வியாழன், 1 நவம்பர், 2012

உடைந்த இதயம்...



உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்
மண்ணினிலே புதைக்கலாம்!



வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நானும் ரோபோ!



எம் உணர்ச்சிகள் சாகடிக்கப்படுகின்றன
எனது நம்பிக்கைகள் நொறுக்கப்படுகின்றன
நம்பி நம்பி ஏமாந்து போவது வாடிக்கை
இனி என் வாழ்க்கை அனைவர்க்கும் வேடிக்கை!

இரவிருந்தால் பகல் வருமாம்
வெயில் சென்று மழை வருமாம்
இங்கு இரவும் இல்லை பகலும் இல்லை
வெயிலும் இல்லை மழையும் இல்லை…

மனிதனாக வாழ முயல்கிறேன்
இயந்திரமாய் இயங்க வைக்கிறது சூழல்
இனி ஆசை இல்லை உணர்ச்சி இல்லை
நானும் ஆகிறேன் ‘ரோபோ’…
கனவே நீ போ போ!

செவ்வாய், 3 ஜூலை, 2012

வலியும் அழுகையும்!


புதன், 6 ஜூன், 2012

எப்பொழுதும் உன் கற்பனைகள்...


வியாழன், 31 மே, 2012

எப்பொழுதும் உன் கற்பனைகள்…



அதிகாலை அலாரம் அலறியது
நீ எழுவதற்குள் எக்கி அதை அணைத்தேன்
என் கரங்களுக்குள் கட்டுண்டு கிடந்தாய்
உலகை மறந்து உறக்கம் கொண்டாய்
மெல்ல இதழ் பதித்து எழுப்பினேன்…

பனிக்காலை இதழ் பிரிக்கும் மலர் போல
மெல்ல இமை விரித்து எமை பார்த்தாய்
இதழோடு இதழ் பதித்து சுவை தந்தாய்
உடலோடு உடல் இணைத்து சுகம் தந்தாய்…

நீ குளித்து உடைமாற்றி தயாராக
நான் காப்பி கலந்து வைத்தேன் சுமாராக…
கட்டி அணைத்தபடி முத்தம் தந்தாய்
சுகத்தோடு எம்மிடத்தில் விடைப்பெற்றாய்!

நொடிக்கொரு குறுந்தகவல்
இதயத்தில் மென்மை வருடல்
மணிக்கொரு அழைப்பு
மனதினிலே தவிப்பு…

கடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்தன
முகநூலில் உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து ஏக்கம் தீர்த்தேன்
நீ எழுதிய கவி வார்த்தைகள்
படித்துக் குடித்துத் தாகம் தீர்த்தேன்!

வேலை முடிந்து வீடு நோக்கினேன்
போகும் வழியெல்லாம் உன்னுடன் பேசினேன்
மகிழுந்து நிறுத்துமிடத்தில் உமது வாகனம்!

இதயத்தில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
வண்ண வண்ணமாய் சிறகடித்தன
களைப்பு நீங்கி கண்கள் பிரகாசமாயின
கால்களுக்கு புதுத்தெம்பு கிடைத்தது
ஓட்டமும் நடையுமாக குடியிருப்பை அடைந்தேன்!

மின்தூக்கியின் சில நிமிட தாமதம்
அதற்குள் யுகங்கள் வீணாகியது போன்று கலக்கம்
வீட்டு வாசல் நெருங்கிவிட்டேன்…

அதோ என் உயிர்!
நானின்றி தனிமையில்
எனக்குமுன்னே வாசலில்
அளவில்லா பாசத்தில்
காத்திருக்கிறது நேசத்தில்!

ஓடிச்சென்று கட்டி அணைத்தேன்
ஏக்கம் அனைத்தும் சொல்லித் தீர்த்தேன்
வீட்டில் சென்று சமைத்து முடித்தேன்
அவன் பசித்தீர்க்க சோறு ஊட்டினேன்…

என் பாசம் கண்டாய்
கண் கலங்கி நின்றாய்
உன்னைப் போல் பெண்ணை
வாழ்வில் கண்டதில்லை என்றாய்!

மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன்
உன் வார்த்தைகளில் கரைந்தேன்!

மாலை மங்கும் நேரம்
சிறு தூறல் போடும் வானம்
தென்றல் வீசும் காற்று
சுகம் அள்ளித் தெளிக்கும் காதல்!

கடற்கரைச் சென்றோம்
கரம்தனை பற்றினாய்
“என் கரத்தில் உன் கரம்
என்றுமே அடக்கம்
நீயின்றி ஒரு வாழ்க்கை
அது உண்மையில் நரகம்”
காதலில் கசிந்துருகி
கவிதை மழை பொழிந்தாய்…

உன் தோளினிலே தலைசாய்த்தேன்
மாரோடு அணைத்துக் கொண்டாய்
அலை ஓசை இரைச்சலிலும் -உன்
இதயத்தின் ஓசைக் கேட்டேன்!

நேரமாகி வீடு சென்றோம்
களைப்பினில் சோர்வுற்றாய்
கால் பிடித்து வலி தீர்த்தேன்
உன் கேசத்தை வருடிவிட்டேன்
அசதியில் நீ தூங்க
இரவெல்லாம் இரசித்திருந்தேன்!

மீண்டும் அலாரம் அடித்தது
அலறியடித்து அணைத்தேன்
கண் இமை பிரிக்காமலேயே
என் அணைப்பில் கிடந்த உன்னை
முத்தமிட்டு எழுப்பினேன்...

உதட்டில் குளிர்ச்சி
கண்விழித்துப் பார்த்தேன்
இரவெல்லாம் கண்ணீரை உள்வாங்கி
உன் சட்டை அணிவித்த என் தலையணை!
இதுதான் நீயா? அத்தனையும் கற்பனையா?

நாம் வாழ்ந்த நாட்கள்
பசுமையான நினைவுகள்
இனிப்பான வார்த்தைகள்
சுகமான பயணங்கள்
அத்தனையும் மறந்துவிட்டாய்?
எம்மை நீங்கிச் சென்றுவிட்டாய்…

நீர்த்துளிகள் தலையணை நனைத்தன
மெல்ல குனித்து முத்தமிட்டேன்
‘லவ் யூ அத்தான்’ என்றேன்
நீ அமைதியாய் சிரித்தாய்
மீண்டும் கட்டி அணைத்தாய்…

நிழல் போல உன் நினைவுகள்
என்றும் மாறா என் காதல்
இன்னொரு கற்பனை தொடங்கிவிட்டது
இனி எப்பொழுதும் உன் கற்பனைகள்!




செவ்வாய், 29 மே, 2012

வலியும் அழுகையும்…




எதற்காக இந்த வலி?
என்ன தவறு செய்தேன் நான்
எப்படி மறக்க முடிகிறது உன்னால்?
கட்டி அணைத்து முத்தம் பதித்த நாட்களை?
கையோடு கைகோர்த்து சுற்றி திரிந்த இடங்களை?

இவ்வளவுதான் காதலா?
மரணிக்கும் வரையில் மடியில் கிடப்பேன் என்றாயே
காதலுக்கும் மரணம் உண்டா?

உயிர்ப்பூக்கள் வேண்டாம் என்றேன்
ஏன் என்று வினவினாய்
பூக்களின் வாட்டம் மனதை வாட்டும் என்றேன்
பூப்போன்ற எம் மனதை வாட்ட
எப்படி மனம் வந்தது உனக்கு?

எனது பலவீனம் நானே அறிகிறேன்
நீதான், உன் காதல் தான் எனக்கு எல்லாமே
நீயே எம்மை விட்டுச் சென்ற பிறகு
நான் மட்டும் எப்படி வாழ்வது?

சிறகொடிந்த பறவையாய் நான்
பறக்கச் சொன்னால் எப்படி பறப்பது?
காலொடிந்த குதிரையாய் நான்
பந்தயத்தில் எப்படி வெல்வது?
உயிரற்ற பிணமாக நான்
வாழச் சொன்னால் எப்படி வாழ்வது?

என் மனம் உனக்குத் தெரியாதா
என் காதல் உனக்குப் புரியாதா
எனக்கே துரோகம் இழைத்தாயே
எம்மிடமே பொய்யுரைத்தாயே?
இதுதான் உண்மைக் காதலா?
வலிதான் காதலின் பெயரா?

ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாயே?
என்னைத் தனிமையில் தவிக்க விட்டுவிட்டாயே

என்னைத் தொட்ட கரங்களால்
இன்னொருவளைத் தொடுவது நியாயமா?
என்னிடம் பேசிய மொழிகளை
வேறொருத்தி கேட்கலாமா?
எனக்குச் சொந்தமான உன்னை
இன்னொரு கரங்களில் தரலாமா?

இது உண்மைக்குக் கிடைத்த பரிசா?
என் அன்பிற்கான சன்மானமா?
என் இதயத்திற்குத் தகுந்த விஷமா?
என் உயிரைக் கொல்லும் வழியா?

ஏன் வந்தாய் அன்பே?
என்னை விட்டுச் செல்லவா?
காதல் என்ற பெயர் சொல்லி
காமம் தீர்க்கவா?

சந்தோஷம் தருவேன் என்றாய்
வாழ்வே தோஷமானது ஏனோ?
கண் போன்று காப்பேன் என்றாய்
என் பார்வையை பறித்துச் சென்றாய்!
உயிரின் உயிரே என்றாய்
என்னுயிரே என்னை விட்டுச் சென்றாய்!
நண்பர்கள் நடுவே சிரிக்கிறேன்
கண்களில் ஓரம் அமைதியாய் நீர்த்துளிகள்
யாரும் காணா வண்ணம் துடைக்கிறேன்
மீண்டும் வழிகிறது….சிரிக்க முடியவில்லை
கழிவறைக்கு ஓடுகிறேன்
சத்தமின்றி உரக்க அழுகிறேன்
இதயம் வலிக்க வலிக்க அழுகிறேன்
கண்ணீர் ஊற்றாய் வழிந்தோடுகிறது!

கண்கள் காயும் வரை அழுகிறேன்
உன்னோடு நானிருந்த நாட்கள்
உன் மடி மீது துயில் கொண்ட இரவுகள்
நீ தூங்கி நான் பார்த்த பொழுதுகள்
அனைத்தும் கண் முன்னே நிழலாடுகின்றன
காய்ந்த கண்கள் மீண்டும் பனிக்கின்றன…

உன்னுடன் வாழவும் முடியவில்லை
உன்னை பிரிந்து இருக்கவும் இயலவில்லை
என்னைக் காயப்படுத்தவோ, கொல்லவோ
ஒரே ஒரு ஆயுதம் மட்டுமே உனக்குத் தேவை
அது ஏற்கனவே உன்னிடம் நான் கொடுத்த அன்பு!

என் பலவீனம் அறிந்துக்கொண்டாய்
அதன் மூலம் எம்மை பழித்தீர்த்தாய்?
என்ன கொடுமை செய்தேன் உனக்கு?
ஏன் இந்த தண்டனை எனக்கு?

நீ சிரிக்கிறாய், நான் அழுகிறேன்
உனக்காக நான் ஏன் அழ வேண்டும்?
அழ மாட்டேன், என்னருமை அறியாத
என் காதலின் புனிதத்தை உணராத
அறிவில்லா உனக்காக நான் அழவில்லை!

எனக்காக நான் அழுகிறேன்
என் முட்டாள்தனத்தை நினைத்து அழுகிறேன்
உனக்காக வீணாக்கிய நாட்களை எண்ணி அழுகிறேன்
என் மனதின் சுமை தீர்க்க அழுகிறேன்
என் வலியின் வேதனை தாங்காமல் அழுகிறேன்!




வெள்ளி, 25 மே, 2012

என்னை நானே வதைக்கிறேன்!




கன்னத்தில் அறைகிறேன்
சுவற்றினிலே இடிக்கிறேன்
தலையினிலே அடிக்கிறேன்
தற்கொலைக்கு முயல்கிறேன்!

எனக்கு வாழ்க்கை சலிக்கவில்லை; வெறுத்துவிட்டது
நம்பிக்கை குறையவில்லை; இறந்துவிட்டது
உணர்ச்சி கூடவில்லை; மறத்துவிட்டது
ஆன்மாயில் உயிர்ச்சியில்லை; மடிந்துவிட்டது!

நான் பைத்தியமில்லை
இது தண்டனை…
எனக்கு நானே கொடுக்கும் தண்டனை
என் முட்டாள்தனத்திற்கு நான் கொடுக்கும் பரிசு!

நம்பி நம்பி ஏமாறும் முட்டாள் நான்
நம்பிக்கை இன்றி எப்படி வாழ்வது?
எனக்கு நானே தீர்மானம் செய்கிறேன்
தவறிழைத்து விட்டதால் தண்டனை விதிக்கிறேன்!

கசிந்துருகி காதல் செய்தேன்
இன்று கண்ணீரில் நனைகிறேன்
மழையிலும் வெயிலிலும் உலவுகிறேன்
என் தோல்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை
அதுவும் செத்துவிட்டதோ?

எக்கச்சக்கமான காயங்கள்
கணக்கு வழக்கு இல்லாத வடுக்கள்
வெந்த புண்ணில் பாயும் வேல்கள்
குற்றுயிரும் குலையுயிருமாக ஆன்மா!

அன்பைத் தேடி அலைந்த வேலையில்
கிடைத்தன கன்னத்தில் அறைகள்!
படும் கேவலமான வார்த்தைகள்
அனுதினமும் அர்ச்சனையாய் பூஜிக்கப்பட்டன…

நிறைகள் எல்லாம் குறையாகக் காணப்பட்டன
பிடித்தன எல்லாம் பிடிக்காததாய் மாறின
அதிக நம்பிக்கை துரோகத்தைப் பரிசளித்தது
ஆழமான காதல் புதைக்குழியில் சமாதியானது!

கண்ணீருக்கு மதிப்பில்லை
காயத்திற்கு மருந்தில்லை
உறவுகள் அனைத்தும் இழந்தேன்
அவனுக்காக ஏங்கி உருகினேன்
இன்று வருவான், நாளை வருவான் என
என்னை நானே சமாதானப்படுத்தினேன்!

மணித்துளிகள் நாட்களாயின
நாட்கள் வாரங்களாயின
வாரங்கள் மாதங்களாயின…
கரம் பிடிப்பதாய் சொன்னவன்
நிர்க்கதியாய் தவிக்கவிட்டான்
என் வேதனையைக் காணாது
கண்களை மூடிக்கொண்டான்!

வலிகள் பெருகி மரணத்தை நெருங்கியது
நம்பிக்கை உடைந்து ஏமாற்றமாகியது
ஏமாற்றங்கள் கூடி விரக்தியளித்தது
பொறுத்து பொறுத்து பொறுமை இழந்தேன்
ஆனால், பொங்கி எழவில்லை!

நியாயம் கேட்டேன்
அநியாயமான பதில்கள் வந்தன
வாக்குறுதிகள் கரைந்துப் போய்விட்டன
பழைய காதல் மரித்துப் போய்விட்டது
மனிதர்கள் மாறிப் போய்விட்டனர்!

மிரண்டு விழித்து உலகைப் பார்த்தேன்
சுற்றிலும் சாத்தான்கள் தாண்டவமாடின
அதன் கோரப்பற்கள் என் உதிரத்தை ருசிப்பார்த்தன
நரம்பில்லா நாக்குகள் கண்ணீரை சுவைத்தன
உருகுலைந்து சின்னாபின்னமானேன்!

தவறு செய்துவிட்டேன்
பொய் என்று தெரிந்தும் மெய் என்ற நம்பினேன்
போலியை அடையாளம் கண்டும் நிஜத்தை விட்டு ஓடினேன்
வலி என்று தெரிந்தும் மென்மேலும் விரும்பினேன்
அதற்கான தண்டனை இன்று பெறுகிறேன்
என்னை நானே வதைக்கிறேன்!