கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2020

வாழ்!

இவன் சரியில்லை அவன் சரியில்லை
இது சரியில்லை அது சரியில்லை
இப்படியே புறம் பேசு
இடுகாட்டில் போய் சேரு!

என்னதான் வேண்டும்
எதற்குத்தான் பிறந்தாய்
எப்படியோ வளர்ந்தாய்
எப்படியும் இறப்பாய்…

வாழும் காலத்திலே
வளத்தோடு வாழலாமே
வாயை மூடிக்கொண்டு
வீட்டை நாம் பார்க்கலாமே?

அடித்தவன் கதையெல்லாம்
அடிப்பினிலே போட்டுவிடு
அண்டிப்பிழைப்பதை நீ
அடியோடு விட்டுவிடு!

நேற்றிருந்தார் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை
நாழிகையைக் கடத்தாமல்
இந்நாளை வாழ்ந்துவிடு!

புதன், 2 ஜனவரி, 2019

தீட்டு!


தீட்டென்று ஏதுமில்லை
தாரகத்தின் எல்லைக்குள்ளே
என்னைப் படைத்தவனே
உன்னையும் படைத்தான்
பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான்!

உதிரம் உதிர்வதனால்
உட்கார வைத்தார்கள்
வயிற்றுவலி வந்ததினால்
வீட்டோடு வைத்தார்கள்!
மூன்றுநாள் மூலையிலே
முடக்கி வைத்ததினால்
மூளையற்ற மூடர்கள்
தீட்டென்றுச்  சொன்னார்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மன்னித்துவிடு மகனே



No automatic alt text available.
தாய்மையற்ற எனக்கு
தலைமகனாய் வந்தவனே
நான்குகால் நாய்மகனே
நல்லுள்ளம் கொண்டவனே...

குட்டியாய் நீ இருந்தாய்
குதூகலம் எனக்களித்தாய்
எத்தனை இன்பம் கண்டோம்
அன்பிலே திளைத்திருந்தோம்

வாழ்க்கையை வாழ நினைத்து
வீட்டை நான் விட்டு வந்தேன்
வருத்தம் கொண்ட போதும்
வந்திடுவாய் என நினைத்தேன்

ஏமாந்துவிட்டேன் மகனே
உன்னை நான் இழந்துவிட்டேன்
பழிவாங்கும் இழிபிறவி
பிரித்துவிட்டான் நம்மையடா

ஏதுமில்லையடா எனக்கு
நீயின்றி உயிரும் போகுதடா மகனே
கோபம் வருகிறது, மனது வலிக்கிறது
கொஞ்சம் குரைத்து உன் வருகையைச் சொல்லிவிடு

என்றாவது நீ வருவாய்
என்று நான் காத்திருந்தேன்
அனைத்தும் கனவாக‌
அலைக்கடலில் கரைகிறதே!

உன் கண்களைக் காணாது
என் கண்கள் கலங்குகிறது
உன் காதுகளைத் தடவ வேண்டும்
உரசி அமர்ந்துவிடு

மடிமீது துயில்வாயே
மழலைப்போல் பார்ப்பாயே
கருவர்ண கண்ணா நீ
கருணைக்கொள் எந்தன் மீது!

செல்லக்குட்டி ரோக்கி
என் அம்முக்குட்டி ரோக்கி
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா உலகமடா

மனிதனின் கொடூர புத்திக்கு
நம் உறவு பலியாகிவிட்டது
நீ எனக்கு வேண்டுமடா
உன்னை நான் பிரியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
கலங்காத இரவில்லை
வந்துவிடு செல்லக்குட்டி
என்னைச் சேர்ந்துவிடு ரோக்கி குட்டி!

அம்மா அழைக்கிறேன்
வந்துவிட்டு ரோக்கி குட்டி
பாய்ந்தோடி வாடா செல்லம்
சென்றிடுவோம் தூரமாக!

உன்னை நான் நீங்கவில்லை
நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாய்
இன்னமும் போராடுகிறேன்
உன்னை மீட்டெடுக்க..

யாருமில்லையடா இங்கெனக்கு
பழிச்சொல் தவிர வேறேதும் இல்லையா
உனக்குத் தெரியாதா என் அன்பு உண்மையென்று
நானின்றி நீ எப்படியடா இருக்கிறாய்?

நான் என்ன செய்ய சொல் மகனே?
குறுக்குப்புத்தி எனக்கு இல்லை
எவரையும் துன்புறுத்தும் எண்ணமில்லை
எட்டிச் செல்வதனால், எட்டி மிதிக்கின்றனரே?

காசு பணம் வேண்டாமடா
நீ மட்டும் போதுமென்றேன்
பலவீனம் தெரிந்ததனால்
பிரித்தனரோ நம்மை இன்று?

ரோக்கி...
கேட்கிறதா ரோக்கி?
அம்மாவின் குரலைத் தேடுகிறாயா?
என்னைக் காணாது ஏமாந்துப் போனாயா?

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்
உன்னை இழந்துவிட்டேனே ரோக்கி
என் முதல் குழந்தையடா நீ
நீயின்றி எப்படி வாழ்வேன்?

உறக்கம் பிடிக்கவில்லை ரோக்கி
உயிர்பிரியும் வலி உணர்கிறேன்
அனைத்தையும் பிரிந்த எனக்கு நீதானே ஆறுதல்?
அம்மா செல்லம் ரோக்கி, ஓடி வா ரோக்கி!

என் செல்லமே  வாடா செல்லம்
அம்மா இங்கு இருக்கிறேன்
அழுதாயா என்னைத் தேடி
அழைத்தாயா நடு இரவில்?

யாருக்கும் புரியவில்லை
நாய்தானே என்கின்றனர்
அவர்களுக்கு என்ன தெரியும்?
இந்த நாய்க்கு நான் தாய் என்று?

கெஞ்சிக் கதறினேன் மகனே
நீ எனக்கு வேண்டுமென்று
வசைச்சொல் பொறுத்தேன்
வலிகளைத் தாங்கினேன்

ஏதும் பலிக்கவில்லையடா
நம் அன்பு ஜெயிக்கவில்லையடா
என்னை மன்னித்துவிடு ரோக்கி
அம்மாவை மன்னித்துவிடு!

நான் உன்னை புரக்கணிக்கவில்லை
ஐயகோ, அப்படி மட்டும் எண்ணிவிடாதே
நீ என்னிடமிருந்துப் பறிக்கப்பட்டாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாய்

என்னை வெறுத்துவிடாதே ரோக்கி
இப்படி ஏதேனும் நிகழும் என்ற அச்சத்தால்
பெக்கியை உனக்குத் துணையாக்கினேன்
உன்னை நான் தனிமையில் விடமாட்டேன்!

என்னை நினைக்கின்றாயா ரோக்கி?
என் நினைவு இருக்கின்றதா?
மறந்துவிடு மகனே
மகிழ்வாய் இருந்துவிடு மகனே

இந்தத் துன்பம் என்னோடு போகட்டும்
என்னை நினையாதே
நினைத்து உருகும் வாழ்க்கை உனக்கு வேண்டா
நீ நன்றாய் வாழ வேண்டும்!

தூக்கி தூக்கி வளர்த்தேனடா
துயில்வதைக் கூட இரசித்தேனடா
வாஞ்சையில்லா உன் அன்பு
வஞ்சனைக்கொண்ட மனிதர்க்குப் புரிவதில்லை

எப்படி புரியவைப்பேன் உனக்கு?
என்னை மன்னித்துவிடு ரோக்கி
பாதியில் விட்டுச்சென்ற என்னை
மன்னித்துவிடு மகனே...


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

கிளியோபாட்ரா & அண்டனி


சீசர் இறந்துவிட்டான்
சீற்றத்தில் துடித்தாள் கிளியோபாட்ரா
கண்ட நாள்முதல் காதலில் திளைத்தவள்
கண்ணீர் நதியினில் மூழ்கிச் சாகின்றாள்!

நண்பன் இறந்துவிட்டான்
நாடித் துடிக்கிறதே
திரோகம் இளைத்தவரை
தீர்த்திட முயல்கிறதே
வருகின்றான் அண்டனி
வஞ்சம் தீர்த்திட‌
சவத்தின் முன்னாலே
சபதம் ஏற்றிட...

தங்க ஆடையில்
தகதகக்கும் பீடத்தில்
தெய்வம் போல் மின்னிட‌
தாரகையும் காட்சி தர,
பிரமாண்டம் கண்திகைக்க‌
பித்து போல் அவன் நிற்க‌
பிடித்தது காதல் நோய்
பின்விளைவுதான் என்னவோ?

சீசரை மயக்கியவள்
சிரிப்புடனே நெருங்கினாள்
அசைவுகள் ஏதுமின்றி
அண்டனி சிலையானான்!

உணர்ச்சிகள் கலந்தன‌
உடல்களும் இணைந்தன‌
காலம்தான் பொறுக்குமா
காதல்தான் நிலைக்குமா?

சீசரின் உறவொன்று
சீறித்தான் வந்ததுவே
ஆண்டனி உயிர்க்கொய்ய‌
ஆவலாய் முயன்றதுவே!

வெடித்தது போர் ஒன்று
விலகினான் அண்டனியும்
மங்கைப் பின் அவன் ஓட
மானமும் பறந்ததுவே!

தோல்வி மனக்கசப்பைத் தர‌
தீயாய் அது நெஞ்சைச் சுட‌
துவண்ட மன்னன்
தூரம் சென்றான்
விழிகொண்ட மங்கையை
விலக்கி வைத்தான்!

காதல் தலைவன்
சீறி விலக‌
கிளியோபாட்ரா
சமாதி சென்றாள்!

அண்டனி தலை வேண்டும்
ஆணையிட்டான் சீசர் மகன்
தந்துவிடு கிளியோபாட்ரா
தப்பிவிடும் எகிப்தின் தலை!

கண்ணியவள் கலங்கி நின்றாள்
காலனை வேண்டி நின்றாள்
அரியணை தனக்கு வேண்டாம்
அன்பனே போதும் என்றாள்!

காலம் கடந்ததுவே
காலன் வந்ததுவே
களத்தில் தோல்வியுற்ற
கண்ணன் மனமுடைந்து
கத்தியை உறுவினான்
கணத்தில் செலுத்தினான்!

செர்வியஸ் அதிர்ச்சியுற்றான்
செய்வதறியாது திகைத்து நின்றான்!

கணங்கள் எனக்கில்லை
கிளியோவை காண வேண்டும்
காரணம் சொல்லாதே
கண்டிப்பாய் சேர்த்துவிடு
கரகரத்தான் அண்டனி!

கிளியோபாட்ரா சமாதியில்
காதல் கண்ணியின் மடியில்
கடைசி நேரத்து மூச்சை
காதல் முத்தத்தில் கலந்தான்!

சோகத்தைத் தாளாதவள்
சர்ப்பத்தின் துணை கொண்டு
சாவை வரவேற்றாள்
சரித்திரத்தில் இடம்பெற்றாள்!

அழிந்தது இரு உடல்கள்
ஆண்டுகள் பல கடந்தும்
வாழ்கிறது காதல்
வாழ்த்துவது சரித்திரம்!





வெள்ளி, 27 மே, 2016

நிரந்தரமில்லை...


இதுவும் நிரந்தரமில்லை 
அதுவும் நிரந்தரமில்லை 
சுற்றும் உலகில்
எதுவும் நிரந்தரமில்லை!

நேற்று அழுதவன் 
இன்று சிரிக்கிறான்
இன்று சிரிப்பவன்
நாளை அழுகலாம்...

மாடியில் இருப்பவன் 
குடிசைக்கு வரலாம்
குடிசையில் இருப்பவன்
மாடி ஏறலாம்...

இன்றைய காதலி மனைவியாகலாம்
நேற்றைய நண்பன் பகைவ‌னாகலாம்
பெற்ற தாயும் மறைந்துப் போகலாம்
வாழ்க்கை என்பதே வெறுத்துப் போகலாம்

நேற்றைய பழக்கம் மாறி போகலாம்
புதியன அனைத்தும் வந்து சேரலாம்
நண்பர் கூட்டம் பெருகிப் போகலாம்
அடுத்த நாளே இறந்துப் போகலாம்!

இதுவும் இல்லை
அதுவும் இல்லை
வாழ்க்கையில் எதுவும்
நிரந்தரமில்லை!

செவ்வாய், 29 மார்ச், 2016

நான் பன்முகம் கொண்டவள்!



அன்பொழுகும் ஒரு முகம்
ஆண்மையான‌ ஒரு முகம்
இம்சைத் தரும் ஒரு முகம்
ஈகை செய்யும் மறு முகம்...

உண்மையான ஒரு முகம்
ஊர்ச்சுத்தியாய் ஒரு முகம்
எளிமையான ஒரு முகம்
ஏற்கவியலா மறுமுகம்...

ஐயம் தரும் ஒரு முகம்
ஒழுக்கமில்லா ஒரு முகம்
ஓவியமாய் ஒரு முகம்
ஒளவியம் கொண்ட மறுமுகம்...

பன்முகங்கள் எனக்குண்டு
எந்த முகம் வேண்டுமென்று
தீர்மானம் நீயே செய்வாய்
கண்களில் அதையே காண்பாய்!

சனி, 20 செப்டம்பர், 2014

மீட்டெடுப்பேன்!

தனித்திருந்த காலமெல்லாம்
தவித்துத் துடித்துவிட்டேன்
பதுங்கியிருந்த நேரமெல்லாம்
புலம்பித் தீர்த்துவிட்டேன்!
இனி தனித்திருக்கப் போவதில்லை
புலம்பி அழ நேரமில்லை
மீண்டும் வந்துவிட்டேன்
என்னை நானே மீட்டெடுப்பேன்! 

புதன், 12 மார்ச், 2014

சுவர்க்கம் வேண்டாம்!


மாலை வேளை,
அழகிய நடைப்பாதை
நீண்ட நடைப்பயணம்
ஆழ்ந்த சிந்தனை…
தீடீரென உணர்கிறேன்!

நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன்
கவலையற்று இருக்கிறேன்
அனைத்தையும் மறந்திருக்கிறேன்
’என்னை’ இழந்திருக்கிறேன்!

மனிதர்கள் அதிகமில்லை
பேய்களின் கூச்சலில்லை
தெய்வத்தின் தோன்றல் இல்லை
சுற்றத்தித்தில் இறைச்சல் இல்லை!

இங்கே அதிசயம் நிகழ்கிறது
சூரியனும் சந்திரனும் ஒருங்கே காண்கிறேன்
உடலில் வெளியேறிய வியர்வைத் துளிகள்
நொடிகளில் காய்ந்து மறைகின்றன!

சாலை, வாகனங்கள், மரங்கள்
ஓவியம் போன்ற வீடுகள்…
எனது உலகம் போலவே இருக்கிறது
ஆனால், இது என்னுலகம் இல்லை…

எனது இதயத்தின் துடிப்பை கேட்க இயலவில்லை
நடையைத் துறந்து ஓடுகிறேன்
என்னிதயம் இன்னமும் மெதுவாகவே துடிக்கிறது
சுவர்க்கத்தில் இதயத்தின் படபடப்பு குறைந்துவிடுமோ?

இங்கே காற்றின் இறைச்சலும்
இலைகளின் சலசலப்பும் மட்டுமே கேட்கின்றன
மனிதர்களின் பேச்சுக்குரல் அதிசயமாக ஒலிக்கிறது
காணும் இடமெல்லாம் அற்புதம் நிறைந்திருக்கிறது!

இது தேவதைகளின் வசிப்பிடம்
இங்கே துன்பம் இல்லை, கவலை இல்லை
மனிதர்கள் தொல்லை இல்லை, உறவுகள் இல்லை
இங்கே நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை!

இது சுவர்க்கம்!
சுதந்திரமான, அமைதியான சுவர்க்கம்!

ஆனால்…
சொர்க்கம் இறந்தவர்களுக்குத்தானே?

நான் வாழ வேண்டும்
எனக்கு என்னுலகம் வேண்டும்
மனிதர்களின் பேச்சுக்குரல்கள் சூழ்ந்த உலகம்
நண்பர்களும் எதிரிகளும் நிறைந்த உலகம்
என் இதயத்தைத் துடிப்போடு வைத்திருக்கும் உலகம்!

கண்களில் நீரை வரவழைக்கும் உலகம்
என் இதயத்தைக் குத்திக்கிழிக்கும் உலகம்
என்னை மகிழ்ச்சியில் குளிப்பாட்டும் உலகம்
என்னை உயிரோடு வைத்திருக்கும் உலகம்!

ஆம்,
எனக்குச் சுவர்க்கம் வேண்டாம்!
என் உலகம் வேண்டும்!


புதன், 1 ஜனவரி, 2014

துரத்தும் நினைவுகள்…


மரண பயம் அடிக்கடி வருகிறது
நண்பன் மறைந்ததும் மாமா இறந்த்தும்
இன்னமும் கனவு போல் உள்ளது!

நள்ளிரவில் திடீரென உயிர்பயம் வருகிறது
இதயம் துடிக்கும் ஒலி கலக்கத்தை ஏற்படுத்துகிறது
இந்த ஒலி நின்றுவிட்டால் என்ன ஆகும்?
நான் எங்கே செல்வேன்? என்னுடன் யார் வருவார்?
தனிமையில் சிறைப்பட்டுக் கிடப்பேனா?
அல்லது சிறகடித்துப் பறப்பேனே?

எதற்காக இந்த வாழ்க்கை
ஏன் இந்த உலகிற்கு வந்தோம்?
எப்படி வாழ்ந்தோம்? ; திரும்பிப் பார்க்கிறேன்…

பாட்டில் ஊஞ்சல் ஆடுகிறாள்
பக்கத்தில் நானும் சில பிள்ளைகளும்
ஏதோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்..

நானும் சிறுவர்களும் எங்கோ ஓடுகிறோம்
திடீரென தடுக்கி விழுந்து கால் முட்டி தேய்கிறது
பிய்ந்த சதையின் ஊடே எலும்பு தெரிய
பாட்டி கண்ணீர் வடிக்கிறார்…

அழகான மாலை வேலை
மேகம் பூமாரி பொழிகிறது
நான் தோழிகளுடன் ஆனந்தமாக ஆடுகிறேன்
பாட்டி வருகிறார்; அனைவரும் ஓடி ஒளிகிறோம்…

நினைவு தடைப்படுகிறது…
இவ்வளவு அழகான வாழ்க்கையா எனது?
மீண்டும் திரும்பிச் செல்ல ஆசைதான்…
வழி யார் அறிவார்?

பள்ளிக்கூடம் தெரிகிறது
ஒவ்வொரு அறையும், பள்ளித் திடலும்
இன்னமும் பசுமரத்தாணியாய் நெஞ்சில்,
அதோ நான்! புத்தம் புதிய சீருடையில்!
’அம்மா’ இந்த சொல்லைக் கூட படிக்கத்தெரியவில்லையே
ஆசிரியரின் பிரம்பு கையை பதம் பார்க்கிறது
கண்களில் கண்ணீர்; கைகளில் சரஸ்வதிப் படம்!

அடுத்தது மலாய் வகுப்பு
பச்சை நிற வண்ணத்தைக் காட்டி ஆசிரியர் ஏதோ கேட்கிறார்
எனக்கு எதுவும் விளங்கவில்லை
மிரண்ட விழியால் அவரைப் பார்க்கிறேன்
என்ன செய்யப் போகிறார் என்று அறிவதற்குள்
‘ஹீஜாவ்’ என்று சொல்லி தொடையை அழுத்திக் கிள்ளுகிறார்
கண்களில் மீண்டும் கண்ணீர்…

முட்டாளாக இருந்திருக்கிறேன்
பிறகு எப்படி இப்படி மாறினேன்?
அதோ மனக்கண்ணில் தெரிகிறது
நான் மூன்றாம் ஆண்டில் இருக்கிறேன்
ஆசிரியர் வருகிறார்
புதிய தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்கிறார்
இல்லை, புதிய எழுத்துகள் இல்லை
எழுத்துருமாற்றம்!
அனைவரும் குழம்புகின்றனர்
நான் தெளிவாகிவிட்டேன்!

மலாய் பேச்சுப்போட்டி வருகிறது
கைத்தூக்கி நானாக பெயர் பதிகிறேன்
காலை மாலை மனனம் செய்கிறேன்
இதோ பரிசு! மலாய் மாலை வகுப்பிற்கு நான் தலைமை!

பள்ளி வாழ்க்கை நன்றாக போகிறது
மிக மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன்
இது ஐந்தாம் ஆண்டு!
கொடூர முகத்துடன் கணக்காசிரியர்
எதிரே நான் மட்டும்
என்னமோ சொல்லி திட்டுகிறார்
இடைஇடையே குடும்ப விவகாரங்களும் கேட்கிறார்
கண்களில் நீர் இடைவிடாமல் சுரந்துக்கொண்டிருக்கிறது!
ஜன்னல் வழியே சிலபேர் வேடிக்கைப் பார்க்கிறார்கள்!

பாட்டி வீட்டு ஜன்னலின் அருகே நான்
ஏதோ செய்கிறேன்… ஓ கணக்குப் படிக்கிறேன்!
இப்போது அனைத்துப் பாடமும் கைவசம்
பள்ளியில் யாரும் திட்டுவதில்லை
அனைத்துப் போட்டிகளிலும் பரிசு வாங்கி குவித்தாயிற்று!
ஆரம்பப்பள்ளி முடிவில் சிறந்த மாணவி பட்டம்!
அப்பப்பா, இத்தனைக் கோப்பைகளா? நானா வாங்கியது??

பதிநான்கு வயது
அது ஒரு ஞாயிறு காலை
தொலைப்பேசி அலறுகிறது
சில நொடிகளில் பாட்டி என்னை அழைக்கிறார்
என் தமிழாசிரியர் பேசுகிறார்
‘வாழ்த்துகள், உனது முதல் சிறுகதைக்கு’
ஓடிச்சென்று நாளிதழைப் புரட்டுகிறேன்
இதோ! என் கதை! எனது முதல் சிறுகதை!
பெருமையால் முகம் பூரிக்கிறது!

அடுத்தது எத்தனையோ கதைகள்
சில எழுத்தாளர் சந்திப்புகள்
நானும் எழுத்தாளர்?!

அதோ, பாழடைந்த வீடு
உள்ளே செல்கிறேன்
முதல் அறையைத் தாண்டி இரண்டாம் அறை
இங்கேதான் சிறுவயதில் பாட்டியுடன் படுத்திருப்பேன்
அந்தக் கட்டில் அப்படியே இருக்கிறது
இங்கே விடிவிளக்கு ஒன்று இருக்குமே
அதில்தானே திருட்டுத்தனமாக இரா முழுவதும் கதை படிப்பேன்!

வரவேற்பறை, தொலைக்காட்சி, வானொலி
அனைத்தும் அப்படியே இருக்கிறது
மாலை பொழுதுகளில் இப்படி அமர்கிறேன்
பாடல் கேட்கிறேன்; பாட்டி ‘மைலோ’ கொடுக்கிறார்
இது எனது தினசரி நடவடிக்கையாய் இருந்திருக்கிறது!

அந்த ஜன்னல் ஓரம்
இங்குதான் பல மணி நேரம் நான் உட்கார்ந்திருப்பேன்
இங்குதான் படிப்பேன்; உணவருந்துவேன்
வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்
எனக்கு மிகவும் பிடித்த ஜன்னல் ஓரம்!
‘எனது இடம்’ என்று எழுத்தப்படாத சொத்து!

ஜன்னல் ஓரம் அமர்கிறேன்
கார்த்திகாவின் அம்மா செல்கிறார்
‘மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’
கிண்டலாக பாட்டுப் படிக்கிறேன்
விளையாட்டாக அடிக்க வருகிறார்!

கார்த்திகா! ஆம், என் பின் வீட்டுத் தோழி!
சமையல்கட்டிற்கு வந்து பின் வாசல் கதவைத் திறக்கிறேன்
அதோ! இன்னொரு ஜன்னல்!
அந்த இரட்டை மாடி பலகை வீட்டில்
நன்றாகப் பாருங்கள்!
‘கார்த்திகா’ என்று கத்தினால்
அவள் எட்டிப் பார்ப்பாள்
இருவரும் இப்படி கத்திக் கத்திப் பேசி இருக்கிறோம்
எத்தனையோ நாட்கள் அவள் இங்கும் நான் அங்கும்
ஒன்றாக சாப்பிட்டிருக்கிறோம்
அவள் முன் அடிக்கடி அழுதிருக்கிறேன்
ஆனால், அவள் அழுது பார்த்த்தில்லை!

பாட்டி
அதோ என் பாட்டி
தினமும் சேலை அணிந்து
உடல் சோராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்
பாட்டி சமையல் இன்னமும் மணக்கிறது
‘என்ன சிந்தனை’ என்று அடிக்கடி கேட்பார்
நான் சிந்திக்கிறேன் என்று அப்போதுதான் நினைவு வரும்!
தாயின் பாசம் அறியவில்லை; பாட்டியின் அன்பு அறிந்திருக்கிறேன்.

சமையல் அறையில் இருக்கிறேன்
எவ்வளவு விலாசமாக இருக்கிறது
இங்குதான் அமர்ந்து காய்கறி நறுக்குவேன்
இங்குதான் தேங்காய் துருவுவேன்
இங்கே இருந்த அம்மிக்கல் எங்கே?
இதோ தொட்டில் கட்டும் இடம்
எத்தனை குழந்தைகளைக் தூங்க வைத்திருக்கிறேன்?

குழந்தை?! கனகேஸ்வரி! எங்கே அவள்?
என் அத்தை மகள்
பிறந்த மூன்றாவது நாள் கையில் ஏந்தினேன்
ஒரு விரலைக் கொடுத்தால் கெட்டியாகப் பிடித்துக்கொள்வாள்
தலையை வருடி மணிக்கணக்காக அமர்ந்திருப்பேன்
அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தாலே கவலைகள் தீரும்
உடை மாற்றி, பாலூட்டி, கொஞ்சிக் கொண்டிருப்பேன்
நல்ல வேலை, அவளும் பாட்டி வீட்டில் வளரப்போகிறாள்
என்னைப் போல!

மூம்று வயது வரை அவள் என்னுடன் இருந்தாள்
பின்னர் தாயுடன் சென்றுவிட்டாள்
அவளைத் தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிறேன்
புரண்டு படுக்க முயற்சிக்கிறாள்
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
இதோ! புரண்டுவிட்டாள்!
’பாட்டி!! கனகேஸ் குப்பாந்துவிட்டாள்”
அலறி பாட்டியை அழைக்கிறேன்
அனைவரும் அதனைப் பார்த்து மகிழ்கின்றனர்!
இப்படியே ஒருநாள் தவழ ஆரம்பித்தாள்
உட்கார்ந்தாள்; முட்டியிட்டாள்; நின்றாள்
நடைப்பயிலவும் ஆரம்பித்தாள்…
அவள் ஓடுகிறாள்; நான் துரத்திப் பிடிக்கிறேன்
இப்போது ‘அக்கா’ என்று அழைக்கிறாள்!
எத்தனை வளர்ச்சிகள்! அத்தனையும் என் கண் முன்னே!

என் திருமணத்தில் பார்த்தேன்
என் தோளுயரம் இருக்கிறாள்
வளர்ந்துவிட்டாள்; என் முதல் குழந்தை!

சமையலறையை ஒட்டிய அறைக்குச் செல்கிறேன்
இங்குதான் என் அண்ணன்கள் இருந்தார்கள்
இங்குதான் சிறுவயதில் விளையாடுவோம்
அண்ணன்களுக்குப் பிறகு என் அறையாகிப்போனது…

’தட்டுங்கள் திறக்கப்படும்’
கதவின் முன்னே நான் எழுதியது
இன்னமும் அழியாமல் இருக்கிறது
உள்ளே செல்கிறேன்; என் கடந்தகாலத்திற்குச் செல்கிறேன்
அறை முழுக்க ஓவியங்கள், தன்னம்பிக்கை வாசகங்கள்!
என்னுடையது! என்னுடையதா இது??
இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறேன்!
இப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறேன்!

கதவை தாழிடுகிறேன்
கதவின் பின்னால் நான்கு வரி கவிதை
‘நான் ஓர் புரியாத புதிர்
விடை தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம் –ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி’!
எப்போது எழுதினேன்??
சரியாக நினைவில்லை
பதிமூன்று வயதாக இருக்கலாம்…

என் புத்தக அலமாரி
எத்தனை புத்தகங்கள்? மு.வா.’வின் நாவல்கள்?
பழம்பெரும் தமிழ் அகராதி
அதன் பக்கங்கள் கூட நைந்துவிட்டன
இவ்வளவு மலாய் நாவல்களா?
என்னதிது? ஓ, நான் எழுதிய சிறுகதைகள்
ஓவிய புத்தகங்கள்; பாடநூல்கள்….
இவையெல்லாம் எங்கே? காலியாகிக் கிடக்கிறதே?

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
அறையில் மூலைகளில் சிலந்தி வலைகள்
நான் ஒட்டி வைத்த ஓவியங்கள் தூசிப்படிந்து கிடக்கின்றன
பல ஓவியங்களை யாரோ கிழித்திருக்கிறார்கள்
சில வாசகங்கள் அழியாமல் இருக்கின்றன
இந்த அறை! இதில்தான் நான் பல இரவுகளை கழித்திருக்கிறேன்
இங்குதான் என் சிந்தனை துளிர்விட ஆரம்பித்துள்ளது!

இல்லை! இது என் அறை இல்லை!
எப்படி இப்படி ஆனது? பாட்டி எங்கே?
பாட்டி! ஓ, வயதாகிவிட்ட்து அவருக்கு
மகள் வீட்டில் இருக்கிறார்
அனைத்தையும் மறந்துவிடுகிறாராம்
என்னை மட்டும் ஞாபகம் இருக்கிறது
பெயரை அழகாகச் சொல்கிறார்
நான் என்ன செய்வேன் என்றும் சொல்கிறார்
அவ்வளவு ஞாபகம், என்னைப் பற்றி மட்டும்!

அவர் எலும்பின் வடிவங்கள் தெளிவாகத் தெரிகின்றன
வெற்றெலும்பின் மேல் தோல் சுற்றியது போல் இருக்கிறார்
கைகள் நடுங்குகின்றன… பார்வை குறைந்துவிட்டதாம்
அவரால் சொந்தமாக சேலை கட்ட முடியவில்லை
எத்தனைப் பேருக்குச் சேலை கட்டிவிட்டவர்??
நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாராம்!
எப்படி? அதற்குள் எப்படி? அவ்வளவு சீக்கிரமாக?
எனக்கும் இதே கதி தானா?

அதோ, கார்த்திகா கத்துகிறாள்
பின் கதவைத் திறக்கிறேன்
தலையணை நனைந்திருக்கிறது
நான் இன்னும் உறங்கவில்லை
எங்கே இருக்கிறேன்?
குரட்டைச் சத்தம் வருகிறது
பக்கத்தில் கணவர்!






வியாழன், 19 டிசம்பர், 2013

நண்பேன்’டா!

நினைத்துப்பார்க்கவில்லை
நிம்மதியாய் சென்றுவிட்டாயே
எங்கள் நிம்மதியைக் கொன்றுவிட்டாயே!

‘நான் செத்தால் நீ வரமாட்டியா?’
நாம் வழக்கமாக சொல்லும் வாசகம்தான்
நீ செத்தாய், நான் வந்தேன்
நான் செத்தால், யார் வருவார்?
நண்பன் நீ சென்றுவிட்டாயே?

என் பிறந்தநாள்
நீ இறுதியாக என்னை அழைத்திருந்தாய்
உன் அழைப்பினை நான் தவறவிட்டேன்
இன்று உன்னையும் இழந்துவிட்டேன்

ஏழு வயது தொடங்கிய நட்பு
ஏமாற்றத்தில் விட்டுச் சென்றதே
அமைதியின் சின்னம் நீ
ஆசிரியர்களின் செல்லம் நீ
அடிக்கடி மயங்கிவிழுவாய்
நாங்கள் பதறிதுடிப்போம்
நன்றாகப் படித்தாய்
நட்புடன் பழகினார்
உதவி என்று கேட்டுவிட்டால்
மறுக்காமல் உதவினாய்
இறுதியில், இன்னொரு உயிருக்கு உதவச் சென்று
உன்னுயிரைத் தந்துவிட்டாயே!

யாருக்கு வரும் இந்த மனம்?
யாருக்குத் தெரியும் உன் குணம்?

என் மகிழுந்து உனக்கு மிகவும் பிடிக்கும்
நான் ஊருக்கு வரும் போதெல்லாம்
உன் காரை நிறுத்திவிட்டு என் காரை ஓட்டச் சொல்லுவேன்
இரசித்து ஓட்டுவாய்… ‘நன்றாக இருக்கிறது’ என்பாய்
நீ போனதிலிருந்து அதனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை!

நான் கேட்காமலேயே பல உதவிகள் செய்தவன் நீ
என் கார் ஊரின் விரைவுச்சாலை சாவடிப் பக்கம் வந்தாலே
உன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துவிடும்
எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறாயோ தெரியவில்லை!

சொந்த மண்ணுக்கு வரும்போதெல்லாம்
உன்னை சந்திக்க மறந்ததில்லை
எவ்வளவு வேலைகள் இருந்தபோதும்
ஒரு போதும் நீ சந்திக்க மறுத்ததில்லை!

’நீ வரும் போதுதான் எனக்கு நிறைய வேலை வருகின்றன
வேலையை விட்டுவிடு, என் காரியதரிசி ஆகிவிடு’ என்பாய்
வேலைகளைச் சாமர்த்தியமாக பிறருக்குக் கொடுத்துவிடுவாய்
சந்தோஷமாய் இருக்கும்! நட்பிற்கு நீ கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கையில்…
சங்கடமாய் இருக்கும்! உன் வேலைகளை கெடுக்கிறோமோ என்ற குற்ற உணர்ச்சியில்…

உன்னை மறக்கவே முடியவில்லை
நீ இல்லை என்பதை ஏற்க முடியவில்லை
செல்லும் இடமெல்லாம் உன் நினைவுகள்
நீ பேசிய வார்த்தைகள், நமது சந்திப்புகள்
எல்லாமே என்னை நோகச் செய்கின்றன!

என் வார்த்தைக்கு மறு வார்த்தை நீ பேசியதில்லை
சொல்வதெல்லாம் கேட்பாய்
அறிவுரைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வாய்
நீ புகைப்பிடிப்பாய், இதுவரையும் என் முன் புகைத்ததில்லை
மது அருந்துவாய், அதன் வாடை கூட பெண்கள் மேல் பட்டதில்லை
யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம் நீ
ஒரு நல்ல நண்பனின் இலக்கணம் நீ!

இறுதியாக நாம் சந்தித்தது நினைவிருக்கிறதா?
எனக்குச் சரியான காய்ச்சல், மருந்தும் சாப்பிடவில்லை
விடியற்காலை 2 மணிக்கு நீ அழைத்தாய்
‘நீ மருந்து சாப்பிடமாட்டாய், பரவாயில்லை.
கீழிறங்கி வா, சாப்பிட போவோம்’ என்றாய்
நான் இன்னும் சாப்பிடவில்லை என்று அறிந்து வைத்திருந்தாய்
காய்ச்சலுக்குக் கோழிச்சாறு நல்லது என்று யாரோ சொன்னார்கள்
கடைகடையாய்  ‘கோழிச்சாறு’ கிடைக்குமா என்று தேடினாய்
வேண்டாம் என்று மறுத்தபோதும், நீ விடவில்லை!
இறுதியாய் கடைக்கு வந்து சாப்பிட்டோம்
நீ பரிதாபமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்!
உன் கண்ணில் இருந்த இரக்கம் வேறெங்கும் கண்டதில்லை!

’என் நண்பன் இருக்கிறான்’
என்ற காரணத்திற்காகத்தான் நான் ஊருக்கே வருவான்
இப்பொழுது யாருக்காக வருவது?
என் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்
உன் அண்ணனிடம் கொடுத்தேன்
சிரிப்பு ஒரே கணத்தில் அழுகையாக மாறும் என்று ஒருபோது நினைத்ததில்லை!

இன்னமும் என்னை அழ வைக்கிறாய்!
என் கண்ணங்கள் கண்ணீரில் நனைய எழுதுகிறேன்
இது கவிதை அல்ல, கட்டுரையும் அல்ல
உனக்காக நான் எழுதும் மடல்!

உன் இறப்பு என்னை மிகவும் பாதித்துவிட்டது!
எத்தனை முறை அழுதுவிட்டேன் தெரியுமா?
இன்னமும் கண்ணீர் வற்றவில்லை
இப்படியொரு நண்பன் யாருக்கும் கிடைக்கமாட்டான்!

உன் இறுதி ஊர்வலம்!
உயிரற்ற உன் சடலத்தைப் பார்க்கவும் முடியவில்லை
தூங்குவது போல இருந்தாயடா!
கண்ணீர்விட்டு கதறியழுதோம்!
முடியவில்லை நண்பா! திரும்பி வந்துவிடு!
உலகத்தில் உயர்ந்தது காதல் என்றால்,
அவன் மீது காறி உமிழ்வேன்!
நல்ல நட்பினைப் போல் உயர்ந்த்து வேறெதுவுமில்லை!
காதல் என்னை அழ வைத்ததுண்டு…
ஒரு முறை அழுவேன், பின்னர் மறந்துவிடுவேன்
உன் நட்பு இன்னமும் என்னை அழவைக்கிறது!

உன்னைச் செல்லமாக ‘டோன்’ என்றழைப்போம்
ஊருக்கு நீ நிஜமான ‘டோன்’ தான்
எங்களுக்கு மட்டும் ‘சிரிப்பு டோன்’!
அவ்வளவு சிரிக்க வைத்தாய்!
வயிறு குலுங்க, கன்னம் வலிக்க சிரித்திருக்கிறோம்!
இப்பொழுது நெஞ்சம் எரிய அழுகிறோம்!

முடியவில்லை நண்பா
நண்பேன்’டா என்று அடிக்கடிச் சொல்லிக்கொள்வோமே
இப்பொழுது எங்கே சென்றுவிட்டாய்?

உன் நினைவுகளை எங்கெங்கும் சுமந்துச் செல்கிறேன்
கேரளா சென்றேன், மலையாளம் பேசினார்கள்
என் நண்பன் மலையாளி என்றேன்
என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின
அன்றிரவு முழுதும் அழுதேன்; கண்ணீர் நிற்கவில்லை!
இன்று அமெரிக்காவில் இருக்கிறேன்!
ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கிறேன் நண்பா
உன் நினைவுகள் மட்டும் அருகில் இருக்கின்றன!
இங்கும் அழுகிறேன்! இன்னமும் நெஞ்சம் வலிக்கிறது!
ஏனென்னை விட்டுச் சென்றாய்??!!

அடுத்தத் திங்களோடு
நீ மறைந்து ஓர் வருடமாகிறது!
நாட்கள்தான் ஓடியதே தவிர-உன்
நினைவுகள் இங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன!

உன்னைப் போல் நண்பன்
இனி எனக்குக் கிடைக்கமாட்டான்!
இறந்தும் வாழ்கிறாயடா –ஏனெனில்
நீ என் நண்பேன்’டா!



ஞாயிறு, 14 ஜூலை, 2013

எழுத்தாளராகப் பாருங்கள்!



எழுத்தாளராக பாருங்கள்
எம்மை எழுத்தாளராக மட்டும் பாருங்கள்
எம் அவயங்களைப் பார்க்காதீர்
எம் பின்னனியைப் பார்க்காதீர்
எம் பாலினத்தைப் பார்க்காதீர்
எம்மைப் பெண்ணாகப் பார்க்காதீர்!

பெண்ணுறுப்பு இருப்பதனால்
பெருந்தன்மைக் காட்ட வேண்டாம்
வளைவுகள் இருப்பதனால்
விருதுகள் கொடுக்க வேண்டாம்
விரிந்த இலக்கியத்தில்
வித்தியாசம் கொள்ள வேண்டாம்!

மருமகன் என்பவன்
மறுவீடு செல்வதில்லை
தாய்வீட்டில் இருப்பதனால்
மாமியார் சண்டை இல்லை!
மருமகள் என்பவள்
புகுவீடு செல்வதனால்
புதிய இடம் என்பதனால்
பிரச்சனையில் வியப்பில்லை
பலருக்கு இது புரிவதில்லை!

எழுத்தாளரைப் பெண்ணாக்கி
பெண்ணை மருமகளாக்கி
அவளைப் பிரச்சனையாக்கி
பெருவிழாவில் பேசுகின்றீர்
'பெருந்தன்மை' காட்டுகின்றீர்!
பேனாவைப் பிடித்துக்கொண்டு
'பெண்ணாக' அமர்ந்துக்கொண்டு
எழுத்தாளர் பார்க்கின்றார்
கைத்தட்டி இரசிக்கின்றார்!

எப்போது வருந்துவார்?
எப்போது திருந்துவார்?
பெண் என்பவள் மனிதன் என்று
எப்போது உணருவார்?

பிரித்துப் பார்க்காதீர்
பாகுபாடு கொள்ளாதீர்
பரந்த இலக்கியத்தில்
பெண்னென்று ஒதுக்காதீர்!
படைப்பு என்று வந்தால்
படைப்பாளி ஒருவர்தான்
பாகுபாடு காட்டிவிட்டு
பெருந்தன்மைக் கொள்ளாதீர்!

எம்மை எழுத்தாளராகப் பாருங்கள்
எழுத்தாளராக மட்டும் பாருங்கள்!

வெள்ளி, 21 ஜூன், 2013

குடும்பம் எங்கே?


தந்தை உண்டு
பெயருக்கு பின்னால்
தாய் உண்டு ‍‍‍‍‍‍நான்
பிறந்ததற்கு அறிகுறியாய்
சொந்தங்கள் உண்டு
எடுத்தெம்மை வளர்த்ததினால்
ஆனால், என் குடும்பம் எங்கே?

வியாழன், 20 ஜூன், 2013

போராட்டம் வெல்லும்!



தம்பிகளே
மெழுகுவர்த்தியாய் உங்களையே உருக்குகின்றீர்
அதன் வெளிச்சத்தில் சில குள்ளநரிகள்
குளிர்காய முயல்கின்றன!


*****
எச்சரிக்கை!
எதிரி நமக்குள்ளே இருக்கிறான்
இனிக்க இனிக்க கதைக்கிறான்
கனவினை குழியினில் புதைக்கிறான்!


*****
சோர்ந்துவிடாதீர்
நம்பிக்கை இழக்காதீர்
உலகத் தமிழர் உன் பக்கம்
இதனை மட்டும் மறக்காதீர்!


*****
நாளை வரும் நல்வேளை வரும்
பேச்சுவார்த்தைக்கு ஆளும் வரும்
காலம் வரும் நல்ல காலம் வரும்
நம் கோரிக்கை யாவும் ஏற்கப்படும்!


*****


தங்கபாலு வந்ததில் தள்ளும் முள்ளும்
வெறுப்பினில் எறிந்தது செருப்பும் கல்லும்
நல்ல மானுடக்கழகு பல்லும் சொல்லும்-நம்
போராட்டம் இனி நிச்சயம் வெல்லும்!

வெங்காய வாழ்க்கை!


வாழ்க்கை ஒரு வெங்காயம்
உரித்து உரித்துப் பார்க்கிறேன்
கண்ணீரைத் தவிர ஒன்றுமில்லை!

மிருகங்கள் உயர்வானவை!



எந்த மிருகத்திடமும் நான் பாசம் வைத்ததில்லை
அவை எம்மை நெருங்கி வரவும் இல்லை
நான் அவைகளுடன் உரையாடுவதில்லை
அவை எம்மிடம் பொய்யுரைப்பதும் இல்லை
எவற்றிடமும் நான் உறவாடுவது இல்லை
அவை எம்மை ஏமாற்றுவதும் இல்லை!

#தயவுசெய்து கேடுகெட்ட மனிதனை மிருகத்துடன் ஒப்பிடாதீர்கள்.
 மிருகங்கள் உயர்வானவை!

திங்கள், 31 டிசம்பர், 2012

இப்பொழுதெல்லாம்…





இப்பொழுதெல்லாம்
பகல்கள் இரவாகின்றன
இரவுகள் பகலாகின்றன
பசியும் நித்திரையும் மறைகின்றன
ஏக்கமும் தவிப்பும் கூடுகின்றன

இப்பொழுதெல்லாம்
அழைப்பேசி கைகளில்
தலையணை அணைப்பினில்
நாள் முழுக்க இணையத்தில்
காதல் பொங்கும் இதயத்தில்.

இப்பொழுதெல்லாம்
தனியாக சிரிக்கிறேன்
தனிமையில் மகிழ்கிறேன்
கனவினிலே மிதக்கிறேன்
வாழ்க்கையை இரசிக்கிறேன்



வியாழன், 1 நவம்பர், 2012

பதில் கவிதை


 
ஆண்:
 
 தாரகையே....
நீ என்னவள் என்று நான் சொல்லிவிட்டேன்...
உனக்கு இன்னும் ஏன் தயக்கம்...?
தயங்காது துணித்து சொல்,
நான் உன்னவன் என்று...!!!
தொட்டு விடும் தூரத்தில் இல்லை நாம்...
தொடர்பற்று போகவில்லை நாம்...
தயங்காது சொல்...
தடுமாற்றம் இல்லாமல் சொல்...
தன்னிலை உணர்ந்து சொல்...
என்னை நம்பி சொல்...
நீ என்னவள் என்று.....!!!!


பெண்:



தாம்பூலம் மாற்றியவள்
உன்னவள் ஆகலாமா?
நீ ஒருவன் சொல்லிவிட்டால்
ஊருலகம் ஏற்றிடுமா?

தடுமாறி நிற்கின்றேன்
தன்னிலை மறந்துவிட்டேன்
தனிமையை நாடுகின்றேன்
தோழனே உதவி செய்!

மண்டியிட்டுக் கேட்கின்றேன்
மன்றாடி அழுகின்றேன்
இன்னொரு வலி வேண்டாம்
என் மீது கருணைக்கொள்!

உடைந்த இதயம்...



உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்
மண்ணினிலே புதைக்கலாம்!



வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நானும் ரோபோ!



எம் உணர்ச்சிகள் சாகடிக்கப்படுகின்றன
எனது நம்பிக்கைகள் நொறுக்கப்படுகின்றன
நம்பி நம்பி ஏமாந்து போவது வாடிக்கை
இனி என் வாழ்க்கை அனைவர்க்கும் வேடிக்கை!

இரவிருந்தால் பகல் வருமாம்
வெயில் சென்று மழை வருமாம்
இங்கு இரவும் இல்லை பகலும் இல்லை
வெயிலும் இல்லை மழையும் இல்லை…

மனிதனாக வாழ முயல்கிறேன்
இயந்திரமாய் இயங்க வைக்கிறது சூழல்
இனி ஆசை இல்லை உணர்ச்சி இல்லை
நானும் ஆகிறேன் ‘ரோபோ’…
கனவே நீ போ போ!

செவ்வாய், 3 ஜூலை, 2012

வலியும் அழுகையும்!