சனி, 2 ஜூலை, 2016

கடல்புறா -சாண்டில்யன் (பாகம் 1)




சரித்திர நாவல்களில் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு. அதிலும் கல்கி, சாண்டில்யன் ஆகிய இருவரின் தீவிர வாசகி. வெகுகாலமாகவே சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மலேசியாவின் 'கெடா' (கடாரம்) என்ற மாநிலம் குறித்து இந்நாவலில் சில குறிப்புகள் இருந்ததனால் இது எனது ஆர்வத்தை மென்மேலும் தூண்டியது. நாவலை வாசித்து முடித்து பல மாதங்கள் ஆன போதிலும் இதனைப் பற்றி சிலவற்றை குறிப்பெழுத வேண்டும் என உள்மனம் நச்சரித்துக்கொண்டே இருந்தது. அதற்கான அரிய வேளை இப்பொழுதுதான் எனக்கு வாய்த்தது.

கடல்புறா நாவல் மூன்று பாகங்களாக புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. 1967-இல் எழுதப்பட்ட இந்நாவலில் பல சரித்திர நிகழ்வுகள் பதியப்பெற்றிருக்கின்றன. புனைக்கதையாக இருந்த போதிலும் பல வரலாற்று நூல்களின் துணைக்கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

இளைய பல்லவனைக் (கருணாகர பல்லவன்) கதைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்தில் கதைத் தொடங்குகிறது. பாலூர்ப் பெருந்துறையில் வந்திரங்கிய உடனேயே சிக்கலில் மாட்டிய கருணாகரனுக்குச் சுங்க அதிகாரி தப்புவதற்கு உதவி செய்கிறான். உயிர் தப்பி ஒரு மாளிகையில் தஞ்சம் புகுந்த இளைய பல்லவன் அவ்விடம் கடாரத்தின் அரசகுமாரி காஞ்சனா தேவியைச் சந்திக்கின்றான். கலிங்க வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இளைய பல்லவனையும், கூலவாணிகன் சேந்தனையும், அநபாய குலோத்துங்கன் (சோழர் குல இளவல்) மற்றும் காஞ்சனாதேவி ஆகிய இருவரும் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர்.அநபாயரின் நண்பனான அரபு நாட்டைச் சேர்ந்த அமீர் அவர்களுக்கு உதவ முன்வருகிறான். அமீர் பிரசித்திப்பெற்ற கடற்கொள்ளைக்காரனான அகூதாவின் சிறந்த சீடன் என்பது குறிப்பிடத்தக்கது. அகூதா மற்றும் அமீரின் துணையுடன் அநபாயன், காஞ்சனாதேவியையும் அவளது தந்தை குணவர்மனையும் கப்பலில் ஏற்றி கலிங்கத்தை விட்டு வெளியேறுகிறான். இவர்களைத் தப்புவிக்கும் முயற்சியில் அமீரும், இளைய பல்லவனும் கரையிலேயே தங்கி விடுகின்றன. மாளிகையில் முதன் முதலாகச் சந்தித்த அன்றே தனது இதயத்தை இளைய பல்லவனிடம் பறி கொடுத்த காஞ்சனா தேவி கனத்த இயத்துடன் கப்பலில் பயணிக்கிறாள். இவ்வாறாக நாவலின் முதல் பாகம் சோகத்துடன் நிறைவடைகிறது.

கடாரத்தைப் பற்றி நாவலில் இடம்பெறும் சில தகவல்கள்:

*வைரமும் வைடூரியமும் பதிக்கப் பெற்ற மணிக்கதவுகள் உள்ள கடாரத்துக்கும், தங்கம் மண்ணிலே கொழித்துக் கிடக்கும் சொர்ணத்தீவுக்கும் இந்த பாலூர்ப் பெருந்துறைதான் திறவுகோல். -பக்.44

*தென்கிழக்கு நாடுகளின் வாணிபத்தின் முழுப்பலனை அடையும் கடாரத்தை வெற்றி கொண்டு மரகதத் தோரணத்தையும் ஆபரண வாயிலையும் கொண்டு வந்தும்  முதலாம் ராஜேந்திரரின் கடற்படை இங்கிருந்துதான் கிளம்பியது. -பக்.45

*கோட்டைக் காவலரிடமிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்ப்பார்த்திருக்க முடியும்? -பக்.68

*தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா? -பக்.68

*ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது! -பக்.74

*கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது. -பக்.78

*கடாரத்தின் ஆட்சி பீடத்தையும் அந்த ஆட்சிபீடம் அளிக்கும் அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வாக்கையும் அனைத்தையும் வெறுக்கிறேன். கடாரத்தின் இளவரசுப் பதவி என் தந்தையால் என்மீது சுமத்தப்பட்டது. -பக்.90

*கடாரத்தின் மீது படையெடுத்து, ஜெயவர்மனை முறியடித்து ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோழப் பேரரசர் வீரராஜேந்திரருக்கு நீங்கள் ஓலையே அனுப்பியிருந்தீர்களே? -பக்.90

*அந்தக் கடலுக்கப்பாலுள்ள சைலேந்தர்களின் மாபெரும் அரசான ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் தோன்றுகிறது. பலப்பல தீவுகள் தோன்றுகின்றன. கடாரம் தோன்றுகிறது. சொர்ணத் தீவும், சாவகமும், பாலியும் தோன்றுகின்றன. -பக்.91

*பாரதத்தின் கடற்கரையோரமாகப் போய்த் தெற்கே திரும்பினால் கிழக்கு நாடு பாரதத்தின் நிலப் பரப்புடன் தொடர்பு கொண்டே செல்கிறது. அந்த நிலப்பரப்பைக் கடாரத்துக்குக் கீழேதான்,  கடல் குறுக்கிட்டு உடைக்கிறது. அப்படிக் கடல் உடைத்துப் பிரிந்த இடங்கள் தீவுகளாகிச் சொர்ணத் தீவு (சுமாத்ரா) என்றும், சாவகத் தீவு என்றும், பாலித் தீவு என்றும் வெவ்வேறு விதமான பெயர்களைப் பெற்றுத் திகழ்கின்றன. -பக்.92

*ஸ்ரீமார விஜயதுங்கவர்மனுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்த ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் பாரதத்திலிருந்து வரும் பொருள்களுக்குப் பலமான சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெகுண்ட இராஜேந்திர சோழ தேவர் ஸ்ரீ விஜயத்தை நோக்கித் தமது கடற்படையை ஏவினார். எந்தக் கடலைத் தாண்டி பெருவாரியான தமிழர் படை வர முடியாதென்ற தைரியத்தால் ஸங்க்ரம விஜயதுங்கர் சுங்க வரிகளை விதித்தாரோ, அந்தக் கடலைத் தாண்டித் தமிழர் பெரும் படை வந்தது. கடாரத்தையும், ஸ்ரீ விஜயத்தையும் சூறையாடியது. ஸங்க்ரம விஜயதுங்கவர்மனையும் சிறை பிடித்துச் சென்றது. பிறகு ராஜேந்திர சோழதேவரின் கருணையால் ஸங்க்ரம விஜயதுங்கவர்மன் விடுதலையடைந்தார். அவர் காலமுதல் ஸ்ரீவிஜயம் வலிமை குன்றியது. என் தந்தையின் காலத்தில் அரியணைப் போட்டிச் சண்டையும் கிளம்பியது. என் சகோதரன் அரசைப் பறித்துக்கொள்ள விரும்பினான். அதன் விளைவாக, என்னைச் சொர்ணத் தீவிலிருந்து கடாரத்துக்கு அனுப்பி அங்கு என்னை இளவரசனாக்கினார் என் தந்தை. -பக்.95

*ஜெயவர்மன் ஆட்சி ஸ்ரீவிஜயத்துக்குப் பெரும் சாபக்கேடாக முடிந்தது. மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். சாதாரணக் குற்றங்களுக்குப் பெரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஜெயவர்மனுக்குப் புத்தி சொல்ல முற்பட்ட மந்திரிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சீரழியத் தொடங்கியது. அக்கம் பக்கத்து அரசாங்கங்களின் விரோதமும் வந்து சம்பவித்தது. இப்படியே போனால் மக்கள் தவிப்பார்கள், நாடு அழிந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, கடாரத்தைத் தன் வசம் ஒப்புவிக்கும்படி ஜெயவர்மன் அனுப்பிய ஓலையைத் திருப்பியனுப்பினேன். முடிந்தால் ஜெயவர்மன் கடாரத்தை அழித்திருப்பான். ஆனால் மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கிருப்பதைக் கண்டு அஞ்சியிருக்கிறான்.  அவன் அச்சம் குலையுமுன்பு சோழர் உதவியை நாடி சைலேந்திரர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்தவும் , என் நாட்டு மக்களின் துன்பத்தைப் போக்கவும், இந்நாடு வந்திருக்கிறேன். -பக்.96

*கடாரத்தின் மன்னர்-இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது- ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும்  கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். -பக்.367

...தொடரும்...





கருத்துகள் இல்லை: