செவ்வாய், 11 நவம்பர், 2008

தமிழனே…

தமிழனே
ஏனடா உறங்குகின்றாய்
விழித்திட நேரம் வரவில்லையோ? -அல்ல
விழித்திடும் எண்ணம் உனக்கில்லையோ?

நீண்ட காலம் உறங்குவதால்
கனவுகள் மட்டுமே காணுகின்றாய்
சீக்கிரம் நீ விழித்தால்தான்
கனவுகள் நனவாய் ஆகுமடா!

தரம் கெட்டுப் போகின்றாய்
தண்டச் சோறாய் திரிகின்றாய்
பெரியவர் பேச்சை மதிக்காமல்
தெருவில் ஆட்டம் போடுகின்றாய்!

தமிழில் பேச தயங்குகின்றாய்
'தமிங்கிலம்' பேசி அலைகின்றாய்
தமிழன் என்று சொல்வதற்கே
வெட்கித் தலை குனிகின்றாய்!

அறைகுறை ஆடையில் திரிகின்றாய்
பாரம்பரியம் மறந்து விட்டாய்
கொஞ்சம் கோபம் வந்தாலும்
கையில் ஆயுதம் ஏந்துகின்றாய்!

ஒற்றுமையை மறந்துவிட்டாய்
சுயநலவாதியாய் ஆகிவிட்டாய்
பெற்ற தாயை மதிக்காமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டாய்!

காதல் செய்கிறாய்
கவலைக் கொள்கிறாய்
தற்கொலையும் இங்கு பெருகுதடா
இதை உணர வைப்பது யாரடா?

சூது செய்கிறாய்
சூழ்ச்சி செய்கிறாய்
'நண்டு கதையாய்' இருக்குதடா
மண்டாய் போனாய் தமிழனடா!

பேதம் பார்க்கிறாய்
ஜாதி பார்க்கிறாய்
வேடிக்கையாக இருக்குதடா
யாருக்கு இதனால் லாபமடா?

சீக்கிரம் விழியடா
நிலமையை உணரடா
நம்மினத்தின் நிலையை
சிந்தித்துப் பாரடா!

காலம் தாழ்த்தினால்
கடமை தவறினால்
இழப்பே வாழ்க்கை ஆகுமடா
இனமே அழிந்து போகுமடா!

உறங்காதே
தமிழா உறங்காதே
ஏதும் அறியாமல் உறங்காதே
உறக்கத்தில் வாழ்க்கையை இழக்காதே!

9 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

கவிதைக்கு தலையில்லையா? அதாவது தலைப்பு இல்லையா என கேட்கிறேன்...

உங்கள் கவிதையிலும் அதிகமாக 'டா' என இருக்கிறது.. ஏன் 'டீ' என்பதை உபயோகிக்கவில்லை..

கவிதை மிக அழகு... இரசித்தேன்...

புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்...

எழுத்துரு மட்டருத்தலை (word verification) நீக்கவும்.

வலைபதிவு பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் விக்னேஸ்வரன்.
தங்களது கருத்துக்கு நன்றி. தவறுகள் திருத்தப்பட்டுவிட்டன. உங்கள் ஆதரவைத் தொடருங்கள்.

சென்ஷி சொன்னது…

கவிதைச்சுவைக்காக முழுக்க முழுக்க "டா" போட்டுருக்கீங்கன்னு நினைக்குறேன். பரவால்ல.. நான் வேணும்னா இதுல "டி" போட்டு திரும்ப படிச்சு பார்க்குறேன்!

பெயரில்லா சொன்னது…

அழகு!!!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்.

சென்ஷி அவர்களுக்கு 'டி' போட்டுத்தான் கவிதையை வாசிக்க வேண்டுமென்றால் நான் தடுக்கவில்லை. பாரதியாரும் பாரதிதாசனும் 'டா' போட்டால் ஏற்றுக்கொள்கிறீர்கள். நாங்கள் போட்டால் மட்டும் ஏன் அதனைச் சர்ச்சைக்கு உள்ளாக்குகின்றீர்?

இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி.

மு.வேலன் சொன்னது…

விரக்தியின் தாக்கதில் உதித்தவையா?
அப்படியா தழிழன் மீது இவ்வளவு கோபம்?

புதியவன் சொன்னது…

வார்த்தைகள் உணர்வுப்பூர்வமாக இருகின்றன. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

வேலன் அவர்களே, இன்னும் விரக்தியடையும் அளவிற்குச் செல்லவில்லை...மன ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கவிதை.

புதியவனின் கருத்துக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தொடருங்கள்.

நன்றி.

Muniappan Pakkangal சொன்னது…

To know abt more tamilans pl visit my www.muniappanpakkangal.blogspot.com.