வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

டார்ஜெலிங் (Darjeeling)





இந்திய எழுத்தாளர் எழுதிய ஆங்கில நாவல். முக்கோணக் காதலையும் தேயிலையையும் மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டமாகிய டார்ஜெலிங், அமெரிங்காவின் நியூ யார்க் நகரம், கனடா எனக் கதை வளர்ந்து நீண்டு மீண்டும் டார்ஜெலிங் தோட்டத்திலேயே நிறைவுறுகிறது. 

அலோகா மற்றும் சுஜாதா இருவரும் நீண்ட பெரும் பாரம்பரியம் உடையத் தேயிலைத் தோட்ட முதலாளியின் மகள்களாக வலம் வருகின்றனர். மூத்தவளான அலோகா அழகும் நிறமும் மிகுந்தவள். ஆகையால் அக்குடும்ப வழக்கப்படி மூத்தவளுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. அனைவரும் அலோகாவையேக் கொண்டாடினர். கவர்ச்சிக் குறைந்த சுஜாதாவிற்கு இது மிகுந்த வருத்தத்தை அளித்து அவளது தன்னம்பிக்கையையும் குறைத்தது. அலோகா அனைவரிடமும் பேசிப் பழகி மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தாள். சுஜாதா பெரும்பகுதி நேரங்களைத் தேயிலைத் தோட்டத்தில் செடிகளுடன் கழித்தாள். இதனால் இயற்கையாகவே சுஜாதாவிற்குத் தேயிலையின் மீது ஈர்ப்பு உண்டாயிற்று.  தேயிலையின் தரத்தையும், சுவையையும் பகுத்தறிவதில் சுஜாதா கைத்தேர்ந்தாள்.

இவர்கள் இருவரின் பருவ வயதில்தான் அதே கிராமத்தில் வசித்து வந்த பிரனாப்'பின் பழக்கம் இருவருக்கும் ஏற்பட்டது. அவர்களின் தந்தை பிர்'ரின் நிர்வாகப் பிரிவில் பிரனாப் புதியதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அழகு, அறிவு, தொழிலாளர் மேல் பரிவு என அவனிடம் இருந்த அனைத்து அம்சங்களும் இரு பெண்களையும் அவன் மேல் பித்துப் பிடித்து அலையச் செய்தன. முதலாவதாக அலோகாவிற்கும் பிரனாப்பிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் தன் உறவினர் திருமணத்திற்காக அலோகா சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. இடைவெளி இருந்தால் காதல் இன்னும் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் அலோகா காதலுடன் வெளியூர் சென்றாள். அந்த இடைவெளி காலத்தில் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரனாப்பிற்கும் சுஜாதாவிற்கும் காதல் மலர்ந்தது.

அலோகாவைக் காட்டிலும் அழகும் கவர்ச்சியும் குன்றியிருந்த சுஜாதாவின் மனமும், அவள் தேயிலையின் மீது காட்டிய ஆர்வமும், தொழிளாலர்கள் மீது காட்டிய அக்கறையும் பிரனாப்பை அவள் மீது மையலுற வைத்தது. சுஜாதாவும் பிரனாப்பின் மீது காதலுற்றாள். இவர்களின் இந்தக் காதல் ரகசியத்தை அறிந்த பாட்டி நினா, தனது மகன் பிர்ரிடம் விடயத்தைக் கூறி சுஜாதாவைக் கனடாவிற்கு அனுப்பி வைத்தாள். அதே சமயம் பிரனாப் தொழிலாளர்களின் கிளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது பிர்ருக்குத் தெரிய வந்தது.  தனது மகள்களின் வாழ்வை அழித்ததோடல்லாமல் தனது தொழிலுக்கும் பங்கம் விளைவிக்கும் பிரனாப்பைத் தீர்த்துக்கட்ட பிர் முடிவெடுத்தார். பிர்ரின் திட்டத்தை அறிந்த நினா, அலோகாவிடம் விடயத்தைக் கூறி பிரனாப்பைக் காப்பாற்றும்படி பணிந்தாள். தனது காதலனைக் காப்பாற்றுவதற்காக, அலோகா இரவோடு இரவாக பிரனாப்பைக் கூட்டிக்கொண்டு டார்ஜெலிங்கை விட்டு, தன் குடும்பத்தைவிட்டு வெளியேறினாள்.

எப்படியோ நியூ யார்க் சென்று தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இனித்த இல்லறம் காலப்போக்கில் கசக்க ஆரம்பித்தது. அலோகா நியூ யார்க் வாழ்க்கையில் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டாள். பிரனாப்பால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பழையக் காதலும், தேயிலையும் அவனை வாட்டி வதக்கின. 8 வருடங்களுக்குப் பிறகு அலோகாவிடமிருந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டான். சுஜாதா கனடாவில் தனக்குப் பிடித்தமானத் தேயிலை விற்பனையைத் தொடக்கி வெற்றிநடைப் போட்டுவந்தாள். பழைய காதலன் நினைவும், அலோகா எல்லாவற்றையும் தன்னிடமிருந்துப் பறித்துக்கொண்ட துயமும் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவே செய்தன.

8 வருடங்களுக்குப் பிறகு பாட்டி நினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி மிகவும் வயதான பாட்டித் தொலைப்பேசியின் மூலமும் அலோகாவையும், சுஜாதாவையும் அழைத்திருந்தாள். பிரனாப்பும் பழையக் காதலைப் புதுப்பிக்கும் முயற்சியில் டார்ஜெலிங் செல்ல ஆயத்தமானான். டார்ஜெலிங்கில் என்ன நடந்தது?? :)

சுஜாதா, அலோகா இருவரும் பிரனாப்பை ஒதுங்கித் தள்ள, பிரனாப் மீண்டும் நியூ யார்க்கிற்கே பறந்துச் செல்கிறான். அலோகாவும் தனது நகர வாழ்க்கையைத் தொடரச் செல்கிறாள். ஆரம்பத்தில் அனைவராலும் புறக்கணிப்பட்ட சுஜாதா, தேயிலைத் தோட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுத் தனது குடும்பப் பாரம்பரியத்தைக் காக்கத் தயாராகிறாள். 

இயன்றவறையில் கதைச்சுருக்கத்தைப் பிசகில்லாமல் இவ்விடம் கொடுத்துள்ளேன். வாய்ப்பிருந்தால் நாவலை வாசித்துப் பாருங்கள். நியூ யார்க், கனடா மற்றும் டார்ஜெலிங் வீதிகளில் நீங்களும் வலம் வருவீர்கள்.

கருத்துகள் இல்லை: