லை.

இப்படியே கச்சேரி போய்க்கொண்டிருக்க எழுச்சிப்பாடல் ஒன்று வித்தியாசமான குரலில் ஒலிக்கத் திரும்பிப் பார்த்தேன். இயக்கப் பாடல்கள் படிக்கும் சாந்தனின் குரல்தான் அது. அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே வந்திருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தன. அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் கைத்தட்டல்கள் பலமாக ஒலித்தன. கச்சேரிக்குப் பிறகு இராஜேஸ் அண்ணா சாந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடிந்து கை கழுவச் சென்ற போது இரு ஆடவர்கள் நெருங்கி வந்து, “எங்கிருந்து வருகிறீர்கள்,” என கேட்டனர். மலேசியா என்றேன். என் பதிலில் அவர்களுக்குத் திருப்தி இல்லை போலும், “பிறந்து வளர்ந்ததெல்லாம் எவ்விடம்?” என மீண்டும் கேட்டனர். “எல்லாமே மலேசியா தான்,” எனக் கூறிவிட்டு சட்டென அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

வீட்டிற்குச் செல்ல காத்திருக்கும் போது, இன்னும் சிலர் என்னிடம் எனது முதுகில் உள்ள சின்னத்தைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டனர். புன் முறுவலுடன் மறுத்துவிட்டேன். தேவா இன்னும் ஏதேதோ வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்று இரவு தம்பிகள் இருவரும் பெங்களூர் செல்ல வேண்டும். எனவே அவன் அருண்ஷோரியுடன் வெளியில் சென்றுவிட்டான். நானும் தினேசும் வீடு வந்து சேர மாலை மணி 6 ஆகிவிட்டது. மீண்டும் சேலையுடனும் வேட்டியுடனும் வெள்ளத்தையும் சேற்றையும் கடந்துச் செல்ல வேண்டிய நிலை. எங்கள் நிலையைப் பார்க்க எங்களுக்கே சிரிப்பாக இருந்தது. தம்பியின் பயண அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே விருந்தினர் வீட்டை அடைந்தோம்.

தேவாவும் அருண்ஷோரியும் பிரியாணி வாங்கி வந்திருந்தனர். சாப்பிட்டுவிட்டு, பொருட்களை மூட்டைக் கட்ட ஆரம்பித்தோம். வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. கைப்பேசியில் உள்ள விளக்கின் வெளிச்சத்தினைக் கொண்டு ஒருவாறு வீட்டைச் சுத்தம் செய்தோம். மின்விசிறி கூட இல்லாமல் வியர்த்து வழிந்தது. பெட்டிகளைச் சுமந்துக் கொண்டு மீண்டும் சேற்றினையும் வெள்ளத்தினையும் கடக்க வேண்டிய நிலை. சின்னவன் அண்ணாவின் நண்பர் தம்பிகள் இருவரையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இறுதியாக வீட்டினைச் சுத்தப்படுத்தி, கதவுகளை தாழிட்ட பிறகு நானும் தோழர் அருண்ஷோரியும் கோயம்பேடு நோக்கி பயணமானோம்.

பேருந்து நிலையத்தில் தம்பிகளைத் தனியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. அவர்களிடம் கைப்பேசி வேறு இல்லை. பேருந்து ஓட்டுநரின் உதவியாளரிடம் பேசி அவரது கைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்டேன். தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிடுமாறு அவரை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். ஒருவாறு அவர்களை வழியனுப்பிவிட்டு வீடு வந்து சேர இரவு 11.30 மணியாகிவிட்டது. மிகவும் களைப்பாகவும், குளிராகவும் இருந்ததால் குளிக்கவில்லை. முகம் கழுவி, படுக்கைக்குச் சென்றுவிட்டேன். பெங்களூரில் இருக்கும் தோழர் இராஜேஸ் குமாரை அழைத்து தம்பிகள் ஏறிச் சென்ற பேருந்தின் விபரங்களைக் கொடுத்தேன்.

அதிக களைப்பாக இருந்த போதிலும் எம்மால் நிம்மதியாக நித்திரைக்கொள்ள முடியவில்லை. தம்பிகள் இருவரும் பாதுகாப்பாகப் போய் சேர்ந்தார்களோ இல்லையோ என்ற கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுனரின் உதவியாளருக்கு 3 முறை அழைத்துப் பேசிவிட்டேன். தம்பிகள் இருவரும் உறங்குவதாகச் சொன்னார். அவர்களை எழுப்ப வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு, உரிய இடத்தில் அவர்களை இறக்கிவிடுமாறு மீண்டும் ஒருமுறைக் கேட்டுக் கொண்டேன். அதீத அசதியால் அவ்வப்போது கோழித் தூக்கம் போட்டுக் கொண்டேன். அதிகாலை 5 மணியளவில் தம்பிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு விட்டதாக பேருந்து ஓட்டுனரின் உதவியாளர் தெரிவித்தார். தோழர் இராஜேஸ் குமாருக்கு விடயத்தைத் தெரியப்படுத்தினேன். தம்பிகள் அவருடன்தான் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது.

புதன், 7 மார்ச், 2012

சென்னைப் பயணம் (பாகம் 9)





வழக்கமான கேலி கிண்டல்கள் நடந்தேறின. மாப்பிள்ளையைக் கண்டவுடன் மணப்பெண் வெட்கத்தில் நாணினாள். இரவு உணவு பரிமாறப்பட்டது. கரண் அண்ணா சித்தியை எனக்கு ஊட்டிவிடச் சொன்னார். எவ்வளவோ மறுத்தும் என்னை அவர்கள் விடவில்லை. மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சித்தி எனக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். நான் அமதியாக உண்டு முடித்து அவ்விடம் அமர்ந்திருந்தேன். அவர்கள் அன்பு எமது உள்ளத்தை வெகுவாக நெகிழ்த்தியது. மாப்பிள்ளை தனது நண்பர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவர கிளம்பிச் சென்றார். அவரது தாயார் மற்றும் இன்னும் சில உறவினர்கள் மணப்பெண்ணின் வீட்டிலேயே காத்திருந்தனர்.

நேரம் ஆக ஆக, மாப்பிள்ளையின் தாயாருக்குக் கால் வீங்கி வலி எடுத்தது. ஏற்கனவே ஒரு முறை கவிதா அவரது காலுக்குத் தைலம் தேய்த்து உருவி விடுவதைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளது கைகளில் மருதாணி. மாமியார் கால் வலியால் துடிக்க அவள் ஏதும் செய்ய இயலாமல் பரிதாபமாகப் பார்த்தாள். அப்போது கவிதாவின் அம்மா சிறிய புட்டி தைலத்துடன் மாப்பிள்ளையின் அம்மாவின் கால்களை உருவிவிட வந்தார். பெரியர்வர்களுக்கு ஏன் இந்த வேலை என நானே வலியச் சென்று, “நான் போட்டு விடுகிறேன்,” என தைலத்தை வாங்கிக் கொண்டேன்.

முன் பின் தெரியாத பெண் என்பதால் மாப்பிள்ளையின் அம்மா சற்று தயங்கினார். “உனக்கேனம்மா இந்த வீண் வேலை. பரவாயில்லை,” என தடுத்தார். “பரவாயில்லையம்மா… நான் தைலம் தேய்த்து விடுகிறேன். நீங்களும் அம்மா மாதிரி தானே?” என சொன்னவுடன் அவர் வேறு வழியின்றி கால்களை நீட்டினார்.
நானும் தைலம் தேய்த்து அவரது கால்களை உருவ ஆரம்பித்தேன். “உருவுவதற்கு எங்கேயாவது படிச்சியாம்மா?” என நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர் வினவினார். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக்கொண்டே “இல்லையம்மா,” என்றேன்.

“யாரு பெத்த பிள்ளையோ… முன்பின் தெரியாது. என் காலை பிடிச்சு உருவி விடுறே. நீ நல்லா இருப்பேம்மா,” என அந்தத் தாய் ஆசீர்வதித்தது மனதைக் குளிரச் செய்தது. நள்ளிரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு நித்திரை வர ஆரம்பித்தது. உறவினர்களும் மாப்பிள்ள வீட்டாரும் இன்னமும் மணப்பெண் வீட்டில் இருந்ததால் நான் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்த நீண்ட மெத்தை நாற்காலியில் சுருண்டுப் படுத்துக் கொண்டேன். சித்தி, மேனகா, கரண் அண்ணா ஆகியோர் மேலே வந்த பொழுது சில தடவை என்னை எழுப்ப முயற்சி செய்தனர். அசதியில் உறங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தன.

பின்னிரவு மணி 2 அளவில் நானாகவே விழித்துக் கொண்டேன். படுக்கை அறைக்குச் சென்று வசதியாகப் படுத்துக் கொண்டேன். குளிக்காமல் படுத்ததால் அதன் பிறகு நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதிகாலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். குளித்துவிட்டு திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக சிறிய அட்டைப் பெட்டிகளை மடிக்க ஆரம்பித்தேன். இன்று தீபாவளி. ‘கெளரி காப்பு’ கட்டுவாதற்காக வீட்டுப் பெண்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். இவற்றில் எமக்கு நம்பிக்கை குறைவு என்பதனால் நான் வீட்டிலேயே இருந்து பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தம்பிகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் வாடகைக் காருக்கு அழைத்தேன். வேலையாக இருப்பதால் மதியம் 12 மணிக்கே வர முடியும் என்றார். தோழர் அருண்ஷோரியை அழைத்து தம்பிகள் இருவரையும் பாரிசுக்குப் பேருந்தில் அல்லது ஆட்டோவில் அழைத்துச் செல்லுமாறு வேண்டினேன். அவர்களும் பாரிசுக்குச் சென்று மதியம் 12 மணிக்குள் தங்கும் விடுதிக்குத் திரும்பி விட்டனர். வாடகைக் கார் வந்தப் பிறகு நானும் அவ்விடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தோம். அவ்விடத்தில் இறுதியாக வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தேடித்தேடி வாங்கிக் கொண்டோம்.

தேவாவின் வெள்ளைக் காலணியில் யாரோ வெத்தலைப் போட்டு சிவப்பு நிறத்தில் துப்பி வைத்திருந்தனர். அதனை அவனிடம் காட்டி கேட்ட போதுதான் அவன் அதனை கவனித்திருந்தான். “யார் செஞ்சா’னே தெரியல,” என புலம்ப ஆரம்பித்துவிட்டான். அதற்குப் பிறகு அவன் புலம்பிக் கொண்டே தான் வந்துக்கொண்டிருந்தான். எனக்கும் தினேசுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேவா புலம்பிக்கொண்டிருக்க நாங்கள் அவனது சேட்டைகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் இங்கே சுற்றிக்கொண்டிருக்க அதற்குள் செழியன் அண்ணா நான்கைந்து முறை எனது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். தீபாவளியன்று அவரது வீட்டிற்கு வருவதாக உறுதியளித்திருந்தேன். மதியம் 3 மணியளவில் செழியன் அண்ணாவின் வீட்டை அடைந்தோம். அங்கே அண்ணாவின் நண்பர் நிருவும் இருந்தார். நிரு காலையிலேயே வந்துவிட்டதாக அண்ணா தெரியப்படுத்தினார். அண்ணி எங்களுக்காக வகை வகையாகச் சமைத்து வைத்திருந்தார். சமையல் உண்மையிலேயே பிரமாதமாக இருந்தது. நான் மட்டுமின்றி எனது தம்பிகளும் அதனை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டனர். 

சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அவ்விடம் அண்ணாவின் தோழி ஒருத்தியும் அமர்ந்திருந்தாள். அவள் மலேசியத் தமிழ்ப்பெண். சென்னையில் பல் மருத்துவம் படித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். ஏனோ அவள் என்னிடம் தமிழில் பேசவில்லை. அவளுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்து நானும் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தேன். போகும் வழியில் அவளது கல்லூரியில் இறக்கிவிடுமாறு செழியன் அண்ணா கேட்டுக்கொண்டார். அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு வளசரவாக்கம் சென்றோம். ஏனெனில், நாளை கவிதாவின் திருமணம் என்பதால் இன்று விருந்தினர் வீட்டில் தங்குமாறு பாக்கியா அக்காவும் கவிதாவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டனர்.

வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீட்டில் இறக்கி வைத்த பிறகு கோடம்பாக்கத்திற்குச் சென்றோம். கீரா அண்ணாவிற்கு உடல் நலமில்லை என்பதாலும், தம்பிகளை அவர் இன்னும் பார்க்கவில்லை என்பதாலும் அவர்களையும் அழைத்துக்கொண்டு அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். தம்பி விமான நிலையத்திலிருந்து வாங்கி வந்திருந்த ‘சிவாஸ்’ மதுபானத்தையும் மறவாமல் உடன் கொண்டுச் சென்றோம். அண்ணாவும் அவரது திரைப்படக் குழுவினர் சிலரும் அலுவலகத்தில்தான் இருந்தனர். வாடகைக் காருக்கான பணத்தை செலுத்தி அனுப்பி வைத்த பிறகு அலுவலகத்தில் அனைவரும் குழுமி உரையாடினோம்.

“அண்ணனுக்கு மருந்துக் கொண்டாந்திருக்கியா கண்ணு?” என அண்ணா சிரித்துக்கொண்டே மது பாட்டிலை வாங்கிக்கொண்டார். பின்னர் அனைவரும் மது அருந்தத் தொடங்கினர். பாடல் கச்சேரியும் அங்கே அரங்கேறியது. நான், அருண்ஷோரி மற்றும் தம்பிகள் இருவர் மட்டும் அவர்கள் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர் சில சூடான விவாதங்களும் நடந்தேறின. கீரா அண்ணா அரசியல், சாதியம் பற்றிப் பேசத் தொடங்கினார். எனது தம்பிகள் இருவரும் திருதிருவென முழித்தனர். போதையில் அவரது பேச்சு சமுதாய, போராட்ட விடயங்களைப் பற்றி ஆழமாகப் போக நான் குறுக்கிட்டு, “அண்ணா, தம்பிகளுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது. வேறு ஏதாவது பேசுங்கள்,” என அவர் காதருகில் கிசுகிசுத்தேன்.

“சொல்லிக்கொடும்மா! தெரியாதுன்னு விடக்கூடாது. எல்லாரும் போராடனும். உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? அவனுங்களுக்கும் சொல்லிக்கொடு,” என அவர் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சொன்னது எனக்குப் புரிந்தது. “அண்ணா, தயவுசெய்து வேண்டாம்,” என மீண்டும் வலியுறுத்தினேன். அவர் என் முகத்தைப் பார்த்தார். “சரிம்மா” என ஏமாற்றத்தோடு கூறினார். நாங்கள் இன்னும் இரவு உணவு சாப்பிடவில்லை.

சரி அனைவரும் சாப்பிட போகலாம் என கிளப்பினோம். உணவகத்திற்குச் சென்ற பிறகு கீரா அண்ணா வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார். வாசனும் செல்ல வேண்டும் என்றார். சரியென்று பொழிலன், அருண்ஷோரி, நான் மற்றும் தம்பிகள் மட்டும் இரவு உணவு உட்கொண்டோம். வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வேளையில் எங்களிடம் இரு மோட்டார் வண்டிகள் மட்டுமே இருந்தன. நாங்களோ 5 பேர். நான் அருண்ஷோரியின் மோட்டாரில் ஏறிக்கொள்ள, இரு தம்பிகளும் பொழிலன் வண்டியில் ஏறிக்கொண்டனர். என் தம்பிகளுக்கு இது புது அனுபவமாக இருந்தது. இடம் போதாமையாலும், சீரற்ற பாதைகளாலும், அந்தப் பயணம் அனுபவ பயணமாக அமைந்தது. அவர்களைப் பார்க்க எனக்குச் சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஒருவழியாக அனைவரும் வளசரவாக்கம் வந்துச் சேர்ந்தோம்.


செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 8)





கீரா அண்ணாவின் அலுவலகத்தில் இணைய இணைப்பு இருந்தது. எனவே, எனது மின்னஞ்சல் மற்றும் முகநூல் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டேன். அருண்ஷோரியுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

கவிதாவின் வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர். திருமண முன்னேற்பாடுகள் வெகுவாக நடந்துக்கொண்டிருந்தன. மிகவும் சோர்வாக இருந்ததால் குளித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். பெரிய சித்தி (கவிதாவின் சித்தி) தட்டு நிறைய புட்டும் குழம்பும் ஊற்றி எடுத்து வந்து கைகளில் திணித்தார். “வேண்டாம் சித்தி, பசியில்லை,” என்றேன். “நாள் முழுக்கச் சாப்பிடாமல் பட்டினி கிடந்துட்டு வெறும் வயித்தோட நித்திரைக்கொள்ள கூடாது. என்ன பழக்கமிது? கொஞ்சம் சாப்பிட்டு படும்மா,” என செல்லமாய் கடிந்துக் கொண்டார்.

அவரின் அன்புக் கட்டளையை எம்மால் மீற முடியவில்லை. இருந்த போதிலும் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் வயிறு முழுவதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. “முடியலைனா வச்சுடம்மா,” என பெரிய சித்தி எமது சங்கடத்தைப் புரிந்துக்கொண்டார். உணவை முடிக்காமல் பாதியிலேயே கொட்டுவது எமக்கு வருத்தத்தை அளித்தது. இருந்த போதிலும் எம்மால் அதனை உண்ணவும் முடியவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மீதமிருந்த உணவைக் குப்பையில் எறிந்துவிட்டு தட்டினைக் கழுவி வைத்தேன்.

கவிதா, பாக்கியா, மேனகா மற்றும் கவிதாவின் உறவுக்காரப் பெண்கள் இருவர் அறையில் பேசிக்கொண்டே திருமண வேலைகளில் இலயித்திருந்தனர். நானும் திருமண விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த அணிச்சல்களை (கேக்) அட்டைப் பெட்டிக்குள் போடத் தொடங்கினேன். “பிள்ளை ரொம்பெ களைச்சி போயிருக்கா… போயி நித்திரைக் கொள்ளம்மா,” என பாக்கியா அக்கா பரிவோடு கூறினார். 

அப்போதுதான் நாளை எனது தம்பிகள் சென்னை வரப்போவது எனக்கு நினைவு வந்தது. நாளை காலை 7.30-க்கு விமான நிலையம் சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என அக்காவிற்கு நினைவுப்படுத்திவிட்டு அப்படியே படுத்துறங்கிவிட்டேன். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் இந்தோனேசியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்த அத்தை கைப்பேசியின் மூலம் அழைத்துவிட்டார். தம்பிகள் வந்து சேர்ந்தவுடன் தமக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு நினைவுறுத்தினார்.

அதிக களைப்பாக இருந்ததால் எம்மால் சீக்கிரம் எழ முடியவில்லை. எமது மெத்தையும் தலையணையும் ‘என்னை விட்டு விலகாதே,’ என கதறியழுவது போல் இருந்ததால் பிரிய மனமில்லாமல் சற்று நேரம் கழித்துதான் எழும்பினேன். நான் எழும்பும் போது சின்னவன் அண்ணா வரவேற்பரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். “நேரமாகிடிச்சு…இப்ப வெளிக்கிட்டுப் போனாதான் நேரத்துல போய் சேர முடியும்,” என அவசரப்படுத்தினார்.

பாவம் தம்பி. இதற்கு முன்பு அவன் சென்னைக்கு வந்ததில்லையே. நேரத்திற்கு சென்று அவனை அழைத்து வர வேண்டும். தனியாக விடக் கூடாது என குளிக்காமலேயே, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வண்டியில் ஏறினேன். 7.30 மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தாயிற்று. விமானம் சற்று தாமதமாகத்தான் வந்திறங்கியது. விமான நிலையச் சடங்குகளை முடித்துக் கொண்டு தம்பிகள் தேவா மற்றும் தினேஷ் இருவரும் வெளியே வரும் போது காலை மணி 8.45 ஆகிவிட்டது.

தம்பிகளை அழைத்துக்கொண்டு நேரே தங்கும் விடுதிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கவிதா அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லியிருந்ததால் நேரே வீட்டிற்குச் சென்றோம். திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் கூட அவர்கள் விருந்தினர்களைக் கவனிக்கத் தவறவில்லை. தம்பிகள் இன்று சென்னையில் இருந்துவிட்டு நாளை பெங்களூர் புறப்படுவதாகத்தான் எண்ணியிருந்தார்கள். கவிதா தனது திருமணம் முடியும் வரையில் சென்னையில் இருக்குமாறு அவர்களை வற்புறுத்தியதால் அவர்களாலும் அவளது அன்பு வேண்டுதலை மீற முடியவில்லை.

சித்தி இடியாப்பம் பறிமாற தம்பிகள் இருவரும் உண்டு முடித்தனர். அதற்குள் நான் குளித்து ஆயத்தமானேன். “அக்கா பீஹூன் (நூடுல்ஸ் வகையைச் சார்ந்தது உணவு) நன்றாக இருந்தது. ஆனால் ஏன் அதில் குழம்பு ஊற்றிச் சாப்பிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை,” என தேவா சொன்னவுடன் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “டேய், அது பீஹூன் இல்லை. இடியாப்பம்!” என்றேன். “இடியாப்பம் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். இங்கு சாக்லெட் நிறத்தில் இருக்கிறதே,?” என அசடு வழியக் கேட்டான்.

அன்று தி-நகரில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. தம்பிகள் இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். மழை காலமாக வேறு இருந்தது. திருமண வீட்டில் அனைவரும் வேலையாக இருந்ததால் அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லை. பாக்கியா அக்காவிடம் சொல்லி வாடகை வண்டி ஒன்று பேசச் சொன்னேன். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே வண்டி வந்துச் சேர்ந்தது. வாடகை வண்டி ஓட்டுனரும் ஈழத்தமிழர்தான்.
காலை 11.30 அளவில் தி-நகருக்குச் சென்றோம். சின்னவன் அண்ணா சொன்ன தங்கும் விடுதியில் சென்று பைகளை வைத்து விட்டு சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்கத் தொடங்கினோம். 7 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான பேரங்காடி! அதனை முழுதாக சுற்றிப் பார்க்கவே ஒருநாள் போதாது போலும். சுற்றி சுற்று வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது. பேரங்காடிக்கு புன்புறம் இருந்த ‘தலப்பாக்கட்டு பிரியாணி’ கடைக்குள் நுழைந்தோம்.

அப்போதுதான் வண்டி ஓட்டுநர் இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது. அவரது கைப்பேசி எண்கள் இருந்ததால் அவரைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இருக்கும் உணவகத்திற்கு வரச் சொன்னோம். முதலில் மறுத்த அவர் எங்களின் வற்புறுத்தலின் பேரில் வந்துச் சேர்ந்தார். உண்டு முடித்த பின்னர், தம்பிகளை அங்கேயே விட்டுவிட்டு நான் கோயம்பேடு சென்றேன். கீரா அண்ணா இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபடுகிறார். அவரைச் சென்று காண வேண்டும். அண்ணாவின் முகம் வாடியிருந்தது. சிறிது நேரம் அவருடன் கதைத்துக் கொண்டிருக்கையில் தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார்.

அருண்ஷோரியிடம் தம்பிகள் தங்கியிருக்கும் இடத்தையும் அவர்களையும் பற்றிச் சொல்லிவிட்டு, நேரம் இருப்பின் அவர்களைச் சென்று காணுமாறு வேண்டிக்கொண்டேன். அவரும் செல்வதாக உறுதியளித்தார். அன்றைய தின போராட்டம் நிறைவுற்ற வேளையில் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்களையும் குறுந்தட்டுகளையும் வாங்கிக் கொண்டேன். தலைவர் பிரபாகரன் படம் போட்ட சாவி சங்கிலிகள் (கீ செயின்) சிலவற்றையும் மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக வாங்கிக் கொண்டேன்.

கனத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது. வாடகை வண்டி ஓட்டுநர் எமக்காகக் காத்திருந்ததால் அதிக நேரம் அங்கிருந்தவர்களுடன் எம்மால் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. கவிதாவிடம் இன்று சீக்கிரமே வந்து விடுவதாக உறுதியளித்திருந்தேன். இன்று மாலை பெண்ணுக்கு மருதாணியிடும் நிகழ்வு இருக்கிறது. நேரத்தில் சென்றாக வேண்டும். அடை மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வண்டிகள் எல்லாம் படகுகள் போல் நீரில் செல்ல வேண்டிய நிலையாயிற்று.

மாலை 6 மணிக்கெல்லாம் வீடு வந்துச் சேர்ந்துவிட்டேன். மணப்பெண் இன்னும் தயாராகவில்லை. அவளை அலங்கரிக்கும் பொறுப்பு எம்மிடம் வந்தது. இன்று நமது கைவண்ணத்தைக் காட்டிவிடலாம் என அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினேன். என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை. அலங்காரம் செய்து அவள் ஒரு தேவதை போல் காட்சியளித்தாள். திருமண கலை அவள் முகத்தில் பிரகாசித்தது.

நேரம் குறைவாக இருந்ததால் எம்மால் குளித்து அலங்காரம் செய்ய முடியவில்லை. பரவாயில்லை, இன்று மணப்பெண் நானில்லையே என அதனை நான் பொருட்படுத்தவும் இல்லை. மணப்பெண்ணின் வேண்டுதலுக்கு ஏற்ப பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்துக் கொண்டேன். மருதாணியிடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறு குழந்தைகளும், வயதுப் பெண்களும், திருமணமான மாதுகளும் தங்கள் கைகளில் மருதாணியிட்டு அழகு பார்த்தனர். பச்சை மருதாணியின் மணம் வீடெங்கிலும் பரவிக் கிடந்தது. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துச் சேர்ந்தனர்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 7)




அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். இன்று மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) மரணதண்டனையை எதிர்த்து நடந்துக்கொண்டிருக்கும் பட்டினி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஏற்கனவே இராஜ்குமார் அண்ணாவிடம் உறுதியளித்திருந்தேன். பட்டினி போராட்டம் என்பதை நினைவில் வைத்திருந்ததால் தானோ என்னவோ காலையிலேயே எனக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது.

நான் பசி தாங்க மாட்டேன் என்பதை தோழர் அருண்ஷோரி முன்னதாகவே அறிவார். “உண்மையிலேயே கலந்துக்கொள்ளப் போகிறீர்களா?” என இரண்டு மூன்று தடவை நேற்று இரவே கேட்டுவிட்டார். கொடுத்த வாக்கிலும், கொண்ட இலட்சியத்திலிருந்தும் பின் வாங்குவது கோழைத்தனமானது. பசி தானே? அடக்கிக்கொள்ளலாம் என உறுதியாக இருந்தேன். கவிதாவின் சித்தி, “கொஞ்சம் சாப்பிட்டு போகலாமே?” எனக் கெஞ்சலாகக் கேட்டார். “வேண்டாம் சித்தி. சாப்பிட்டால் அதற்குப் பெயர் பட்டிப்போராட்டம் அல்ல,” என தெளிவுப்படுத்திவிட்டு, பசியை அடக்கிக்கொண்டு இருந்தேன்.

அருண்ஷோரி இரு சக்கர வண்டியில் எம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். நேற்றிரவு பெய்திருந்த மழையால் சாலையெல்லாம் சேராக இருந்தது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காலையிலேயே சென்னையின் அவசர வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. காலை மணி 9.30 போல் பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். 80% பேர் கறுப்பு ஆடைகளையே அணிந்திருந்தனர்.

போராட்டம் நடக்கும் இடத்தின் வாசலில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் மரணதண்டனைக்கு எதிரான கண்காட்சி கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நான் வாசலில் நுழையும் போதே சிலர் வித்தியாசமாகப் பார்ப்பதாய் பட்டது. எல்லாம் மனப்பிராந்தி என அந்த நினைப்பை உதறித் தள்ளிவிட்டு அருண்ஷோரியுடன் கதைக்க முற்பட்டேன். கண்காட்சி கூடாரத்தைப் பார்வையிட்ட பிறகு நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். ஈழத்துப் பாடல்கள் சில அவ்விடம் ஒலிப்பரப்பப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு பட்டினிப் போராட்டம் தொடங்கியது. சில பாடல்கள், மேடைப் பேச்சுகள் என நேரம் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது. “என்னையும் பிடிச்சிட்டு வந்து பட்டினி கிடக்க வச்சுட்டீங்களே,” என அருண்ஷோரி பாவமாகக் கேட்டார். “பின்னால் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுத்தால் எங்கே சென்று குடித்துக்கொள்ளுங்கள்,” என பரிவுடன் கூறினார். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,” என அதனையும் தவிர்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். சுற்றிலும் ஆண்கள்... என்னைத் தவிர வேறு ஒரு பெண் கூட அவ்விடம் இல்லை. இம்மாதிரியான போராட்டங்களில் பெண்கள் ஏன் முன்வருவதில்லை என வருத்தமாக இருந்தது. எனது மன வருத்தத்தை அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தினேன்.

“பெண்கள் யாரும் வருவதில்லையா?” என அவர் நிகழ்வு ஏற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டார். “நேற்றைய முன்தினம்தான் பெண்கள் இயக்கம் ஒன்று பட்டினி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். நிறையப் பெண்கள் வந்திருந்தனர்,” என அவர் கூறியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என சிலர் என்னை விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருசிலரிடம் மட்டும் உண்மையை கூறி பலரிடம் மேலோட்டமாக அருண்ஷோரியே எம்மை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் வந்து அருண்ஷோரிடம், “இவரை செங்கொடி பாசறையைப் பிரதிநிதித்துப் பட்டினி போராட்டத்தில் கலந்துக் கொண்டவர் என அறிவிக்கலாமா?” என கேட்டார். அருண்ஷோரி எம்மிடம் அனுமதி கேட்டார். கூடவே அதற்கான விளக்கமும் அளித்தார். சரியென்று தலையாட்டினேன். அட, நாமும் ஒரு கட்சிக்குத் தலைவியாகிவிட்டோமே என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் மற்றொருவர் வந்து அருண்ஷோரியுடன் என்னவோ கதைத்துவிட்டுச் சென்றார். அருண் மெல்ல என் காதருகில், “உங்களிடம் நிதி கேட்கலாமா எனக் கேட்டார்கள்,” என்றார். நான் சிரித்துக்கொண்டே, “என்னால் அதிகமாக ஒன்றும் கொடுக்க முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்,” என்றேன். அவ்விடம் வைக்கப்பட்டிருந்த நிதி உண்டியலில் எம்மால் இயன்றதைப் போடுகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்த்துவிட்டார். “தெரிந்திருந்தால் பெரிய உண்டியலாக வைத்திருப்போமே?” என கிண்டலடித்துவிட்டுச் சென்றார்.

தோழர் ஒருவர் அருகில் வந்து, “நீங்கள் பவனேஸ்வரி துரைசிங்கள் தானே?” என எம் முழுப்பெயரை உச்சரித்ததும் நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். சென்னையில் யாருக்கு நம்மைத் தெரியும்? “ஓம், நீங்கள்?” என திரும்பக் கேட்டேன். “நான் தயாளன். உங்கள் முகநூல் நண்பர். பரணி ஜெ.சி எனது மாமா. அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே?” என விளக்கினார்.
“ஓம். அவரை நன்றாகத் தெரியும். உங்களைத்தான் தெரியவில்லை,” என தயக்கத்துடன் கூறினேன். “உண்மைதான். எல்லாருக்கும் உங்களைத் தெரியும். உங்களுக்கு எங்கள் அனைவரையும் தெரிய வேண்டும் என்பதில்லையே. உங்களை இங்குச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் முகநூலில் எழுதும் அனைத்தையும் நான் மறவாது படிப்பேன். தொடர்ந்து எழுதுங்கள்,” என அவர் உற்சாகமாக பேசினார்.

சிறிது நேரம் அவரிடம் கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது கீரா அண்ணா எம்மை பார்க்க அவ்விடம் வந்திருந்தார். அவரும் அவரது தோழர்கள் சிலருக்கு எம்மை அறிமுகம் செய்து வைத்தார். “தங்கை சாப்பிடாமல் களைத்துவிட்டாள்,” என பரிவுடன் கூறினார். பட்டினிப் போராட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டது. சிறிது நேரம் அங்கிருந்த சிலருடன் கதைத்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம். அவ்விடம் இருந்த தள்ளுவண்டி கடையில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. பொரித்த காளான்கள் தட்டொன்றை வாங்கி எம்மிடம் கொடுத்தார். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் அப்பொழுதும் எம்மால் சாப்பிட முடியவில்லை.

அதனை அருண்ஷோரியிடம் கொடுத்துவிட்டு எமது கைத்தொலைப்பேசிக்குப் பணம் போட அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றேன். 200 ரூபாய்க்குப் பணம் போடச் சொன்னேன். அதனைவிட குறைவான பணமே கைப்பேசியில் வந்து சேர்ந்தது. பணம் குறைகிறது என கடைக்காரரிடம் கூறினேன். “வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் குறைவாகத்தான் வரும்,” என்ற பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது. “இதையும் விட்டு வைக்கலையா? நல்ல நாடு!” என உரக்கக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். கடையிலிருந்தவர்கள் திரும்பி என்னைப் பார்த்தனர். நான் அதனை பொருட்படுத்தவில்லை. கீரா அண்ணாவிடமும் அருண்ஷோரியிடமும் நடந்ததைக் கூறினேன். “இங்கு இப்படித்தான்,” என்று சமாதானப்படுத்தினர்.

இரு சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். அருண்ஷோரியின் வண்டி மோசமாக தூசு படிந்துக் கிடந்தது. மலேசியாவில் ஒரு மாதம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் கூட இவ்வளவு தூசு படிந்திருக்காது. அவர் அதனைத் தட்டிச் சுத்தம் செய்யவும் நான் கீரா அண்ணாவின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அந்த மாலை வேளையில் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. ஆட்டோ, மிதிவண்டி, இரு சக்கர வண்டி என அனைத்தும் குறுக்கும் நெருக்குமாக ஓடிக் கொண்டிருந்தன. அவ்வேளையில் அந்தச் சாலையில் பயணிப்பதே ஆபத்தானதாகத் தோன்றியது.

மிகவும் நெருங்கியும் ஒழுங்கில்லாமலும் வந்த வாகனங்கள் மோதி விடுவது போல் பாவனைக் காட்டின. சேலை கட்டியிருந்ததால் இந்தியப் பெண்கள் போல் வண்டியில் ஒரு பக்கமாகவே நான் அமர்ந்திருந்தேன். அந்த வேளையில் ஆட்டோக்கள் இரண்டு எமது முட்டியை லேசாக உரசிச் சென்றன. இன்னும் வேகமாக வந்திருந்தால் என்னை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். எப்போது அலுவலகம் சென்று சேர்வோம் என்ற நிலைமையானது. மழை வேறு லேசாகத் தூற ஆரம்பித்தது.

ஒரு குறுக்குச் சந்தொன்றில் நுழைந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் கீரா அண்ணா என்னை இறங்கி சற்றுத் தூரம் தள்ளி நிற்கச் சென்றார். நான் அவருக்குக் காத்திருக்கும் வேளையில் அருண்ஷோரி வந்துவிட்டார். நான் உடனே அவரது வண்டியில் ஏறிக்கொண்டேன். “கீரா அண்ணாவுடன் வரும் போது இரண்டு ஆட்டோ எனது கால் முட்டியை உரசிச் சென்றுவிட்டன. நான் உங்களுடனேயே வருகிறேன்,” என்றவுடன் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “உரசிவிட்டுத் தானே சென்றார்கள்? இங்கு இது சகஜம்,” என்றார்.

சென்னைப் பயணம் (பாகம் 6)




அருண்ஷோரியும் கீரா அண்ணாவில் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டார். சிறு உரையாடலுக்குப் பிறகு அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். நான் வேண்டுமென்றே வாசனின் இரு சக்கர வண்டியில் ஏறிக்கொண்டேன். அலுவகத்தில் சிகா மற்றும் ஏகலைவன் ஆகிய இருவரையும் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார். சிறிது நேரம் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். இன்று சைதாப்பேட்டைச் செல்ல வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான சாலை ஆர்ப்பாட்டம் அங்குதான் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அருண்ஷோரி முன்னதாகவே அங்குச் சென்றுவிட்டார். வாசனும் கீரா அண்ணாவும் அலுவல் இருப்பதால் பின்னர் வந்துக் கலந்துக் கொள்வதாக வெளியே சென்று விட்டனர். எனவே சிகா அண்ணா எம்மை சைதாப்பேட்டை , பனகல் மாளிகை அருகே கொண்டு விட்டார். வண்டியில் போகும் போது பல விடயங்களைப் பற்றி இருவரும் கதைத்துக் கொண்டே சென்றோம். அவருக்கு இம்மாதிரியான போராட்டங்களின் ஆர்வம் குறைவு என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்துக் கொண்டேன். இருந்த போதிலும் அவர் எம்மைத் தடுக்கவில்லை.

பனகல் மாளிகை அருகில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. பெரும்பாலானவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் மிகச் சிலரே அவ்விடம் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியில் தோழர் ஒருவர் கூடங்குளம் அணு உலையை எதிர்து மிக ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் பாதுகாப்பிற்காக காவல் துறை வண்டி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. சில காவல் துறையினர் அவ்விடம் வருவோர் போவோர் மீது ஒரு கண் வைத்த வண்ணம் இருந்தனர். வழிப்போக்கர்கள் சிலர் நின்று பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பலர் கேட்டும் கேளாமல் எதையோ அவசரமாகத் தேடிச் செல்வது போல் சென்றுக் கொண்டிருந்தனர்.

நானும் கூட்டத்தோடு கூட்டமாக போராட்டத்தில் கலந்துக் கொண்டு எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினேன். தோழர் அருண்ஷோரி சிறிது நேரம் வந்து கதைத்துவிட்டுச் சென்றார். அவர்தான் அந்த கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் மிகவும் வேலையாக இருந்தார். வானம் கறுக்கத் தொடங்கியது. எம்மை அழைத்து வந்த சிகா அண்ணா, “எல்லாம் பார்த்தாகிவிட்டது. செல்லலாமா?” என்றார். அந்தக் கேள்வி எமக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

நாங்கள் அவ்விடம் வந்து 30 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் புறப்படுவதா? எவ்வளவு கடினப்பட்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருப்பார்கள்? இதில் இறுதி வரை கலந்துக் கொண்டு நமது பங்களிப்பையும் வழங்க வேண்டாமா? “உங்களுக்கு வேலை இருந்தால் நீங்கள் புறப்படுங்கள். நான் பிறகு ஆட்டோ ஏறி வந்துவிடுகிறேன்,” என்றேன். அவர் தயங்கினார். “புது இடத்தில் உங்களை எப்படி தனியே விட்டுச் செல்வது. வேண்டுமென்றால் இன்னும் ஒரு 10 நிமிடங்கள் இருந்துவிட்டுப் புறப்படுவோம்,” என்றார்.

“சரி. நான் தனியே வரவில்லை. அருண்ஷோரியுடன் வந்து விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள் அண்ணா,” என்றேன். அவர் இன்னமும் தயக்கத்தோடு நின்றார். அருண்ஷோரியிடம் நிலைமையை எடுத்துக் கூறவும், “நானே அழைத்து வந்து விட்டு விடுகிறேன்,” என அவர் உத்திரவாதம் வழங்கியப் பிறகுதான் சிகா அவ்விடத்தை விட்டு அகன்றார். கூட்டத்தில் எமது மற்றுமொரு தோழர் எழில்வாணனை தற்செயலாக அவ்விடத்தில் சந்திக்க நேர்ந்தது. இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

நான் வெகு நேரம் தனியாக நிற்பதைப் பார்த்து அருண்ஷோரி தோழர் இரமணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பல போராட்டங்களில் பங்கெடுத்த அனுபவம் இரமணியின் முகத்தில் பிரதிபலித்தது. கையில் சில துண்டறிக்கைப் பிரசுரங்கள் இருந்தன. மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) தூக்குதண்டனையை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் துண்டறிக்கைகளை அவர் வருவோர் போவோருக்கு விநியோகம் செய்துக் கொண்டிருந்தார். வெறுமனே நின்றுக் கொண்டிருக்க விரும்பாமல் அவருடன் சேர்ந்து நானும் அதனை விநியோகம் செய்ய ஆரம்பித்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் காயத்ரி, அம்பிகா எனும் இரமணியின் பெண் தோழர்கள் இருவர் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். சின்னப் பிள்ளைகள்தான். வயது 18-லிருந்து 22-க்குள்தான் இருக்க வேண்டும். அனுபவம் போதாததாலோ என்னவோ அவர்கள் அறிமுகம் இல்லாதோரிடம் துண்டறிக்கைகளைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினர். ஆனாலும் முடிந்த வரையில் அனைவரிடமும் கொடுக்க முயற்சித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த வயதான பெரியவர் ஒருவரிடம் நான் துண்டறிக்கையை நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டு எம்மை உற்று நோக்கினார். “இது எதற்கு?” எனக் கேட்டார். “மூவர் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்,” என்றேன். “அப்படினா, கொலை செய்தவன் எல்லாம் சுதந்திரமா நடமாடலாமா? அவங்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாதா?” என வாக்கு வாதத்திற்குத் தயாரானார். நானும் அவருக்கு பதிலளிக்க முனைகையில் தோழர் இரமணி குறுக்கிட்டார்.
“எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க,” என இரமணி சொல்லவும் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது. அங்கே நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நான் மற்றவர்களுக்குத் துண்டறிக்கைகளைக் கொடுக்க நகன்றுச் சென்றேன்.

அனைத்துத் துண்டறிக்கைகளையும் கொடுத்து முடித்த பிறகு நாங்கள் நால்வரும் தேநீர் கடைக்குச் செல்லலாம் என முடிவுச் செய்தோம். தோழர் அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தி விட்டு உரையாடிக்கொண்டே அருகாமையில் இருந்த தேநீர் கடையினுள் நுழைந்தோம். பாதாம் பால் ஒன்றை வேண்டிக்கொண்டு பல விடயங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அவர்களது போராட்ட வாழ்க்கை எமக்குப் பிடித்திருந்தது. 29-ஆம் திகதி அக்டோபர் மாதம் 2011 அன்று பெண்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மதியம் நான் மலேசியா திரும்ப வேண்டியிருப்பதால், முயன்றுப் பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.

பின்னர் தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். அலுவலகத்தின் அண்ணாவுடனும் வேறு சில தோழர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் நான் அமைதியாகவே அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. கீரா அண்ணா மதியம் அவர் செய்த அரைவேக்காடு முட்டையை நான் சாப்பிடவில்லை எனச் சொல்லி மீண்டும் சமைக்க ஆயத்தமானார். அலுவலகத்தில் சமைக்கும் வசதி இருந்ததால் எஞ்சி இருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் ஆரம்பமானது.

எனக்குப் பசியில்லை எனச் சொல்லியும் அண்ணா விடவில்லை. அவராகவே எமக்கு ஊட்டி விட்டுச் சாப்பிடச் செய்தார். அண்ணாவின் அன்பில் நான் நெகிழ்ந்துப் போனேன். மற்ற தோழர்கள் எங்களைக் கிண்டல் செய்தனர். அதற்குள் கண்ணா அண்ணா ஐந்தாறு முறை எமது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். நள்ளிரவு 12 மணி தாண்டித்தான் நான் வீடுச் சென்று சேர்ந்தேன். கண்ணன் அண்ணாவும் பாக்கியா அக்காவும் எனக்காகக் காத்திருந்தனர். குளித்துவிட்டு வந்து பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இலங்கையிலிருந்து கவிதாவின் தோழி மேனகாவும் அன்றுதான் சென்னை வந்திருந்தாள். அவளுடனும் சிறு அறிமுகம் செய்துக்கொண்டுப் படுக்கைக்குச் சென்றேன்.


வியாழன், 1 டிசம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 5)




பேருந்து நிறுத்தத்திலிருந்து மூவரும் நடந்தே அருகாமையில் அமைந்திருந்த கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் வீடு சென்ற வேளையில் அண்ணி வெளியே சென்றிருந்தார். அண்ணாவின் மச்சினன் மகேந்திரனும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அவரது இரண்டு குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை எம்முடன் வெகு சீக்கிரமே ஒட்டிக்கொண்டாள். பெயர் மதிவதனி! “எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே,” என நான் சொல்ல, “உன்னையெல்லாம் எப்படி போராளியாக்குவது? தலைவரின் மனைவி பெயரைக் கூட மறந்துவிட்டாயே?” என அண்ணா ஏமாற்றத்துடன் கூறினார்.

பையனின் பெயர் வைகறையாளன். ஏற்கனவே அவனைப் பற்றி அண்ணாவின் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்தில் அவனும் எம்முடன் சேர்ந்துக் கொண்டான். நான் அடிக்கடி அழைப்பேசியில் சண்டைப் போடும் வாசன் நேரிலும் விட்டு வைக்கவில்லை. எலியும் பூனையும் போல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவின் நண்பரான பாண்டியன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவரும் அவ்விடம் இருந்தார்.

மகேந்திரன் ஒரு சொம்பில் எனக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுக்க, நன்றி சொல்லி அதனைப் பெற்றுக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ வெளியே சென்றிருந்த அண்ணியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். என்னை விட 2 அல்லது 3 வயதுதான் மூத்தவராக இருக்க வேண்டும். கறுப்பென்றாலும் கஸ்தூரி என்று சொல்வார்களே அதற்கேற்றார் போல கலையான, அழகான முகம். அண்ணி வந்த சில நிமிடங்களிலேயே வேலை நிமித்தமாக வாசனும் அண்ணாவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டனர். பாண்டியன் மட்டும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார். வந்ததும் வராததுமாக அண்ணி அவசர அவசரமாக சமையல் வேலையில் இறங்கினார்.

அதற்கு முன்பாக தான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டி எனது கூந்தலில் வைத்துவிட்டார். இங்கே விழாக் காலங்களிலும், சிறப்பு தினங்களில் மட்டுமே பூ வைப்பது வழக்கம் என்பதால் அது சற்று வித்தியாசமாகப் பட்டது. இருந்தும் சேலையும், பூவும் தமிழர் கலாச்சாரம் என்பதால் எனக்குப் பிடித்திருந்தது. பழங்காலத்தில் தேங்காய் திருவப் பயன்படுத்தும் மணக்கட்டையுடன் கத்தி பொருந்திய ஒரு பலகையை அண்ணி எடுத்து வந்து வரவேற்பறையில் ஓரத்தில் போட்டார். அதனை நாங்கள் எங்கள் நாட்டில் ‘தேங்காய்த் திருவி’ என்று அழைப்போம். நான் சிறு வயதாக இருக்கும் போது எனது பாட்டி அதில்தான் வீட்டில் சொந்தமாகத் தேங்காய்த் திருவுவார். இப்போதெல்லாம் இதனைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாட்டி வீட்டில் இருந்த தேங்காய் திருவி கூட எங்கேயோ காணாமல் போய்விட்டது.

அண்ணி அதனை எடுத்துப் போட்டு, அதிலேயே பரக்பரக்கென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். சாதாரண கத்தியும், கட்டையும் கொடுத்தாலே நான் நின்று நிதானமாகத்தான் வெட்டுவேன். இவர் இப்படி தேங்காய்த் திருவியில் விறுவிறுவென நறுக்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் கொடுத்திருந்தால், ஒன்று எனது விரலை அறுத்துக் கொண்டிருப்பேன் இல்லையேல் அவை அனைத்தையும் நறுக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்திருப்பேன்.

குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டு அண்ணியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்விசிறி, தொலைக்காட்சி என அனைத்தும் நின்றுவிட்டது. நான் குழப்பத்துடன் அண்ணியைப் பார்த்தேன். “மின்வெட்டு” என்றார்; புரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என இதற்கு முன்பே தோழர்கள் சொல்லியிருந்தார்கள். இன்று அதனை நேரில் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. மதியம் 1 மணி இருக்கும். உச்சி வெயில் உச்சந்தலையைக் காய வைக்கும் நேரம். மின்விசிறி கூட இல்லாததால் வியர்வையிலேயே குளித்துவிட்டேன்.

இதே நிலை மலேசியாவில் ஏற்பட்டிருந்தால் ஆளும் கட்சிக்கு நேரக்கூடிய விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தேன். தமிழ்நாட்டு மக்கள் அதனை அதிகம் பெரிதுப்படுத்தவில்லை போலும் என எண்ணிக்கொண்டேன். 1 மணி நேரம் சென்ற பிறகுதான் மின்சாரம் மீண்டும் வருமாம். சரி, புழுக்கத்தில் புழங்க பழக்கப்படுத்திக் கொள்வோம் என அமைதியாய் இருந்தேன். பாண்டியனிடம் முட்டை வாங்கி வரும்படி கூறி, மகேந்திரனையும் உடன் அனுப்பினார் அண்ணி. மதிவதனி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள். வைகறையாளன் மட்டும் என்னுடனேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கீரா அண்ணாவும், வாசனும் வந்துச் சேர்ந்தனர். வந்த உடனேயே எனக்கும் வாசனுக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இம்முறை குழந்தைகளை விட்டு ஒருவரை ஒருவர் அடிக்க வைத்து திருப்தி பட்டுக்கொண்டோம். குழந்தைகளை யாரும் திருப்பி அடிக்க முடியாதல்லவா? முதலில் வாசன் பக்கம் இருந்த வைகறையாளன் பின்பு என் கட்சியில் சேர்ந்துவிட்டான். “டேய், இப்பவே பொண்ணுக்காக என்னை அடிக்கிறியே?” என்று வாசன் அந்தச் சிறுவனைக் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மதிவதனி மட்டும் சிறிது நேரம் என் பக்கமும், பின்பு வாசன் பக்கமும் கட்சி மாறிக் கொண்டிருந்தாள். அதற்குள் முட்டை வாங்கச் சென்றவர்களும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

கீரா அண்ணா எனக்காக அரைவேக்காடு முட்டை தன் கையால் போட்டுத் தந்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். கோழிக்கறி, இரசம், அரைவேக்காடு முட்டை என சமையல் பிரமாதமாய் இருந்தது. வாசன் அனைவருக்கும் தட்டில் சோறு போட்டு வைக்க, அண்ணன் முட்டை பொறிப்பதில் தீவிரமாக இருந்தார். அன்று மதியம் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஒன்றாக மதிய உணவு உட்கொண்டோம். கறி (குழம்பு) வேண்டுமென்று நான் சொல்ல, அண்ணி கோழி இறைச்சித் துண்டுகளை அள்ளி என தட்டில் வைத்தார். “இல்லை இல்லை, எனக்குக் கறி (குழம்பு) வேண்டும்,” என மீண்டும் சொல்ல, மறுபடியும் அவர் இறைச்சித் துண்டுகளை கரண்டியில் அல்ல, நான் குழம்பிப்போனேன். பின்னர்தான் “கறி இல்லை, குழம்பைத்தான் தங்கை கறி என்கிறாள்,” என கீரா அண்ணன் தெளிவுப்படுத்தினார்.

அப்போதுதான் எனது தவற்றையும் நான் உணர்ந்தேன். ஆம், கறி என்றால் இறைச்சியைத் தானே குறிக்கும்? குழம்பு என்பதுதானே சரியானச் சொல்? இத்தனைக் காலமும் நானும் என் நாட்டு மக்களும் இந்தச் சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகிறோமே என வெட்கமாகவும் இருந்தது. சரி, இனி திருத்திக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதிக் கொண்டேன். கீரா அண்ணன் அரைவேக்காடு முட்டையை நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என பார்க்க ஆவலாக இருந்தார். அதனை கீழே ஒழுகாமல் ஒரேயடியாக வாயில் போட்டு முழுங்க வேண்டும். எனக்கு அந்த அளவிற்குத் திறமை கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மதிவதனி அவளுடைய முட்டையைச் சாப்பிட்டுவிட்டு வேறு யாரிடம் முட்டை இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருந்தாள்.

சாப்பிடத் தெரியாமல் மற்றவரின் கேலிக்கு ஆளாவதை விட அதனைச் சாப்பிடாமல் இருந்துவிடலாம் எனத் தோன்றியது. எனவே, அண்ணன் பொறித்த முட்டையை மதிவதனியிடம் கொடுத்துவிட்டேன். ஆசையாய் பொறித்த முட்டையை நான் சாப்பிடவில்லை என அண்ணன் சற்று ஏமாற்றமடைந்தார். இன்னொரு நாள் நிச்சயம் சாப்பிடுகிறேன் எனச் சொல்லி தப்பித்துக் கொண்டேன். கோழிக் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டு எழும்பும் போது, “என்ன அதற்குள் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சம் சோறு போட்டு இரசம் ஊற்றிச் சாப்பிடு,” என அண்ணா சொல்லவும் எனக்குத் தலைச் சுற்றிவிட்டது. உண்மையிலேயே எனது வயிற்றில் இடமில்லை. போதும் என்று சொல்லியும் விடவில்லை. சரியென்று அவர்கள் திருப்திக்காக இன்னும் கொஞ்சம் சோறும், இரசமும் பிணைந்துச் சாப்பிட்டு முடித்தேன்.

நாங்கள் அனைவரும் உண்டு முடித்த வேளையில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. இவர்கள் எப்படித்தான் இந்தப் புழுக்கத்தையும் மின்வெட்டையும் சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் அருண்ஷோரி அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். இதற்கு முன் தொலைப்பேசியிலும், இணையத்திலும் பேசியிருந்தாலும் இன்றுதான் நாங்கள் நேரில் சந்திக்கிறோம். மிகவும் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் இருந்தார். ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ சவரம் செய்யாத முகம். தாறுமாறாக வளர்ந்திருந்த தாடி முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அந்த கறுப்பு முகத்தில் வெள்ளைக் கண்கள், இரவு வானில் மின்னும் நிலவு போல ஒளிவீசிக் கொண்டிருந்தன. அணிந்திருந்த கறுப்புச் சட்டை அவர் பெரியார் கொள்கையினைப் பின்பற்றுபவர் என்பதனைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.

புதன், 30 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 4)




சுமார் 5 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் அவளுடன் நான் கதைத்திருந்தேன். “சரியம்மா, வீட்டிலிருந்து ஆட்கள் வந்திருந்து எமக்காகக் காத்திருப்பார்கள். நான் விடைப்பெறுகிறேன்,” என்றேன். “ஒரு நிமிடம் அக்கா,” எனச் சொல்லி தனது தோள்பையில் கையை விட்டு எதையோ துளாவினாள். பின்னர், சாக்லெட் ஒன்றை எடுத்து என் கைகளுக்குள் திணித்தாள். நன்றி சொல்லி புன்முறுவல் செய்தேன். அவளுக்குக் கொடுப்பதற்கு எனது கைப்பையில் எதுவுமில்லை. அனைத்துப் பொருட்களும் எனது பெரிய பைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தன. கண்ணா அண்ணாவும், பாக்கியா அக்காவும் வந்திருக்கிறார்களா என அறிந்துக்கொள்ள நான் வரவேற்பாளர்கள் காத்திருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தேன். சுமதியும் என்னுடனேயே வந்தாள். அவளது தம்பி தள்ளு வண்டியை எம்மிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்களது அன்பை எம்மால் புறக்கணிக்க முடியவில்லை.

நான் அவர்கள் இருவரிடமும் கதைத்துக் கொண்டே நடந்துக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ எம்மைப் பிடித்து இழுக்கவும், திரும்பிப் பார்த்தேன். சித்தி நின்றுக்கொண்டிருந்தார். பக்கத்தில் கண்ணா அண்ணா. பார்த்த வேகத்தில் சித்தியையும் கட்டி அணைத்தேன். சித்தியுடைய குழந்தைகள் இருவரும் உடன் வந்திருந்தனர். பாக்கியா அக்காவின் அம்மாவும் இம்முறை வந்திருந்தார். என் ஒருத்தியை அழைத்துச் செல்ல இத்தனைப் பேர் வந்திருக்கிறார்களே என இனம் புரியாத மகிழ்ச்சிப் படர்ந்தது. அதே வேளை, திருமண காலத்தில் வேலைகளை விட்டுவிட்டு எம்மை அழைத்துச் செல்வதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்களே என வருத்தமாகவும் இருந்தது. அவர்களுக்கு சுமதியையும் அவளது தம்பியையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். பின்னர் அவர்கள் இருவரும் விடைப்பெற்றுச் சென்றனர்.

கண்ணா அண்ணா எனது பொருட்களை எல்லாம் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிறக்கப் போதும் குழந்தைக்காக நான் வாங்கி வந்திருந்த மெத்தையை எல்லாரும் பார்த்துவிட்டனர். “பவா யாருக்காக மெத்தையெல்லாம் கொண்டு வந்திருக்கிறியள்?” என சித்தி கேட்க. “அக்கா குழந்தைக்கு,” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னேன். கண்ணன் அண்ணா முகத்தில் வெட்கம் படர்ந்தது. “அக்காவுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று தெரியுமா? நீல நிற மெத்தை வாங்கி வந்திருக்கிறாயே,” என அம்மா கேட்டார். “அதெல்லாம் தெரியாது. நீல நிறம்தான் அழகா இருந்தது,” என்றேன்.

மழை லேசான தூறல் விட ஆரம்பித்தது. அனைவரும் மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். பாக்கியா அக்காவும், கவிதாவும் திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றிருப்பதாக அம்மா கூறினார். போகும் வழியும் மாப்பிள்ளை வீட்டாருக்குச் சமைப்பதற்காகக் கோழியும், முட்டைகளும் வாங்கிக் கொண்டனர். கோழி விற்கும் அந்தக் கடையில் ‘சிக்கன், மட்டன் இங்கே கிடைக்கும்’ என எழுதப்பட்டிருந்தது. கோழி, ஆடு என்று தமிழில் எழுதாமல் ஏன் இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என சற்று வருத்தமாக இருந்தது. தமிழகத்தில் தமிழின் நிலையை நினைத்து நொந்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். சாலையின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் வாகனங்களும், புகையும், சத்தங்களும் நான் சென்னையில் இருப்பதை அறிவுறுத்துக் கொண்டிருந்தன.

கண்ணா அண்ணாவிடம் எனக்குப் புதிய தொலைப்பேசி எண்கள் எடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சரியென்றார். வீட்டை அடைந்தவுடன் சித்தியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பாக்கியா அக்காவும் கவிதாவும் இல்லாததால் சற்று வெறுமையாகத் தோன்றியது. சித்தியிடமும் அம்மாவிடமும் அவர்கள் இருவரும் எப்போது வருவார்கள் என நொடிக்கொரு தரம் கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்த கவிதாவையும் தாவி அணைத்துக் கொண்டேன். அவள் முகத்தில் திருமண கலை குடிக்கொண்டிருந்தது. “அவர் வந்திருக்கிறார். வெளியே நிற்கிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். வந்துப் பாருங்கள் அக்கா,” என வெட்கத்தோடு கூறினாள்.

நானும் வெளியே சென்று மாப்பிள்ளையைப் பார்த்து சில நிமிடங்கள் கதைத்துவிட்டு உள்ளே வந்து விட்டேன். அதிகம் கதைக்கவில்லை. என்ன பேசுவதென்று எனக்கே தெரியவில்லை. பயணத்தைப் பற்றியும் திருமண ஏற்பாடுகள் குறித்து மட்டும் மேலோட்டமாக கேட்டு வைத்தேன். மாப்பிள்ளையின் சொந்தக்காரர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரவேண்டும் என்று மாப்பிள்ளையுடன் கவிதாவும் சென்றுவிட்டாள். பாக்கியா அக்காவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு தெரிந்தது. இருப்பினும், கடைகளில் அலைந்துத் திரிந்ததால் சற்று களைத்திருந்தாள். சற்று பெரிதாகத் தெரிந்த அவரது வயிற்றை கை வைத்து மென்மையாகத் தடவிப் பார்த்தேன். அவர் என் கையினை பிடித்து வயிற்றில் அழுத்தி வைத்தார். எமக்கு உடல் சிலிர்த்தது. அக்காவின் மேல் எமக்கிருந்த பாசம் மேலும் அதிகரித்தது. இந்தச் சின்ன உடல் இன்னொரு உயிரை எப்படிச் சுமக்கப்போகிறது என்ற கவலையும் உடன் வந்துச் சேர்ந்தது.

நான் பிறக்கப் போகும் குழந்தைக்காக வாங்கி வந்திருந்த மெத்தையை எடுத்து அக்காவிடம் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்துப் போனார். “நான் அத்தானிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என்ட பிள்ளைக்கு பவா என்ன வாங்கி வரா’னு பார்க்கணும்’னு. நாங்க கேட்காமலேயே வாங்கி வந்துட்டா,” என்று பூரித்தார். அந்த சமயத்தில் திறந்திருந்த எனது பையிலிருந்து எட்டிப்பார்த்த ‘சிவாஸ்’-சை அம்மா பார்த்துவிட்டார். “இது யாருக்கு?” என அவர் கேட்க, நான் பட்டென்று, “கண்ணன் அண்ணாவுக்கு,” என்று உடைத்துவிட்டேன். அம்மாவின் முகம் நொடிப் பொழுதில் மாறிப்போனது. ஆஹா, தப்பு பண்ணிவிட்டோமே என நினைக்கத் தோன்றியது. உடனே பாக்கியா அக்கா, “அத்தானுடை நண்பர்களுக்காக இருக்கலாம். பாலா அண்ணா கேட்டுக்கொண்டே இருந்தார்,” எனக் கூற, “அப்படியும் இருக்கலாம்,” என நானும் சமாளித்தேன்.

நேரமாகிக் கொண்டிருந்தால் நீராட எழுந்துச் சென்றேன். நான் குளித்துவிட்டு வரும் போது மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். களைப்பாக இருந்ததால் அப்படியே மெத்தையில் படுத்துவிட்டேன். அறைக்குள் பாக்கியா அக்கா வந்து வரவேற்பறைக்கு என்னை இழுத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அங்கேயிருந்த படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டேன். அனைவரும் சாப்பிட ஆரம்பித்த வேளையில் சித்தி எனக்கும் உணவுத்தட்டைக் கொண்டு வந்தார். அதனைப் பார்த்த கண்ணன் அண்ணா, “புலிக்குட்டிக்குத் தீட்டி (ஊட்டி) விடுங்கோ சித்தி,” என அனைவர் முன்னிலையும் கூற எனக்கு வெட்கமாகிப் போனது.

நான் வேண்டாம் என்று மறுத்தும் அண்ணா மற்றும் சித்தியின் வற்புறுத்துதலால் இறுதியில் இணங்க வேண்டியதாயிற்று. உண்மையில் சொல்லப் போனால், அவர்கள் எனக்குத் தீட்டி விடுவதை நான் பெரிதும் விரும்பினேன். ஏதோ சொல்ல முடியாத பாசப்பிணைப்பில் கட்டுண்டுக் கிடந்தேன். அந்த வேலை பாக்கியா அக்கா ஒரு குவளை முழுக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கண்ணன் அண்ணா அடிக்கடி நான் சாப்பிடுகிறேனா என்று பார்த்து, “நல்லா தீட்டுங்கோ,” என சித்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பாச மழையில் நான் நனைந்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ வந்த எம்மீதே இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என மனம் நெகிழ்ந்துப் போனேன். பின்னர் கவிதாவிற்கும், சித்தியின் பிள்ளைகளுக்கும் நான் வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும், இனிப்பு வகைகளையும் வழங்கினேன். நான் வீட்டுப் பெண்களுடன் கதைத்திருந்த வேளையில் கண்ணன் அண்ணா வெளியே சென்று கைப்பேசி எண்கள் வாங்கிக் கொண்டு வந்தார். மலேசிய நேரம் பின்னிரவு 2.30 மணியாகிவிட்டது. தொலைப்பேசி எண்கள் கிடைத்ததும் தோழர் அருண்ஷோரிக்குக் குறுந்தகவல் அனுப்பி எமது வருகையைத் தெரியப்படுத்திவிட்டு அப்படியே உறங்கிவிட்டேன்.

அதிகாலை 6 மணிக்கே அங்கே விடிந்துவிட்டது எமக்கு விழிப்பு வந்துவிட்டது. குளித்து, உடைமாற்றி வீட்டின் வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். இம்முறையில் காலை உணவை சித்தி எமக்கு ஊட்டி விட்டார். அம்மா பாக்கியா அக்காவுக்கு உணவு ஊட்டிவிட்டார். உண்டு முடித்த பிறகு, நானும் பாக்கியா அக்காவும், சித்தியின் குழந்தை திவ்யாவிற்கு காலை உணவை மாறி மாறி ஊட்டிவிட்டோம். அவர்களின் குடும்பச் சூழல் எம்மை மிகவும் கவர்ந்திருந்தது.

அன்று கீரா அண்ணா தமது வீட்டில் மதிய உணவை உட்கொள்ளுமாறு எம்மை அழைத்திருந்தார். எனவே, காலை உணவை முடித்துக்கொண்டு விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கும் அவரது வீட்டிற்குச் செல்ல தயாரானேன். சென்ற முறை தமிழகம் சென்ற போது அவரது மனைவி குழந்தைகளைச் சந்திக்க இயலவில்லை. எனவே இம்முறை முன்னெச்சரிக்கையாக அவரது குழந்தைகளுக்கு இனிப்புக்களும் அண்ணாவுக்கும் அவரது தோழர்களுக்கும் மேற்சட்டையும் வாங்கிச் சென்றிருந்தேன். கண்ணன் அண்ணா விருகம்பாக்கத்தில் இருந்த இளங்கோ நகர் பேருந்து நிறுத்தம் வரையில் எம்மை மகிழுந்தில் கொண்டுச் சென்றுவிட்டார். அவ்விடம் கீரா அண்ணாவும், அவரது கதாநாயகன் (பச்சை என்கிற காத்து) வாசனும் எமக்காகக் காத்திருந்தனர்.

வியாழன், 24 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 3)




விமானம் ஆகாயத்தில் பறந்துக்கொண்டிருந்தது. விமானப் பணிப்பெண் ஒருவர் பயணிகள் பயண விபர அட்டை ஒன்றை அனைவரிடமும் கொடுத்துப் பூர்த்திச் செய்யச் சொன்னார். எனது கைப்பையில் எப்போதும் பேனா வைத்திருக்கும் பழக்கம் இருப்பதால், அட்டையைப் பெற்றவுடன் நானும் அதனைப் பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டேன். எமது பக்கத்தில் அமர்ந்திருந்த மாதுவும் ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். அடிக்கடி அவர் நான் என்ன எழுதுகிறேன் என்று கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவரது அட்டையைப் பார்த்தேன். அவர் பல விபரங்களைப் பூர்த்தி செய்யாமல் தடுமாறுவதைப் புரிந்துக் கொண்டேன்.

நான் பார்ப்பதை அவர் பார்த்ததும் புன்னகைப் புரிந்தார். நானும் சிரித்தேன். எனது அட்டையை அவரிடம் கொடுத்து இப்படி எழுத வேண்டும் என ஆங்கிலத்தில் கூறினேன். அவர் ஆங்கிலத்தில் பேச சற்றுத் தடுமாறினார். “தமிழ் தெரியுமா” எனக் கேட்டேன். தமக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் புரியும் என்றும் கூறினார். சரியென்று அவர் பூர்த்தி செய்ய வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டினேன். நன்றி சொல்லிவிட்டு எம்மைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்தார். வழக்கமாக வழிப்பயணிகள் கேட்கும் கேள்விகள்தான். நானும் பதிலளித்தேன். உறக்கமின்மையாலும், களைப்பாலும் இமைகள் கனக்க ஆரம்பித்தன. கையோடு கொண்டு வந்திருந்த போர்வையை முழுக்கப் போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டேன்.

நான் கண் விழிக்கையில் விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழக நேரம் சரியாக மாலை மணி 5.25-க்கு விமானம் சென்னையை அடைந்தது. வெளிநாட்டுப் பயணிகள் வேறு ஒரு வரிசையில் நிற்க வேண்டும் என்பதனால், கடப்பிதழ் பரிசோதிக்கும் முன்னரே இராஜ்குமாருக்கு நன்றி கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். வரிசை சற்று நீளமாக இருந்தது. இதற்கு முன்னர் சென்னை வந்த அனுபவம் இருந்ததால் சூழல் எதுவும் புதுமையாக இல்லை. எனது மலேசிய கைப்பேசி அட்டையைக் கலட்டிவிட்டு முன்பு தமிழகத்தில் நான் உபயோகித்த ‘யுனிநோர்’ கைப்பேசி அட்டையைப் அழைப்பேசியில் பொருத்தினேன். எண் பதியப்படவில்லை என்ற செய்தி வந்தது. இனி அந்த எண்களை நான் மீண்டும் பயன்படுத்த முடியாது. வெளியில் உள்ளவர்களை எவ்வாறு தொடர்புக் கொள்வது? சரி, ஏதாவது வழி இல்லாமலா போய்விடும் என மனதைத் தேற்றிக்கொண்டேன்.

கடப்பிதழ் சரிப்பார்க்கப்பட்டு, பயணப் பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடத்திற்குச் சென்றேன். இந்த முறை 3 பைகள் அல்லவா கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவு எளிதில் விட்டுவிடுவார்களா என்ன? ஏற்கனவே நடந்தது போல, நான் பைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டுச் செல்லவும், சுங்கத்துறை அதிகாரி இருவர் எம்மை நெருங்கி வந்து, “உங்கள் பைகளை நுண்கூறு மேவுதல் (ஸ்கேன்) செய்ய வேண்டும்,” என்று ஆங்கிலத்தில் சொன்னனர். “எனக்கு முன் கூட்டியே தெரியும். எனது பைகளை நுண்கூறு மேவுதல் செய்வதுதான் உங்களுக்கு வழக்கமான ஒன்றாயிற்றே. மற்ற பயணிகளை விட்டுவிட்டு எதற்கு எனது பைகளை மட்டும் திரும்பத் திரும்ப நுண்கூறு மேவுதல் செய்ய வேண்டும்? இனி இந்த விமான நிலையத்திற்கே நான் வரப்போவதில்லை,” என கூச்சலிட்டவாறு வெறுப்புடன் நுண்கூறு மேவுதல் செய்யும் இடத்தை நோக்கிச் சென்றேன்.

நான் சத்தமிடவும் சாதரண உடையணிந்த மற்றும் இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவ்விடம் விரைந்து வந்தனர். “என்ன ஆனது? ஏதாவது பிரச்சனையா?” என ஒரு அதிகாரி கனிவுடன் கேட்டார். இருந்த கடுப்பில், “சென்னை விமான நிலையத்திற்கு நான் இரண்டாவது முறையாக வருகிறேன். முன்பு வந்த போதும் மற்ற பயணிகளை விட்டுவிட்டு எனது பைகளை மட்டும் சோதனை செய்தார்கள். இப்பொழுதும் அப்படியே செய்கிறார்கள். என்னைப் பார்க்க உங்களுக்கெல்லாம் எப்படித் தெரிகிறது? இவர்கள் எம்மை நடத்தும் விதம் வெறுப்படையச் செய்கிறது,” என படபடவெனக் கொட்டிவிட்டேன். அந்த அதிகாரி பவ்யமாக “எந்த நாட்டிலிருந்து வருகிறீர்? என்ன விடயமாக வந்தீர்? எங்குத் தங்கப் போகிறீர்? எத்தனை நாட்கள் இருப்பீர்? என்ன தொழில் செய்கிறீர்? இதற்கு முன்பு இங்கு வந்து என்ன செய்தீர்?” என உரையாடுவது போல் கேள்விகள் தொடுத்தார். அது உரையாடல் போன்று தோற்றமளிக்கும் விசாரணை என்று தெரியாமல் இருக்க நான் அடிமுட்டாள் அல்லவே?

நானும் அவர்கள் கேட்டக் கேள்விக்கெல்லாம் முறையே பொய்யான பதில்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். அது ஒரு உரையாடல் என்பதற்கு அடையாளமாக நானும் சில கேள்விகள் கேட்டு வைத்தேன். பிறகுதான் அவர்கள் இருவரும் சுங்கத்துறைப் புலனாய்வாளர்கள் என்பது தெரிய வந்தது. நான் பையைத் தூங்கி நுண்கூறு மேவும் இயந்திரத்தில் வைக்கப் போனேன். “ஏதாவது உதவி வேண்டுமா?” என அவர்கள் இருவரும் கேட்டனர். “தேவையில்லை. என்னால் முடியும். நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகின்றீர்கள். இதற்கு முன்பு இவ்விடம் இருந்தவர்கள் பயணிகள் வெறுப்படையும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்கொண்டனர்,” என எமது முந்தைய அனுபவங்களை விவரித்தேன். அவர்கள் அதற்காக வருத்தம் தெரிவித்தனர்.

அவர்கள் எம்மிடம் கனிவுடன் நடந்துக் கொண்டதால் எமது கோபம் அப்போது தணிந்திருந்தது. விடைப்பெறுமுன் அவர்களது பெயர்களைக் கேட்டேன்; சொன்னார்கள். “நீங்கள் தமிழ், நீங்கள் தெலுங்கா?” என இருவரையும் பார்த்துக் கேட்டேன். அவர்கள் சற்று திகைத்தனர். “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டனர். “உங்கள் பெயர்களே உங்கள் இனத்தை அடையாளப்படுத்திவிட்டன,” என்று சொல்லி, தெலுங்குக்காரர் பக்கம் திரும்பி, “உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என கேட்டேன். அவர் தெரியும் என்று சொல்லவே, “முன்பே சொல்லியிருந்தால் தமிழிலேயே பேசியிருக்கலாமே?” என்று தமிழில் சொன்னேன். இவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசியிருந்தபடியால் சற்று நேரம் தமிழில் அவர்களுடன் கதைத்துவிட்டு விடைப்பெற்றேன்.

நான் விமான நிலையத்திலிருந்து வெளியாகும் போது யாரோ ஒரு பெண் தூரத்தில் இருந்து கையசைப்பது தெரிந்தது. நடந்துக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தேன்; யாருமில்லை. அப்படியானால் அந்தப் பெண் என்னை நோக்கித்தான் கையசைக்கிறாள் என்பதனை ஒருவாறு யூகித்துக்கொண்டேன். யாராக இருக்கும் என எண்ணியவாறு நானும் கையசைத்தேன். அப்பெண்ணை நெருங்க நெருங்க அவள் யாரென்பதை அறிந்துவிட்டேன். இந்தச் சந்திப்பினை நான் எதிர்ப்பார்க்கவில்லை. சுமதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) எனக்கு முகநூலில் அறிமுகமான பெண். இந்தப் பெண் எம்மீது கொண்டிருக்கும் அன்பு அபூர்வமானது. ‘அக்கா, அக்கா’ என்று சதா நேரமும் எனது முகநூலில் செய்தி அனுப்பிக்கொண்டிருப்பாள். தனக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன் எனவும், என்னைப் போல் தானும் ஆளாக வேண்டும் எனவும் பிதற்றுவாள். ஒரு முறை எனக்காக ‘இரசிகர் பக்கம்’ வேறு முகநூலில் திறந்திருந்தாள். அதெல்லாம் வேண்டாம் என நானே எடுக்கச் சொன்னப் பிறகு தான் அவற்றை நீக்கினாள்.

நான் சென்னைக்கு வருவதாக அவளுக்குச் சொல்லியிருந்தேன். விமானம் வந்திறங்கும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சுமதி அவளது வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்திருந்தாள். நேரம் அதிகம் இல்லாததாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் எம்மால் இம்முறை வர இயலாது என்று சொல்லியிருந்தேன். “ஒரு 5 நிமிடமாவது உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறது அக்கா. நானே விமான நிலையம் வந்துப் பார்க்கிறேன். 5 நிமிடம் கூட போதும்,” என அவள் சொன்ன போது அது எனக்குச் சற்றுப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது. “சரி, பார்க்கலாம்,” என சொல்லி வைத்தேன். ஆனால், நிஜமாகவே அந்தப் பெண் இவ்வளவு தூரம் எம்மைப் பார்க்க வருவாள் என நான் நினைக்கவில்லை.

நான் விமான நிலைய நுழைவாயிலை விட்டு வெளியே வரவும் சுமதி முகத்தில் பரவசம் பொங்க என்னருகே சிறுப்பிள்ளை போல் குதூகலத்துடன் ஓடி வந்தாள். “அக்கா…” என்றாள். மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றவாறு , “சுமதி?” என கேட்டேன். தலையாட்டினாள்; அவள் கண்கள் கலங்கின. நான் நிலைத் தடுமாறிப் போனேன். “என்னம்மா?” என அப்படியே அவளை வாரி அணைத்தேன். அவளது தடையையும் மீறி கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. “ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது?” என பதற்றத்துடன் கேட்டேன். “ஒன்றுமில்லை அக்கா. உங்களைப் பார்த்த சந்தோஷம்,” என அவள் கூறிய போது நான் நெகிழ்ந்துப் போனேன். “இதிலென்ன இருக்கிறது? நான் சாதாரணப் பெண். இதற்காக எதற்கு அழுகிறாய்? அழாதே,” என அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன்.

“மன்னிச்சிருங்க அக்கா… நான் அழலை. அது பாட்டுக்கு வருது. எனக்கு ரொம்பெ சந்தோஷமா இருக்கு,” என்றவள், எதையோ மறந்துவிட்டவள் போல் அவ்விடம் சிறிது தள்ளி நின்றுக்கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், இங்க வா,” என அழைத்து, “அக்கா, இது என் தம்பி,” என அறிமுகம் செய்து வைத்தாள். “யாருடன் வந்திருக்கிறீர்கள்,” எனக் கேட்க, “நாங்கள் இருவர் மட்டும்தான்,” என பதில் சொன்னாள். அவள் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது. ஆனால், கண்களின் ஓரத்தில் இன்னமும் நீர் அரும்பியிருந்தது.

செவ்வாய், 22 நவம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 2)




“நீங்கள் எப்போதும் இப்படித்தானா?” நான் சாப்பிட்டு முடிந்தவுடன் அவன் திடீரென்று இப்படிக் கேட்டான். அவன் எதைக் கேட்கிறான் என்று அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் அவன் கேட்ட தொனியும் அவனது முகபாவனையும் பார்க்க எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டுச் சிரித்து, “என்ன கேட்கிறீர்,” என்றேன். “நீங்கள் அதிகம் பேசுவதில்லை. எப்போதுமே இப்படித்தானா இல்லை நான் அதிகம் பேசிக் கரைச்சல் கொடுக்கிறேனா? எதுவாக இருந்தாலும் இப்போதே சொல்லிவிடுங்கள். முகநூலில் எதையும் எழுதி வைக்காதீர்கள்,” என கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

அவனுக்கு நான் பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தேன். இதற்கு முன்னும் இப்படிச் சிலர் முகநூலில் தங்களைப் பற்றி எழுத வேண்டாம் எனச் சொன்னது நினைவு வந்தது. அவனுக்கு எந்தவொரு வாக்குறுதியும் நான் வழங்கவில்லை. அந்தப் பேச்சிலிருந்து விடுப்பட விரும்பி, “நேரமாகிறது, உள்ளே செல்வோமா?” என எழுந்தேன். அவனும் உடன் எழும்பி வந்தான்.

குடிநுழைவு மற்றும் சுங்கத்துறையினரின் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு பயணிகள் காத்திருக்கும் இடத்திற்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து வரும் போது கண்ணன்  அண்ணா ‘சரக்கு’ (மது பாட்டில்) வாங்கிவரச் சொல்லியிருந்தார். “நான் மதுபாட்டில் வாங்க வரிவிலக்குக் கடைக்குச் செல்கிறேன். நீங்கள் ஏதாவது வாங்க வேண்டுமா?” எனக் இராஜ்குமாரைக் கேட்டேன். “நானும் வருகிறேன்,” என உடன் வந்தான். உள்ளே விதம் விதமான பாட்டில்களிலும் வர்ணங்களிலும் பல வகையான மதுபான வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு பாட்டிலாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் என் பின்னாலேயே வந்துக்கொண்டிருந்தான்.

“இதில் இருக்கிற முக்கால் வாசி மதுபானங்களை நான் குடித்திருக்கிறேன்,” என தனது சொந்தப் புராணத்தைப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் அவனை அதிகம் சட்டைச் செய்யாது, பாட்டில்களை நோட்டம் விடுவதிலேயே குறியாய் இருந்தேன். சட்டென்று, “உங்களுக்கு எந்த மதுபானம் பிடிக்கும்?” எனக்கேட்டான். “நான் குடிப்பதில்லை,” ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு, ஒரு மது பாட்டிலை கையில் ஏந்தினேன். “உண்மையாகவா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே,” என்று என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

இவனும் ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் பார்த்து அதன் உள்ளடகத்தை எடைப் போடுபவன்தான் என்பதனை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் அணிந்திருந்த உடையும், எனது தோற்றமும் அவனை அவ்வாறு எண்ணச் செய்திருக்கலாம். ஒரு வேலை நான் சேலைக் கட்டி வந்திருந்தால் அவன் பார்வை வேறு விதமாக இருக்குமோ என்றுக்கூட எண்ணத் தோன்றியது.

“யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் குடிப்பதில்லை. அதற்காக குடித்ததே இல்லை எனக் கூறவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அதன் சுவை எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள குடித்துப்பார்த்திருக்கிறேன். ஒரு முறை குடித்த பானத்தை நான் மீண்டும் சுவைப்பதில்லை. அதன் சுவை எனக்குத் தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு இவைகளை நான் தொடுவதில்லை,” என்றேன்.

“எப்போதாவது கூட குடிக்க மாட்டீர்களா?” என்றான். “மாட்டேன்,” என்று உறுதியாகக் கூறினேன். அவன் அதனை நம்புவதாகத் தெரியவில்லை. அவன் நம்பவேண்டும் என நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. அவன் கேட்டக் கேள்விக்கான பதிலை நான் தந்துவிட்டேன். அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவனைப் பொறுத்ததல்லவா?

கடை முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘சிவாஸ்’ என்ற முத்திரையைக் கொண்ட மதுபானத்தை வாங்கினேன். பின்னர் இருவரும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம். அவன் மேலும் ஏதோ பேசினான். அதில் எதிலும் என் மனம் இலயிக்கவில்லை. அவனுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்துச் சென்னைக்குச் சென்றதும் கண்டிப்பாகத் தொடர்புக்கொள்ளச் சொன்னான். சரி என்று வாங்கிக் கொண்டேன்.

திடீரென புதிய எண்களிலிருந்து எனது கைப்பேசிக்குக் குறுந்தகவல் வந்தது. அதற்கு பதில் எழுதாமல் வைத்துவிட்டேன். சற்று நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே எண்களிலிருந்து இன்னொரு குறுந்தகவல் வந்தது. அதையும் படித்துவிட்டு அப்படியே வைத்தேன். இப்பொழுது அதே எண்களிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. புதிய எண், புதிய ஆணின் குரல். யாராக இருக்கும்? கேட்டேன். “நீங்கள் கடைசியாக யாருடைய பெயரை உச்சரித்தீர்கள்?” எனக் கேட்டார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “தெரியவில்லை, சொல்லுங்கள்,” என்றேன். “சென்னைக்கு எத்தனை மணிக்குச் செல்கிறீர்? சுங்கத்துறை பரிசோதனை எல்லாம் முடித்தாகிற்றா?” என மிகவும் நெருக்கமானவர் போல் பேச ஆரம்பித்தார். எப்படி எமது பயணம் இந்த அந்நிய நபருக்குத் தெரிந்தது என்ற குழப்பத்துடன், குரல் தடிக்க, “நீங்கள் யாரென்று சொல்லுங்கள். இல்லையேல் எம்மை அழைத்துத் தொந்தரவு செய்ய வேண்டாம்,” எனக் கூறவும் அவர் சற்று இறங்கி வந்தார்.

“நான்தான் சூர்யா,” என்றார். “எந்த சூர்யா,” எனப் பட்டெனக் கேட்டேன். “சற்று நேரத்திற்கு முன்னர் எனக்கு நன்றி கூடச் சொன்னீர்கள். அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் பயணப் பைகளை வைக்கும் இடத்தில்,” என அவர் சொல்லும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது. “ஓ, சூர்யா. சொல்லுங்கள்! உங்களுக்கு எப்படி என்னுடைய எண்கள் கிடைத்தது,” என சற்று வியப்புடன் கேட்டேன். “ரொம்பெ சுலபம். நான் ஏர் ஆசியாவில் வேலை செய்கிறேன். சற்று முன்னர்தான் உங்கள் பயண விபரங்களைச் சரிபார்க்க உங்கள் கடப்பிதழைக் கொடுத்தீர்கள். அதிலிருந்து எங்கள் கணினியில் உங்கள் விபரங்களைப் பெறுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை,” என சிரித்துக்கொண்டே கூறினார்.

“ஓ, அப்படியா. இப்படித்தான் மற்ற பயணிகளின் விபரங்களைப் பெற்று அழைத்துப் பேசுவீர்களோ?” என நான் விளையாட்டாகக் கேட்க அவர் அரண்டுவிட்டார். “ஐயய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க. சத்தியமா நான் இங்க வேலை செய்த நாளிலிருந்து இன்றைக்குத்தான் முதல் முதலா ஒரு பயணியோட எண்களை எடுத்து அழைக்கிறேன். அதுவும், நீங்க அழகான தமிழில் என் பெயரைச் சொல்லி நன்றி சொன்னீங்க இல்ல, அது ரொம்பெ புதுசா இருந்திச்சு. ஏதோ, உங்கக்கிட்ட பேச வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் கூப்பிட்டேன். நீங்க எதுவும் தவறா எடுத்துக்காதீங்க,” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டார்.

எனக்கு அது தவறாகத் தோன்றவில்லை. சிறிது நேரம் உரையாடினோம். “தனியா போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க. என்னைத் தனியே போகச் சொல்லி கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன். இருந்தாலும் உங்களுக்கு ரொம்பெதான் தைரியம்,” என்றார். “நான் தனியே போகிறேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே,” என்றேன். “உங்கள் பயண விபரத்தில்தான் எல்லாமே இருக்கிறதே,” என மீண்டும் சிரித்துக்கொண்டுக் கூறினார். நல்ல ஆள்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். பழைய நண்பர்கள் போல் சிறிது நேரம் கதைத்துவிட்டு அழைப்பேசியை வைத்தேன்.

இராஜ்குமார் எங்கேயோ சென்று இரண்டு குவளைகளில் காப்பியோடு வந்தான். அதில் ஒன்றை என்னிடம் நீட்ட, “ஐயோ, நான் காப்பி குடிக்க மாட்டேனே,” என்றேன். அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை, கொடுங்கள். எப்போதாவது குடிப்பேன். அதிகம் குடிப்பதில்லை,” என வாங்கிக்கொண்டேன். அதனை ஒரு மூலையில் வைத்துவிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு எனது பயணத்தைக் கைப்பேசியின் மூலம்  அறிவித்துக் கொண்டிருந்தேன். பயணத்திற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை விமானப் பயணச் சீட்டைச் சரிப்பார்த்துக் கொண்டேன். “உங்கள் இருக்கை எண் என்ன?” எனக் கேட்டான். பதில் சொன்னேன்.

தம்முடைய இருக்கை இரண்டு வரிசைகள் தள்ளி பின்புறம் இருக்கிறது என்றான். அப்படியா என தலையாட்டிக் கொண்டேன். “பிறகு பக்கத்தில் அமர்பவர்களிடம் சொல்லி இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். அப்போதுதான் பேசிக்கொண்டே செல்ல வசதியாய் இருக்கும்,” என்றான். “அதெல்லாம் தேவையில்லை. நான் விமானத்தில் ஏறியவுடனேயே உறங்கிவிடுவேன். எனக்கு அவ்வளவு களைப்பாக இருக்கிறது,” என சாக்குப் போக்குக் கூறிவிட்டு மீண்டும் கைப்பேசியில் ஐக்கியமானேன்.

விமானம் வந்துவிட்டது. அனைவரும் வரிசைப்பிடித்து விமானத்தில் ஏறினோம். எனக்குச் சன்னல் ஓர இருக்கை. எனது பக்கத்தில் ஆண் ஒருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக நடுத்தர வயது மாது ஒருவர் வந்தமர்ந்தார். இரு பெண்களுக்கு நடுவில் அமர்வது அந்த ஆணுக்குக் கூச்சத்தையோ அல்லது அசெளகர்யத்தையோ உண்டு பண்னியிருக்க வேண்டும். அந்த மாதுவை எனதருகில் அமரச் சொல்லி இடம் மாற்றி அமர்ந்துக்கொண்டார். எனக்கும் கொஞ்சம் வசதியாக இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் விமானம் ஆகாயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்தது. இந்த முறை பயணம் எப்படி அமையப் போகிறது என்ற கற்பனை வானில் நானும் சிறகடிக்க ஆரம்பித்தேன்.