வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தமிழ்நாட்டுப் பயணம் (பாகம் 2)


விமானம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. விமானம் முழுக்க பெரும்பான்மையான இந்தியர்களே இருந்தனர். சில சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடித் திரிந்துக் கொண்டிருந்தனர். அவர்களது தாய்மார்கள் சிலர் இருந்த இடத்திலிருந்தே உரக்கக் கத்தி சிறுவர்களை அழைத்துக்கொண்டிருந்தனர். இன்னொரு பெண்  அவரது மகனைத் துரத்திகொண்டு நடந்துக்கொண்டிருந்தார். இன்னொரு பெண் பக்கத்தில் இருந்த காலியான இருக்கையில் கால்களை தூக்கிப் போட்டுக் கொண்டார். விமானப் பயணம் எனக்கு முதல் முறை அல்ல. ஆனால், இந்தியா செல்லும் விமானப் பயணத்தின் சூழல் எமக்குப் புதுமையாக இருந்தது.

விமானத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருக்கும் பணிப்பெண்கள் முகத்தில் சிறிய ‘கடுப்பு’ ரேகை படர்ந்திருந்தது. அமைதியாக இருக்கையில் அமரும்படி பல முறை கேட்டுக்கொண்டும் யாரும் அதனைப் பொருட்படுத்துவதாக இல்லை. எச்சரிக்கை விளக்குகள் எரியப்பட்டபோது கூட சிலர் கவலையில்லாமல் நடந்துத் திரிந்துக் கொண்டிருந்தது எமக்கே எரிச்சலை உண்டாக்கியது. இருந்தும், ‘இவர்கள் இப்படித்தான் போல’ என நினைத்து அமைதிக் கொண்டேன்.

என்னுடன் பயணித்துக் கொண்டிருந்த புனிதா அக்காவிற்குக் கோபம் உச்சத்தில் இருந்தது. ‘என்ன மனிதர்கள் இவர்கள்? கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கூட பார்த்துக்கொள்ள முடியவில்லை. குப்பைகளைக் கண்டபடி விமானத்தின் உள்ளேயே வீசுகின்றனர். தூங்க முடியவில்லை. சந்தையில் இருப்பது போன்று சத்தம் போடுகின்றனர்’ என புலம்பிக் கொண்டே வந்தார்.

‘என்ன அக்கா? இந்திய சூழல் எனக்குச் சரிவராது என்று சொன்னீர். இப்போதே நீங்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டீரே’ என்றேன். ‘நீயே பாரேன்!’ என்றார். புன்னகைத்துவிட்டு, விமானத்தில் நடக்கும் ‘நாடகங்களைப்’ பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக இந்திய நேரம் மாலை 5.15-க்கு விமானம் சென்னையை வந்தடைந்தது.

நான் எப்பொழுதும் வெளிநாடு பயணம் செய்யும் போது வசதியாகக் குட்டைப் பாவாடைகளும் கைகளில்லாத மேற்சட்டையும் அணிவது வழக்கம். இம்முறையும் அப்படித்தான் வந்தேன். ஏனோ, விமான நிலையத்தில் நான் நடந்துச் செல்லும் போதே பலர் எம்மை உற்று நோக்குவது போல் இருந்தது. எதனையும் பொருட்படுத்தாது எங்களுடைய துணிப்பைகளை எடுத்துக் கொண்டு நடந்தோம். பயணிகள் பரிசோதனை முடிந்து வரும்போது அதிகாரி ஒருவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘மனிதனைப் பார்க்காதது போல் பார்க்கிறான்’ என அக்காவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் என்னை அழைத்தான் (இவனுக்கு மரியாதைக் கொடுக்க விரும்பவில்லை).

சுமார் 25 கிலோ எடை கொண்ட எனது பையை திரும்பவும் ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும் என்றான். மற்ற பயணிகள் அனைவரும் சென்றுவிட்டனர். ஏற்கனவே ஒருமுறை ‘ஸ்கேன்’ செய்தாகிற்று. மீண்டும் எதற்கு? பாரம் அதிகமாக இருந்ததால், ‘சரி, நீங்களே தூக்கி வையுங்கள்,’ என ஆங்கிலத்தில் கூறினேன். ‘நீங்கள் இரு பெண்கள் இருக்கிறீர்களே? சேர்ந்து தூக்கி வையுங்கள்’ என்றான். எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் ஒருத்தியாகவே பையைத் தூக்கி ‘டொக்’கென்று ‘ஸ்கேன்’ செய்யும் இயந்திரத்தில் போட்டேன். பரிசோதனை முடிந்தது.

சொல்ல விரும்பாத கெட்ட வார்த்தைகள் பலவும் என் நாவில் வரிசைப் படுத்தி நின்றன. அத்தனையும் அடக்கிக் கொண்டு, ‘என்னைப் பார்க்க தீவிரவாதி மாதிரி இருக்கிறதா? #$% (do I look like a terrorist? Fuck!) என உறக்க அவன் காதில் விழுமாறு கூறிவிட்டு, விறுவிறுவென துணிப்பையை இழுத்துக்கொண்டு வெளியேறினேன். சென்னை எமக்கு நல்ல வரவேற்பு அளித்தது!

2 கருத்துகள்:

Senthamizh Selvan சொன்னது…

வெட்கப்பட்டு வருந்துகிறேன்....மன்னித்து விடுங்கள் இந்த மண்ணின் மைந்தர்களை.....தமிழ் மண்ணிற்கு உங்களை வரவேற்கிறோம்...

து. பவனேஸ்வரி சொன்னது…

செல்வன்: வருந்துவதற்கு ஒன்றுமில்லை...சில வேளைகளில் 'பல' மனிதர்கள் :)