செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 8)





கீரா அண்ணாவின் அலுவலகத்தில் இணைய இணைப்பு இருந்தது. எனவே, எனது மின்னஞ்சல் மற்றும் முகநூல் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டேன். அருண்ஷோரியுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

கவிதாவின் வீட்டில் அனைவரும் விழித்திருந்தனர். திருமண முன்னேற்பாடுகள் வெகுவாக நடந்துக்கொண்டிருந்தன. மிகவும் சோர்வாக இருந்ததால் குளித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன். பெரிய சித்தி (கவிதாவின் சித்தி) தட்டு நிறைய புட்டும் குழம்பும் ஊற்றி எடுத்து வந்து கைகளில் திணித்தார். “வேண்டாம் சித்தி, பசியில்லை,” என்றேன். “நாள் முழுக்கச் சாப்பிடாமல் பட்டினி கிடந்துட்டு வெறும் வயித்தோட நித்திரைக்கொள்ள கூடாது. என்ன பழக்கமிது? கொஞ்சம் சாப்பிட்டு படும்மா,” என செல்லமாய் கடிந்துக் கொண்டார்.

அவரின் அன்புக் கட்டளையை எம்மால் மீற முடியவில்லை. இருந்த போதிலும் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் வயிறு முழுவதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. “முடியலைனா வச்சுடம்மா,” என பெரிய சித்தி எமது சங்கடத்தைப் புரிந்துக்கொண்டார். உணவை முடிக்காமல் பாதியிலேயே கொட்டுவது எமக்கு வருத்தத்தை அளித்தது. இருந்த போதிலும் எம்மால் அதனை உண்ணவும் முடியவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு மீதமிருந்த உணவைக் குப்பையில் எறிந்துவிட்டு தட்டினைக் கழுவி வைத்தேன்.

கவிதா, பாக்கியா, மேனகா மற்றும் கவிதாவின் உறவுக்காரப் பெண்கள் இருவர் அறையில் பேசிக்கொண்டே திருமண வேலைகளில் இலயித்திருந்தனர். நானும் திருமண விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த அணிச்சல்களை (கேக்) அட்டைப் பெட்டிக்குள் போடத் தொடங்கினேன். “பிள்ளை ரொம்பெ களைச்சி போயிருக்கா… போயி நித்திரைக் கொள்ளம்மா,” என பாக்கியா அக்கா பரிவோடு கூறினார். 

அப்போதுதான் நாளை எனது தம்பிகள் சென்னை வரப்போவது எனக்கு நினைவு வந்தது. நாளை காலை 7.30-க்கு விமான நிலையம் சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என அக்காவிற்கு நினைவுப்படுத்திவிட்டு அப்படியே படுத்துறங்கிவிட்டேன். அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் இந்தோனேசியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்த அத்தை கைப்பேசியின் மூலம் அழைத்துவிட்டார். தம்பிகள் வந்து சேர்ந்தவுடன் தமக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு நினைவுறுத்தினார்.

அதிக களைப்பாக இருந்ததால் எம்மால் சீக்கிரம் எழ முடியவில்லை. எமது மெத்தையும் தலையணையும் ‘என்னை விட்டு விலகாதே,’ என கதறியழுவது போல் இருந்ததால் பிரிய மனமில்லாமல் சற்று நேரம் கழித்துதான் எழும்பினேன். நான் எழும்பும் போது சின்னவன் அண்ணா வரவேற்பரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். “நேரமாகிடிச்சு…இப்ப வெளிக்கிட்டுப் போனாதான் நேரத்துல போய் சேர முடியும்,” என அவசரப்படுத்தினார்.

பாவம் தம்பி. இதற்கு முன்பு அவன் சென்னைக்கு வந்ததில்லையே. நேரத்திற்கு சென்று அவனை அழைத்து வர வேண்டும். தனியாக விடக் கூடாது என குளிக்காமலேயே, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வண்டியில் ஏறினேன். 7.30 மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தாயிற்று. விமானம் சற்று தாமதமாகத்தான் வந்திறங்கியது. விமான நிலையச் சடங்குகளை முடித்துக் கொண்டு தம்பிகள் தேவா மற்றும் தினேஷ் இருவரும் வெளியே வரும் போது காலை மணி 8.45 ஆகிவிட்டது.

தம்பிகளை அழைத்துக்கொண்டு நேரே தங்கும் விடுதிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், கவிதா அவர்களை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லியிருந்ததால் நேரே வீட்டிற்குச் சென்றோம். திருமண வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் கூட அவர்கள் விருந்தினர்களைக் கவனிக்கத் தவறவில்லை. தம்பிகள் இன்று சென்னையில் இருந்துவிட்டு நாளை பெங்களூர் புறப்படுவதாகத்தான் எண்ணியிருந்தார்கள். கவிதா தனது திருமணம் முடியும் வரையில் சென்னையில் இருக்குமாறு அவர்களை வற்புறுத்தியதால் அவர்களாலும் அவளது அன்பு வேண்டுதலை மீற முடியவில்லை.

சித்தி இடியாப்பம் பறிமாற தம்பிகள் இருவரும் உண்டு முடித்தனர். அதற்குள் நான் குளித்து ஆயத்தமானேன். “அக்கா பீஹூன் (நூடுல்ஸ் வகையைச் சார்ந்தது உணவு) நன்றாக இருந்தது. ஆனால் ஏன் அதில் குழம்பு ஊற்றிச் சாப்பிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை,” என தேவா சொன்னவுடன் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். “டேய், அது பீஹூன் இல்லை. இடியாப்பம்!” என்றேன். “இடியாப்பம் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். இங்கு சாக்லெட் நிறத்தில் இருக்கிறதே,?” என அசடு வழியக் கேட்டான்.

அன்று தி-நகரில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. தம்பிகள் இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்பினர். மழை காலமாக வேறு இருந்தது. திருமண வீட்டில் அனைவரும் வேலையாக இருந்ததால் அவர்களைத் தொந்தரவு செய்ய மனமில்லை. பாக்கியா அக்காவிடம் சொல்லி வாடகை வண்டி ஒன்று பேசச் சொன்னேன். நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரே வண்டி வந்துச் சேர்ந்தது. வாடகை வண்டி ஓட்டுனரும் ஈழத்தமிழர்தான்.
காலை 11.30 அளவில் தி-நகருக்குச் சென்றோம். சின்னவன் அண்ணா சொன்ன தங்கும் விடுதியில் சென்று பைகளை வைத்து விட்டு சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்கத் தொடங்கினோம். 7 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான பேரங்காடி! அதனை முழுதாக சுற்றிப் பார்க்கவே ஒருநாள் போதாது போலும். சுற்றி சுற்று வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது. பேரங்காடிக்கு புன்புறம் இருந்த ‘தலப்பாக்கட்டு பிரியாணி’ கடைக்குள் நுழைந்தோம்.

அப்போதுதான் வண்டி ஓட்டுநர் இன்னும் சாப்பிடவில்லை என்பது நினைவிற்கு வந்தது. அவரது கைப்பேசி எண்கள் இருந்ததால் அவரைத் தொடர்புக் கொண்டு நாங்கள் இருக்கும் உணவகத்திற்கு வரச் சொன்னோம். முதலில் மறுத்த அவர் எங்களின் வற்புறுத்தலின் பேரில் வந்துச் சேர்ந்தார். உண்டு முடித்த பின்னர், தம்பிகளை அங்கேயே விட்டுவிட்டு நான் கோயம்பேடு சென்றேன். கீரா அண்ணா இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபடுகிறார். அவரைச் சென்று காண வேண்டும். அண்ணாவின் முகம் வாடியிருந்தது. சிறிது நேரம் அவருடன் கதைத்துக் கொண்டிருக்கையில் தோழர் அருண்ஷோரியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார்.

அருண்ஷோரியிடம் தம்பிகள் தங்கியிருக்கும் இடத்தையும் அவர்களையும் பற்றிச் சொல்லிவிட்டு, நேரம் இருப்பின் அவர்களைச் சென்று காணுமாறு வேண்டிக்கொண்டேன். அவரும் செல்வதாக உறுதியளித்தார். அன்றைய தின போராட்டம் நிறைவுற்ற வேளையில் அவ்விடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்களையும் குறுந்தட்டுகளையும் வாங்கிக் கொண்டேன். தலைவர் பிரபாகரன் படம் போட்ட சாவி சங்கிலிகள் (கீ செயின்) சிலவற்றையும் மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக வாங்கிக் கொண்டேன்.

கனத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது. வாடகை வண்டி ஓட்டுநர் எமக்காகக் காத்திருந்ததால் அதிக நேரம் அங்கிருந்தவர்களுடன் எம்மால் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. கவிதாவிடம் இன்று சீக்கிரமே வந்து விடுவதாக உறுதியளித்திருந்தேன். இன்று மாலை பெண்ணுக்கு மருதாணியிடும் நிகழ்வு இருக்கிறது. நேரத்தில் சென்றாக வேண்டும். அடை மழையால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வண்டிகள் எல்லாம் படகுகள் போல் நீரில் செல்ல வேண்டிய நிலையாயிற்று.

மாலை 6 மணிக்கெல்லாம் வீடு வந்துச் சேர்ந்துவிட்டேன். மணப்பெண் இன்னும் தயாராகவில்லை. அவளை அலங்கரிக்கும் பொறுப்பு எம்மிடம் வந்தது. இன்று நமது கைவண்ணத்தைக் காட்டிவிடலாம் என அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினேன். என்னை என்னாலேயே நம்பமுடியவில்லை. அலங்காரம் செய்து அவள் ஒரு தேவதை போல் காட்சியளித்தாள். திருமண கலை அவள் முகத்தில் பிரகாசித்தது.

நேரம் குறைவாக இருந்ததால் எம்மால் குளித்து அலங்காரம் செய்ய முடியவில்லை. பரவாயில்லை, இன்று மணப்பெண் நானில்லையே என அதனை நான் பொருட்படுத்தவும் இல்லை. மணப்பெண்ணின் வேண்டுதலுக்கு ஏற்ப பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்துக் கொண்டேன். மருதாணியிடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறு குழந்தைகளும், வயதுப் பெண்களும், திருமணமான மாதுகளும் தங்கள் கைகளில் மருதாணியிட்டு அழகு பார்த்தனர். பச்சை மருதாணியின் மணம் வீடெங்கிலும் பரவிக் கிடந்தது. சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துச் சேர்ந்தனர்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சென்னைப் பயணம் (பாகம் 7)




அதிகாலை 5.30 மணிக்கே எழும்பிவிட்டேன். இன்று மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) மரணதண்டனையை எதிர்த்து நடந்துக்கொண்டிருக்கும் பட்டினி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஏற்கனவே இராஜ்குமார் அண்ணாவிடம் உறுதியளித்திருந்தேன். பட்டினி போராட்டம் என்பதை நினைவில் வைத்திருந்ததால் தானோ என்னவோ காலையிலேயே எனக்குப் பசிக்கத் தொடங்கிவிட்டது.

நான் பசி தாங்க மாட்டேன் என்பதை தோழர் அருண்ஷோரி முன்னதாகவே அறிவார். “உண்மையிலேயே கலந்துக்கொள்ளப் போகிறீர்களா?” என இரண்டு மூன்று தடவை நேற்று இரவே கேட்டுவிட்டார். கொடுத்த வாக்கிலும், கொண்ட இலட்சியத்திலிருந்தும் பின் வாங்குவது கோழைத்தனமானது. பசி தானே? அடக்கிக்கொள்ளலாம் என உறுதியாக இருந்தேன். கவிதாவின் சித்தி, “கொஞ்சம் சாப்பிட்டு போகலாமே?” எனக் கெஞ்சலாகக் கேட்டார். “வேண்டாம் சித்தி. சாப்பிட்டால் அதற்குப் பெயர் பட்டிப்போராட்டம் அல்ல,” என தெளிவுப்படுத்திவிட்டு, பசியை அடக்கிக்கொண்டு இருந்தேன்.

அருண்ஷோரி இரு சக்கர வண்டியில் எம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். நேற்றிரவு பெய்திருந்த மழையால் சாலையெல்லாம் சேராக இருந்தது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காலையிலேயே சென்னையின் அவசர வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. காலை மணி 9.30 போல் பட்டினி போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தோம். அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர். இன்னும் சிலர் நாளிதழ் மற்றும் சஞ்சிகைகளை வாசித்துக் கொண்டிருந்தனர். 80% பேர் கறுப்பு ஆடைகளையே அணிந்திருந்தனர்.

போராட்டம் நடக்கும் இடத்தின் வாசலில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் மரணதண்டனைக்கு எதிரான கண்காட்சி கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நான் வாசலில் நுழையும் போதே சிலர் வித்தியாசமாகப் பார்ப்பதாய் பட்டது. எல்லாம் மனப்பிராந்தி என அந்த நினைப்பை உதறித் தள்ளிவிட்டு அருண்ஷோரியுடன் கதைக்க முற்பட்டேன். கண்காட்சி கூடாரத்தைப் பார்வையிட்ட பிறகு நானும் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். ஈழத்துப் பாடல்கள் சில அவ்விடம் ஒலிப்பரப்பப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு பட்டினிப் போராட்டம் தொடங்கியது. சில பாடல்கள், மேடைப் பேச்சுகள் என நேரம் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது. “என்னையும் பிடிச்சிட்டு வந்து பட்டினி கிடக்க வச்சுட்டீங்களே,” என அருண்ஷோரி பாவமாகக் கேட்டார். “பின்னால் தண்ணீர் இருக்கிறது. தாகம் எடுத்தால் எங்கே சென்று குடித்துக்கொள்ளுங்கள்,” என பரிவுடன் கூறினார். “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,” என அதனையும் தவிர்த்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். சுற்றிலும் ஆண்கள்... என்னைத் தவிர வேறு ஒரு பெண் கூட அவ்விடம் இல்லை. இம்மாதிரியான போராட்டங்களில் பெண்கள் ஏன் முன்வருவதில்லை என வருத்தமாக இருந்தது. எனது மன வருத்தத்தை அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தினேன்.

“பெண்கள் யாரும் வருவதில்லையா?” என அவர் நிகழ்வு ஏற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டார். “நேற்றைய முன்தினம்தான் பெண்கள் இயக்கம் ஒன்று பட்டினி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். நிறையப் பெண்கள் வந்திருந்தனர்,” என அவர் கூறியது மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர் என சிலர் என்னை விசாரிக்க ஆரம்பித்தனர். ஒருசிலரிடம் மட்டும் உண்மையை கூறி பலரிடம் மேலோட்டமாக அருண்ஷோரியே எம்மை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் வந்து அருண்ஷோரிடம், “இவரை செங்கொடி பாசறையைப் பிரதிநிதித்துப் பட்டினி போராட்டத்தில் கலந்துக் கொண்டவர் என அறிவிக்கலாமா?” என கேட்டார். அருண்ஷோரி எம்மிடம் அனுமதி கேட்டார். கூடவே அதற்கான விளக்கமும் அளித்தார். சரியென்று தலையாட்டினேன். அட, நாமும் ஒரு கட்சிக்குத் தலைவியாகிவிட்டோமே என மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் மற்றொருவர் வந்து அருண்ஷோரியுடன் என்னவோ கதைத்துவிட்டுச் சென்றார். அருண் மெல்ல என் காதருகில், “உங்களிடம் நிதி கேட்கலாமா எனக் கேட்டார்கள்,” என்றார். நான் சிரித்துக்கொண்டே, “என்னால் அதிகமாக ஒன்றும் கொடுக்க முடியாது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன்,” என்றேன். அவ்விடம் வைக்கப்பட்டிருந்த நிதி உண்டியலில் எம்மால் இயன்றதைப் போடுகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் பார்த்துவிட்டார். “தெரிந்திருந்தால் பெரிய உண்டியலாக வைத்திருப்போமே?” என கிண்டலடித்துவிட்டுச் சென்றார்.

தோழர் ஒருவர் அருகில் வந்து, “நீங்கள் பவனேஸ்வரி துரைசிங்கள் தானே?” என எம் முழுப்பெயரை உச்சரித்ததும் நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். சென்னையில் யாருக்கு நம்மைத் தெரியும்? “ஓம், நீங்கள்?” என திரும்பக் கேட்டேன். “நான் தயாளன். உங்கள் முகநூல் நண்பர். பரணி ஜெ.சி எனது மாமா. அவரை உங்களுக்கு நன்றாகத் தெரியுமே?” என விளக்கினார்.
“ஓம். அவரை நன்றாகத் தெரியும். உங்களைத்தான் தெரியவில்லை,” என தயக்கத்துடன் கூறினேன். “உண்மைதான். எல்லாருக்கும் உங்களைத் தெரியும். உங்களுக்கு எங்கள் அனைவரையும் தெரிய வேண்டும் என்பதில்லையே. உங்களை இங்குச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் முகநூலில் எழுதும் அனைத்தையும் நான் மறவாது படிப்பேன். தொடர்ந்து எழுதுங்கள்,” என அவர் உற்சாகமாக பேசினார்.

சிறிது நேரம் அவரிடம் கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது கீரா அண்ணா எம்மை பார்க்க அவ்விடம் வந்திருந்தார். அவரும் அவரது தோழர்கள் சிலருக்கு எம்மை அறிமுகம் செய்து வைத்தார். “தங்கை சாப்பிடாமல் களைத்துவிட்டாள்,” என பரிவுடன் கூறினார். பட்டினிப் போராட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு நிறைவுற்றது. அனைவருக்கும் பழரசம் வழங்கப்பட்டது. சிறிது நேரம் அங்கிருந்த சிலருடன் கதைத்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம். அவ்விடம் இருந்த தள்ளுவண்டி கடையில் பானிப்பூரியும், பொரித்த காளான்களும் விற்பனையாகிக் கொண்டிருந்தன. பொரித்த காளான்கள் தட்டொன்றை வாங்கி எம்மிடம் கொடுத்தார். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் அப்பொழுதும் எம்மால் சாப்பிட முடியவில்லை.

அதனை அருண்ஷோரியிடம் கொடுத்துவிட்டு எமது கைத்தொலைப்பேசிக்குப் பணம் போட அங்கிருந்த கடை ஒன்றிற்குச் சென்றேன். 200 ரூபாய்க்குப் பணம் போடச் சொன்னேன். அதனைவிட குறைவான பணமே கைப்பேசியில் வந்து சேர்ந்தது. பணம் குறைகிறது என கடைக்காரரிடம் கூறினேன். “வரி சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் குறைவாகத்தான் வரும்,” என்ற பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது. “இதையும் விட்டு வைக்கலையா? நல்ல நாடு!” என உரக்கக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். கடையிலிருந்தவர்கள் திரும்பி என்னைப் பார்த்தனர். நான் அதனை பொருட்படுத்தவில்லை. கீரா அண்ணாவிடமும் அருண்ஷோரியிடமும் நடந்ததைக் கூறினேன். “இங்கு இப்படித்தான்,” என்று சமாதானப்படுத்தினர்.

இரு சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். அருண்ஷோரியின் வண்டி மோசமாக தூசு படிந்துக் கிடந்தது. மலேசியாவில் ஒரு மாதம் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் கூட இவ்வளவு தூசு படிந்திருக்காது. அவர் அதனைத் தட்டிச் சுத்தம் செய்யவும் நான் கீரா அண்ணாவின் வண்டியில் ஏறிக் கொண்டேன். அந்த மாலை வேளையில் சாலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. ஆட்டோ, மிதிவண்டி, இரு சக்கர வண்டி என அனைத்தும் குறுக்கும் நெருக்குமாக ஓடிக் கொண்டிருந்தன. அவ்வேளையில் அந்தச் சாலையில் பயணிப்பதே ஆபத்தானதாகத் தோன்றியது.

மிகவும் நெருங்கியும் ஒழுங்கில்லாமலும் வந்த வாகனங்கள் மோதி விடுவது போல் பாவனைக் காட்டின. சேலை கட்டியிருந்ததால் இந்தியப் பெண்கள் போல் வண்டியில் ஒரு பக்கமாகவே நான் அமர்ந்திருந்தேன். அந்த வேளையில் ஆட்டோக்கள் இரண்டு எமது முட்டியை லேசாக உரசிச் சென்றன. இன்னும் வேகமாக வந்திருந்தால் என்னை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். எப்போது அலுவலகம் சென்று சேர்வோம் என்ற நிலைமையானது. மழை வேறு லேசாகத் தூற ஆரம்பித்தது.

ஒரு குறுக்குச் சந்தொன்றில் நுழைந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் கீரா அண்ணா என்னை இறங்கி சற்றுத் தூரம் தள்ளி நிற்கச் சென்றார். நான் அவருக்குக் காத்திருக்கும் வேளையில் அருண்ஷோரி வந்துவிட்டார். நான் உடனே அவரது வண்டியில் ஏறிக்கொண்டேன். “கீரா அண்ணாவுடன் வரும் போது இரண்டு ஆட்டோ எனது கால் முட்டியை உரசிச் சென்றுவிட்டன. நான் உங்களுடனேயே வருகிறேன்,” என்றவுடன் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். “உரசிவிட்டுத் தானே சென்றார்கள்? இங்கு இது சகஜம்,” என்றார்.

சென்னைப் பயணம் (பாகம் 6)




அருண்ஷோரியும் கீரா அண்ணாவில் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டார். சிறு உரையாடலுக்குப் பிறகு அண்ணாவின் அலுவலகத்திற்குச் சென்றோம். நான் வேண்டுமென்றே வாசனின் இரு சக்கர வண்டியில் ஏறிக்கொண்டேன். அலுவகத்தில் சிகா மற்றும் ஏகலைவன் ஆகிய இருவரையும் அண்ணா அறிமுகம் செய்து வைத்தார். சிறிது நேரம் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். இன்று சைதாப்பேட்டைச் செல்ல வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான சாலை ஆர்ப்பாட்டம் அங்குதான் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அருண்ஷோரி முன்னதாகவே அங்குச் சென்றுவிட்டார். வாசனும் கீரா அண்ணாவும் அலுவல் இருப்பதால் பின்னர் வந்துக் கலந்துக் கொள்வதாக வெளியே சென்று விட்டனர். எனவே சிகா அண்ணா எம்மை சைதாப்பேட்டை , பனகல் மாளிகை அருகே கொண்டு விட்டார். வண்டியில் போகும் போது பல விடயங்களைப் பற்றி இருவரும் கதைத்துக் கொண்டே சென்றோம். அவருக்கு இம்மாதிரியான போராட்டங்களின் ஆர்வம் குறைவு என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்துக் கொண்டேன். இருந்த போதிலும் அவர் எம்மைத் தடுக்கவில்லை.

பனகல் மாளிகை அருகில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்தது. பெரும்பாலானவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் மிகச் சிலரே அவ்விடம் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியில் தோழர் ஒருவர் கூடங்குளம் அணு உலையை எதிர்து மிக ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார். சாலை ஓரத்தில் பாதுகாப்பிற்காக காவல் துறை வண்டி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. சில காவல் துறையினர் அவ்விடம் வருவோர் போவோர் மீது ஒரு கண் வைத்த வண்ணம் இருந்தனர். வழிப்போக்கர்கள் சிலர் நின்று பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தனர். பலர் கேட்டும் கேளாமல் எதையோ அவசரமாகத் தேடிச் செல்வது போல் சென்றுக் கொண்டிருந்தனர்.

நானும் கூட்டத்தோடு கூட்டமாக போராட்டத்தில் கலந்துக் கொண்டு எமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினேன். தோழர் அருண்ஷோரி சிறிது நேரம் வந்து கதைத்துவிட்டுச் சென்றார். அவர்தான் அந்த கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் மிகவும் வேலையாக இருந்தார். வானம் கறுக்கத் தொடங்கியது. எம்மை அழைத்து வந்த சிகா அண்ணா, “எல்லாம் பார்த்தாகிவிட்டது. செல்லலாமா?” என்றார். அந்தக் கேள்வி எமக்கு சற்று அதிர்ச்சியளித்தது.

நாங்கள் அவ்விடம் வந்து 30 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் புறப்படுவதா? எவ்வளவு கடினப்பட்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருப்பார்கள்? இதில் இறுதி வரை கலந்துக் கொண்டு நமது பங்களிப்பையும் வழங்க வேண்டாமா? “உங்களுக்கு வேலை இருந்தால் நீங்கள் புறப்படுங்கள். நான் பிறகு ஆட்டோ ஏறி வந்துவிடுகிறேன்,” என்றேன். அவர் தயங்கினார். “புது இடத்தில் உங்களை எப்படி தனியே விட்டுச் செல்வது. வேண்டுமென்றால் இன்னும் ஒரு 10 நிமிடங்கள் இருந்துவிட்டுப் புறப்படுவோம்,” என்றார்.

“சரி. நான் தனியே வரவில்லை. அருண்ஷோரியுடன் வந்து விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள் அண்ணா,” என்றேன். அவர் இன்னமும் தயக்கத்தோடு நின்றார். அருண்ஷோரியிடம் நிலைமையை எடுத்துக் கூறவும், “நானே அழைத்து வந்து விட்டு விடுகிறேன்,” என அவர் உத்திரவாதம் வழங்கியப் பிறகுதான் சிகா அவ்விடத்தை விட்டு அகன்றார். கூட்டத்தில் எமது மற்றுமொரு தோழர் எழில்வாணனை தற்செயலாக அவ்விடத்தில் சந்திக்க நேர்ந்தது. இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

நான் வெகு நேரம் தனியாக நிற்பதைப் பார்த்து அருண்ஷோரி தோழர் இரமணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பல போராட்டங்களில் பங்கெடுத்த அனுபவம் இரமணியின் முகத்தில் பிரதிபலித்தது. கையில் சில துண்டறிக்கைப் பிரசுரங்கள் இருந்தன. மூவர் (முருகன், சாந்தன், பேரறிவாளன்) தூக்குதண்டனையை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் துண்டறிக்கைகளை அவர் வருவோர் போவோருக்கு விநியோகம் செய்துக் கொண்டிருந்தார். வெறுமனே நின்றுக் கொண்டிருக்க விரும்பாமல் அவருடன் சேர்ந்து நானும் அதனை விநியோகம் செய்ய ஆரம்பித்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் காயத்ரி, அம்பிகா எனும் இரமணியின் பெண் தோழர்கள் இருவர் அவ்விடம் வந்துச் சேர்ந்தனர். சின்னப் பிள்ளைகள்தான். வயது 18-லிருந்து 22-க்குள்தான் இருக்க வேண்டும். அனுபவம் போதாததாலோ என்னவோ அவர்கள் அறிமுகம் இல்லாதோரிடம் துண்டறிக்கைகளைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினர். ஆனாலும் முடிந்த வரையில் அனைவரிடமும் கொடுக்க முயற்சித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த வயதான பெரியவர் ஒருவரிடம் நான் துண்டறிக்கையை நீட்ட, அவர் அதை வாங்கிக் கொண்டு எம்மை உற்று நோக்கினார். “இது எதற்கு?” எனக் கேட்டார். “மூவர் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்,” என்றேன். “அப்படினா, கொலை செய்தவன் எல்லாம் சுதந்திரமா நடமாடலாமா? அவங்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாதா?” என வாக்கு வாதத்திற்குத் தயாரானார். நானும் அவருக்கு பதிலளிக்க முனைகையில் தோழர் இரமணி குறுக்கிட்டார்.
“எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க,” என இரமணி சொல்லவும் இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது. அங்கே நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நான் மற்றவர்களுக்குத் துண்டறிக்கைகளைக் கொடுக்க நகன்றுச் சென்றேன்.

அனைத்துத் துண்டறிக்கைகளையும் கொடுத்து முடித்த பிறகு நாங்கள் நால்வரும் தேநீர் கடைக்குச் செல்லலாம் என முடிவுச் செய்தோம். தோழர் அருண்ஷோரியிடம் தெரியப்படுத்தி விட்டு உரையாடிக்கொண்டே அருகாமையில் இருந்த தேநீர் கடையினுள் நுழைந்தோம். பாதாம் பால் ஒன்றை வேண்டிக்கொண்டு பல விடயங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அவர்களது போராட்ட வாழ்க்கை எமக்குப் பிடித்திருந்தது. 29-ஆம் திகதி அக்டோபர் மாதம் 2011 அன்று பெண்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மதியம் நான் மலேசியா திரும்ப வேண்டியிருப்பதால், முயன்றுப் பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.

பின்னர் தோழர் அருண்ஷோரியுடன் கீரா அண்ணாவின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். அலுவலகத்தின் அண்ணாவுடனும் வேறு சில தோழர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் நான் அமைதியாகவே அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே நேரம் போனதே தெரியவில்லை. கீரா அண்ணா மதியம் அவர் செய்த அரைவேக்காடு முட்டையை நான் சாப்பிடவில்லை எனச் சொல்லி மீண்டும் சமைக்க ஆயத்தமானார். அலுவலகத்தில் சமைக்கும் வசதி இருந்ததால் எஞ்சி இருந்த காய்கறிகளைக் கொண்டு சமையல் ஆரம்பமானது.

எனக்குப் பசியில்லை எனச் சொல்லியும் அண்ணா விடவில்லை. அவராகவே எமக்கு ஊட்டி விட்டுச் சாப்பிடச் செய்தார். அண்ணாவின் அன்பில் நான் நெகிழ்ந்துப் போனேன். மற்ற தோழர்கள் எங்களைக் கிண்டல் செய்தனர். அதற்குள் கண்ணா அண்ணா ஐந்தாறு முறை எமது கைப்பேசிக்கு அழைத்துவிட்டார். நள்ளிரவு 12 மணி தாண்டித்தான் நான் வீடுச் சென்று சேர்ந்தேன். கண்ணன் அண்ணாவும் பாக்கியா அக்காவும் எனக்காகக் காத்திருந்தனர். குளித்துவிட்டு வந்து பாக்கியா அக்காவுடன் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன். இலங்கையிலிருந்து கவிதாவின் தோழி மேனகாவும் அன்றுதான் சென்னை வந்திருந்தாள். அவளுடனும் சிறு அறிமுகம் செய்துக்கொண்டுப் படுக்கைக்குச் சென்றேன்.


வெள்ளி, 23 டிசம்பர், 2011

காதல் துரோகி!




நடந்தது நிஜம்தானா
நான் கண்ட கனவா?
காதல் கொண்ட நாயகன்
காதல் செய்வதையே
பொழுதுபோக்காய் கொண்டான்
அவன் காதல் செய்யவில்லை
வெறும் காமம் கொண்டான்!

காதல் என்று சொல்லி
கன்னியர் வாழ்வை அழித்தான்
இருசித்துப் பார்த்தப் பிறகு
தூக்கி எறிந்தான்!

வழி மேல் விழி வைத்து
காத்திருந்தேன் –அவன்
வருகைக்காக…

போனவன் வரவே இல்லை
கலவரம் கொண்டேன்
கண்ணீர் வடித்தேன் –அவனோ
சல்லாபக் கட்டிலில்
வேறொருத்தியுடன்!

தொட்ட இடம்
எரிகிறதே –தீயாய்
என்னைச் சுடுகிறதே!
கொண்ட காதல் எமனாய் மாறி
கழுத்தை இறுக்கி நேரிக்கிறதே
அவன் தந்த முத்தம் முள்ளாய் மாறி
நெஞ்சைக் குத்தி வதைக்கிறதே!

அன்பு…
அதற்காகத்தானே ஏங்கினேன்
காதலன் என்று பாராமல்
கணவனைப் போல் நடத்தினேன்

காலம் மாறிவிட்டதா?
கலிகாலம் வந்துவிட்டதா?
காதல் எனும் தெய்வத்திற்கு
கேடு வந்துவிட்டதா? –இல்லை
காதல் என்பது காமமாய்
மாறி போய் விட்டதா?

காமம் கொண்ட மிருகமே
மனதைக் கொன்ற அரக்கனே
உன் தாயும் ஒரு பெண்தான்
பெண்ணை மதிக்க மறந்தாயோ
கண்ணை இழந்து நின்றாயோ?

மணப்பாய் ஒரு பெண்ணை
அவள் செய்வாள் பதி துரோகம்
உணர்வாய் என் வலியை –பின்
வெறுப்பாய் உன் வாழ்வை!

பெறுவாய் ஒரு குழந்தை
அது பெண்ணாய் வந்து பிறக்கும்
உயிராய் நீ வளர்ப்பாய் –அவள்
வாழ்வை ஒருவன் அழிப்பான்!

காதல் துரோகியே –நீ
கண்ணிழந்து குருடாவாய்
இனிக்க வார்த்தை பேசிய நாவு
இழுத்துக்கொண்டுப் போகும்
தொட்ட உன் கரங்கள்
செயலிழந்து நிற்கும்!
எட்டிப் பார்ப்பதற்கு –உன்னை
ஈ கூட நெருங்காது!

நாசமாய் போகுமடா
உன் ஒழுங்கற்ற வாழ்வு
நீ செய்த வினைகள் எல்லாம்
எதிரில் வந்து நிற்கும்
துடிப்பாய், நீ அழுவாய்
தற்கொலை செய்ய முனைவாய்!

நிம்மதியை இழப்பாய்
பொருளெல்லாம் கரைப்பாய்
பிச்சை ஏற்றுத் திரிவாய்
தெரு நாயைப் போல்
மடிவாய்!

செவ்வாய், 13 டிசம்பர், 2011

எம் தவற்றில் உன் பங்கு?



உத்தமியா என கேட்பவனே
நீ யோக்கியனா என சொல்வாயா?
ஊருக்கு ஒருத்தியை வைத்துக்கொண்டு
நீ அடித்திட்ட கூத்தினை சொல்லிடவா?

வேசி என எம்மை அழைத்தவனே
உன் வேசத்தை நானும் கலைத்திடவா?
புலி தோல் போர்த்திய நரியென்று
உண்மையை உலகிற்கு உணர்த்திடவா?

எம் சாதனை பற்றிக் கேட்பவனே
உன் சாதனையை நீ சொல்வாயா?
மங்கையர் மானத்தை விற்பவனே
உன் மனைவியைக் கூட்டிக் கொடுப்பாயா?

விடுதலைக்காக வீதிவரை
தமிழகம் சென்று உழைத்தவள் நான்
களத்தின் நின்றதாய் பொய் சொல்லி
பிச்சைக் கேட்டுத் தின்பவன் நீ!

காமப் பசிக்கு காதலை இரையாக்கி
காசுப் பணத்திற்கு இயக்கத்தைக் கைக்காட்டி
புறம்போக்கு நாய்களின் கால்களை நக்கி
பிணம் தின்னும் நீயும் புலியா?

துரோகி நாய் உன்னை
ஏற்பதற்கோர் குழு இருக்க
வீரப் பெண் எம்மை
புறக்கணிக்க யார் உண்டு?

தவறு நான் செய்தேன் உண்மை
தண்டனை கிடைத்திடல் நன்மை
வேசம் போடு விசமியே
உன் பங்கும் அதிலுண்டு மறவேல்!

எந்த நாயிடத்தும்
நீதி நான் கேட்கவில்லை
குறி உள்ள பெட்டையே
எம் பெண்மையில் உனக்கென்ன சந்தேகம்?

புலி என்று பூச்சாண்டி
எம்மிடமே காட்டிவிட்டாய்
இனி சிங்கத்தின் சீற்றத்தினை
பொறுத்திருந்து பார் நரியே!

(வன்னிமைந்தன் என்ற நாதாரியின் கிறுக்கலுக்கு எமது பதில். உன்னைப் போல் புனைப்பெயரில் எழுத நான் கோழை அல்ல. தைரியம் இருப்பின் நேருக்கு நேர் மோது இனத் துரோகியே!)


வெள்ளி, 2 டிசம்பர், 2011

பினாங்கு, மலேசியாவில் மாவீரர் தினம்




கடந்த 27 நவம்பர் 2011 அன்று உலகில் பல இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. வழமை போல பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஐயா தலைமையில் பட்டர்வெர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கேணல் சங்கரின் மரணத்தைத் தழுவிய நாளையே மாவீரர் தினமாக தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அறிவித்திருந்தார். இருப்பினும், 27-ஆம் திகதி நிகழ்வினை நடத்த இடம் கிடைக்காத காரணத்தினால் வேறு வழியின்றி 28-ஆம் திகதி, திங்கட்கிழமை இந்நிகழ்வு நடத்தப்பட்டது. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 2.00 மணிக்கு நிறைவுற்றது.

மக்கள் ஓசையின் நிருபரும், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவருமான தோழர் சே.குணாளன் நிகழ்வினை வழிநடத்திச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு ஈழப் பண் இசைக்கப்பட்டு முறையே நிகழ்ச்சித் தொடங்கியது. சுமார் 200 பேர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் பினாங்குத் துணை முதல்வர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகன், வழக்குரைஞர் மங்களேசுவரி, சமூக நல இயக்கத் தலைவர் ஏ.சவுந்தர்ராஜன், டத்தோ ஆர். அருணாசலம், கவியழகர் க. பெருமாள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் ஈழத்து ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர். பேராசிரியர் அவர்கள் மாவீரர்களை நினைவுக் கூரும் வண்ணம் அகல் விளக்கினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரமுகர்கள் குத்துவிளக்கினை ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பின்னர், நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர் தூவி போரில் உயிர் நீத்த மாவீரர்களை வணங்கினர்.

கவிச்சித்தர் பெ.கோ.மலையரசன் வாசித்த விடுதலைப் போராட்டம் குறித்தான கவிதை அனைவரது மனதினையும் கவர்ந்தது. இவர் ‘பாய் புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. மாவீரர் தின அறிக்கையை பேராசிரியரின் அரசியல் – ஊடக பிரிவு செயலாளர் திரு. சத்தீஸ் முனியாண்டி வாசித்தார். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையர் டாக்டர் அன்பழகனின் திறப்புரையைத் தொடர்ந்து, மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் தமக்கும் தலைவர் மேதகு பிரபாகரனுக்கும் இருந்த உறவை வந்திருந்தோரிடம் பகிர்ந்துக் கொண்டார். போரின் இறுதிக் கட்டத்தின் போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை தம்மால் எப்போதுமே மறக்க முடியாது என்று ஆக்ரோஷமாக முழங்கினார். தாம் பிரபாகரனைத் தம்பி என்று அழைத்த போதிலும், அவரையே தமது முதன்மை தலைவராக வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

“பிரபாகரன், ஆயிரங்காலத்துப் பயிர். கடவுளுக்கு நிகரானவர். இப்படியொரு மனிதர் இந்த உலகிற்கு இனி எப்போது கிடைப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் பிரபாகரனுக்கு ஈடாகமாட்டார்கள்,” என அவர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நடந்த தனிப்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவர் அவையில் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டார். “கலைஞர் தங்களுக்கு எந்த உதவியுமே செய்யவில்லை என அவரே தன் வாயால் என்னிடம் கூறினார். நம் நாட்டு ‘தலைவர்’ சாமிவேலுவைப் பற்றிக் கேட்டேன். அவர் கொடுத்ததை திருப்பிக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என பிரபாகரன் சொன்னார்,” எனவும் அவர் தெரிவித்தார்.

போரில் இறுதிக்கட்டத்தின் போது, கே.பி எனப்படும் குமரன் பத்மநாபன் தம்மைத் தொடர்புக் கொண்டு தலைவர் வீரமரணம் எய்துவிட்டார் என்று சொன்னதாகவும், அச்செய்தி உண்மையாக இருந்தால் விடுதலைப் புலிகளே அதனை அறிவிக்கட்டும் என தாம் அந்த இனத் துரோகியிடம் கூறியதாக பேராசிரியர் குறிப்பிட்டார். “தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராட வேண்டும். போராட்டங்கள் பலவகைப் படும். ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவனின் வெறியாட்டத்தை ஒடுக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அன்றைய சூழலில் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது போராட்டத்தின் சூழல் மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல நாமும் நம்மை மாற்றிக்கொண்டு போராட வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டணி ‘புத்ரா ஜெயாவை’ (மத்திய அரசை) கைப்பற்றுமானால், ஈழத்திற்குத் தகுந்த அங்கீகாரத்தினை தாங்கள் வழங்குவோம் எனவும் பேராசிரியர் வாக்குறுதியளித்தார். “சீமான் தலைமையில் நடைப்பெற்ற மதுரை மாநாட்டில் கலந்துக்கொண்டு நான் ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். நான் மேடையில் பேசுவதற்கு முன்பு, பயண விசாவில் வந்திருப்பதால் மேடையில் எதுவும் பேசக்கூடாது என காவல் துறையினர் என்னை எச்சரித்தனர். இந்தியா, ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். அத்தனைப் பெரிய ஜனநாயக நாட்டில் இந்த இராமசாமி பேசுவதால் என்ன வந்துவிடப் போகிறது? கைது செய்தால் செய்துக் கொள்ளுங்கள், நான் பேசுவேன் என்று சொல்லிவிட்டேன். சுமார் 2000 காவல் துறையினர் அங்கே குவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. அன்று நான் ஈழதிற்குக் குரல் கொடுத்ததால் தமிழ்நாட்டில் நுழைய எனக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இன்று வரையில் அந்த தடை இன்னும் அகற்றப்படவில்லை,” என தெரிவித்தார்.

மேலும், தாம் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழீழத்திற்கு ஆதரவாக என்றுமே குரல் கொடுப்பேன் எனவும் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். அவரது உரையில் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் மகுடிக்குக் கண்டுண்ட பாம்பு போல் மயங்கிக் கிடந்தனர். பேராசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு, மலேசிய வலைப்பதிவு எழுத்தாளர் து. பவனேஸ்வரி, புலிகளின் ஊடகப் பிரிவினைச் சார்ந்த இசைப்பிரியாவைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார். உருக்கமான அக்கவிதை வந்திருந்தோர் ஒரு சிலரது கண்களில் நீரை வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சே.குணாளன் தொகுப்புரை வழங்கினார். மாவீரர் தின கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிப்பிற்குரிய திரு. வைகோ வெளியிட்ட ஈழம் தொடர்பான குறுந்தட்டு இலவசமாக வழங்கப்பட்டது. மாலை மணி 2.00-க்கு மாவீரர் தின கூட்டம் இனிதே நிறைவுற்றது. மலேசியாவில் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்துடன் சிறுபான்மை இனமாக இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது என இவ்விடம் அறியத் தருகிறோம். அதுமட்டுமின்றி தமிழீழத் தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளையின் பிறந்த தினமும் நாட்டில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. நம்புங்கள், தமிழீழம் வெகு தொலையில் இல்லை!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!

வியாழன், 1 டிசம்பர், 2011

சென்னைப் பயணம் (பாகம் 5)




பேருந்து நிறுத்தத்திலிருந்து மூவரும் நடந்தே அருகாமையில் அமைந்திருந்த கீரா அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் வீடு சென்ற வேளையில் அண்ணி வெளியே சென்றிருந்தார். அண்ணாவின் மச்சினன் மகேந்திரனும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அவரது இரண்டு குழந்தைகளும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை எம்முடன் வெகு சீக்கிரமே ஒட்டிக்கொண்டாள். பெயர் மதிவதனி! “எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே,” என நான் சொல்ல, “உன்னையெல்லாம் எப்படி போராளியாக்குவது? தலைவரின் மனைவி பெயரைக் கூட மறந்துவிட்டாயே?” என அண்ணா ஏமாற்றத்துடன் கூறினார்.

பையனின் பெயர் வைகறையாளன். ஏற்கனவே அவனைப் பற்றி அண்ணாவின் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். சற்று நேரத்தில் அவனும் எம்முடன் சேர்ந்துக் கொண்டான். நான் அடிக்கடி அழைப்பேசியில் சண்டைப் போடும் வாசன் நேரிலும் விட்டு வைக்கவில்லை. எலியும் பூனையும் போல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவின் நண்பரான பாண்டியன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) என்பவரும் அவ்விடம் இருந்தார்.

மகேந்திரன் ஒரு சொம்பில் எனக்குத் தண்ணீர் கொண்டு வந்துக் கொடுக்க, நன்றி சொல்லி அதனைப் பெற்றுக்கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கேயோ வெளியே சென்றிருந்த அண்ணியும் அவ்விடம் வந்துச் சேர்ந்தார். என்னை விட 2 அல்லது 3 வயதுதான் மூத்தவராக இருக்க வேண்டும். கறுப்பென்றாலும் கஸ்தூரி என்று சொல்வார்களே அதற்கேற்றார் போல கலையான, அழகான முகம். அண்ணி வந்த சில நிமிடங்களிலேயே வேலை நிமித்தமாக வாசனும் அண்ணாவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டனர். பாண்டியன் மட்டும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார். வந்ததும் வராததுமாக அண்ணி அவசர அவசரமாக சமையல் வேலையில் இறங்கினார்.

அதற்கு முன்பாக தான் வாங்கி வந்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டி எனது கூந்தலில் வைத்துவிட்டார். இங்கே விழாக் காலங்களிலும், சிறப்பு தினங்களில் மட்டுமே பூ வைப்பது வழக்கம் என்பதால் அது சற்று வித்தியாசமாகப் பட்டது. இருந்தும் சேலையும், பூவும் தமிழர் கலாச்சாரம் என்பதால் எனக்குப் பிடித்திருந்தது. பழங்காலத்தில் தேங்காய் திருவப் பயன்படுத்தும் மணக்கட்டையுடன் கத்தி பொருந்திய ஒரு பலகையை அண்ணி எடுத்து வந்து வரவேற்பறையில் ஓரத்தில் போட்டார். அதனை நாங்கள் எங்கள் நாட்டில் ‘தேங்காய்த் திருவி’ என்று அழைப்போம். நான் சிறு வயதாக இருக்கும் போது எனது பாட்டி அதில்தான் வீட்டில் சொந்தமாகத் தேங்காய்த் திருவுவார். இப்போதெல்லாம் இதனைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பாட்டி வீட்டில் இருந்த தேங்காய் திருவி கூட எங்கேயோ காணாமல் போய்விட்டது.

அண்ணி அதனை எடுத்துப் போட்டு, அதிலேயே பரக்பரக்கென்று காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். சாதாரண கத்தியும், கட்டையும் கொடுத்தாலே நான் நின்று நிதானமாகத்தான் வெட்டுவேன். இவர் இப்படி தேங்காய்த் திருவியில் விறுவிறுவென நறுக்குவது எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் கொடுத்திருந்தால், ஒன்று எனது விரலை அறுத்துக் கொண்டிருப்பேன் இல்லையேல் அவை அனைத்தையும் நறுக்கி முடிக்க 2 மணி நேரம் எடுத்திருப்பேன்.

குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இனிப்புகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டு அண்ணியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். திடீரென மின்விசிறி, தொலைக்காட்சி என அனைத்தும் நின்றுவிட்டது. நான் குழப்பத்துடன் அண்ணியைப் பார்த்தேன். “மின்வெட்டு” என்றார்; புரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு நிகழும் என இதற்கு முன்பே தோழர்கள் சொல்லியிருந்தார்கள். இன்று அதனை நேரில் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. மதியம் 1 மணி இருக்கும். உச்சி வெயில் உச்சந்தலையைக் காய வைக்கும் நேரம். மின்விசிறி கூட இல்லாததால் வியர்வையிலேயே குளித்துவிட்டேன்.

இதே நிலை மலேசியாவில் ஏற்பட்டிருந்தால் ஆளும் கட்சிக்கு நேரக்கூடிய விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்தேன். தமிழ்நாட்டு மக்கள் அதனை அதிகம் பெரிதுப்படுத்தவில்லை போலும் என எண்ணிக்கொண்டேன். 1 மணி நேரம் சென்ற பிறகுதான் மின்சாரம் மீண்டும் வருமாம். சரி, புழுக்கத்தில் புழங்க பழக்கப்படுத்திக் கொள்வோம் என அமைதியாய் இருந்தேன். பாண்டியனிடம் முட்டை வாங்கி வரும்படி கூறி, மகேந்திரனையும் உடன் அனுப்பினார் அண்ணி. மதிவதனி பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள். வைகறையாளன் மட்டும் என்னுடனேயே இருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கீரா அண்ணாவும், வாசனும் வந்துச் சேர்ந்தனர். வந்த உடனேயே எனக்கும் வாசனுக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இம்முறை குழந்தைகளை விட்டு ஒருவரை ஒருவர் அடிக்க வைத்து திருப்தி பட்டுக்கொண்டோம். குழந்தைகளை யாரும் திருப்பி அடிக்க முடியாதல்லவா? முதலில் வாசன் பக்கம் இருந்த வைகறையாளன் பின்பு என் கட்சியில் சேர்ந்துவிட்டான். “டேய், இப்பவே பொண்ணுக்காக என்னை அடிக்கிறியே?” என்று வாசன் அந்தச் சிறுவனைக் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. மதிவதனி மட்டும் சிறிது நேரம் என் பக்கமும், பின்பு வாசன் பக்கமும் கட்சி மாறிக் கொண்டிருந்தாள். அதற்குள் முட்டை வாங்கச் சென்றவர்களும் வீடு வந்துச் சேர்ந்தனர்.

கீரா அண்ணா எனக்காக அரைவேக்காடு முட்டை தன் கையால் போட்டுத் தந்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார். கோழிக்கறி, இரசம், அரைவேக்காடு முட்டை என சமையல் பிரமாதமாய் இருந்தது. வாசன் அனைவருக்கும் தட்டில் சோறு போட்டு வைக்க, அண்ணன் முட்டை பொறிப்பதில் தீவிரமாக இருந்தார். அன்று மதியம் அனைவரும் வட்டமாக அமர்ந்து ஒன்றாக மதிய உணவு உட்கொண்டோம். கறி (குழம்பு) வேண்டுமென்று நான் சொல்ல, அண்ணி கோழி இறைச்சித் துண்டுகளை அள்ளி என தட்டில் வைத்தார். “இல்லை இல்லை, எனக்குக் கறி (குழம்பு) வேண்டும்,” என மீண்டும் சொல்ல, மறுபடியும் அவர் இறைச்சித் துண்டுகளை கரண்டியில் அல்ல, நான் குழம்பிப்போனேன். பின்னர்தான் “கறி இல்லை, குழம்பைத்தான் தங்கை கறி என்கிறாள்,” என கீரா அண்ணன் தெளிவுப்படுத்தினார்.

அப்போதுதான் எனது தவற்றையும் நான் உணர்ந்தேன். ஆம், கறி என்றால் இறைச்சியைத் தானே குறிக்கும்? குழம்பு என்பதுதானே சரியானச் சொல்? இத்தனைக் காலமும் நானும் என் நாட்டு மக்களும் இந்தச் சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகிறோமே என வெட்கமாகவும் இருந்தது. சரி, இனி திருத்திக்கொள்ள வேண்டும் என மனதிற்குள் உறுதிக் கொண்டேன். கீரா அண்ணன் அரைவேக்காடு முட்டையை நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என பார்க்க ஆவலாக இருந்தார். அதனை கீழே ஒழுகாமல் ஒரேயடியாக வாயில் போட்டு முழுங்க வேண்டும். எனக்கு அந்த அளவிற்குத் திறமை கிடையாது. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க, மதிவதனி அவளுடைய முட்டையைச் சாப்பிட்டுவிட்டு வேறு யாரிடம் முட்டை இருக்கிறது எனத் தேடிக் கொண்டிருந்தாள்.

சாப்பிடத் தெரியாமல் மற்றவரின் கேலிக்கு ஆளாவதை விட அதனைச் சாப்பிடாமல் இருந்துவிடலாம் எனத் தோன்றியது. எனவே, அண்ணன் பொறித்த முட்டையை மதிவதனியிடம் கொடுத்துவிட்டேன். ஆசையாய் பொறித்த முட்டையை நான் சாப்பிடவில்லை என அண்ணன் சற்று ஏமாற்றமடைந்தார். இன்னொரு நாள் நிச்சயம் சாப்பிடுகிறேன் எனச் சொல்லி தப்பித்துக் கொண்டேன். கோழிக் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. வயிறு முட்ட சாப்பிட்டு எழும்பும் போது, “என்ன அதற்குள் எழுந்துவிட்டாய்? இன்னும் கொஞ்சம் சோறு போட்டு இரசம் ஊற்றிச் சாப்பிடு,” என அண்ணா சொல்லவும் எனக்குத் தலைச் சுற்றிவிட்டது. உண்மையிலேயே எனது வயிற்றில் இடமில்லை. போதும் என்று சொல்லியும் விடவில்லை. சரியென்று அவர்கள் திருப்திக்காக இன்னும் கொஞ்சம் சோறும், இரசமும் பிணைந்துச் சாப்பிட்டு முடித்தேன்.

நாங்கள் அனைவரும் உண்டு முடித்த வேளையில் மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு நிம்மதியே வந்தது. இவர்கள் எப்படித்தான் இந்தப் புழுக்கத்தையும் மின்வெட்டையும் சமாளிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் தோழர் அருண்ஷோரி அவ்விடத்திற்கு வந்துச் சேர்ந்தார். இதற்கு முன் தொலைப்பேசியிலும், இணையத்திலும் பேசியிருந்தாலும் இன்றுதான் நாங்கள் நேரில் சந்திக்கிறோம். மிகவும் ஒல்லியாகவும் சற்று உயரமாகவும் இருந்தார். ஒரு கிழமையோ அல்லது இரண்டு கிழமையோ சவரம் செய்யாத முகம். தாறுமாறாக வளர்ந்திருந்த தாடி முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அந்த கறுப்பு முகத்தில் வெள்ளைக் கண்கள், இரவு வானில் மின்னும் நிலவு போல ஒளிவீசிக் கொண்டிருந்தன. அணிந்திருந்த கறுப்புச் சட்டை அவர் பெரியார் கொள்கையினைப் பின்பற்றுபவர் என்பதனைப் பறைச்சாற்றிக் கொண்டிருந்தது.