சனி, 21 மே, 2011

ஆத்துக்குப் போகணும் நாவல் பெண் பாத்திரங்களும் ஆறுமுகம் நாவலில் வரும் பெண் பாத்திரங்களும் ஓர் ஒப்பீடு -பாகம் 5



தொடர்ச்சி...

ஒட்டுமொத்த ஒப்பீடு

‘ஆத்துக்குப் போகணும்’ மற்றும் ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைச் சூழலையே அனுபவித்து வருகின்றனர். சிறிய மாற்றம் என்னவென்றால் ‘ஆத்துக்குப் போகணும்’ நாவல் மேல் சாதிப் பெண்களைப் பற்றியும், ‘ஆறுமுகம்’ நாவல் தலித் பெண்களைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ளன. இவ்விடம் காயத்ரி எவ்வாறு தன் மேலதிகாரியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு ‘அட்ஜஸ்’ பண்ண நேரிடுகிறதோ அதே போல் வசந்தாவும் தனபாக்கியமும் தங்கள் மேலதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரே மாதிரியான தொல்லைகளையே எதிர்நோக்க நேரிகிறது. பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர் என்பதை இவ்விரு நாவல்களும் ஒப்புக்கொள்கின்றன.



அதனைத் தவிர்த்து, பெண்கள் ஆண்களுக்குப் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் வாழ்க்கையையே இவ்விரு நாவல்களும் காட்டுகின்றன. காயத்ரி தன் விருப்பு வெறுப்புகளையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு கணவனுக்காக வாழ்கிறான். ரமாவும் கணவனின் ஆசைகளை நிறைவேற்றும் நிர்ப்பந்தத்தில் நிற்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் செக்குமேட்டுப் பெண்கள் ஆண்களின் காமப்பசியைப் போக்கி தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்கின்றனர். இவ்வாறாக இரு நாவல்களிலும் பெண்கள் அடக்குமுறையில் சிக்கித் தவிப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிகின்றது. பெண்கள் சாதி அடிப்படையிலும் தீங்கிழைக்கப்படுகின்றனர். தலித்தாக பிறந்ததனால் தங்கள் தாயார் செய்த அதே தொழிலையே செய்யும் நிலைக்கு அபிதா தள்ளப்படுகிறாள். இவர்களுக்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்கள் கூட இவர்களின் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் இவர்களை உதாசீணப்படுத்துவது வேதனைக்குரிய உண்மை.



முடிவுரை

பொருளாதாரமே ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்பது இவ்விரு நாவல்களிலிருந்தும் அறியப்பட்ட மறுக்க முடியாத உண்மை. சமுதாயம் பெண் என்பவளின் மீது குடும்பத்தலைவி என்ற சுமையை ஏற்றி வைக்கின்றது. ஒரு குடும்பத் தலைவிக்கு இதுதான் அழகு, இதைத்தான் அவள் செய்ய வேண்டும் என்று இலக்கணமும் வகுத்துக் கொடுக்கிறது. தந்தை, அண்ணன், தம்பி, கணவன், மகன் என்ற அதிகார அமைப்பினாலும், ஆணின் சுயநலம் காரணமாகவும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இறுதியாக, பாதுகாப்பு என்ற பெயரிலும் பெண் அடக்கி வைக்கப்படுகிறாள். இவ்வாறாக பெண் பல அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகின்றாள் என்பதனையே ‘ஆத்துக்குப் போகணும்’, ‘ஆறுமுகம்’ ஆகிய இரு நாவல்களும் உணர்த்துகின்றன.


*** முற்றும் ***

கருத்துகள் இல்லை: